புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி… 

கிறிஸ்தவ மிஷினரிகளின் அணுகுமுறை:

பஞ்சத்தைக் குறித்த நெஞ்சை உருக்கும் வர்ணனைகள் மிஷினரி கடிதங்களிலிருந்தே கிடைக்கின்றன. பாரம்பரிய பஞ்ச நிவாரண அமைப்புகள் தடை செய்யப்பட்ட பிறகு மிஷினரிகளே முக்கியப் பஞ்சநிவாரண கேந்திரங்களாகச் செயல்பட்டார்கள். இதன்மூலம் மதமாற்றங்களும் பிரிட்டனிலிருந்து அதிக நிதி வசூலுமே இவர்களின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பஞ்சநிவாரணத் ‘தொழிலாளர் முகாம்கள்’ போலவே பஞ்சத்தால் அவதிப்படும் குழந்தைகளை தங்கள் கட்டட வேலைகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களாகவும் பயன்படுத்திக் கொண்டன மிஷன் கேந்திரங்கள். பல இடங்களில் இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் உள்கட்டுமானங்களை வளர்த்துக் கொண்டன.

பஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு சாதியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தது. சுரண்டலுக்கு எதிரான ஆத்திரம் பஞ்சத்தின் விளைவாக சாதிகளுக்கிடையிலான மோதல்களாக சீர்குலைந்தன.[22] இக்காலகட்டத்தில் இங்கிலாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நன்கொடைகள் வாங்கி அரசு ஆதரவுடன் செயல்பட்ட கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இந்த சாதிய பிரச்சினைகள் இருக்கவில்லை என்பதுடன், ஆத்ம அறுவடைக்கு அவை சாதகமான சூழலையும் ஏற்படுத்தின என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும். இந்தியர்களை ஊழல் நிறைந்தவர்களாகவும் சாதியவாதிகளாகவும் எனவே பஞ்ச நிவாரணத்துக்கு தகுதியற்றவர்கள் எனவும் மிஷினரி ஏடுகள் தொடர்ந்து கூறிவந்தன. அதே நேரத்தில் வைஸ்ராய் லைட்டன் மிஷினரிகளால் பாராட்டப்பட்டார்.[23]

Richard Temple
Richard Temple

சர் ரிச்சர்ட் டெம்பிள் – இந்த பஞ்சத்தின் முதன்மை சிற்பி – தீவிர கிறிஸ்தவ ‘அருட்பணி’(மதமாற்றப் பிரசாரம்) ஆதரவாளரும் கூட. பஞ்சத்துக்கான வைஸ்ராயின் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னரும் பின்னரும் அதிதீவிர கிறிஸ்தவப் பிரசாரங்களில் ஈடுபட்டார். மிஷினரி கூட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டவர். உதாரணமாக 1868 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முதன்மை எதிரிகளாக இந்து முஸ்லிம் பூசகர்களைக் குறிப்பிடுகிறார். ’இவர்களே நம் மிஷினரி போதனைகளை எதிர்க்கிறார்கள். மிஷினரிகளுக்கு அரசாங்க ஆதரவை குறை சொல்கிறார்கள்.’[24]

பஞ்சம் உருவாகி வந்தபோது மிஷினரிகள் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கான ஒரு ஆதார அடிப்படையை திருநெல்வேலி பகுதிக்கான SPG (Society for the Propagation of Gospel) சபையை சார்ந்த பிஷப் ராபர்ட் கால்டுவெல் வழங்குகிறார். 1878 இல் திருநெல்வேலியில் மட்டும் 16,000 ஹிந்துக்கள் ‘விக்கிர ஆராதனையை விட்டு கிறிஸ்தவ முழுக்கு பெற்றதாகவும் எனவே மிஷனுக்கு அதிக ஊழியர்கள் வேண்டுமென்றும் கேட்டு கடிதம் எழுதினார். இது பிப்ரவரி 1878 இல் எழுதப்பட்ட இந்தக் கடிதம் லண்டன் டைம்ஸில் விளம்பரமாக வெளியிடப்பட்டு, 20,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் நன்கொடை கோரப்பட்டது. இது மெட்ராஸ் மெயில் பத்திரிகைக்கு தெரிய வந்தபோது, இத்தனை பெரிய அளவில் மதமாற்றம் நடந்தது எப்படி உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குத் தெரியாமல் போயிற்று என ஐயம் ஏற்பட்டது. விசாரித்த போது SPG இருக்கும் அதே பகுதியில் இயங்கும் ஆங்கிலிக்கன் சர்ச் ஆவணங்கள் அதே பஞ்ச காலகட்டத்துக்கு எவ்வித மதமாற்ற அதிகரிப்பையும் காட்டவில்லை. இது ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது.[25]

கூடவே மெட்ராஸ் மெயில் தொடர்ந்து ஒரு மாபெரும் மானுட அழிவினை கிறிஸ்தவ மிஷினரிகள் இப்படி தங்கள் ’ஆத்ம அறுவடை’க்குப் பயன்படுத்துவதைக் கண்டித்தது. ஆனால் SPG அமைப்பின் கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்.[26] மெட்ராஸ் மெயிலின் இத்தகைய கடிதம் அபூர்வமானது என்றாலும் அன்றைய மிஷினரி இலக்கியத்தில் இத்தகைய பார்வை நிரம்பி வழிந்தது.

ஆங்காங்கே மிஷினரிகளுக்கிடையே போட்டிகளும் நடந்தன. குறிப்பாக ரோமன்கத்தோலிக்க மிஷினரிகள் பஞ்சத்தை பயன்படுத்தி சில புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களை மதமாற்றியது குறித்த புகார் எப்படி பஞ்ச நிவாரணத்துக்கான முன்நிபந்தனையாக மதமாற்றத்தை பயன்படுத்தினர் என்பதை காட்டுகிறது:

பஞ்சத்தால் சுதேச மக்கள் எப்படி கத்தோலிக்க மிஷினரிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாகிறார்கள் என்பதை பிஷப் பென்னெல்லியின் அறிக்கை காட்டுகிறது. இதை குறித்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. இது பெரும்பாலும் மூடநம்பிக்கையாலும் பண உதவியாலும் பெறப்படுகிறத். பஞ்சத்தாலும் பட்டினியாலும் கஷ்டப்படும் பெரும்பாலான மக்கள் இயல்பாகவே இதற்கு வசப்படுவார்கள் என்பது இயல்புதான். … சிலுவைக் குறியை அணிந்து கத்தோலிக்க பிரார்த்தனை வழிமுறைகளை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒரு அணா என ஒரு மாதத்துக்கு அளிக்கப்படும் . அதாவது பஞ்ச நிவாரணம் என்பது மதமாற்றம் என்கிற சமாச்சாரத்தை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். [27]

இந்த விஷயம் ஒரு பிரச்சனையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கவே மாட்டாது என்பதுதான் உண்மை. ஆனால் இங்கு சில புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் மாற்றப்பட்டதால் இதை புரோட்டஸ்டண்ட் மிஷினரிகள் கண்டிக்கின்றனர். ஆனால் இதையேதான் புரோட்டஸ்டண்ட் மிஷினரிகளும் இந்துக்களுக்கு பஞ்சத்தை பயன்படுத்தி செய்து வந்தார்கள்.

பஞ்சத்தின் கொடுமை தணிந்த பிறகு மிஷினரி வட்டாரங்களில் நாயகனாக வலம் வந்தார் சர் ரிச்சர்ட் டெம்பிள். ஜூன் 22 1880 இல் பிர்மிங்ஹாம் சர்ச் மிஷினரி சொஸைட்டியில் சர் ரிச்சர்ட் டெம்பிள் இந்திய கிறிஸ்தவ மிஷன்கள் குறித்து நிகழ்த்திய உரை முக்கியமானது. மிஷினரிகளின் தியாகம், செயல்பாடு இந்தியர்களை பண்படுத்தும் விதம் இவற்றை வானளாவப் புகழ்ந்த டெம்பிள் இறுதியில் கூறினார்:

missionary_british_indiaமிஷினரிகளால் ஏற்படும் விளைவு என்ன?  அது நம் தேசிய கௌரவத்தை அதிகரிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் ஸ்திரப்படுத்துகிறது.

சுதேசிகள் நம்மீது எளிதாக அதிருப்தி அடைய நிறையக் காரணங்கள் உண்டு. நம் தேசிய விரிவாதிக்கம், அதன் அரசியல் அரசதிகார விஸ்தீரணம், ராஜதந்திர வெற்றிகள், ராணுவ அதிகாரம் ஆகியவற்றால் ஏற்படுவதால் நம்மீது ஏற்படும் அதிருப்தி, நிச்சயமாக நம் நீதி பொருந்திய சட்டம், நம் கல்வி, நம் மருத்துவம், நம் சுகாதார வசதிகள், மிக முக்கியமான பஞ்சத்தின்போது அவர்களைக் காப்பாற்ற நாம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றால் நீங்கும் என்பதில் ஐயமில்லை. 

ஆனால் இவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவ மிஷினரிகளின் வாழ்க்கையும் செயல்பாடும் பிரிட்டிஷ் அரசின் மீதான சுதேசி அதிருப்தியை நீக்குகின்றன.[28]

இறுதி கொடும் நகைச்சுவையாக 1881 இல் தனது நூலில் ராபர்ட் கால்டுவெல் ஆவணப்படுத்தினார்:

அண்மையில் 1877 இல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை மக்கள் மடிந்திடாதவாறு எதிர்கொண்டது. ஆனால் அதற்கு முந்தைய சுதேசி அரசாங்கங்கள் மக்களைப் பஞ்சங்களில் அழிந்துபோக விட்டிருக்கும். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமோ எந்த விலை கொடுத்தாவது இந்நாட்டு மக்கள் பட்டினியால் மடியாதபடிக்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தது. [29]

ஆக பஞ்ச நிவாரணம் குறித்த ஒரு காலனிய-மிஷினரி ஐதீகத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முக்கியத் தூண்கள் உருவாக்க ஆரம்பித்துவிட்டன.

ஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர்?

இறுதியாக ஜெயமோகன், ஏசு ஒரு கறுப்பின ஆசிய இனத்தவரின் மீட்பர் என்றும் அவரை வெள்ளையர்கள் அபகரித்து விட்டனர் என்றும் இருந்தபோதிலும் கிறிஸ்தவத்தின் அடிநாதமாக ஏசுவின் மீட்பு-விடுதலைச் செய்தி இருப்பதாகவும் ஒரு பாத்திரம் மூலமாக முன்வைக்கிறார். இது உண்மையில் இன்று முன்வைக்கப்படும் தலித் இறையியலின் அடிப்படை. ஏசுவின் காலத்தில் யூதர்களே தீண்டப்படத்தகாதவர்களாகத்தானே இருந்தார்கள் என ஒரு வாதத்தையும் நுட்பமாக உள்சேர்க்கிறார்.

வரலாற்றின் ஏசு – அப்படி ஒருவர் இருந்திருக்கும் பட்சத்தில் – நிச்சயமாக அன்றைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தையோ விளிம்புநிலை சமுதாயத்தையோ சேர்ந்தவர் அல்லர். யூதர்கள் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு சமுதாயங்களில் முக்கியமானவர்கள். ஆனால் உண்மையில் அவர்களில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமுதாயம் ஒன்று உண்டு. அவர்கள் சமாரியர்கள். இவர்கள் ஏசுவால் தொடர்ந்து யூதர்களுக்குக் கீழானவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். புகழ்பெற்ற நல்ல சமாரியன் கதைகூட கீழான ஒருவன் நடத்தையால் மேலானவனாகிறான் என்று ஒரு முரணை முன்வைக்கிறது. ஆனால் சமாரியனின் கீழ்நிலையை அது கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அதைப் போன்றதே ஏசுவும் சமாரிய பெண்ணும் பேசும் இடம்.

இங்கு ஏசு சமாரியர் வேறு யூதர் வேறு என்கிற இனமேன்மைவாதத்தை முன்வைக்கிறார். சமாரியரின் அறியாமையைக் கூறுகிறார். மீட்பு யூதரிடமிருந்தே வரும் என்கிறார். சமாரியப் பெண்ணின் ’ஒழுக்கக் குறைவும்’ சுட்டி உணர்த்தப்படுகிறது. இருந்தாலும் இதுவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை நாயகராக ஏசுவை முன்னிறுத்தும் முக்கிய எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஏசுவின் இனமேன்மைத்துவம் தன் அப்போஸ்தலர்களுக்கு அவர் அளிக்கும் கட்டளையில் தெளிவாகவே வெளிப்படுகிறது. தீண்டாமையின் முக்கிய வடிம் ஒன்றை இறைமகன் தனது கட்டளையாக அளிக்கிறார். ’சமாரியர் ஊர்களுக்குச் செல்லாமல் காணாமல்போன வீட்டாராகிய இஸ்ரவேலரிடம் மட்டுமே செல்லுங்கள்.’ [30]

slavery_christianityசமாரியர் யூதர்களால் ஒதுக்கப்பட்ட இஸ்ரவேல் குழுவினர் என்பதைக் கருதும்போது இதிலிருக்கும் தீண்டாமை தெளிவு பெறும். ஏசுவின் காலகட்டத்தில் அடிமைமுறை ரோமானியத்தால் மிகக் கொடுமையாக நிறுவனப்படுத்தப்பட்டுவிட்டது. ஏசு அந்த அமைப்பை எந்தவொரு இடத்திலும் கண்டிக்கவில்லை. அது மட்டுமல்ல, அந்த அமைப்பையே ஆகச்சிறந்த மாதிரியாக இறை உறவுக்கான உருவகம் ஆக்குகிறார்.[31] எந்த இடத்திலும் அவர் அடிமையான மனிதனுடன் முகம் கொடுத்துப் பேசியதில்லை.

ஏசுவின் இனமேன்மைத் தன்மையின் வெளிப்பாடே கிறிஸ்தவப் பிரசாரத்தில் அவருடைய மிகப்பெரிய தன்மையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று பொதுவாக பரிசேயர் (Pharisees) என்பது மத அதிகார அமைப்பின் குறியீட்டுச் சொல்லாக மாறியுள்ளது. சூழ்ச்சியான பிறமத பூசகர்கள் கிறிஸ்தவ மதப்பிரசார இலக்கியத்திலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யவாதிகள் பார்வையிலும் ‘பரிசேயர்களே’. இந்து பிராம்மணர்களை யூத பரிசேயருடன் இணைத்துப் பேசுவதை நாம் தொடர்ந்து கிறிஸ்தவ பிரசார இலக்கியத்தில் காண்கிறோம்.[32]

புறா விற்பவர்களையும் ஏனைய சிறுவியாபாரிகளையும் ஏசு யூத தேவாலயத்திலிருந்து விரட்டிய தொன்மம், மதத்தின் பெயரால் சுரண்டுவோருக்கு எதிரான ஆன்மிக அறச்சீற்றத்தின் வெளிப்பாட்டுக்கான ஒரு சின்னமாக மாறியுள்ளது. இதனால் பரிசேயர் ஆத்திரமடைகின்றனர். ஆனால் ஏசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர் என்பவர் பிறப்படிப்படையிலான மத அதிகாரத்தை தீவிரமாக எதிர்த்தவர்கள். ’ஓய்வுநாள் மனிதர்களுக்காக’ என்கிற ஏசுவின் வாதம் உண்மையில் பரிசேயரின் வாதமாகும். இந்த வரலாற்று உண்மையை கணக்கில் எடுத்தால் ஏசுவின் பரிசேயர் எதிர்ப்பு உண்மையில் கலகக் குரல் அல்ல, அதிகார வர்க்கத்துடன் தன்னை இணைக்கும் குரல் என்பது புரியும்.[33]

ரோம சாம்ராஜ்ஜிய மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களில் பரிசேயர் முக்கியமானவர்கள் என்பது, ஏசுவின் கதையாடலில் பரிசேயர் வில்லன்களாக்கப்படுவதின் காரணத்தை இன்னும் தெளிவாக்கும் ஆனால் தொடர் பிரசாரத்தில் பரிசேயர்கள் வில்லன்களாக்கப்பட்டனர். தீமையின் உருவகமாக்கப்பட்டனர். 1930களில் காங்கிரஸுக்கு பிரிட்டிஷ் பணிந்துவிடக் கூடாது என வலியுறுத்திய வலதுசாரி சர் ரெஜினால்ட் க்ரடாக் பிரிட்டிஷ் ஆதிக்கம் பரிசேயரை நம்பக் கூடாது என்றும் பரிசேயரை நம்பக் கூடாது என்பதற்கு ஆகப்பெரிய மூலத்திலிருந்து (ஏசு) சான்று இருக்கிறது என்றும் கூறினார்.[34]

ஆக வரலாற்றின் ஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் ஏசு அல்ல. அந்த ‘கண்டுபிடிப்பு’ காலனிய சாம்ராஜ்ஜியம் தகர்ந்த பிறகு, வளரும் நாடுகளின் விடுதலையும் வளர்ச்சியும் ஒரு பெரும் சக்தியாக எழுந்தபோது, ஏசுவை அங்கே சந்தைப்படுத்த மேற்கத்திய இறையியல் அமைப்புகளின் நிறுவன உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். ‘வெள்ளையானை’ இந்த பிம்பத்தை இறந்த காலத்துக்குக் கொண்டு செல்கிறது. ஏசு என்றென்றைக்கும் காலனிய ஆதிக்கத்துக்கும் சாம்ராஜ்யவாதத்துக்குமான பெரும் சார்பாகவே இருந்திருக்கிறார்.

அயோத்திதாச பண்டிதர்

இன்றைக்கு அயோத்திதாச பண்டிதர் மீட்டெடுக்கப்பட்டுள்ளார். தலித் கருத்தியலின் பிதாமகராக அவர் முன்வைக்கப்படுகிறார். ரெட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் எம்.சி.ராஜா, மதுரைப் பிள்ளை, சுவாமி சகஜானந்தர், ஐயன் காளி ஆகியோர் நினைவுகளாக மட்டுமே போற்றப்படும் நிலையில், தலித் விடுதலைக்கான கருத்தியலாக அயோத்திதாச பண்டிதர் வைக்கப்படுகிறார்.

அயோத்தி தாசர்
அயோத்தி தாசர்

காத்தவராயனாக வெள்ளையானையில் வரும் இளைஞன் அயோத்திதாச பண்டிதரின் ஆளுமைத் தளுவல் என்பது பகிரங்க ரகசியம். நாவல் அயோத்திதாசரின் பௌத்த மதமாற்றம் பஞ்சத்தினால் ஏற்பட்டதாககட்டமைக்கிறது. ஆனால் அவரது  பௌத்த மதமாற்றத்துக்கான முதல் தூண்டுதல் கூட பஞ்சம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1882 இல் ஆல்காட்-பிளாவட்ஸ்கியை நீலகிரியில் பண்டிதர் சந்திக்கிறார். இவருடன் ரெட்டைமலை சீனிவாசனும் இக்கூட்டத்தில் இருக்கிறார். ஆனால் சீனிவாசன் இந்த சந்திப்பு அதிக பிரயோசனமில்லாதது என திரும்பிவிடுகிறார். ஆனால் பண்டிதருக்கோ இது பிரயோசனமாகவே உள்ளது. மீண்டும் 1885 இல் இந்து மத விரோத மனப்பாங்கு கொண்டவரான ஜான் ரத்தினத்துடன் இணைந்து ‘திராவிட பாண்டியன்’ எனும் இதழை நடத்தினார் 1887-க்குப் பிறகே அவர் கருத்துகளில் மெல்ல மெல்ல மாற்றங்க ஏற்பட ஆரம்பித்தன.[35] அயோத்திதாச பண்டிதரை மிகத் தெளிவாக பௌத்தத்தை நோக்கி நகர்த்திய இறுதி அநீதி நிகழ்ந்தது 1892 சென்னை மகாஜன சபை கூட்டத்தில் ஆகும். கோவில் நுழைவுக்காக இவர் எழுப்பிய கோரிக்கைக்கு எதிராக மேல்சாதி இந்துக்கள் இவரை மனிதத்தன்மையற்ற முறையில் அநீதியாக அவமானமிழைத்தது.  இப்பெரும் பஞ்சத்தின் போது அவரது செயல்பாடுகள் முழுக்க நீலகிரியில்தான் நிலைக்கொண்டிருந்தன. எனவே ‘வெள்ளையானை’ எழுப்பும் இந்த பிம்பமும் ஆதாரமற்றதாகவே அமைகிறது. ஆனால் அதைவிட முக்கியமான சில கேள்விகள் எழுகின்றன.

தலித் விடுதலை வரலாற்றில் ரெட்டைமலை சீனிவாசனோ, எம்.சி,ராஜாவோ,  அயோத்திதாசரின் கருத்தியலையோ வரலாற்றாடலையோ ஏன் பயன்படுத்தவில்லை எனும் கேள்வி எழுகிறது. அதற்கு முக்கியக் காரணம் அயோத்திதாசர் முன்வைத்த வரலாற்றாடல் ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்து அமைந்திருந்தது, அதற்கு ஜனநாயகத்தன்மை இல்லை, அது கடும் வெறுப்பையே சார்ந்திருந்தது. அன்றைய சூழலில் அந்த வெறுப்புக்கு நியாயம் கூட இருந்திருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை நோக்கியும் அந்த வெறுப்பு இருந்தது துரதிர்ஷ்டவசமானது. எழுத்தாளர் பாவண்ணன் இதை சுட்டிக் காட்டுகிறார்:

தலித்துகளிடையே தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார். இன்னும் ஒரு படி சென்று பறையருக்கே உரிய பாடசாலையை சாதி ஆசாரக்காரர்களின் பேச்சைக்கேட்டு ஆட்சியாளர்கள் ‘பஞ்சமர் ஸ்கூல் ‘ என்று பெயரிடுவதையும் ஆட்சேபிக்கிறார். தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தனக்குச் சமமாகப் பார்க்கவியலாத தாசரின் இப்பார்வைதான் அவர் கட்டியெழுப்பிய மாற்றுமதம் முழுவெற்றியடையாமைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. [36]

எம்.சி.ராஜா
எம்.சி.ராஜா

ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா இருவருமே இந்த வெறுப்பு மனநிலையைத் தாண்டி வந்து தலித் விடுதலைக்கான ஜனநாயக குரலை எழுப்பியவர்களாவர். இவர்கள் இருவருமே ஆரிய-திராவிட-ஆதிதிராவிட இன பாகுபாடுகளை ஏற்றுக் கொண்டவர்களே. ஆனால் இதைத் தாண்டி சமூக யதார்த்தத்தை அவர்களால் சிந்திக்க முடிந்தது. ஒடுக்கப்பட்ட இந்துக்கள் எனும் அடையாளத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் எம்.சி.ராஜாவால் ஒருங்கிணைத்து பார்க்க முடிந்தது. பிரிட்டிஷார் வருவதற்கு முன்னர் தமிழக பண்பாட்டு வெளியில் பல இடங்களில் ஆதி-திராவிடர் எனும் தலித் சமுதாயத்தினர் கொண்டிருந்த நிலைகள் அப்படியே தொடர்வதை எம்.சி.ராஜா பட்டியலிடுகிறார். அவற்றில் ஒரு சில இங்கே:

திண்டுக்கல்லில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் ஆதிதிராவிடர்தான் நடுநாயகமாக விளங்கி பூசாரியாகச் செயல்படுகிறார். காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம், திருவொற்றியூர் போன்ற புனிதத்தலங்களில் கொண்டாடப்படும் வருடாந்திரத் திருவிழாக்களில் விக்கிரங்களை வைத்து தேர்களை இழுப்பார்கள். இத்தேர்களை இழுக்கும் உரிமை ஆதிதிராவிடர்களுக்கும் (இதரரை போலவே) இருந்தது. … தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் சிவன் கோயில் திருவிழாவில் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த நாட்டாண்மைக்காரர் கோவில் யானையின் மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு கடவுள் திருவுருவுக்கு வெண்சாமரம் வீசி செல்வது கண்கொள்ளா காட்சியாகும். [37]

இவை ஆரியர் வருவதற்கு முந்தைய நிலையின் தொடர்ச்சி என அவர் கருதுகிறார். ஆனால் 18 ஆம் நூற்றாண்டின் அதிகார மாற்றங்களை விவசாய சமுதாய சமூக உறவுகளை நாம் கணக்கில் எடுக்கும் போது இந்த பண்பாட்டு உரிமைகளை நாம் எப்படி காண வேண்டி உள்ளது? காலனிய ஆதிக்கம் சமுதாய உறவுகளில் ஏற்படுத்தியுள்ள மானுடத்துவ ஆன்மிக வறட்சியைத் தாண்டி ஆரோக்கியமான ஆன்மநேய சமூக உறவுகளை ஏற்படுத்தவும் சமூக விடுதலைக்குமான பண்பாட்டு-சமூக விதை-நெல்கள் என்றே இந்த பாரம்பரிய தலித் மரியாதை அம்சங்களை நாம் கருத வேண்டியுள்ளது. இந்த வேர்களை மீட்டெடுக்கும் வரலாற்றாடலில் அயோத்திதாசரால் அவமதிக்கப்பட்ட அருந்ததியர் முழு மரியாதையுடன் மீண்டெழுவதை காண முடிகிறது. எம்.சி.ராஜா அவர்கள் எழுதுகிறார்:

சப்தரிஷிகளில் ஒருவரும் தர்க்க கலை வல்லுநருமாகிய வசிஷ்டரின் மனைவி அருந்ததி கற்பின் பெருமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.இந்துக்களின் திருமணங்களில் கற்பின் தேவதையாகிய அருந்ததியை மணமகன் வணங்குகிறான். அர்ச்சுனன் மகன் அபிமன்யு அம்பினால் அடிபட்டு சாவுமுனையில் துடித்து கொண்டிருந்த போது அவன் தாய் சுபத்திரை அருந்ததியின் அருளைப் பெற்று அவனை உயிர் பிழைக்க வைத்தாள். இது பெண்குலம் அருந்ததியின் பால் கொண்ட பக்தி பெருக்கைக் காட்டுகிறது. [38]

மதமாற்றத்தையும் பண்பாடொற்றுமையை குலைக்கும் கதையாடல்களையும் குறித்து ரெட்டைமலை சீனிவாசனும் இதே கருத்தை கொண்டிருந்திருக்கிறார் கர்னல் ஆல்காட்டிடம் தீக்ஷை பெற்றிருந்த போதிலும் சீனிவாசன் அவர்கள் மதமாற்றத்தை எதிர்த்திருக்கிறார்:

ரெட்டைமலை சீனிவாசன்
ரெட்டைமலை சீனிவாசன்

கர்னல் ஆல்காட்… 1900 ஆம் வருஷம் பௌத்தத்தை தாழ்த்தப்பட்டார் சமூகத்தில் நுழைக்கத் தொடங்கினார். சமூகத்தில் பிரிவினை உண்டாக்குமென அஞ்சி அவரை பத்திரிகை மூலமாய் தாக்கினேன். … இந்து சமயவாதிகளெனும் சாதி இந்துக்களும் தமிழ் சமயிகளான தாழ்த்தப்பட்டோரும் ஒரே சமயச் சார்பினராவார். ஜாதி இந்துக்கள் செய்யும் கொடுமையை தாங்கமுடியாமல் தாழ்த்தப்பட்டார் மதமாறி போகிறார்கள்….. ஒரு மதத்தினின்று வேறொரு மதத்திற்கு மாறினால் ஒரு சமூகத்தினின்று வேறொரு சமூகத்துக்கு மாறினவராவார்கள். அவர்கள் முன்னிருந்த சமூகத்துக்கு கிடைத்த உதவியை மாறியிருக்கும் சமூகத்தினின்று பெறக்கூடாது. அப்படி பெறச் செய்தால் மதம் மாறியவர்களே முழு உதவியையும் பெற்றுக் கொள்வார்கள். [39]

ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் கூறும் இந்த ‘ஒரே சமயச்சார்பு’ மற்றும் பண்பாட்டு வேர்கள் இன்று கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளின் ஆதரவுடனும் உருவாக்கப்படும் தலித்தியலில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் முழுமையான ஒருங்கிணைந்த தலித் விடுதலையையும் சமுதாய சமரச சமத்துவத்தையும் இப்படி புறக்கணிக்கப்படும் வேர்களிலிருந்தே உருவாக இயலும்.

முடிவு:

‘வெள்ளையானை’ ஒரு முக்கியமான வரலாற்று நாவல் என்பதில் ஐயமில்லை. அது வாசகரின் மனசாட்சியை ஆழமாக சீண்டி எழுப்பும் அற உணர்வு, மானுடத்தின் அதி உன்னத உணர்வு என்பதில் எவ்விதக் கேள்வியும் இருக்க முடியாது.   ஆனால் துரதிர்ஷ்டவசமாக  இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ‘வெள்ளையானை’ நாவல் உருவாக்கும் அதீத உணர்ச்சிக் கொந்தளிப்பான அற உணர்ச்சிக்கு முன்னால், இந்த வரலாற்றுத் தரவுகள் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தாது-வருஷ பஞ்சம் தென்னிந்தியாவை மட்டும் பீடிக்கவில்லை. தக்காணம் முழுவதையும் அது கொடுமைப்படுத்தியது. இதில் மகாராஷ்டிரமும் அடங்கும். இன்று காந்திய முறை எனக் கருதப்படும் சாத்விக எதிர்ப்பும் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பும் இந்தப் பஞ்சத்தைத் தொடர்ந்தே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் எழுந்தன. இவற்றின் அடிப்படையாக விளங்கியது இந்து அற உணர்ச்சியே. சென்னை மாகாணத்திலும் அத்தகைய எழுச்சி இருந்திருக்கும். ஆனால் அதை கண்டடைவது அத்தனை சுலபமல்ல.

(முற்றும்)

சான்றாதாரங்கள் & குறிப்புகள்:

[1] Notes by Dr.M.Mitchell, The Free Church of Scotland Monthly Record, Nov-1-1878: இங்கு ஒரு சுவாரசியமான உரையாடல் சொல்லப்படுகிறது. பஞ்சம் விக்கிரக ஆராதனைக்கு ஆண்டவர் அளித்த தண்டனை என்பதற்கு பிராம்மணர் ஒருவர் அது ரயில்வேக்களால், தந்தி தொலைதொடர்புகளால் ஏற்பட்டது என்கிறார். தொடர்ந்து கிறிஸ்தவம் நல்ல மதம்தான் ஆனால் ’கீழ்சாதி’யினரிடம் அதை பரப்புவதால் அது கெட்டுவிட்டது என்கிறார். விசித்திரமென்னவென்றால் கிறிஸ்தவர் ஏழைகளிடம் அன்பு காட்ட ஏசு சொன்னதாக சொன்னாலும் அவர்களை அழித்தொழிக்கும் பஞ்சம் ஏசு அளித்த தண்டனை என்கிறார். ஆனால் அந்த பிராம்மணர் ஏதோ ஒருவிதத்தில் காலனியாதிக்கத்தால் பஞ்சம் ஏற்பட்டது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதுதான். பிராம்மணரின் இந்த ’கீழ்சாதி’யினரால் கிறிஸ்தவம் கெட்டுவிட்டது என்பது கூட முழுக்க இந்து பார்வை என கருதமுடியாது. ஏனெனில் இதே கருத்தை கான்ஸ்டண்டைன் பெஸ்கி என்கிற தைரியநாதர் (இன்று வீரமாமுனிவர்) சொல்லியிருக்கிறார்.

[2] Prasannan Parthasarathi, The Transition to a Colonial Economy: Weavers, Merchants and Kings in South India, 1720-1800, Cambridge University Press, 2001,pp 141-2

[3] Eugene F. Irschick, Dialogue and History: Constructing South India, 1795-1895, University of California Press, 1994 p.55-6

[4] Prasannan Parthasarathi, 2001,p.142

[5] Eugene F. Irschick, 1994, p.58

[6] Eugene F. Irschick, 1994, p.60

[7] Henry Davidson Love, Indian Records Series Vestiges of Old Madras, Mittal Publications, p.130

[8] A Cyclopaedia of Biblical Literature (Ed. John Kitto), Mark H. Newman, 1846, p.221

[9] Will Durant, A Case for India, Simon and Schuster, 1930, p.41

[10] https://en.wikipedia.org/wiki/Gazulu_Lakshminarasu_Chetty

[11] Nicholas B. Dirks, Castes of Mind:colonialism and the Making of Modern India, Orient Blackswan, 2003, p.191

[12] Earl of Albemarle on Torture in the Madras Presidency delivered in the House of Lords, 14th April, 1856, James Ridgway 1856

[13] ibid., pp.12-13

[14] William Digby, The Famine Campaign in Southern India-Vol II, Longmans Green and Co, pp.27-28

[15] Mike Davis, Late Victorian Holocausts El Nino Famines and the Makring of the Third World, Verso, 2001 p.44

[16] ibid. p.32

[17] ibid. pp.38-40

[18] Eliza F.Kent, Conversions in a Time of Famine: Christian Mass Movements in the 1870s, in ‘Converting Cultures: Religion, Ideology, and Transformations of Modernity‘ (Ed. Dennis Dennis Charles Washburn, A. Kevin Reinhart, BRILL, 2007 p.376) (‘Six Millions of People Starved to Death’ Madras Mail 17,June, 1878)

[19] William Digby, The Famine Campaign in Southern India-Vol II, Longmans Green and Co, pp.352-3

[20] Stanely Wolpert, A New History of India, Oxford 1989, p.248

[21] Mike Davis, 2001, p.32

[22] David Arnold, Famine in Peasant Consciousness and Peasant Action: Madras 1876-78, Subaltern Studies 3 (1984), pp.86-7

[23] Eugene P. Heideman, From Mission to Church: The Reformed Church in America Mission to India, Wm. B. Eerdmans Publishing, 2001, p.140

[24] Condition of India (Oct 1868), The Missionary Magazine, American Baptist Missionary Union,Vol-48 p.412

[25] Eliza F.Kent,, 2007, p.376

[26] Eliza F.Kent,, 2007, p.379

[27] The Roman Catholics in South India, The Indian Evangelical Review, No. XXI, October 1878, p.19

[28] Sir Richard Temple, On Missions in India, The Missionary Herald, Volume 76 Vols. for 1828-1934 contain the Proceedings at large of the American Board of Commissioners for Foreign Missions.Cambridge, pp.463-4

[29] Robert Caldwell Bishop, A History of Tinnevelly, Asian Educational Services, 1881:1989, p.230

[30] மத்தேயு 10:5

[31] லூக்கா 17:7 இந்திய மரபிலும் தாஸ மார்க்கம் உண்டு என்றாலும் அது தாண்டப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவத்தில் ரோமானிய பேரரசுக்கு அடங்கிய தேசமாக இஸ்ரேல் இருந்ததையும் ரோமானியத்தில் அடிமை முறை மிகவும் நன்றாக நிறுவனமாகிவிட்ட ஒன்று என்பதையும் கணக்கில் எடுக்கும் போது ஏசுவின் குரல் மிகத் தெளிவாக அதிகார வர்க்கத்தின் ஆதரவான குரலாகவே ஒலிப்பதை காணலாம்.

[32] The Evangelical Magazine and Missionary Chronicle, London, 1826 p.166

[33] William Nicholls, Christian Anti-Semitism, Jason Aronson, 1999, pp.72-74

[34] Andrew Muldoon, Empire, Politics and the Creation of the 1935 India Act: Last Act of the Raj, Ashgate Publishing, Ltd., 2009, p.189

[35] கௌதம சன்னா, க.அயோத்திதாச பண்டிதர், இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்திய அகாடமி, 2007:2011, பக்.34-6

[36] பாவண்ணன், பெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் (க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்), www.thinnai.com, 11-11-2005

[37] எம்.சி.ராஜா, ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’, பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள் (முதல் தொகுதி), தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ், எழுத்து,2009, பக்.134-5 இந்த நூலை வெளியிட்ட அலெக்ஸ் அதில் சிறப்புரையாக தலித் வரலாற்றாசிரியரான மறைந்த அன்பு.பொன்னோவியத்தின் கட்டுரையை சேர்த்திருக்கிறார். அதில் அன்பு.பொன்னோவியம் அவர்கள் எம்.சி.ராஜாவின் இந்து இணக்கப் பார்வையை பெரிதாக எடுத்து கொள்ளவேண்டாம் என்கிறார். (பக்.xxxii) ஆனால் தலித் வரலாற்றில் பண்பாட்டு உரிமைகளின் வரலாற்றை அவரது அந்த நிலைபாடே தெளிவாக வெளியே கொண்டு வருகிறது. இந்து பண்பாட்டுடனான தலித்துகளின் ஆதி மைய உறவை குறித்த நிலைபாட்டையும் அதன் நீட்சியாக இன்றைய சமுதாய யதார்த்தத்தை காணும் எம்.சி.ராஜா, ரெட்டைமலை சீனிவாசனார், தந்தை சிவராஜ் ஆகியோரது கருத்தியல் பங்களிப்புகளை உதாசீனப்படுத்தும் அதே நேரத்தில் அயோத்திதாசரின் இனவாதமும் சாதியப்பார்வையும் கொண்டதும், உண்மைகளும் தவறுகளும் கலந்த வரலாற்றாடலையும் தலித் விடுதலைக்கான ஆயுதமாக தீவிரமாக முன்வைப்பது கிறிஸ்தவ இறையியலாளர்களால் வளர்த்தெடுக்கப்படும் தலித்தியத்தின் இயல்பாக இருக்கிறது.

[38] ibid. p.141

[39] ரெட்டைமலை சீனிவாசன், ஜீவிய சரித்திர சுருக்கம், பக்.19-20 (இந்நூலின் ஒளிப்பிரதியை கொடுத்து உதவிய திரு.ஜெயமோகனுக்கு நன்றி.)

38 Replies to “புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2”

  1. https://www.tamilpaper.net/?p=661
    பழைய வரலாறு பார்க்கும்போது , படிக்கும்போது தலையே சுர்ருகின்றது. இங்கு உள்ள லிங்க் இல் இதன் ஆசிரியர் விவாதத்தில் இருக்கின்றார். அந்த லிங்க் படி டெம்பிளை தாண்டி லிட்டன் இந்தியாவின் நீரோ என்று விமர்சனம் உள்ளது.

  2. ஆக, 1877 சென்னை பஞ்சத்தின் மிகப் பெரிய கொடூர வில்லன் என்றால் அது ரிச்சர்ட் டெம்பிள் தான். வெள்ளை யானையில் கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.. ஆனால் இந்த ஆளைப் பற்றி பேச்சே இல்லை.

    அயோத்தி தாசரின் பௌத்த கதையாடலில், கருத்தியலில் இனவாதம் மையமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் அவர் மற்ற தலித் சாதிகளையே இழிவாக கருதினார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. சமூக சமத்துவப் போராளி என்பதை விட, தனது சுய சாதி உரிமைகளை மட்டுமே முன்னிறுத்தி அவர் சிந்தித்திருக்கிறார், செயல்பட்டிருக்கிறார். நாராயண குரு, ஐயன் காளி, எம்.சி.ராஜா, அம்பேத்கர் போன்ற உண்மையான சீர்திருத்தவாதிகளீன் வரிசையில் அவர் இடம் பெறுவாரா என்பதே விவாதத்திற்குரிய விஷயம் என்று தோன்றுகீறது.

    வெள்ளை யானையில் வரலாற்று சமநிலை இல்லை என்று முதல் வாசிப்பிலேயே தெளிவாகத் தெரிந்தது. அதை எனது விமர்சனத்திலும் குறிபிட்டிருக்கிறேன். ஆனால், இந்த தரவுகளை எல்லாம் பார்க்கும் போது, நாவலில் அடிப்படையான வரலாற்று *உண்மை* என்பதே எத்தனை சதவீதம் இருக்கும் என்ற ஐயம் எழுகிறது. ஒரு புனைவை இந்த அளவுக்கு தீவிரமாக அந்த பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமா என்று கேட்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்தப் புனைவு உண்மை வரலாறு என்பதாகவே காண்பிக்கப் பட்டு, வெறுப்பு அரசியல் இயக்கங்களால் .துவேஷ பிரசாரங்களுக்காக பயன்படுத்தப் படும் போது, அந்தக் கேள்வி அர்த்தமிழக்கிறது.

  3. மிக உயர்வான ஆய்வுக் கட்டுரை!உறுதியான தரவுகளுடன் மிகக் கோர்வையாக‌
    எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் அநீ!

    சுவாமி விவேகானந்தரின் சென்னைச் சீடர்களில் முக்கியமானவரான பிலிகிரி ஐயங்கார், நாவலில் முரஹரி ஐயங்கார் என்று சித்தரிக்கப்படுகிறார்.அவர் ஒரு சாதி வெறியராகவும், அடக்கியாளும் அதிகார வர்கத்தின் அடிவருடியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.நாவல் ஐயங்காரும் உணமையான ஐயங்காரைப்போலவே வழக்கறிஞர்.நாவல் ஐயங்காரும் உண்மையான ஐயங்காரைப் போலவே ‘ஐஸ் ஹவுஸி’ன் உரிமையாளர்.

    ஐஸ்ஹவுஸ் ஐயஙகார் வசம் வந்தவுடன் அதனைச் செப்பனிட்டுக் கீழ்தள‌த்தில் ஏழை மாணவர்களுக்கான விடுதி நடத்தியுள்ளார்.இது அவருடைய நல்ல தன்மையைக் காட்டுகிறது.

    என் கேள்வி என்னவெனில், பிலிகிரி ஐயங்கார் வசம் ஐஸ் ஹவுஸ் எந்த ஆண்டில் வந்தது என்பதே? அமெரிக்க‌ பாஸ்டன் கம்பனி தன் வர்த்தகத்தை மூடிய பின்னரே பிலிகிரி ஐயங்கார் வசம் வந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.முடிந்தால் இந்த யூகத்திற்கான தரவுகள் இருந்தால் அதனை நான் அறியத்தாருங்கள். மேலும் பிலிகிரி ஐயங்காரைப் பற்றிய‌ வரலாற்றுச் செய்திகளை தொகுத்து ஒரு ஆய்வுக் கட்டுரை தாருங்கள்.
    நன்றி!

  4. அடேங்கப்பா ஸ்ரீ ஜெயமோகன் அவர்களின் வெள்ளையானையை இது வெள்ளையானை அல்ல என்று கட்டுடைத்துக்காட்டிவிட்டார் நம் அ நீ. பாராட்டுக்கள் அரவிந்தன்.
    ஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர் என்ற லிபரேசன் தியாலஜியின் சித்திரத்தையும் மிகத்துல்லியமாக ஆதாரத்தோடு அ நீ உடைத்தெரிந்துள்ளார்.
    அயோத்திதாசபண்டிதரின் ஒருசாதி மையவாதத்தினையும் தெளிவு படுத்தியுள்ளார் அ நீ. துரதிர்ஷ்ட வசமாக இன்றைக்கு நாட்டில் தலித் இயக்கங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் அப்படியே அயோத்திதாசரின் பாதையைப்பின்பற்றுகின்றன என்பது உண்மையாக இருக்கிறது.

  5. பிரிட்டிஷ்காரர்கள் தங்களுக்கு எதிரான காலனிய சாட்சிகளை மறைப்பதில் தேர்ந்தவர்கள். இதற்கான ஆதாரம் கென்யாவில் அவர்கள் 1950ல் நடத்திய வெறியாட்டம் மற்றும் அதை மறைக்க நடத்திய நாடகம். சமீபத்தில் Mau Mau கலவரத்தின் சரித்திரம் குறித்த கட்டுரை படிக்க நேர்ந்தது. இது குறித்த ஆய்வில், 1870ல் மெட்ராஸ்ல் நிகழ்ந்த பஞ்சம் ப்ரிடிஷாரல் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று குரியிட்டுள்ளர். நமக்கோ என்றும் நம்மை குரைகூரிக்கொள்ல்வத்தில் சற்றும் வெட்கம் இல்லை.

  6. வெள்ளையானை சம்பந்தமாக தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீமான் ஜடாயு அவர்களதைத் தொடர்ந்து ஸ்ரீமான் அ.நீ அவர்களது வ்யாசம் மிகத் தெளிவாகச் சமநிலைக் கருத்துக்களைப் பகிர்கிறது.

    முதலில் ஸ்ரீ ஜடாயு அவர்களது வ்யாசத்தில் வெள்ளையானை *அறச்சீற்றம்* என்ற விஷயத்தை ப்ரதிபலித்தாலும் சரித்ரத்திலிருந்து மாறுபடுகிறது என்ற ச்ருதிபேதத்தைத் தெளிவாகப் பகிர்ந்தார்.

    இந்த வ்யாசத்தில் ஸ்ரீ அ.நீ அவர்கள் க்றைஸ்தவ மிஷ நரிகள் காலங்காலமாக மனிதர்களுக்கு ஏற்படும் பேரிடர்களை மதமாற்றத்துக்கு இறைவன் அருளிய வாய்ப்பாய் பிணந்தின்னிக்கழுகுகளாக செயல்படும் அவலத்தை பிட்டுப்பிட்டு வைத்துள்ளார்.

    இன்னமும் மிகத் தெளிவான விஷயம்.

    வெள்ளையானை புதினம் காட்டுகின்றது என்று சொல்லப்படுவது போல் மிகப்பெரும்பாலான ஜாதிஹிந்துக்களும் அறவுணர்வு இல்லாமல் செயல்பட்டனர் — என்பதன் விதிவிலக்குகளாக — நரசுசெட்டி, ராஜா சர்.டி.மாதவராவ், திவான் பகதூர் ரகுநாத ராவ் மற்றும் ரங்கநாத முதலியார், சேஷையா சாஸ்திரி போன்றோரின் செயல்பாடுகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது………

    மேலும்,

    \\\ இந்தக் கொடூரமான தண்டனைக்கு ஆளான தலித் சமுதாயத்தினரையும் இதர சமுதாயத்தினரையும் குறித்த நினைவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. \\

    என்பது முக்யமான விஷயம்.

    பஞ்சம் பற்றி உள் குத்துகள் அடங்கிய கத்தோலிக்க மற்றும் ப்ராடஸ்டெண்ட் சபையினரின் முரண்கருத்து ஆவணங்கள் மட்டிலும் தான் ……….. மதக்காழ்ப்புக்களுடன் மதமாற்ற அறுவடைப்போட்டியின் காரணமாக ……. சில மேலதிக விபரங்களைப் பகிர்கின்றன.

    கடுமையான உழைப்புடன் கூடிய அருமையான தரவுகளுக்காக ஸ்ரீமான் அ.நீ அவர்களுக்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்.

    தேநீர் இல்லாவிட்டால் என்ன இது போன்று கறுக் மொறுக் என சுவை மிகுந்த பக்ஷணங்களை தொடர்ந்து வழங்கி வாருங்கள்.

    திண்ணை தளத்திலும் வெள்ளையானை பற்றிய நூல் அறிமுக வ்யாசம் ஸ்ரீ வில்லவன் கோதை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிறைகளை மட்டும் பட்டியலிடும் வ்யாசம். உத்தரங்கள் எல்லாம் ஸ்ரீமான் ஜெயமோகனை — அவர் பணம் சம்பாதிக்க விழைகிறார் என்ற விஷயத்தை (எழுத்தாளர் என்றால் அவர் குடும்பம் காகிதத்தையே சாப்பிட வேண்டுமோ?) – நானூறு பக்கம் நானூறு ரூபா — தலித்துக்களின் ப்ரச்சினையை வைத்து பணம் பார்ப்பது – என்ற ரீதியில் – வசவு அர்ச்சனையாக மட்டிலும் தொடர்கிறது.

    அருமையான வ்யாசங்கள் பகிரும் தமிழ் ஹிந்து தளத்திற்கும் வாழ்த்துக்கள்.

    வெற்றி வேல்.

  7. என்னங்க இது, கடையை இழுத்து மூடலாம்னா முடியாது போலிருக்கே?

    அ.நீ.யின் பதிவுகளைப் படித்ததும் நான் இன்னொரு முறை “வெள்ளை யானை” புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கே உள்ள கருத்துக்கள் மறுவாசிப்பில் மாறலாம்…

    ஏசு யூதர்களை மட்டுமே கருத்தில் கொண்டார் என்பது எந்த gospel-ஐப் படித்தாலும் தெரியும். ஒரு சமாரியப் பெண் (என்று நினைக்கிறேன்) ஏசுவின் உபதேசத்தைக் கேட்க முனையும்போது ஏசு மேஜையில் மனிதர்கள் மட்டுமே சாப்பிடலாம், நாய்கள் வரக் கூடாது என்று விரட்டி அடிக்கிறார். அந்தப் பெண் மேஜையிலிருந்து கீழே விழும் உணவை நாய்கள் உண்ணலாம் என்று பதில் அளிக்கிறாள். ஏசு அந்தப் பெண்ணை தன் பேச்சைக் கேட்க அனுமதிக்கிறார். இந்த நிகழ்ச்சி எந்த gospel-இல் வருகிறது என்று நினைவில்லை, ஆனால் நிச்ச்யமாக உண்டு.

    ஆனால் தொன்மப்படுத்தப்பட்ட ஏசுவுக்கும் (ஏறக்குறைய) கடவுளாக்கப்பட்ட ஏசு என்ற பிம்பத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசம் உண்டு. இது ஏசுவுக்கு மட்டுமல்ல, ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் விஷ்ணுவுக்கும் பொருந்தும். மகாபாரதம் காட்டுவது கிருஷ்ணன் என்ற தந்திரசாலியை. நான் வழிபடுவது அந்த தந்திரசாலியை உள்ளடக்கிய பிம்பத்தை! ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா! காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா? துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன? தொன்மங்கள் காட்டுவது நம் மனதிலுள்ள பிம்பத்தோடு அச்சு அசலாகப் பொருந்தவில்லை, பிம்பம் அந்த தொன்மங்கள் காட்டும் குறைகளை மிகச் சுலபமாக்த் தாண்டுகிறது என்பது என் கண்ணில் இயல்பான நிகழ்வே!
    அதைப் போலத்தான் ஏசுவின் பிம்பமும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர் என்பது, இதில் வரலாற்று ஏசு, தொன்மப்படுத்தப்பட்ட ஏசு வேறு விதமாக நடந்து கொண்டார் என்பது விஷயம் இல்லை. வர்லாற்று யூதர்களில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே பேசி இருக்கலாம். ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பேசினார், இன்று எந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மீட்பர் என்ற பிம்பம் இருக்கிறது என்பதுதானே விஷய்ம்? (காந்தி தென்னாப்பிரிக்காவில் 20-25 வருஷம் இருந்தார். கறுப்பர்களைப் பற்றி அவருக்கு பிரக்ஞையே இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் மார்ட்டின் லூதர் கிங், மண்டேலாவுக்கு அவர் ஒரு ஆதர்ச புருஷர் இல்லையா?)

    ஆயிரக்கணக்கான வெள்ளையர் மக்கள் சாரிசாரியாக மடிவதைக் கண்டு கொள்ளவில்லை, மதமாற்றம் செய்ய முயற்சித்தனர், பொருளாதார ஆதாயம் தேடினர் என்பதைத்தானே இந்தப் புத்தகமும் சொல்கிறது? இதில் ரிச்சர்ட் டெம்பிளைப் பற்றி எழுதவில்லை, காஜுலுகாருவைப் பற்றி எழுதவில்லை என்றா குறை காண்பது? புனைவா ஆய்வுக்கட்டுரையா? உங்களுக்கு முக்கியமாகப் படும் ஒவ்வொருவரையும் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன? இது சரித்திரப் புனைவு. தகவல் தவறு இருந்தால் குறை சொல்ல வேண்டியதுதான். ஆனால் எழுத்தாளன் தன் பார்வையை எங்கே பதிக்கிறார், எங்கே பதிக்கவில்லை என்பது அவன் சுதந்திரம்! வெள்ளையர் அனைவரும் சரி வேண்டாம் அனேகர் சரி அதுவும் வேண்டாம் கணிசமானவர் உத்தமர் என்று இருந்தால் வரலாற்று சமநிலை இல்லை, ஏன் வரலாறு திரிக்கப்படுகிறது என்று கூட குற்றம் சாட்டலாம். வெள்ளையரில் சிலருக்கு – வெகு சிலருக்கு – மன்சாட்சி இருந்தது என்ற கோணமே வரலாற்று சம்நிலை பிறழ்வதா?

    இதே போலத்தான் அயோத்திதாசர் சில ஜாதிகளைத் தலித்களை விடத் தாழ்ந்ததாகப் பார்த்தார் என்பதும். அதற்கும் புனைவுக்கும் என்ன சம்பந்தம்? காந்தியைப் பற்றி நாளை ஒரு புனைவு எழுதினால் (நான் அவர் செய்த தவறாகக் கருதும்) கிலாஃபத் இயக்கம் பற்றி சொல்லியே ஆக வேண்டுமா என்ன? இந்த நாவல் அயோத்திதாசரின் சிந்தனைகள் உருவான காலகட்டத்தைப் பற்றி பேசுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் தனக்கு ஜாதியால் ஏற்படும் அவமானத்தைக் கண்டு வெதும்புவதும் அதே நேரத்தில் வேறு சில ஜாதியினரை அவமானப்படுத்துவதும் அதிசயமா என்ன?

    புத்தகத்தில் எந்த வித சமநிலைப் பிறழ்வும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அ.நீ.யின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.

  8. (நண்பர் ஜடாயுவுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை…இது இன்னும் நாவலைப் படிக்காதவர்களுக்கு)

    >>கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.
    – எனக்குத் தெரிந்து இல்லை…ஏய்டன் மட்டுமே பாதிக்கப்படுபவனாக வருகிறான். அவனும் அயர்லாந்தில் பிரிட்டிஷ் கொடுமையை உணர்ந்ததால் (அது தொடர்பான கிண்டலும் நாவலில் வருகிறது). ப்ரெண்ணன் பஞ்சக் கொடுமைகளை resigned-ஆக ஏற்றுக் கொள்பவராக வருகிறார்.

    காத்தவராயன் பௌத்தத்தைத் தழுவுவதும் ஒரே நாளில் நடந்திருக்கும் என்று ஜெமோ-வும் குறிக்கவில்லை. அவன் மதத்தை உதறுவது பௌத்தம் நோக்கி நகரும் ஒர் அடிதான்.

    ஆர்வி-யின் பார்வையோடு ஒத்துப் போகிறேன். ஒரு கதையானது வரலாற்றின் ஒரு கோணத்தை வைத்து உரையாடும்போது ஏன் எல்லா கோணங்களையும் அலசவில்லை என்று கேட்பது அர்த்தமில்லை. இந் நாவல் மேற்கத்திய உலகால் மறைக்கப்பட்ட வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. இதைத் தொடர்ந்து நாம் வாசிக்கவேண்டியது நிறைய.

    அ.நீ-யின் எதிர்வினைகளில் குறிப்பிடப்பட்ட சில புத்தகங்களை வாசிக்கவேண்டும்.

  9. ஆனால் எழுத்தாளன் தன் பார்வையை எங்கே பதிக்கிறார், எங்கே பதிக்கவில்லை என்பது அவன் சுதந்திரம்! – RV

    மெத்தச் சரி, ஆனால், இந்த சுதந்திரம் ரொம்ப செலக்டிவாக ‘எழுத்தரசியலில்’ பயன்படுத்தப்படுகிறது என்பதும் நவீன ஆராய்ச்சி முறை இருட்டு எழுத்துக்களில் பளிச்சென்று வெள்ளை பூதமாக – வெள்ளை யானையாக இது தெரிவதையும் நன்கு காணவே முடிகிறது!

  10. புதிய ஏற்பாட்டில் இயேசுவிடம் சமாரியப்பெண் தன் மகனை குணப்படுத்தும் படி வேண்டுகிறாள்.அவரோ தான் யூதர்களுக்காகமட்டுமே வந்தவர் என்றுக்கூறுகிறார்.அந்தப்பெண்ணோ எஜமானர்கள் உண்ட உணவின் மிச்சம் அவர்களுடைய வேலைக்காரர்களுக்கு அளிக்கப்படுவது போல நீங்கள் எனதுமகனை குணப்படுத்தும்படிக்கேட்கிறாள். இந்த நிகழ்ச்சியைப்படித்தபோது இயோசு யூதர்களுக்ககவந்த ரட்சகர் அன்றி உலக ரட்சகர் அல்லர் என்று உணர்ந்துகொண்டேன். சமாரியர்கள் யூதர்கள் அல்லாத வேறு இனத்தினர் என்று நினைத்தேன். ஸ்ரீ அரவிந்தன் சமாரியர் யூதரின் தாழ்ந்த குடியினர் என்பதைக்காட்டி இயேசு ஒடுக்கப்பட்ட மக்களின் ரட்சகர் அல்லர் என்பதை தெளிவாக்கி இருக்கிறார்.
    ஸ்ரீ ஜெயமோகன் அவர்களை ஆசிரியராகக்கருதினாலும் நக்கீரப்பார்வையில் அவரது நாவலை விமர்சித்திருக்கும் அ நீ அவர்களுக்குப்பாராட்டுக்கள்.

  11. பஞ்சத்தில் லட்சகணக்கான மக்கள் இறப்பதற்கு காரணமான முதல் மூன்று நபர்களை குறிப்பிடச்சொன்னல் அதற்க்கு என் பதில் 1) Richard Temple 2) Richard Temple 3) Richard temple என்பதாகத்தான் இருக்கும். பஞ்சம் முடிந்தவுடன், William. Digby யால் 1878ம் வருடம் எழுதப்பட்ட The Famine Campaign in Southern India என்ற புத்தகம் இந்த தாது வருட பஞ்சத்தை விரிவாக அலசுகிறது. பிரிட்டிஷ் அரசு பஞ்ச நிவாரணப்பணிகளை தொடங்கவதற்கு முன்னமேயே சென்னையில் பல பணக்காரர்கள் ஆயிரக்கனக்கான மக்களுக்கு உணவு படைதுவந்ததையும் அது பிரிட்டிஷ் அரசால் நிறுத்தப்பட்டதையும், மற்றும் சந்தை பொருளாதரத்தை நிலை நிறுத்துவதற்கும், பஞ்ச நிவாரண செலவுகளை கடுமையாக குறைப்பதற்கும் Richard Temple எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட லட்சக்கணக்கான உயிர் இழப்புகள் விரிவாக கூறப்பட்டுள்ளது. This book is available for free download from net. ஜெமோ Richard Temple பற்றி தன நாவலில் குறிப்பிடாதது நாவலின் நம்பகத்தன்மையை குறைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.

  12. .//ஜெமோ Richard Temple பற்றி தன நாவலில் குறிப்பிடாதது நாவலின் நம்பகத்தன்மையை குறைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை//

    ஒரு புனைவெழுத்தாளன் அயோக்கியன் என நிரூபிக்கப்பட்டால்கூட அவனுடைய புனைவெழுத்து செத்துப்போய்விடாது. சற்று நிம்மதியாக இருங்கள்’ —
    என்று அவரே சொல்லிவிட்ட பிறகு இதில் என்ன பண்ண போகின்றீர்கள். சொல்லப்போனால் இதில் உள்ள ஏதிர்வினைகளை அதன் வீட்சை ஜெயமோகனே அனுமதித்தூ ஊக்கபபடுத்தவேண்டும்.

  13. சுனாமி கூட இறைவனின் அருட்கொடை தான் .

  14. ஆர்வி,

    ஏசுவைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்றால் ஏசு ஒரு மதமாற்றக்கருவியாக உபயோகப்படுவதால். கிறித்துவ மீட்பரான விவிலிய ஏசு, ரத்தமும் சதையுமாக உலவிய வரலாற்றுப்பாத்திரம் என்கிற என்று கட்டமைத்து மதரீதியாக கிமு கிபி என்கிற காலப்பிரிவை உருவாக்கி அதன் வழியாக பிற மதங்கள் delegitimize செய்யப்படுவதால் இதைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டி உள்ளது. மதமாற்றம் என்பது சந்தையில் சோப் வியாபாரம் போல, நீங்கள் விற்று விட்டுப்போங்களேன் என்கிற எளிய நினைப்பு பல கிறித்துவப்பற்றாளர்களிடம் இருக்கிறது. மதமாற்றம் உருவாக்கும் சமூகப் பிளவு, அதிகார அரசியல், பண்பாட்டு அழித்தொழிப்பு ஆகியவற்றை மொண்ணைப்படுத்தும் யுக்தி இது. மதமாற்றத்தின் அறப்பிழை அவர்களுக்கு உறைப்பதே இல்லை. இந்த மதமாற்ற வியாபாரத்தை விரிவுபடுத்த ஏசு என்னும் கவர்ச்சிப் புனைவை நேரத்திற்கேற்றவாறு புதிய பொட்டலமாக்கி விற்பதால் உள்ளே இருப்பது அதே பழைய சரக்குதான் என்று சந்தையில் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டி உள்ளது.

    மற்றபடி ஒரு விஷயத்தை உணர்ச்சிகர உக்கிரமாக முன் வைக்கும் வலுவான எழுத்து எதிர்பாராத சில எதிர்மறை விளைவுகளை உருவாக்கி விடக்கூடும். வரலாற்றுப்புனைவுகளில் இந்த அபாயம் எப்போதுமே உண்டு என்றாலும், கிறித்துவ மதமாற்றக்களமாக தலித் அரசியல் ஆகி இருக்கும் இன்றைய சூழலில், இப்படிப்பட்ட வரலாற்றுப்புனைவொன்றில் பேசவே படாமல் கழித்துக்கட்டப்பட்ட பகுதிகளும் தவறான பிம்பத்தை உருவாக்கும் விதத்தில் பேசப்பட்ட (பிலஹரி அய்யங்கார் குறித்த) பகுதிகளும் மிக அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே அவை சொல்லப்பட்டே தீர வேண்டும். ஏன் இதைச்சுட்டிக்காட்ட வேண்டும் என்பதைக் கட்டுரையில் அரவிந்தன் விளக்கி இருக்கிறார்: ”ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ‘வெள்ளையானை’ நாவல் உருவாக்கும் அதீத உணர்ச்சிக் கொந்தளிப்பான அற உணர்ச்சிக்கு முன்னால், இந்த வரலாற்றுத் தரவுகள் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது”.

    அரவிந்தன் எடுத்துக்காட்டாவிட்டால் எத்தனை பேருக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்கப்போகிறது? இது பேசப்பட வேண்டிய ஒரு தரப்பாக உருவெடுக்க வேண்டும். அதற்கு இந்த விவாதம் வழி வகுத்தால் அதனை இந்தப் புனைவால் விளைந்த நேர்மறை நல்விளைவாகக்க்கொள்வேன்.

    அன்புடன்,

    அருணகிரி.

  15. https://www.jeyamohan.in/?p=43047

    \\ அவை என் வரிகள் அல்ல. இந்துத்துவ வெறுப்பைக் கக்கும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையில் இருந்து நான் மேற்கோள் காட்டிய வரிகள். \\

    ஸ்ரீமான் ஜெயமோகன் அவர்கள் கருத்துக்களை சமநிலையுடன் அவதானிப்பவர் என்று எண்ணியிருந்தேன்.

    மேற்கண்ட சுட்டி அதற்கு விதிவிலக்கு.

  16. இதே போல் சமீபத்தில் தமிழ் நாட்டில் நடந்த சுனாமி விளைவுகளும் கூட விக்ரக ஆராதனையால்தான் வந்தது என்று சில மத பிரச்சாரகர்கள் கூறினார்கள்.

  17. மீண்டும் caveat-ஐ சொல்லிவிடுகிறேன் – புத்தகத்தை மறுபடியும் படிக்க வேண்டும், படித்தால் எண்ணங்கள் மாறலாம்.

    அன்புள்ள அருணகிரி,
    // ஏசுவைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்றால்… // நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒன்றே. ஆனால் சிந்திக்க வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்தப் புனைவில் எழுத வேண்டும் என்றால் எப்படி? ஆனால் ஏசுவின் இந்தப் (பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட) பிம்பத்தை முன்வைக்கிறது அதனால் இந்தப் புனைவில் வரலாற்று சமநிலை இல்லை என்ற வாதத்தை எப்படி ஏற்க முடியும்? இது முன் வைப்பது ஒரு cross-section. அதில் தவறு இருந்தால் சொல்லுங்கள். (ஸ்காட்டிஷ் அமைப்பைப் பற்றி அ.நீ. சொன்னது மாதிரி) அந்தத் தவறுகள் வரலாற்று சமநிலை பிறழ்வைக் காட்டுகின்றனவா என்று பேசுங்கள். அதை விட்டுவிட்டு ப்ரவலாக இருக்கும் ஏசுவின் பிம்பம் ஆவணங்களுடன் பொருந்தவில்லை, ரிச்சர்ட் டெம்பிளைப் பற்றி குறிப்பிடவில்லை, அயோத்திதாசர் சில ஜாதிகளைத் தன் ஜாதியை விட கீழானதாகப் பார்த்தார், அதனால் இந்தப் புனைவில் வரலாற்று சமநிலை இல்லை என்பது விசித்திரமான வாதமாகத்தான் இருக்கிறது.

    // கிறித்துவ மதமாற்றக்களமாக தலித் அரசியல் ஆகி இருக்கும் இன்றைய சூழலில்… // புனைவு ஒவ்வொன்றும் சம்காலச் சூழலை, பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட வேண்டும் என்பது ரஷ்யன் கமிசார்களின் அணுகுமுறை, அதை உங்களிடம் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    பிலஹரி அய்யங்கார் பற்றி அ.நீ. எதுவும் தவறான தரவு, பிம்பம் என்று சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பி விட்டுப்போய்விட்டதா?

    // அரவிந்தன் எடுத்துக்காட்டாவிட்டால்… // தாராளமாக எடுத்துக் காட்டட்டும், விவாதம் உருவாகட்டும். ஆனால் இது வரை எடுத்துக் காட்டப்பட்டவையால் இந்தப் புனைவில் வரலாற்று சம்நிலை இல்லை என்ற வாதம் (என் கண்ணில்) தேறவில்லை.

    பின்குறிப்பு: ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை.

  18. அன்புள்ள ஆர்வி,

    ஏசுவைப்பற்றி எதிர்மறையாய் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. கட்டுரையும் அதைச்சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். எதை எழுதவேண்டும் என்பதை புனைவின் ஆசிரியரே தீர்மானிக்கிறார். ஆனால் ஒரு புனைவு எப்படிப்படிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு வாசகரும் தீர்மானிக்கிறார்கள். புனைவில் இருக்கும் அதீதங்கள், இடற்லகள், விடுபடல்கள் என்று அத்தனையும் வாசகன் பார்வையில் விமர்சனத்துக்கு உட்படுபவையே. கருணை வடிவ சமத்துவ ஏசு என்கிற புனைவு ஒரு மதமாற்ற பிரசாரக்கருவி, அதையே இந்த நாவலும் கேள்வியின்றி திருப்பிச்சொல்வதால் அந்த அம்சத்தை இந்தக்கட்டுரை சுட்டிக்காட்டி, மாற்றுப்பார்வையைப் பேசுகிறது, (இந்தமடலின் கடைசியில் உள்ள உங்கள் பின்குறிப்புக்கான எதிர்வினையையும் படித்து விடுங்கள்).

    ஆனால் இந்த கதையில் ரிச்சர்ட் டெம்பிளைப்பற்றி பேசாதது புனைவின் சமநிலையைக்குலைக்கும் ஒன்றுதான். ஏனென்றால் இந்தப்புனைவு இதன் உச்சகட்ட உணர்ச்சிகரம் காரணமாய் கருணையற்ற இந்துக்கள், கருணைமிக்க கிறித்துவ மிஷனரிகள் என்று ஒரு பொய்ப்பிளவை அதன் உதாரண வாசகனின் மனதில் உருவாக்கி விட வாய்ப்புள்ளது. அது மிகத்தவறான வரலாற்றுப் பார்வைக்குள் வாசகர்களைச்செலுத்திவிடும் என்பதால் அது சுட்டிக்காட்டப்படுவது மிக முக்கியம்,.

    ”புனைவு ஒவ்வொன்றும் சம்காலச் சூழலை, பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட வேண்டும் என்பது ரஷ்யன் கமிசார்களின் அணுகுமுறை, அதை உங்களிடம் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது”

    கிடையாது. ஆனால் பிரசார புனைவாக ஆகிவிடும் அபயாம் ஒரு ஆக்கத்தில் இருக்கும்போது அதன் குறைபாடுகளை, போதாமைகளைச்சுட்டிக்காட்டி அதனை எதிர்கொள்வது அறிவார்ந்த அணுகுமுறையின்பாற்பட்டது. கம்யுனிஸ கமிசார்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை.. உண்மையில் அவர்களுக்கு சமநிலையோ, சமகாலச்சூழலோ முக்கியமே இல்லை. கதை அதன் போக்கில் கம்யுனிச அணியில் மக்களைத்திரட்டுகிறதா, ஆயுதமேந்திய போராட்டத்தை தீர்வாக வைக்கிறதா, கம்யுனிஸ சொர்க்கத்திற்கு ஆதரவான விஷயம் கடைசியில் வெல்கிறதா, செங்கொடி ஆதரவாளர்கள் நல்லவர்களாக வருகிறார்களா இதெல்லாம்தான் அதனை வழிநடத்தும் சட்டகங்கள். அப்படியோர் ஒருபரிமாணப் பிரசாரத்திற்கு இந்த புனைவு கருவியாகி விடக்கூடாதே என்றுதான் இவ்வளவு தரவுகளையும் இந்தக்கட்டுரை சுட்டிக்காட்டிப் பேசுவதாக நான் பார்க்கிறேன்.

    பிலஹரி அய்யங்கார் குறித்து – அது கட்டுரையில் உள்ளதல்ல. என் கருத்து- அதனால்தான் அடைப்புக்குறிக்குள்.

    “பின்குறிப்பு: ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை”.

    எதற்குப்பேச வேண்டும்? ராமனும் கண்ணனும் அவர்களை வழிபடுவதும் நம்பிக்கையின்பாற்பட்டவை. கிருஷ்ணனுக்குப்பின் கிருஷ்ணனுக்கு முன் என்று வைத்து வரலாற்றுப்பாடம் வடிக்கவில்லையே- ஏசுவை வைத்து வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறதே, உலக வரலாறின் காலக்க்கணக்கு ஏசுவின் பிறப்பை வைத்து பகுக்கப்பட்டிருக்கிறதே. கிறித்துவ மிஷனரிகளும் கைக்கூலிகளும் இந்து தெய்வங்களை நிந்தனை செய்துகொண்டேதானே இருந்திருக்கிறார்கள். ஏசுவைக்கட்டுட்டைப்பதை தமிழில் யார் செய்திருக்கிறார்கள்? எனவே உங்களுக்கான நேரடி விடை கிறித்துவத்தின் அடிப்படை நோக்கம் மதமாற்றமாக இருப்பதால், ஏசு கிறித்து என்கிற பிம்பமும், அதன் உள்ளீடற்ற வரலாறும் தொடர்ந்து பேசப்பட வேண்டி இருக்கிறது.

    ராமன் கிருஷ்ணன் போல ஏசுவும் நம்பிக்கைதானே என்று சொல்லி விடாதீர்கள். அது கிறித்துவர்களை அவமதிப்பதாகும். ரத்தமும் சதையுமாக மண்ணில் நடந்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர் என்பது கிறித்துவர்களுக்கு வெறும் நம்பிக்கையல்ல. அது உண்மையில் நடந்த வரலாறு. அப்படி வரலாறாக ஏசு ஆக்கப்படவில்லையென்றால் இன்றைய கிறித்துவம் கிடையாது. கிறித்துவ இறையியலின் இந்த மிக மிக அடிப்படையான விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ராமனும் கிருஷ்ணனும் இறைத்தன்மை பெறுவது அவர்களது பிறப்பாலோ அல்லது இறப்பாலோ அல்ல. அவர்கள் வாழ்க்கையால், செயல்களால் அவர்கள் புகழப்படுகிறார்கள். பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. தந்தைக்கோர் மகனாய், தாரத்திற்கோர் கணவனாய், தாய்சொல்லைத்தட்டாதவனாய், நட்புக்கு இலக்கணமாய், கருணையின் திருவுருவாய் மரியாதாபுருஷனாக வாழ்ந்ததால் ராமன் கொண்டாடப்படுகிறான்.துஷ்டர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட செய்த தர்ம யுத்தத்தால் அவன் அருளிய கீதையின் பெயரால் கிருஷ்ணன் பாடப்படுகிறான்.

    ஏசு அப்படியல்ல. ஏசு இறைத்தன்மை பெறுவது அவர் வாழ்க்கையால் அல்ல- சமாரியர், மலைப்பிரசங்கம் என்று எதுவும் அவரது இறைத்தன்மையை நிறுவுவது கிடையாது. அவர் செய்த மாயாஜாலங்களுக்கு (நீர்மேல் நடத்தல், தண்ணீரை திராட்சை மதுவாக்குதல் இன்ன பிற) இணையான, ஏன் அதையும்விட தீவிர மாயாஜாலங்கள் யூதமதம் ஏற்கனவே கண்டிருந்தவைதான். ஏசு இறைத்தன்மைபெறுவது அவரது புனித பிறப்பாலும் அவர் உயிர்த்தெழுந்ததாலுமே. அதன் வழியாகவே கிறித்துவ தந்தைக்கடவுளானவர் மனிதர்களின் மேல் கொண்ட அன்பு நிரூபிக்கப்பட்டு மானுடருடனான புதிய உடன்பாடு உருவாகிறது. இது முக்கியமான விஷயம். ஏனென்றால், அவரது கன்னிப்பிறப்போ, சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததோ இல்லையென்றானால் இன்று நாம் காணும் நிறுவன கிறித்துவம் என்பதன் அடிப்படையே இல்லாமல் போய் விடும். இதனால்தான் ஏசு என்கிற பிம்பத்தைச்சுற்றி வரலாறு உருவாக்கப்படுகிறது. இந்த வரலாறு பள்ளிப்புத்தகத்தில் உண்மையே போல் பாடமாக்கப்படுகிறது. கிமு கிபி என்று மனதில் மீண்டும் மீண்டும் ஆழப்பதிய வைக்கப்படுகிறது. கிறித்துவ நம்பிக்கை என்பது ஒரு குழுவின் நம்பிக்கையாய் மட்டும் இருந்தால் பிரச்சனை இல்லை, அது வரலாறாகத்திரிக்கப்பட்டு மதமாற்றப் பிரசாரத்திற்கும், அதிகார அரசியலுக்கும் கருவியாக்கப்படுகிறது. அதனால் அதன் அடிப்படையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி தோலுரிக்க வேண்டி இருக்கிறது.

    அன்புடன்,

    அருணகிரி.

  19. ஆர் வீ,

    // புத்தகத்தை மறுபடியும் படிக்க வேண்டும், படித்தால் எண்ணங்கள் மாறலாம். //

    நீங்கள் இப்போது படிக்கவேண்டியது வெள்ளை யானை புத்தகம் இல்லை… மூல ராமாயணமும், மகாபாரதமும் அதற்குப் பூர்வர்கள் எழுதியுள்ள வியாக்கியானங்களும். ஏன் சொல்கிறேன் என்றால்,

    // இது ஏசுவுக்கு மட்டுமல்ல, ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் விஷ்ணுவுக்கும் பொருந்தும். மகாபாரதம் காட்டுவது கிருஷ்ணன் என்ற தந்திரசாலியை. நான் வழிபடுவது அந்த தந்திரசாலியை உள்ளடக்கிய பிம்பத்தை! ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா! காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா? துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன? //

    // ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை.//

    இப்படியெல்லாம் கூறுவதற்கு அது தான் பரிகாரம்.

  20. \\\ நீங்கள் இப்போது படிக்கவேண்டியது வெள்ளை யானை புத்தகம் இல்லை… மூல ராமாயணமும், மகாபாரதமும் அதற்குப் பூர்வர்கள் எழுதியுள்ள வியாக்கியானங்களும். \\

    அன்பார்ந்த ஸ்ரீ கந்தர்வன்

    ம்…….ஒரு சிறு திருத்தம் …….

    ஸ்ரீ ஆர்.வி மூலராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் (வ்யாக்யானங்களை விட்டுவிட்டாரா தெரியாது) படித்தபடிக்குத் தான் ஒரேயடியாகப் பொழிகிறார். நீங்கள் மேலும் அவரைப் படிக்கச் சொல்கிறீர்கள். ஆபத்து 🙂

    யதோக்தமாக ராமாயணம் மற்றும் பாகவதாதி க்ரந்தங்கள் அனுபவத்தில் உள்ள ஒரு சிஷ்டரிடம் *தத் வித்திப்ரணிபாதேன பரிப்ரச்னேன சேவயா* என்ற படிக்கு பணிவுடன் கற்கச் சொல்வது தான் பொருத்தம். (கற்றுக்கொண்டிருக்கலாம் என்பது என் அனுமானம்) அப்படி முறைப்படி கற்றுவிட்டால் — இப்படி கேட்பவருக்கு …. கேழ்விகளை விட அருமையாக —– தர்க்கபூர்வமாக — இவரால் அசைக்க முடியாத உத்தரங்கள் தர முடியும்.

  21. ராமனும் கிருஷ்ணனும் இறைத்தன்மை பெறுவது அவர்களது பிறப்பாலோ அல்லது இறப்பாலோ அல்ல. அவர்கள் வாழ்க்கையால், செயல்களால் அவர்கள் புகழப்படுகிறார்கள். பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. //

    நச்! அருணகிரி முத்திரை.

  22. \\ பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. \\

    அல்லது ஜார்கண்டில் மேரிமாதாவின் விக்ரஹாராதனை நிகழ்த்துவதற்கு வனவாசிப்பெண் போல மேரிமாதாவுக்கு சேலை அணிவித்து வனவாசிக்குழந்தை போல் குழந்தை ஏசுவை மேரிமாதாவின் தலைப்பில் போட்டு சித்தரிக்கும் inculturation பித்தலாட்டம் போல் ….. அமேரிக்காவில் க்ருஷண பக்தர்கள் க்ருஷ்ணனை வெள்ளைக்கார குழந்தை போல் செதுக்கி க்ருஷ்ணனுக்கு பெர்முடாவோ ஜீன்ஸ்பேண்டோ போட்டு க்ருஷ்ணனைப் பரப்புவதில்லை.

  23. அன்புள்ள அருணகிரி,

    இரண்டு மூன்று நாளைக்கு முன் விலாவாரியாக எழுதிய பதிலை இண்டர்னெட் தின்றுவிட்டது. மீண்டும் எழுதப் பொறுமை இல்லை. அதனால் இரண்டு மூன்று சுருக்கமான கேள்விகள் மட்டும்:

    1. சமத்துவ ஏசு என்கிற கருத்தாக்கம் பரவலாக இருந்தது, இருக்கிறது. அது எதன் மீது கட்டப்பட்ட கருத்தாக்கம் என்பது இந்த நாவலின் பேசுபொருள் அல்ல. ஒவ்வொரு புனைவிலும் புழக்கத்தில் இருக்கும் எந்தக் கருத்தாக்கம் சுட்டப்ப்ட்டாலும் அதன் மூல ஆதாரங்களை அலச வேண்டும் என்கிறீர்க்ளா?

    2. // கருணையற்ற இந்துக்கள், கருணைமிக்க கிறித்துவ மிஷனரிகள்…//
    அப்படி ஒரு எண்ணம் உருவாக இடமே இல்லை. சுரண்டல் வெள்ளையர், ஓரிரு விதிவிலக்குகள் என்ற எண்ணமே உருவாகும். ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வதை ஏற்றாலும்: வாசகன் எப்படிப் படிக்கிறான்(ள்) உணர்கிறான்(ள்) என்பதற்கெல்லாம் ஆசிரியரை பொறுப்பாக்கினால் இலக்கிய ஃபத்வாக்களை எதிர்க்கும் தார்மீக உரிமையை என்கிருந்து பெறுவீர்கள்?

    3. // கதை அதன் போக்கில் கம்யுனிச அணியில் மக்களைத்திரட்டுகிறதா, ஆயுதமேந்திய போராட்டத்தை தீர்வாக வைக்கிறதா, கம்யுனிஸ சொர்க்கத்திற்கு ஆதரவான விஷயம் கடைசியில் வெல்கிறதா, செங்கொடி ஆதரவாளர்கள் நல்லவர்களாக வருகிறார்களா இதெல்லாம்தான் அதனை வழிநடத்தும் சட்டகங்கள். // அப்ப்டியேதான் நான் இந்தத் தளத்தில் உணர்கிறேன். இந்தப் புத்தகத்தின் மீது இத்தனை தீவிரமாக அ.நீ. போன்ற முக்கிய ஹிந்துத்துவ சிந்தனையாளர்கள் விமர்சனம் வைக்க எனக்கு ஒரே காரணமாகத் தெரிவது அது எப்படி சில – வெகு சில – கிறிஸ்துவர்களுக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்லப் போச்சு என்ற கோபமே! இந்தப் பதிவிலும் மறுமொழிகளிலும் மீண்டும் மீண்டும் உள்ள தொனியும் implicit messageஉம் அதுவேதான் என்றே நான் உணர்கிறேன். ஜடாயுவின் முதல் மறுமொழியிலிருந்து ஒரு வரி உங்கள் கவனத்துக்கு: / வெள்ளை யானையில் கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.. //

    // எதற்குப்பேச வேண்டும்? // சமநிலை என்றால் உங்கள் கருத்தில் என்ன என்று எனக்குப் புரியவில்லை. கிறுஸ்துவ மிஷனரிகளிடம் சமநிலை இல்லை, அதனால் என்னிடம் எதிர்பார்க்காதே என்று சொல்ல வருகிறீர்களா என்ன?

  24. அன்புள்ள ஆர்வி,

    சில கிறித்துவர்களிடம் மனசாட்சி இருந்தது என்கிற கோபமா? அவசரமாய்ப் எழுதி விட்டீர்களோ? இந்தத்தளம் மனசாட்சி உள்ள கிறித்தவர்களைப்பற்றியும் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளது என்பது தெரியுமா? கிறித்துவர்களில் சிலருக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்வதில் ஒரு பிரச்சனையுமில்லை. இந்துக்களில் யாருக்குமே மனசாட்சி இல்லை என்று சொல்வதில்தான் பிரச்சனை. அது உண்மையில்லை என்று தெரிந்தபின்னரும், மனசாட்சியற்ற இந்துக்களாகவும் காருண்யமிக்க மிஷனரிகளாகவும் துருவ எதிர்களாகக் கதை வடிப்பது சரி கிடையாது. அப்படி எழுத ஒரு புனைவாசிரியருக்கு உரிமை உண்டு என்றால், அதில் உள்ள பிறழ்வுப்பார்வையைச்சுட்டிக்காட்ட வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் உரிமை உண்டு. இது இலக்கிய ஃபாத்வா கிடையாது – வரலாற்று தரவுகளின் சமநிலையின்மீது இந்தப்புனைவு எழுப்பப்படவில்லை என்று கறாராகச்சொல்லும் விமர்சனம். சல்மான் ருஷ்டி மேலும் தஸ்லிமா நஸ்ரின் மீதும் இருப்பது இலக்கிய ஃபாத்வா. வார்த்தைகளை அதன் கனம் அறிந்து உபயோகிக்காவிட்டால் அறிவார்ந்த விவாதத்திற்கும் உணர்ச்சிகர அவதூறு கோஷத்திற்கும் வித்யாசம் இல்லாமல் போகும் ஆர்வி.

    ’இந்துக்களில் யாருக்கும் ஈரம் கிடையாது, அவர்கள் பஞ்சக்கொடுமைக்கெதிராய் எதுவும் செய்யாமல் பிரிட்டிஷ் காலனீய சுரண்டல்வாதிகளுடன் கைகோர்த்தபோது, கிறித்துவ மிஷனரிகள் மட்டுமே பஞ்சத்தின்கொடுமைக்கெதிராய்ப்பாடுபட்டனர்; அதனாலேயே தலித்துகளுக்கு அவர்கள் ஏற்புடையவராயினர்’ என்பது அடிப்படையற்ற பொய்யான கதையாடல். இந்தப்பொய்க்கதையாடலுக்கு வலுசேர்க்க ஏசு என்கிற ’காருண்யமிக்க இறைமைந்தன்’ ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படுகிறார் என்பதாலேயே ஏசுவையும் விமர்சன வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டியதாகிறது.

    வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் சமநிலையுடன் எழுதப்படும் வரலாற்றுப்புனைவுகளுக்கு உயர்ந்ததோர் இலக்கிய இடத்தை அளிக்கும் ஒரு வலுவான படைப்பாளி+விமர்சகரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு கதை வந்து விழுந்ததால் எழுந்த ஏமாற்றம்- அதுதான் இவ்வளவு விவாதிக்க வைக்கிறது. ரோமாபுரிப்பாண்டியனை யாரும் அறிவுத்தளத்தில் வைத்து ஆராய்வதில்லை.

    அன்புடன்,

    அருணகிரி

  25. // இந்தத்தளம் மனசாட்சி உள்ள கிறித்தவர்களைப்பற்றியும் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளது என்பது தெரியுமா? // அது எதிர்காலத்தில் சில ஹிந்துத்துவர்களுக்கு “மனப்பிறழ்ச்சி” வெளியே வராது என்பதற்கான காரண்டியா என்ன? சில பல சமயங்கள் நானும் இந்தத் தளத்தை, இங்கே வரும் கதை கட்டுரைகளை, புகழ்ந்து, வாழ்த்தி, பாராட்டி இருக்கிறேன். அதனால் நான் எப்போதும் அப்படியே செய்வேன் என்று உங்களுக்குப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லையே?

    அ.நீ.யின் புனைவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் (அயோத்திதாசர் ஜாதி பார்த்தார், ரிச்சர்ட் டெம்பிள் பற்றி எழுதவில்லை, ஏசு பற்றிய ஆவணங்கள் ஏசுவின் பிம்பத்தோடு முழுதும் ஒத்துப் போகாதது இத்யாதி), ஜடாயுவின் மறுமொழி, மேலும் ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்று நீங்கள் இந்தப் புத்தகத்தை புரிந்து கொண்டிருப்பது எல்லாமே இந்த எரிச்சலைத்தான் உறுதிப்படுத்துகின்றன. இந்த குறுகிய நாம் vs அவர்கள் புரிதலே இலக்கிய ஃபத்வாக்களின் முதல் படி. கஞ்சி ஊத்தும் ஒரு ஹிந்து பாத்திரம் கூட இல்லாவிட்டால் அது ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்ற பார்வையை முன் வைக்கிறது என்கிற மாதிரி புரிதல்களை – கமலஹாசன் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் 3 முஸ்லிம் தீவிரவாதி இருந்தால் ஒரு ஹிந்து ஆயுதம் விற்பவன் பாத்திரம் வைப்பது மாதிரி – விட கொஞ்சம் அதிகமாகவே நான் அ.நீ., ஜடாயு, அருணகிரி போன்ற கூர்மையான சிந்தனையாளர்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.

    ஒன்று நிச்சயம் – ஜெயமோகன் பாவங்க. வினவு மாதிரி “முற்போக்காளர்களுக்கு” அவர் ஹிந்துத்துவர்; உங்களை மாதிரி ஹிந்துத்துவர்களுக்கு அவர் “முற்போக்காளர்”. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிதான். வினவு மாதிரி தமிழ் ஹிந்து தளமும் எதிர்காலத்தில் முழு வெறுப்பு அரசியலில் இறங்காமல் இருக்க வேண்டும் என்று ராமன், கிருஷ்ணன், முருகன், பிள்ளையார் எல்லாரையும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  26. நான் எழுதிய பாராக்களில் ஒன்றைக் காணோம். அதை தமிழ் ஹிந்து மட்டுறுத்துனர்கள் நீக்க முகாந்திரம் இல்லை. என் இண்டர்னெட் தொடர்பு பிரச்சினைதானோ என்னவோ, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

    சுருக்கமாக மீண்டும்:
    // இந்துக்களில் யாருக்குமே மனசாட்சி இல்லை என்று சொல்வதில்தான் பிரச்சனை. // நானும் இந்தக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட தரவுகளையும், எழுதப்பட்ட மறுமொழிகளையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடிப்பார்த்துவிட்டேன். கட்டுரை, மறுமொழிகள் எல்லாமே மீண்டும் மீண்டும் சொல்வது ரிச்சர்ட் டெம்பிள் சுரண்டினார், லிட்டன் பிரபு கவலையே படவில்லை, மிஷனரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றம் செய்தனர் என்ற தரவுகள்தான். சங்கர மடத்தினர் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தார்கள், அந்த முதலியார் செங்கல்பட்டில் கஞ்சித் தொட்டி வைத்தார், இந்த ரெட்டியார் சைதாப்பேட்டையில் கூழ் ஊற்றினார், ஆர்க்காட்டு நவாப் திருவல்லிக்கேணியில் பிரியாணி போட்டார் என்ற பாணியில் ஒரு தரவு, ஒரு பேர் கூட இல்லை. முதல் பகுதியில் பாரம்பரிய அன்னதான முயற்சி என்று ஒரு வரி வருகிறது அவ்வளவுதான். சுரண்டிய வெள்ளையர் என்று மட்டும் தரவு மாற்றி தரவு. உங்கள் focus அது எப்படி சில கிறிஸ்துவர்களுக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்லப் போச்சு என்ற எரிச்சலே, ஹிந்துக்களின் மனசாட்சி பற்றி சொல்லவில்லை என்ற தார்மீகக் கோபம் என்பதெல்லாம் சும்மா உடான்ஸ் என்பதில் என்ன சந்தேகம்?

  27. கடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்
    எம்.ஆர். ராஜ கோபாலன் | இதழ் 97 | 15-12-2013|

    https://solvanam.com/?p=30613

  28. \\ சங்கர மடத்தினர் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தார்கள், அந்த முதலியார் செங்கல்பட்டில் கஞ்சித் தொட்டி வைத்தார், இந்த ரெட்டியார் சைதாப்பேட்டையில் கூழ் ஊற்றினார், ஆர்க்காட்டு நவாப் திருவல்லிக்கேணியில் பிரியாணி போட்டார் என்ற பாணியில் ஒரு தரவு, ஒரு பேர் கூட இல்லை. \\

    முதல் உத்தரத்தில் கோவிந்த ஐயரின் கடலை உருண்டை தரவு கொடுத்துவிட்டேன்.

    எல்லாம் தொட்டனைத்தூறும் சமாசாரம் தான். தோண்டத் தோண்டத் தானே ஊற்றுகள் தென்படுகிறது.

    கீழே முன்னமேயே வ்யாசத்தில் பகிரப்பட்ட ஜாதிஹிந்துக்களின் பெயர்கள். அவர்களது செயல்பாடுகளை அ.நீ யின் வ்யாசத்தை மறுமுறை ஆர்.வி வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்.

    \\ இன்னமும் மிகத் தெளிவான விஷயம்.

    வெள்ளையானை புதினம் காட்டுகின்றது என்று சொல்லப்படுவது போல் மிகப்பெரும்பாலான ஜாதிஹிந்துக்களும் அறவுணர்வு இல்லாமல் செயல்பட்டனர் — என்பதன் விதிவிலக்குகளாக — நரசுசெட்டி, ராஜா சர்.டி.மாதவராவ், திவான் பகதூர் ரகுநாத ராவ் மற்றும் ரங்கநாத முதலியார், சேஷையா சாஸ்திரி போன்றோரின் செயல்பாடுகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது………\\

    ஜாதி ஹிந்துக்கள் அறவுணர்வு அறவே இல்லாமல் இருந்திருந்தால் ……… அதை சரித்ரம் சார்ந்து சுட்டுவதில் தவறு ஏதும் இல்லை தான்.

    ஜாதி ஹிந்துக்களில் பலர் அறவுணர்வு மிக செயல்பட்டிருந்தும் அதை பரங்கிக் கும்பினி சர்க்கார் மறைக்க விழைந்ததும் கூட புரிந்து கொள்ள முடிந்த விஷயமே.

    ஸ்ரீமான் ஜெயமோகன் எழுதியது புனைவு தான். எதை வேண்டுமானாலும் எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு தான்.

    அ.நீ இங்கு பட்டியல் போட்டு தரவுகள் கொடுத்துள்ளது எதுவும் தரவுகள் இல்லை. எல்லாம் அவரது புனைவுகளே.

    ஸ்ரீமான் ஜெயமோகன் அன்பர் அலெக்ஸ் அவர்களை இறையியலாளர் என்று சொன்னால் அது யதார்த்தம். ஸ்ரீமான் அ.நீ அன்பர் அலெக்ஸ் அவர்களை இறையியலாளர் என்று சொன்னால் அது வசவு.

    பாவம் அ.நீ. க்ரஹசாரம் சரியில்லை என நினைக்கிறேன். நல்ல கனமான மத்தளம் தான்.

  29. க்ருஷ்ணகுமார்,

    1. குழம்பிவிட்டீர்களே! அ.நீ. குறிப்பிட்டிருக்கும் எந்த ஜாதி ஹிந்துவின் பேரும் பஞ்ச காலத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நேரடியாக உதவி செய்ததாக இல்லை. மாதவராவ், ரகுநாதராவ் போன்றவர்கள் நிறுவிய மெட்ராஸ் மெயில் பத்திரிகையின் ஆசிரியரான டிக்பி விமர்சித்து தலையங்கம் எழுதினார், அதை இவர்கள் தடுக்கவில்லை என்பதைத்தான் அவர்கள் பங்காக அ.நீ. குறிப்பிடுகிறார். (மாதவராவ் ஆங்கில அரசு பெரிதும் மதித்தவர்களில் ஒருவர், ஆங்கில அரசு அவரை மீண்டும் மீண்டும் வேண்டி வேறு வேறு இந்திய அரசுகளுக்கு திவானாக பணி புரிய அனுப்பியது, அவரது உறவினர் ரகுநாதராவும் பஞ்ச காலத்தில் பரோடாவிலோ இந்தோரிலோ திவானாக இருந்தார் என்பது ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு.) அதுவும் காஜுலு லக்‌ஷ்மநரசு பஞ்சத்துக்கு ஏழெட்டு வருஷம் முன்னாலேயே இறந்து போனவர். 🙂 அவர் பஞ்சத்தில் என்ன பணி ஆற்றி இருப்பார் என்று சொல்ல வருகிறீர்கள்?

    2. வளவனூர் கோவிந்த ஐயர் பற்றி நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. படித்துப் பார்த்ததில் பெரும் பணி ஆற்றி இருக்கிறார் என்று தெரிகிறது. சுட்டிக்காக நன்றி!
    ஆனால் கோவிந்த ஐயரைப் பற்றி இந்தத் திரியில் இரண்டு கட்டுரைகள், 25 மறுமொழிகளுக்குப் பிறகு – நான் ஏன் யாரும் பஞ்ச காலத்தில் சில ஹிந்துக்களுக்கு மனசாட்சி இருந்தது என்பதைப் பற்றி இன்கே யாரும் பேசவில்லை, எல்லாருக்கும் இந்த ஆங்கிலேயர் அயோக்கியத்தனம் செய்தார், அவர் அப்படி, இவர் எப்படி என்று சுட்டிக் காட்டுவதுதான் focus ஆக இருக்கிறது என்று சுட்டிக் காட்டிய பிறகுதான் – குறிப்பிடுகிறீர்கள் இல்லை இல்லை பிரஸ்தாபம் எழுகிறது! எது focus, என்ன எரிச்சல் என்ற முடிவை மாற்றிக் கொள்ள எனக்கும் ஆசைதான், ஆனால் எப்படி மாற்றிக் கொள்ள?

  30. “…ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்று நீங்கள் இந்தப் புத்தகத்தை புரிந்து கொண்டிருப்பது” தவறு என்கிறீர்கள். ’அன்றைய (சாதி) இந்துக்களில் எவரும் பஞ்சத்திற்கு எதிராக எதுவுமே செய்யாமல் தலித் சகோதரர்களைக்கைவிட்டார்கள். இதை புனைவால் மறு உருவாக்கம் செய்து அதன் வழியாக இன்றைய இந்துக்களை குற்றவாளிகளாக்கிக்காட்ட இந்நூல் வடிக்கப்பட்டது’- என்று நான் சொல்வதைக்கண்டு நான் தவறாகப்படித்திருக்கிறேன், புத்தகத்தின் நோக்கமோ ஆசிரியரின் நோக்கமோ அது கிடையாது என்று வாதிடுகிறீர்கள். எனவே இந்த நாவலை எப்படிப்படிப்பது, எதற்காக இதை எழுதினார் என்று இதன் ஆசிரியரே என்ன சொல்கிறார் என்பதையும் பார்த்து விடலாம். ஜெயமோகன் சொல்கிறார்:
    “உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது”.

    ”கஞ்சி ஊத்தும் ஒரு ஹிந்து பாத்திரம் கூட இல்லாவிட்டால் அது ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை” என்று நீங்கள் சொல்கிறீர்கள், ’இந்துக்களுக்கு மனசாட்சி இல்லாததால் கஞ்சி ஊத்தவில்லை, அவர்களை கூண்டில் நிறுத்தவே இந்த வரலாற்றுப்புனைவு’ என்கிறார் ஆசிரியர்.

    ஆக தெளிவாக நாவலின் ஆசிரியர் இப்படி விளக்கமாகச்சொல்லி விட்ட பின்னும் நீங்கள் விடாப்பிடியாக அப்படி வாசிப்பது தவறான வாசிப்பு என்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் விவாதம் செய்ய வேண்டியது கதையின் ஆசிரியரிடத்தில்தான். அவரிடம் சென்று ”இந்தக்கதையை இந்த நோக்கத்திற்காக நீங்கள் எழுதியதாகச்சொல்வது பிழையானது; நான் எப்படி வாசிக்கிறேனோ அந்தப்பார்வையில்தான் நீங்கள் கதை எழுதினீர்கள். இது கதாசிரியரான உங்களுக்கு எப்படிப்புரியாமல் போனது, ” என்று ஆசிரியரிடம் போய் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டுகிறேன்.

    அப்படி அவரிடம் கேட்டு ஒரு கட்டத்தில் ‘பஞ்சத்தில் நலிந்தவர் மடிவது கண்டும் அன்றைய இந்துக்கள் தரப்பு மனசாட்சி இல்லாமல் செயல்பட்டது என்பதைத்தான் ஆசிரியர் சொல்ல வருகிறார் என்று உங்களுக்கு விளங்கி விடுகிறது என்று வைத்துக்கொண்டால், அந்த நிலையில் ”இந்த குறுகிய நாம் vs அவர்கள் புரிதலே இலக்கிய ஃபத்வாக்களின் முதல் படி” என்கிற முத்தான கருத்தையும் அவரிடம் நீங்கள் சொல்லிவிட வேண்டும்.

    இந்த விவாதத்தில் நான் சொல்லவேண்டியதை நான் சொல்லி விட்டேன். என் பதில்கள் அனைத்திலும் குறைந்த பட்ச சந்தேகத்தின் பலனை உங்களுக்கு அளித்தே எழுதி இருக்கிறேன். ஆனால் நீங்களோ ”ஹிந்துக்களின் மனசாட்சி பற்றி சொல்லவில்லை என்ற தார்மீகக் கோபம் என்பதெல்லாம் சும்மா உடான்ஸ் என்பதில் என்ன சந்தேகம்?” என்று கேட்கும் உள்ளொளிபெற்ற தெளிவு நிலையில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் மேலும் பேசுவதால் பயனில்லை என்று எனக்குத்தோன்றுவதால், இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்,

    அருணகிரி.

  31. இந்த காலகட்டத்தில்தான் குற்ற பரம்பரை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை பற்றி வெள்ளையானையில் தரவுகள் வருகிறதா ?
    The British rulers (practising Christians) were the worst persecutors of the so-called Dalits. By declaring nearly 6 crore Hindus as ‘Criminal Tribes’ they had blocked the prospects of these hapless Hindus for seeking educational and economic development by enacting a law called The Criminal Tribes Act.
    The inhuman law was first notified and enforced in northern India and subsequently extended to Bengal and other provinces. It notified 160 castes, who presently constitute the core of today’s ‘dalit samaj’ as “:hereditary criminals” on the ground that as a community they were passing on the professions like theft, burglary, house-breaking, robbery, dacoity and counterfeiting of coins from one generation to the next.

    The total headcount of the so-called criminal tribes branded as ‘pariahs’ by our former Christian rulers at that time was approximately six crores (i.e., 60 millions) constituting nearly 30 percent of the Hindu population. According to Census 1871 the total population of India was 20,3415000. Among them the Hindu headcount was roughly estimated to be 17-18 crores or so. Since almost all members of the so-called ‘criminal tribes’ were Hindus, with a single stroke of pen the British rulers reduced nearly 30 percent of the Hindu population to the status of hereditary criminals thereby condemning their unborn generations to work as hewers of wood and drawers of water!

    Among the tribes declared as hereditary criminals were groups of Bhils who had fought against the British oppression on the banks of Narmada and in Khandesh. There were the Kanjars, the Sansis, the Nats and Meenas of Rajasthan, Chharas of Gujarat, Satnamis of Chhatisgarh, the Konds and Sabors of Odisha (who fought battles against the British in Kandhamal region). Also included among the so-called criminal tribes were the Gonds, the Marias and Murias of Bastar and many tribes of Chhotanagpur belt like the Mundas and the Oraon. Tribes like Santhals and Ho and certain clans of Chamars were also included in the long list of the tribes branded by the British as born criminals.

    Their movement was severely restricted by the new law enforced rigorously and they were required to report regularly at Police Stations due to which they could not move out of their villages to seek education and economic progress. The District Superintendents of Police were directed to track their movements almost on day to day basis. When the Bill was introduced in 1871 by the British Jurist, James Fitzjames Stephen (who also authored the Indian Evidence Act), and considerable emphasis was placed on the ethnological theory of hereditary caste system which defined their profession, upbringing and background.

    The Untouchability Offences Act in the year 1955, were Hindus, mostly high caste Hindus, certainly not Christians, nor Muslims. If the Christian Britishers were so solicitous about the condition of the deprived members of the Scheduled Castes, why did they not enact a law to ban untouchability during their long rule ? Nor did the Muslim rulers act in a benevolent manner towards the lower castes. Their effort was totally focused on converting them to Islam by force and imposition of jiziya. Similar instances of wanton caste-based discrimination by the Muslims and the Britishers can be found ad infinitum in the troubled history of India.

    LOOMING SPECTRE OF POST HINDU INDIA — Ram Kumar Ohri, IPS (Retd)

  32. அன்புள்ள அருணகிரி,
    மனசாட்சியோடு ஒரு ஹிந்து கூட நடந்து கொள்ளவில்லை என்று புரிந்து கொள்வதற்கும் “மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது” என்பதற்கும் உங்களுக்கு வித்தியாசம் புரியவில்லை என்றால் நாம் பேசுவதே வியர்த்தம். விதிவிலக்கு என்றால் என்ன என்று நான் உங்களுக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?

    மீண்டும் மீண்டும் மனசாட்சியோடு சில – வெகு சில – வெள்ளையர் நடந்து கொண்டனர் என்று நான் இங்கே எழுதியதை எப்படி புரிந்து கொண்டீர்கள்? எல்லா வெள்ளையரும் நல்லவரே என்றா? நானும் இந்தப் புத்தகமும் அப்படித்தான் சொல்கிறோம் என்று நினைத்தால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம். 🙂

  33. வள்ளலார் சித்திவளாகமெனும் அறைக்குள் புகுந்து திருக்காப்பிட்டுக் கொண்ட ஆண்டு 1874 – ஸ்ரீமுகம்- தை மாதம். அதற்கு முன்னரே 1868 – பிரபவ ஆண்டு வைகாசி மாதத்தில் – வடலூரில் வள்ளலார் திருவாக்கின்படியே ‘எப்போதும் அடுப்பணையா’ சத்தியதருமசாலை நிறுவப்பட்டு விட்டது. திறக்கப்பட்ட தினத்திலேயே 16000 பேர்க்கு உணவிட்டதாய்க் குறிக்கிறார் தொழுவூர் வேலாயுத முதலியார்.

    அன்றிலிருந்து இன்றுவரை வருவோர்க்கெல்லாம் இல்லையெனாது அமுதளிக்கும் இடமிது.

  34. The Poor Christian Liberation Movement (PCLM) and United Christian Democratic Forum (UCDF) have named Church Authorities of conspiring to include them in the Scheduled Caste list, which they said is not acceptable to Dalit Christians tag.

    Demanding compensation for the 30 million Dalit Christians, Mr. Francis said Dalits have suffered heavy economic losses by foregoing reservation and converting to Christianity to get respect and dignity in the Christian society.

    At the all India level, the Church flaunts that it has 22 percent education institution and funding and 30 percent health monopoly. Thus, it has resources almost at par with the Government of India. If the Church has such an enormous power why are the Dalit Christian not even getting the crumbs?

    Today, the Catholic Church Governance has six Cardinals, 30 Arch Bishops, 170 Bishops, 822 Major Superior and 25000 priests and over a lakh nuns. The surprising element is that in this huge administrative structure the number Dalit Christians holding of any importance cannot be counted on the fingers too.

    In a press release, Mr. Francis said the efforts of the Indian Church authorities to put Dalit Christians yet again in the scheduled Caste list would promote casteism in Christianity. It’s a mockery of Jesus Christ’s birth as “Saviour” in Bethlehem.

    R. L. Francis
    President, PCLM

  35. திரு பாண்டியன்

    இணைப்புக்கு நன்றி. ஆம். படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது .

    என்னைக் கவரும் ஒரு சாம்பிள் 🙂

    “தியாகராஜசுவாமிகளைச் சந்திக்க ராமன் சீதையுடன் திருவையாறு தெருவில் நடந்து வந்தான். அவர் ‘நன்னு பாலிம்ப ’ என்ற பாடலைப் பாடினார். இது நம் இசைப்பள்ளி பாடநூல்களில் உள்ள வரலாறு. இதை நாம் நம்புகிறோமா என்ன? சரபோஜியின் சபைக்கு வட இந்திய இசைவாணர்கள் நிறையவந்தனர். அந்த தொடர்புகாரணமாக தமிழக இசைமரபில் ஆழமான மாற்றங்கள் உருவானது, விளைவாகவே தியாகராஜரின் இசைமரபு பிறந்தது என ஒரு வரலாறு எழுதப்பட்டால் முந்தையதில் இருந்து அதை வேறுபடுத்திப்பார்க்க நம்மால் முடியாதா என்ன”

    தியாகராஜருக்கு ராம தரிசனம் [ அக்தாவது தெய்வமாக்கப்பட்ட மனிதன் சார்-தெரியாதோர் தெரிந்து கொள்ளுங்கள் ] கிடைத்தது என்று நீங்கள் நம்பினால் நீங்கள் சனாதனி.
    ” வரலாற்றுபபார்வை ” பார்த்து மேலே உள்ளது போல [வட இந்திய இசை வாணர்…] அர்த்தம் செய்து கொண்டால் நீங்கள் உய்ய வழி உள்ளது.

    நிற்க. புத்தகம் , ஆவணம் , யாரோ எழுதி வைத்தது இதையெல்லாம் நம்பியா மனித பிரக்ஞை இருக்கிறது? தாது வருஷ பஞ்சம் நம் பொது பிரக்ஞையில் உள்ளது. ராம தரிசன நம்பிக்கை போல.

    இன்றைக்கும் உணவை வீணாக்காத , சக மனிதனின் பசியின் வலியறிந்த மனிதர்கள் அவர்கள் பெற்றோரினால் இப்பஞ்சதின் வலி பற்றி கூறகேட்டிருப்பார்கள் .

    வழி வழியாக வரும் பாட்டி , அம்மா கதைகள், மனிதனுக்கு அற உணர்வு ஊட்டுவது போல கவனமாக வார்த்தைகளை கோர்த்து காகிதத்தில் எழுதப்படும் கதைகளால் ஊட்ட முடியாது.

    சாய்

  36. ஜெயமோகனின் தளத்தில் அ.நீ.யின் எதிர்வினைகளையும் அவருக்கு ஜெயமோகன் அளித்த பதில்களையும் படித்தேன். ( https://www.jeyamohan.in/?p=43424 )

    // என் கட்டுரை ’வெள்ளை யானை’ குறித்த விமர்சன கட்டுரை அல்ல. நிச்சயமாக ‘கடுமையான எதிர் விமர்சனமும்’ அல்ல. // என்று அ.நீ. சொல்வது சரியே. வெள்ளை யானை பற்றிய விமர்சனங்கள் இந்தக் கட்டுரைகளில் இருக்கின்றன என்பதுதான் (என் கண்ணில்) உண்மை. அவற்றையே – குறிப்பாக வரலாற்று சமநிலை இல்லை என்பதையே – நான் என் எதிர்வினைகளில் எதிர்த்து வாதாடி இருக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கு எது அருணகிரியின் வாதத்துக்கு எதிர்வினை, எது அ.நீ.யின் வாதத்துக்கு என்று பிரித்துப் படிப்பது சுலபம் அல்ல என்று தோன்றுகிறது. அவசரத்தில் நானே கூட அருணகிரி மற்றவர்களை மனதில் கொண்டு அ.நீ. என்று எழுதி இருக்கவும் வாய்ப்புண்டு.

    மேலும் அ.நீ. சொல்கிறார் – “// இந்த படைப்பின் கலை உத்திகளையோ அல்லது அறம் சார்ந்த மையத்தையோ கேள்விக்கோ விமர்சனத்துக்கோ உள்ளாக்குவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.// —இந்த நாவல் உருவாக்கும் வரலாற்று உணர்வை தரவுகளின் அடிப்படையில் சரிபார்ப்பதே என் நோக்கம்.”

    அ.நீ. இங்கே சொல்வதை முழுமையாகப் புரிந்து கொண்டேன். அ.நீ. இந்தக் கட்டுரைகளின் மூலம் உருவாக்க முயலும் வரலாற்று உணர்வை இந்தப் புத்தகத்தின் context-இல் விவாதிக்கவே இந்தக் கட்டுரைகளுக்கு எதிர்வினை செய்ய ஆரம்பித்தேன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

  37. முதலில் எல்லா ஜாதி ஹிந்துக்களும் ஹிந்துத்துவர்கள் அல்ல. பஞ்சகாலத்தில் மனிதாபமற்று நடந்தார்கள் என்பது வேண்டுமானால் சில ஜாதி ஹிந்துகளுக்கு பொருந்தும். அவர்களின் கூட்டம்தான் பிற்காலத்தில் ஆங்கில அரசை அடிவருடிய ஜஸ்டிஸ் பார்டியாக உருவெடுத்தது பின்பு திராவிட கழகங்களானது. பாரதம் முழுக்க உமட்ட வைக்கும் அரசியல் நடத்தி வரும் சிறு அரசியல் வாதிகள் அனைவரும் இத்தகையவர்களே . தேவே கௌடா , சந்திரபாபு நாய்டு, மம்தா, முலாயம், லாலு, முக குடும்பம், சசிகலா குடும்பம், ராமதாஸ் குடும்பம், தேவி லாலின் மகன் சௌதாலா , பவார், மற்றும் இவர்களது கட்சி அனைத்துமே இதில் அடங்கும். தலித்துகள் இவர்களுக்கு ஊறுகாய் மாதிரி.

    மதராஸா பட்டிணம் (சென்னை பெருநகரத்தின் கதை 1600-1947) – ஆசிரியர் நரசய்யா. அத்தியாயம்-5 (துபாஷிகள் மற்றும் நில விஸ்தரிப்பும் போக்குவரத்தும்) ஆரம்ப நாட்களில் சதாரணமாக முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த தொழிலில் அதிகமாக ஈடுபட்டார்கள். அவர்களில் பலர் சிறிது காலத்திலேயே பணமும் புகழும் பெற்றனர். உணவு பண்டங்கள் வினயோகத்திலும் வரி வசூல் செய்வதிலும் ஆளும் கவர்னர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்து கொழுத்து திரிந்தார்கள். சில இடங்களில் அரசுக்கு தெரியாமல் தாங்ளே வரிவிதித்து வசூல் செய்தார்கள். இதனால் பல வழக்குகள் பதிவாகி கவர்னர்கள் மாற்றம் துபாஷிகள் பதவி நீக்கம் என்பது தொடர்ந்து நடந்து வந்தது. இதில் சில நல்ல துபாஷிகளும் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

    (Edited and published)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *