அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்

இத்தகைய பாடுகுரல் இன்னொருவர் பெற்றதில்லை
சித்தனைய பாவனைகள் சேர்ந்திசைத்த – வித்தகர்க்கே
என்னினொரு கூறதனை ஏழிசையால் செய்தவர்க்கே
நன்றிதனை சொன்னேன் நெகிழ்ந்து.

TM_Soundararajan

இப்படியும் பாட இதற்குமுன்னர் ஒருவரில்லை இவருக்குப் பின்னும் எவருமில்லை என்ற புகழ்ச்சிக்கு ஒருவரைச் சொல்ல வேண்டுமானால் சௌந்தரராஜன் அவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். காதை மூடிக்கொண்டும் சொல்லலாம். ஏனென்றால் எண்ணத்தில் ஏறி எப்போது நினைத்தாலும் அவரது எண்ணற்ற பாடலொன்றால் எண்ணம் முழுதும் நிரப்புகின்ற பெரும் இசையாற்றலுக்குச் சொந்தக்காரர். இன்றும் என்றும் பல தமிழன்பர்களின் ஒரு கூறு அவருக்குச் சொந்தமானது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதி சொன்னதை பலரும் உணர வைத்த பலவற்றுள் இந்த மாமனிதரின் மந்திரக் குரலும் உண்டு. சரஸ்வதியின் ஒரு சாயலை நமக்குக் காட்டிய பெருமகன் இவர். தன் திறமைக்கு ஏற்ப புகழும் பொருளும் பெயரும் ஈட்டி தமிழக கோடானு கோடி மனங்களில் இடம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர். வாழ்கிறவர்.
அவர் தாய் மொழி தமிழ் அல்ல. சௌராஷ்டிர மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர். சௌரட்டிர மொழி மக்கள் தங்கள் மொழி பேசுவதை அளவற்று விரும்புபவர்கள். அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு இப்படி ஓர் அளப்பறிய தமிழ்த் தொண்டு செய்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  திரைப் பாடல்களைத் தாண்டி பல பக்தி பாடல்களால் தமிழ் உள்ளங்களைக் கட்டிப்போட்டவர் தன் கற்பகவல்லி பாடலால் எல்லோரையும் கவர்ந்தவர்.

இவருடைய உள்ளம் உருகுதையா முதலிய முருகன் பாடல்களுக்கு உருகாத முருக பக்தரே இல்லை என்று சொல்லி விடலாம்.

அருண்கிரிநாதரின் திருப்புகழை அதன் சந்த சுத்தத்தோடு தெளிவான உச்சரிப்பில் எல்லோரும் விரும்பும்படிக்கு தருவதென்பது மிகுந்த பயிற்சியும் தனித்த ஈடுபாடும் நிரம்பிய பக்தியும் இருந்தால்தான் முடியும். அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் சௌந்தரராஜன். பாமர மக்களை அவற்றை விரும்பிக் கேட்கச் செய்த அருஞ்செயலை செய்து தமிழ் இந்துமக்களுக்கு காலகாலத்துக்குமான சேவையை அளித்திருக்கிறார். முத்தைத்திரு பத்தித்திருநகை என்ற பாடல் பலவிதத்திலும் ஒரு மைல்கல் பாடல்.பாரம்பரிய இசைக்கலைஞர்களும் கூட விரும்பி ஏற்று பாடிக் களிக்கும் இந்தப் பாடல் ஒலிக்காத ஒரு தமிழ்நிலத்துண்டு இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.

இந்தப் பாடல் இடம்பெரும் அருணகிரிநாதர் திரைப்படத்தில் அவர் அருணகிரிநாதராகவே வாழ்ந்திருப்பார். பாட்டில் அதன் திறனில் வெகு உச்சங்களைத் தொட்ட இவர் அருணகிரிநாதர் பாத்திரத்தில் அதே ஈடுபாட்டிக் காட்டி அருணகிரிநாதரை நம்மால் உணரவைத்துவிடுவார். இந்தப் பாடல் மட்டுமில்லாமல் அவரது சந்தச் சிறப்புக்கு எடுத்துக்காடாக அதே படத்திலிருந்து மேலும் ஒரு பாடல்.

அவரது பக்திப் பாடல்களை பட்டியலிட்டால் ஒரு தொடர் கட்டுரையாக அது மிளிரும். என்னைக் கவர்ந்த ஈர்த்த செலுத்திய பாடல்களை மட்டும் சொல்வதென்றாலே அது சில கட்டுரைகளாக நீண்டுவிடும். அறிவியல் சாதனைகள் சாதனங்களால் பதிந்து பல்லாண்டுகாலம் பக்தியைப் பெருக்கப் போகிற இப்பாடல்களை இவர் பாடியதன் பின்னணிக்கு

இவருடைய முறையான கர்நாடக இசைப் பயிற்சியை முதன்மையாகச் சொல்லவேண்டும். மதுரையில் சௌராட்டிரக் குடும்பத்தில்  மீனாட்சி ஐயங்கார் என்பவரின் மகனாகப் பிறந்த சௌந்தரராஜன், பிரபல வித்துவான் பூச்சி ஶ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றவர். அடிப்படையில் வைணவராக இருந்து கட்டுக் குடுமியும் பட்டை நாமமுமாக இருந்தவர் திரைப்படப் பாடல்கள் பாட தொடங்கியபோது குடுமி களைந்து திருநீற்றுக் கோலத்தை மேற்கொண்டார். இவர் பாடிய பக்திப் பாடல்களில் சைவமணம் கமழும் பாடல்களே அதிகம். சுந்தரமூர்த்தி நாயனார் என்ற படத்திலிருந்து பிரபலமான “நாதவிந்து கலாதீ” திருப்புகழ் டி.எம்.எஸ் குரலில் –

சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து ஏபி நாகராஜன் தயாரித்த பல புராணப் படங்களில் எண்ணற்ற பாடல்களைப் பாடி செயற்கரிய சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறார். இவரது தமிழ் கொஞ்சும் ஒரு பாடல் –

திருவருட் செல்வர் என்ற திரைப்படத்தில் இவர் பாடிய எல்லா பாடல்களும் முத்துக்கள் என்றாலும் இந்த பாடல் பாவமும் காட்சிச் சிறப்பும் கதைகூறலுமான சிறப்புகளை உள்ளடிக்கியது. திருவிளையாடல் படத்தின் இந்தப் பாடல் அவருடைய திறமைக்கு ஓர் உன்னத வெளிப்பாடு. அவரே ஓர் இசைக் கச்சேரியில் பாடுவதின் காணொளி.

திருமால் பெருமையாக அவர் பாடல்களில் என் தெரிவாக இரண்டு பாடல்களைச் சொல்வேன். இந்தப்பாடல் திருமால் பெருமை படத்தில் வருவது.

இன்னொன்று ஒரு தனிப்பாடல்.

ஒரு நிகழ்ச்சியில் பழம்பெரும் இயக்குனர் ஒருவர் சௌந்தரராஜனைப் பற்றி இப்படிச் சொன்னார் – சௌந்தரம் என்றால் அழகு ராஜன் என்றால் அரசன், இவர் அழகாக பாடுபவர்களில் அரசன்.

மிகப் பொருத்தமான இந்த விவரிப்புக்கு உரிய ஒரு தமிழ் இந்துவுக்கு என் மனம் கனிந்த அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகிறேன்.

17 Replies to “அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்”

  1. நல்ல அஞ்சலிக் கட்டுரை எழுதிய தமிழ்ஹிண்டு தளத்துக்கும் ஓகை நடராஜனுக்கும் நன்றி.

  2. “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” பாட்டையும் இவர்தான் பாடினார்.. அதில் “நிரந்தரமானவன் அழிவதில்லை” என்று ஒரு வரியில் வரும்.. அதனாலோ என்னவோ, 91 வயது வரை தீர்காயுசாக இருந்திருந்திருக்கிறார்.

    கண்ணதாசன், “ஜனங்கள் நான் தான் பாடினேன் என்று நம்பி, பாடச்சொல்லி என்னைத் தொந்திரவு செய்கிறார்கள்” என்று புலம்பும் அளவுக்கு குரலை மாற்றிப் பாடும் அருள் பெற்றவர்.

    இவரோடு மீண்டும் ஒருமுறை MGR , சிவாஜி, கண்ணதாசனும் இன்று இறந்துவிட்டனர்.

  3. நல்ல பாடகர் தமிழ் மொழியில்

    கல்லுளும் கரையும் இவர் பாட்டை கேட்டால்

  4. தீராவிட அரசியல்வியாதிகளின் நாத்திக பிரச்சாரம் பேயாட்டம் போட்ட போது , தமிழ் ஹிந்துக்களை ஆன்மீக வழியில் ஆற்றுப்படுத்தியதில் திரு .டி. எம் .எஸ் அவர்களின் காந்தக்குரல் முக்கியப்பங்கு வகித்தது……..காலத்தால் அழியாத பல முருகன் பாடல்கள் அன்னாரது குரலால் சாகா வரம் பெற்றன……. எனக்கு பிடித்த டி .எம் .எஸ் அவர்களின் பக்திப்பாடல்களை பட்டியலிட்டால் நூறுக்கும் மேல் வரும்……டி.எம். எஸ்,கே.பி சுந்தராம்பாள் . சீர்காழி கோவிந்தராஜன் , சூலமங்கலம் சகோதரிகள் ஆகியோர் தமிழ் பக்தி இசைக்கு ஆற்றிய பெரும்பங்கு அள‌விட முடியாதது…..

  5. அமரர் திரு சவுந்தர்ராஜன் அவர்களது ஆன்மா இறைவன் திருவடியை அடைய அந்த
    முருகனே அருள்புரிவார் என்பது என்னுடைய நம்பிக்கை

  6. உள்ளம் உருகுதையா முருகா ………
    தன் இனிய குரலால் திருப்புகழ் பாடி தொண்டு செய்த பெருந்தகை முருகன் திருவடி நீழலில் இளைப்பாற ப்ரார்த்திப்போம்.

  7. திரு டி எம் சௌந்தராஜன் மறைவு தமிழர்களுக்கு அதிலும் பக்தர்களுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு.பரமனை எப்போதும் பாடிப்பரவிய அந்த தூய ஆத்மா அவனது திருவடியில் அமைதிபெறும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

  8. திரு டி.எம். எஸ் அவர்களின் கமாஸ் இராகக்கீர்த்தனை ‘சீதாபதே’ என்பதையும் சுத்த தன்யாசியில் அமைந்த’ நீயே எனக்கு என்றும் நிகரானவன்’ என்ற திரைப்படப் பாடலையும் கேட்டு மயங்காத இசைச்சுவைஞர்கள் இருக்கமாட்டார்கள்.அவருடைய ஆன்மா முருகனடி நீழலில் தங்குவதாகுக!

  9. சாய் ராம்.
    ஸ்ரீ சத்யா சாய் பாபா மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் நம் அமரர் திரு சௌந்தரராஜன் . பாபாவின் பாதகமலங்களில் இவருடைய ஆன்ம சாந்தி அடைவதாக.
    பி.ஜி . சாய் பிரகாஷ் .

  10. நம் ஹிந்து தர்மத்திற்கு அமரர் மேதை திரு டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் ஆற்றிய சேவை மிகவும் போற்றத்தகுந்தது.

    திரைப்படப்பாடல்களிலும் சரி,

    தனிப்பாடல்களிலும் சரி, அவருக்கு நிகர் அவரே.

    நம் தமிழ்க்கடவுள் முருகனை, தமிழால் இவர் அளவுக்கு ஆராதித்தவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.

    கற்பனை என்றாலும் கற்சிலை என்ராலும்,

    மண்ணானாலும் திருச்செந்தூரின்,

    உள்ளம் உருகுதைய்யா,

    எனக்கும் இடம் உண்டு,

    அழகென்ற சொல்லுக்கு முருகா..,

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்களோடு இணைந்து,
    “திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்”

    என்று தமிழ்க்கடவுள் நம் முருகப்பெருமானை ஆராதித்த பாங்கிலும் சரி,

    ”புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” – என்ரு கண்ணனைப்பாடிய பாங்கிலும் சரி, டி.எம்.எஸ் அவர்களுக்கு நிகர் அவரே.

    திரைப்படப்பாடல்களை நடிகர்களுக்கு ஏற்றவாறு பாடி, அவர்களுக்கு வெற்றிக்கனியை அளித்தவர் என்றால் ஐயமேதுமில்லை.

    குறிப்பாக எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தன் குரல் மூலம் வெற்றிக்கனியளித்தவர் என்றே சொல்லலாம்.

    அமரர் திரு டி.எம்.எஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  11. இன்னிசை ஒன்றையே இறைவனாக நினைத்து, பாடி, வாழ்ந்த இசை வேந்தர்
    மரியாதைக்குரிய சௌந்தரராஜன் அவர்களின் ஆத்மா வீடு பேறு அடைய முருகப்பெருமான் அருள்புரிவாராக.

  12. Kannadasan once wote a song for his home production “Vaanambaadi”:

    “Kadavul Manithanaga Pirakka Vendum-Avan
    Kathalithu Vethanayil Vaadavendum”

    The lyrics were orginally ” Avan Kathalithu Vethanayil Saagavendum”.

    TMS refused to sing this line & the song & so kannadasan changed it to
    “Avan Kathalithu Vethanayil Vaadavendum”

  13. சிங்கம் காட்டுக்கு ராஜனாக விளங்குவது போல இனிய sound (ஒலி) க்கு ராஜனாக விளங்கியவர் நமது Soundara Rajan . Tamil Melodius Songs என்றாலே TMS தான். என்றால் அது மிகையாகுமா? அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் நம் செவிகளில் ஒலிக்கும். இனி எவர் பாடிய பாட்டுகளோடும் போட்டி இட்டாலும் இவர் பாடல்களே கெலிக்கும். இவர் பாடிய பாடல்களை கேட்காத காதுகளே வலிக்கும்..

    முன்னாள் மத்திய மந்திரி அழகிரி அரசியலில் எப்படியோ. ஆனால் அவர் ஒரு தீவிர TMS ரசிகர். மந்திரி ஒரு முறை இவரை பாராட்டி கூட்டம் நடத்தினார். அதற்கு அவர் அப்பாதான் தலைமை. பாராட்டு TMS க்கு. ஆனால் அங்கு வந்த கருணாநிதி யின் காக்கை (கால்+கை) பிடிக்கும் ஜால்ரா கூட்டம் கருணாநிதி ஐ பாராட்டுகிறது. பொதுவாக பாராட்டபடுபவர் கடைசியில் தான் பேசணும். ஆனால் கருணாநிதி கடைசியில் பேசுகிறார். எல்லாம் தலைவிதி!
    ஒரு முறை வேறு ஒரு கூட்டத்தில் பேசும்போது “மந்திரி குமாரி” க்கு பாடிய TMS இப்போது “மந்திரி குமாரன்” (=மு.க.முத்து அதாவது முதன் மந்திரி கருணாநிதி குமாரன்) க்கு பாடுகின்றார் என்று கருணாநிதி கூறினார்.. இவனின் (மன்னிக்கவும்) இவரின் குமாரனுக்கு பாடிய பாடல்கள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் சிவனின் குமாரனுக்கு (முருகன்) பாடல்கள் பாடிய TMS இன்று அமர(ன்) ர் ஆகிவிட்டாலும் அவரின் பக்தி பாடல்கள் குவலயத்தில் குமரன் நின்ற குன்றுகள் தோறும் உள்ள ஆலயங்கள் இருக்கும் வரை ( அதாவது இந்துக்கள் முஸ்லிம்களால் ஏற்படும் அணைத்து துன்பங்களையும் எதிர்த்து போராடாமல் கோழையாக இருந்து பின்னர் அவர்களுக்கு பணிந்து போய் ஒருவேளை அரபு நாட்டில் நடந்தது போல சிலைகளயும் கோவில்களையும் அவர்கள் இடித்தது போல இங்கயும் அவ்வாறு நடக்காமல் இருக்கும் வரை) என்றைக்கும் நிலைத்து நிற்கும். அவர் பாடிய முருகன் பாடல்களை கேட்டால் உள்ளம் உருகும். பக்தி பெருகும்.

    அவர் தனது நெற்றியில் என்றும் மங்கள கரமாக திருநீறும் குங்குமமும் இட்டு, இரண்டே இரண்டு பக்தி படங்களில் மட்டும் நடித்து, தேன் சொட்டும் பல இனிய பக்தி பாடல்களை பாடிய TMS இன்று முருகனின் பொற்பாதங்களில் அமர்ந்து அவரை புகழ்ந்து பாடும் வாய்ப்பை பெற்றிருகிர்ரர். என்பது ஒரு சந்தோஷமான விஷயம்தானே!

    A Viswanathan

  14. ஐயா அமரர் பாடகர் திலகம் அவர்கள் நீங்கள் குறிப்பிட்டபடி திறமைக்கு ஏற்ப பொருள் ஈட்டியவர் அல்ல அவரை பிற்காலத்தில் பாராட்டியவர்கள் குறைவு மக்களும் மறந்தார்கள் டி எம் எஸ் இரசிகர்கள் மட்டுமே அவரை உயிராக மதித்தார்கள் – விஸ்வநாதனே அவரை பெரிதாக நேர்முக நிகழ்வுகளில் பாராட்டி பேசுவதில்லை பாலு பாலு என்று பாலசுப்பிர மணியம் பற்றி பெருமையாக கதைப்பார் நன்றி கெட்ட உலகம் விஸ்வநாதன் போன்றோர் திறமைகள் மேலும் மேலும் விருத்தியடைய டி எம் எஸ் ஐயாவே முக்கிய காரணம் அவர் எப்படியெல்லாம் பாடுவார் என்பதை அனுமானித்தே இசையை ஆழ்ந்து சிந்தித்து
    அரங்கேற்றினார்கள் இசையமைப்பாளர்கள் என்றால் பொய்யில்லை குழந்தைத்தனமான டி எம் எஸ் உண்மைகளை மேடைகளில் சொல்லிவிட்டால் இசையமைப்பாளர்கள் நடிகர்களான எம் ஜி ஆர் சிவாஜிக்கு கோபம் வந்து அவர் புறக்கணிக்கப்பட்டார் இதை பயன்படுத்தி பாலு நன்றாக குழைந்து பேசி காலில் விழுந்து போலிப்பணிவு காட்டி எம் ஜி ஆர் விஸ்வநாதன் போன்றோர் அன்பை பெற்றார் என்பதே உண்மை இளையராஜாவே பாலுவுக்கு பெரிதான வாழ்வை பணத்தை கொடுத்தவர் – டி எம் எஸ் என்ற மகத்தான பாடகன் தமிழ்நாட்டில் மறுக்கப்பட்டாலும் மதிக்கப்படாவிட்டாலும் எங்கள் ஈழ நாட்டில் அவருக்கே முதல் மரியாதை என்றும் டி எம் எஸ் பாட்டு இல்லாது ஒன்றும் நடவாது
    வாழ்க வாழ்க டி எம் எஸ் புகழ்

  15. முன்னாள் மத்திய மந்திரி அழகிரி அரசியலில் எப்படியோ. ஆனால் அவர் ஒரு தீவிர TMS ரசிகர். மந்திரி ஒரு முறை இவரை பாராட்டி கூட்டம் நடத்தினார்.

    Viswanathan,
    This was just a publicity stunt by azhagiri to attract the votes of the saurashtra community to which TMS belongs. He was not a genuine admirer of TMS.

    He opened the sivaji statue in madurai & claimed that he is the biggest sivaji fan.

  16. திரு. ஐ.ரமேஷின் கருத்துக்களை நான் முழுமையாக வழிமொழிகிறேன். டி.எம்.எஸ். தான்சேன்நுக்குப்பிறகு இம்மண் கண்ட இசை தெய்வம். அனால் அவர் வறுமையில் வாடவில்லை ஏனெனில் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனாலும் அவர் ஒரு காதல் மண்ணன். அவரின் திறமையை அளவிட எவனுக்கும் தகுதியில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *