மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி

2014-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில்,, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மாற்றாக இடது, வலது என்ற காம்ரேட்டுகளின் முயற்சியின் காரணமாக மூன்றாவது அணி தேர்தல் களத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.  இது ஏதோ புதிதாக உருவாகிய அணி கிடையாது. 2004  மற்றும் 2009லிலும் இது போன்ற கூட்டணி மூன்றாவது அணி என்ற பெயரில் தேர்தல் களத்தில் அணி வகுத்தது. ஆனால் காலப்போக்கில் மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த கூட்டு தான் என்பது பலருக்கு தெரிந்து விஷயமாகும்.

மூன்றாவது அணி என்பதை விட மாற்று அணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டது.  இந்த முயற்சியை உருவாக்கியவர் ராம் மனோகர் லோகியா, ஆனால் காலங்கள் நகர நகர மாற்று அணி என்பது மூன்றாவது அணியாக உருமாறியுள்ளது. மூன்றாவது அணி என்று தங்களை அடையாளம் காட்டிய கட்சிகள் மத்தியில் ஆளுவதற்கு ஆதரவு கொடுத்து விட்டு, பின்னர் விலக்கி கொள்வது சர்வ சாதாரணமான செயலாகும். பாரதிய ஜனதா கட்சி மற்றும்  காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் சரன்சிங், சந்திரசேகர், தேவ கவுடா ஆகியவர்கள் பிரதமர் பதவி வகித்த போது, மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள்  இவர்களில் எவரும் முழுமையாக தனது ஆட்சி காலத்தை முடிக்க ஆதரவு கொடுக்கவில்லை.  ஆகவே மூன்றாவது அணி என்பதே கானல் நீராகதான் முடியும்.

third-front_cartoon

            2013-ம் வருடம், ஜீன்மாதம் 10ந் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஃபேஸ்புக்கில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஃபெடரல் ஃபிரணட் எனும் பிராந்திய கட்சிகளின் கூட்டமைப்பை அதாவது மூன்றாவது அணியை அமைப்பதற்கான யோசனையை வெளிப்படுத்தினார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.  ஆகவே 2014-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது அணிக்கு அச்சாரம் போட்டது மம்தா என்றாலும், மம்தாவிற்கு பரம எதிரியான இடது சாரிகள் 2013-ம் வருடம் டிசம்பர் மாதத்திலிருந்தே, மூன்றாவது அணியை அமைப்பதில் தங்களது கவனத்தை செலுத்தினார்கள். இதற்காகவே உத்திர பிரதேசத்தில் முஸஃப்Gர் நகரில் ஏற்பட்ட வகுப்பு கலவரத்தை கண்டித்து  கூடிய கட்சிகள்  தாங்களகவே தங்களை மூன்றாவது அணி என அறிவித்து தேர்தலில் கூட்டு சேர்வதற்கு முன்பு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை எதிர்ப்பதற்கு ஒருங்கினைந்த்தாக தெரிவித்தார்கள். இதுவே மூன்றாவது அணியாகும் அதுவே  முரண்பாடுகளின் அவதாரமாகும்.

பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் நேரடியாக போட்டியிடும் இடங்கள் 124, இடது சாரிகளின் ஆதரவை கொண்ட இடங்கள் 64 இடங்களுக்கு மேல் கிடையாது, இதில் கூட மேற்கு வங்கத்தில் ம்ம்தாவை மீறி இவர்களால் வெற்றி கொள்ள இயலுமா என்பது தெரியவில்லை, அல்லது மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும்,அஇஅதிமுகவின் ஆதரவு அலை கிடையாது.  64- இடங்களிலும்  இடது சாரிகள் அனைத்திலும் வெற்றி பெற இயலாது, மற்ற மாநிலங்களில் எடுத்துக் கொண்டால், இவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்த இயலாது.  இந்நிலையில் மூன்றாவது அணியின் அமைப்பாளர்கள், எவ்வாறு பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மாற்றாக ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.  பாரதிய ஜன்தா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளும் இடையே மட்டும் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை 85  இடங்கள் உள்ளன. இந்த 85 இடங்களில் மூன்றாவது அணிக்கு வேட்பாளர்கள் கிடைப்பது கூட கிடையாது. ஆகவே பாராளுமன்றத்தின் மொத்த தொகுதிகளில் 543-ல் 300க்கு மேற்பட்ட தொகுதிகளில் மூன்றாவது அணி மருந்துக் கூட போட்டியிடும் வாய்ப்புகள் கிடையாது.   243 இடங்களில் மட்டுமே மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளில், சில மாநில கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களும், சில மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் போட்டியிடும் சூழ்நிலையும் உள்ளது.  ஆகவே நிலைமை இவ்வாறு இருக்க மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்பதே கானல் நீராக தான் இருக்கின்றது.

முரண்பாடுகள்.

மூன்றாவது அணியில் பலர் பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆவலில் உந்தப்பட்டு, அணியில் சேர்ந்தவர்கள். ஒரு வார இதழில் வெளியான செய்தியில் ‘ காங்கிரஸ் வேண்டாம்,  பா.ஜ.க. வேண்டாம், நான் பிரதமராக விரும்புவோர் முன்னணி’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரைதான் தற்போது நினைவுக்கு வருகிறது.  எனவே மூன்றாவது அணியில் உள்ளவர்கள், அனைவரும் தங்களை பிரதம மந்திரியாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.  இவர்களின் முரண்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை பார்க்க வேண்டும்.  இதில் வேடிக்கை என்வென்றால், மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே, ஒரு கால கட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் என்பது உண்மையாகும்.

நாட்டில் உள்ள 39 மாநிலங்களில் மூன்றாவது அணி என கூறிக் கொள்ளும் மாநிலங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒரிஸ்ஸா, ஆந்திரா, தமிழகம், போன்ற மாநிலங்களில் மட்டுமே இவர்களின் அணிக்கு கட்சிகள் கிடைக்கும். மற்ற மாநிலங்களில் இடது சாரிகளின் செல்வாக்கு கிடையாது என்பது மட்டுமில்லாமல், பல மாநில கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன.  ஆகவே குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ளவர்கள் கொண்டு மத்திய ஒரு ஆட்சியை அமைக்க போதிய பலம் பெறுவது என்பது மூன்றாவது அணியின் கானல் நீராகவே முடியும்.

வெளியே சித்தாந்த ரீதியாக தாங்கள் ஒன்றுபட்டு இருப்பதாக கூறினாலும், இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்பது வேற்றுமையில் தான் முடியும்.  ஓவ்வொரு மாநிலத்திலும் முரண்பாடாக உள்ள கட்சிகள் எவ்வாறு ஒரு அணியில் இணையும் என்பதை பார்க்க வேண்டும். 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம்.  இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனாலும், மீன்டும் உத்திர பிரதேசத்தில் முதல்வராக வர முடியும் என்றால் மாயாவதி காங்கிரஸ் கட்சி அல்லது பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து கொள்வதில் தயக்கம் காட்ட மாட்டார்கள்

third-front

        அகிலேஷ் யாதவ்வின் செயலற்ற தன்மை தனக்கு சாதகமாக அமையும் என மாயாவதி கனவு காண்கிறார்.  மாயவாதியின் முதல் எதிரி முலாயம் சிங் யாதவ் என்றால் மிகையாகாது.  தனக்கு பதவி வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சியுடனும் உறவு வைத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டமாட்டார்.  தனது தலித் ஆதரவு தளத்தை விட்டுக் கொடுக்க முன் வர மாட்டார், ஆகவே மூன்றாவது அணியில் முலாயம் சிங் யாதவ் இருக்கும் வரை மாயாவதியின் கட்சி மூன்றாவது அணியில் சேரமாட்டார்கள் என்பது உண்மையிலும் உண்மையாகும்.  மாயாவதியை போலவே, முலாயம் சிங் யாதவ்வின் முதல் எதிரி மாயாவதி, இவரை வீழ்த்துவதற்காகவே, காங்கிரஸூடன் கூட்டு வைத்துக் கொள்வதில் தயக்கம் காட்ட மாட்டார், தனது முஸ்லீம் வாக்கு வங்கியை விட்டுக் கொடுக்கவும் முன் வரமாட்டார்        இவரை போலவே, முலாயம்சிங் யாதவும், தன் மீது ஊழல் வழக்குகள் தொடராமல் இருக்கவும், தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், அணி மாறா மாட்டார் என்பது உறுதியானது கிடையாது. ஆகவே உத்திர பிரதேசத்தில் மாயவதிக்கு எதிரி முலாயம் சிங், எவ்வாறு இவர்கள் இருவரும் கூட்டணியில் இருப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். வெளியே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குரல் கொடுத்த முலாயம் சிங் 2008-ல் அனு ஒப்பந்தத்திற்கு எதிராக தீர்மானம் வந்த போது, காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவர் என்பதை நினைத்து பாரக்கும் போது, மூன்றாவது அணியின் முக்கிய தூண் தானாகவே கழன்று விடும். .  ஆகவே இவர்களை வைத்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கப்படுகிறது என்றால், இது முரண்பாடுகளின் சங்கம்மாகும். .

உத்திர பிரதேசத்தை போலவே மேற்கு வங்கத்தின் நிலையும் உள்ளது.  மம்தாவை இடது சாரிகள் ஆதரிக்க மாட்டார்கள்.  மம்தா கம்யூனிஸ்ட்களை தவிர மற்றவர்கள் யாருடனும் ஒத்துப் போவார்.  தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.கவை ஆதரிக்க மாட்டார், இதற்கு மாறாக தி.மு.கவை ஆதரிப்பார். தனது எதிரியாக நினைக்கும் இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணியில் எவ்வாறு அங்கம் வகிப்பார்.  2004ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இடது சாரிகள் பெற்ற இடங்களை விட மிக குறைவாகவே 2009-ல் வெற்றி பெற்றதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் இடது சாரிகள் தோல்வியை தழுவியதால், மூன்றாவது அணி என்ற போர்வையில், தங்களது வாய்ப்புகளை நன்கு வளர்த்துக் கொள்ள வழி பார்க்கிறார்கள்,; இழந்த செல்வாக்கை மீட்பது என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.  பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பது மட்டுமே இடதுசாரிகளின் முக்கிய நோக்கமாகும்.  2014-ல் பாரதிய ஜனதா கட்சியை வராமல் தடுக்க காங்கிரஸ் கட்சிக்கு மீன்டும் ஆதரவளிக்கலாம்.  அதாவது மதசார்பின்கையை காக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியோடு கை கோர்க்கலாம்.  ஆகவே மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து, செல்வாக்கை இழந்த இடது சாரிகள் இடம் பெற்றுள்ள மூன்றாவது அணியில் மம்தா சேர போவதில்லை.  இடது சாரிகளின் சிந்தனை வேறு விதமாக இருக்கிறது, ம்ம்தாவின் ஆணவத்தையும், மேற்கு வங்க ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி, ஐ.மு.கூ.ஆட்சியின் நிர்வாகமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும், தனது எதிரியான ம்ம்தாவை அழுத்தவும், மூன்றாவது அணி என்ற போர்வைக்குள் மற்றவர்களையும் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இடது சாரிகளே கூட தேர்தலுக்கு பின் மூன்றாவது அணியை அந்தரங்கத்தில் விட்டு விட்டு காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது.  ஏன் என்றால் இவர்களது எஜமானர்கள் சீனாவில் உள்ளதால், அவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து மாறிவிடுவார்கள் என்பதும் வரலாற்று உண்மையாகும்.

மேற்கு வங்கம் மற்றும் உத்திர பிரதேசத்திற்கு அடுத்த அதிக பாராளுமனற் உறுப்பினர்கள் கொண்ட மாநிலம் பிகார்.  இதில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றாக இருக்கும் கட்சிகள் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி  ஆகிய கட்சிகள். இதில் நிதிஷ்குமாரின் முக்கிய எதிரி லாலு பிரசாத் யாதவ், ஏற்கனவே, லாலு பிரசாத் யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் தனது கூட்டணி தொடரும் என அறிவித்து விட்டார். நடைபெற்ற இடைத் தேர்தலில் பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியை தழுவியுள்ளது.  இரண்டு முறை பிகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி . நிதிஷ்குமாரின் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாகவே ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது. கொள்கை அடிப்படையிலான வேறுபாடுகளால்தான் அந்த கட்சியை விட்டு பிரிந்தோம் என கூறும் சரத்யாதவ் எந்த கொள்கை என்பதை தெரியபடுத்தவில்லை.  பிரதமர் பதவிக்கு பல ஆண்டுகாலமாக தவம் கிடக்கும் நிதிஷ் குமாரின் ஆசைக்கு ஆபத்து என்றவுடன் கொள்கையை பற்றி பேசுகிறார். தற்போது லேக் ஜன சக்தி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

வெறும் நிதிஷ் குமாரை மட்டுமே நம்பி மூன்றாவது அணி களத்தில் உள்ளது. பா.ஜ.க உறவு முறிந்த்தலிருந்தே நிதீஷ் குமாருக்கு நிலவரம் கலவரமாகிக் கொண்டே வந்தது.  நிர்வாகம் பாதிக்க்ப்பட்டுள்ளது.  அதிகரித்துவரும் குற்றச் செயல்களும் ஊழலும் நிர்வாக சவால்களை திறம்பட கையாளாத்தும் மாநிலத்தை சிதைதுக் கொண்டுள்ளன.  கூட்டணி முறிவு ஏற்பட்ட 1 மாத காலத்திற்குள் பிகாரில் 18 மதக் கலவரங்கள் நடந்துள்ளன.  ஆகவே பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றி என்பது கேள்வி குறியாக உள்ளது.  ஏற்கனவே பிகாரில் இடதுசாரிகளின் செல்வாக்கு என்ன என்பது அனைவருக்கு தெரிந்த்து.  முன்றாவது அணியுடன் குலாவத் துவங்குவதற்கு முன்பு ஓராண்டு காலமாக பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என காங்கிரஸ் கட்சியிடம் மன்டியிட்டுக் கொண்டிருந்தார்.  கிடைக்காது என்று தெரிந்தவுடன் மூன்றாவது அணி என்ற கொம்பை பிடித்துக் கொண்டார்.  நிதீஷ் குமார் காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ஷரத் யாதவ் தடையாக இருப்பதால் தற்போதைக்கு தன்னை மூன்றாவது அணியின் நாயகனாக காட்டிக் கொள்கிறார். தேர்தலுக்கு பின்னர் எதுவும் நடக்கலாம் என்பதற்கு ஏற்ப, பிகாரில் இடைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியை தழுவியவுடன், நிதீஷ் குமார் கொடுத்த பேட்டி முக்கியமானது, ” எங்களுக்கு பா.ஜ.கவுடன் என்.டி.ஏ கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அவசர அவசரமாக அறிவித்தார்.  ஐக்கிய ஜனதா தளம் என்ற வெறும் மண் குதிரையை நம்பி பிகாரில் மூன்றாவது அணி வளம் வரும்.

39 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தமிழகத்தில் மூன்றாவது அணியில் இருப்பவர்கள் அ.இ.அ.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள், தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும்,  ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக காட்சியளிக்கும் இடதுசாரிகளின் நிலை கேவலமாகவே காட்சியளிக்கிறது.  செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் முதல்வர் என பிரகடனப்படுத்தியுள்ள அ.தி.மு.கவை முழுமையாக நம்ம முடியுமா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவின் முதல் எதிரி கருணாநிதி என்பதும், மத்தியில் கருணாநிதியின் செல்வாக்கு குறைய வேண்டும் என்பது மட்டுமே ஜெயலலிதாவின் சிந்தனையாகும்.  இச்சூழ்நிலையில் இடது சாரிகளின் சித்தாந்தங்கள் இங்கு எடுபடாது என்பது நன்கு தெரிந்துள்ள இடதுசாரிகள், தேர்தலுக்கு பின்னர் ஜெயலலிதா பிரதமராக ஆதரவு கொடுப்போம் என்று முன்னேறே வாக்குறுதி கொடுத்துள்ளார்கள்.  ஏற்கனவே ஜெயலலிதா மீது நடக்கும் வழக்குகள் பற்றிய கருத்துக்களை கூட முன்வைக்க இடதுசாரிகள் வருவதில்லை. பல்வேறு கொள்கைகளில் முரண்பாடுகள் கொண்டிருக்கும் இடதுசாரிகள் எவ்வாறு அ.தி.மு.கவுடன் உறவு கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாத புதிராக காட்சியளிக்கிறது.

ஆந்திராவில், தெலுங்கான பிரிவினைக்கு பின்னர் ஒருவரை ஒருவர் எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  இம் மாநிலத்தில் மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவமாகும்.  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்க தேச கட்சிக்கும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸூக்கும் ஏழாம் பொறுத்தாம், இதை போலவே தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதிக்கும், மற்றவர்களுக்கும் ஏழாம் பொருத்தாம்.  இங்கு இடது சாரிகளின் செல்வாக்கு என்பதும், இவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் கூட தலை காட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.  எவ்வாறு மூன்றாவது அணியில் இவர்களை இணைக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.  கர்நாடக மாநிலத்தில் தேவ கவுடாவை தவிர வேறு ஒருவரும் மூன்றாவது அணியில் கிடையாது.  ஆகவே மூன்றாவது அணியில் பிரதமர் பதவிக்கு ஆசை படும் நபர்களின் சங்கமம் என்றால் அது மிகையாகாது.

யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி மூன்றாவது அணி ஏற்படுவதற்கு பெரிய முட்டுக்கட்டையாகவே உள்ளது.  சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி, பிரதமர் பதவிக்கு தங்களை முன்னிறுத்திக் கொண்டுள்ளனர்.  இவர்களுக்கிடையே தமிழக முதல்வரும் தன் விருப்பத்தை வெளியே தெரிவிக்காவிட்டாலும, அவரது கட்சியினர் அவரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்து வருவது மட்டுமில்லாமல், தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள சில இலவசங்கள் இதையே முன்மொழிகின்றன.  இவர்களுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் கனவு உலகில் சஞ்சரிக்கிறார்.   ஆகவே மூன்றாவது அணியின் கனவு என்பது கானல் நீராகவே முடியும்.

ஆகவே மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்.  இவர்களால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்பது மட்டுமில்லாமல், ஆட்சி அமைப்பவர்களை ஆளக் கூட அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் கடந்த கால வரலாறு.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அதிக இடங்களை பெற்று ஆட்சியில் அமரும் போது, மூன்றாவது அணி சிகப்பு நாடுகளுக்கு ஓடி விடும் என்பது உண்மையாகும்.

4 Replies to “மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி”

  1. இந்த தேர்தலில் மூன்றாவது அணி என்பதுதான் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும். நான்காவது அணி தான் காங்கிரஸ் ஆகும். மே மாதம் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் முடிவுகள் இரவு பத்து மணிக்குள் அனைத்தும் தெரிந்துவிடும். பாஜக 290- இடங்கள் பெரும். அதன் கூட்டணிக்கட்சிகள் 30 இடங்கள் பெறும். மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளை ஒன்று சேர்த்தால் அவை 180 இடங்களை பெறும். காங்கிரஸ் 43 இடங்களை பெறும்.

    மூன்றாவது அணி 180 இடங்களைப் பெற்றாலும் அவை ஒன்றுசேரமுடியாது. முக்கியமாக ,

    1. முலயாம் எதிர் மாயாவதி

    2. மம்தா எதிர் மார்க்சிஸ்ட்கள்

    3. நிதீஷ் குமார் எதிர் லல்லு பிரசாத் யாதவ்

    4. ஜகன்மோகன் ரெட்டி எதிர் சந்திரபாபு நாயுடு

    5.ஜெயா எதிர் கருணா

    என்று இவர்கள் அனைவருமே 180 இடங்களை பங்கிட்டுக்கொண்டாலும், சுமார் தொண்ணூறு இடங்கள் உள்ள இரண்டு அணிகளாக மட்டுமே செயல்பட முடியும். எனவே மூன்றாவது அணி என்பது , இரண்டாம் மற்றும் மூன்றாம் அணிகளாக மட்டுமே இருக்கும். காங்கிரசோ பாவம் நாலாம் அணிதான் சுமார் 40 இடம் கிடைப்பதே அதிகம். மோசடிக்காரர்கள் கும்பலான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இரண்டும் இணைந்தால் கூட , ஐம்பது இடம் கூட பிடிக்க முடியாது.

    தேர்தலுக்கு பிறகு மூன்றாவது அணி , இரண்டாம் அணி மற்றும் மூன்றாவது அணி என்று இரண்டு அணியாக பிளவு படும். இந்த தேர்தலுடன் காங்கிரஸ் சமாதி ஆகும். அந்த சமாதியில் 3 ஆம் அணி ஆதரவாளர்கள் சாம்பிராணி கொளுத்தி மகிழ்வார்கள். வாழ்க ஜனநாயகம். சமதர்மம் , & சுதந்திரம் . அவசரநிலை காலத்தில் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்து சென்ற காங்கிரசை கருவறுப்போம். காங்கிரசின் சொம்புகளை தேர்தலில் புறமுதுகு இடச்செய்வோம்.

  2. காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஒரு தேர்தலிலும் தோற்றகாலங்களில் கூட 24 விழுக்காடுக்கு குறைவாக ஒட்டு வாங்கியது கிடையாது. இந்தமுறை வரலாறு படைத்து சுமார் 15 முதல் 18 சதவீத ஒட்டு வாங்கி , இருபது சதவீதத்துக்கும் குறைவாக ஆகப்போகிறது. முந்தைய தேர்தல்களில் அது வாங்கிய ஓட்டுக்களை eci .nic .in அதாவது மத்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் போய்ப் பார்த்தால், பல அதிர்ச்சி தரும் உண்மைகள் தெரியவருகின்றன.

    அதாவது லோக்சபாவில் 404 உறுப்பினர்களை ராஜீவ் காந்தி பெற்றிருந்த 1984- தேர்தலில் கூட , காங்கிரஸ் 49 விழுக்காடு மட்டுமே ஓட்டுவாங்கி வெற்றி பெற்றுள்ளது.

    1996- முதல் 2009 வரை நடந்த ஐந்து லோக்சபா தேர்தல்களிலும் 24 முதல் 29 சதவீதம் வரை பெற்று , ஆனால் இவ்வளவு குறைந்த வாக்குகளுடனே இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றியது.

    1996- பாராளுமன்ற தேர்தலில் பெற்ற 24 சதவீதமே மிக குறைவானதாகும்.

    1984- பாராளுமன்ற தேர்தலில் பெற்ற 49 விழுக்காடே மிக அதிகம் ஆகும்.

    மூன்றாவது அணி என்று சொல்லித்திரியும் இந்த குரங்கு கூட்டம் மிக கேவலமானது. இவர்கள் 1996-ஆம் ஆண்டில் ஜோதிபாசு பிரதமர் ஆகும் நல்ல வாய்ப்பினை கோட்டை விட்ட மூடர் கும்பல். இனி இந்த கயவர்களுக்கு என்றுமே பிரதமர் பதவி என்பது ஒரு கானல் நீர் தான்.

    நேரு குடும்பத்தின் பிடியில் இருந்து விலகி உள்கட்சி தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி கட்சியை வளர்த்தால் தான் இனி அந்த கட்சி இருக்கும். நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அந்த கட்சி இருந்தால் அடுத்த தேர்தலில் அக்கட்சியே இருக்காது. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து பெற 55 எம் பி க்கள் லோக்சபாவில் வேண்டும். இம்முறை காங்கிரசுக்கு 40- முதல் 45 கிடைத்தாலே அதிகம். மரண அடிதான். இந்தியா வாழ்க காங்கிரஸ் ஒழிக.

  3. மோடி வரட்டும் பிரதமராக, பாரதத்தை நாடி வரட்டும் நன்மைகளெல்லாம் ,உலகமது தேடி வரட்டும் இந்திய மண்ணை ,தில்லானா பாடி மகிழ்வோம் பாரத மக்காள் பலகாலம்.

  4. 3 ஆம் அணி மூன்றே மாதத்தில் முறிந்து போகும் முட்டாள் அணி. அது நாட்டுக்கு என்றைக்கும் தீராப் பிணி. அது மாற்று அணி அல்ல. ஏமாற்று அணி. அது காங்கிரஸ் கட்சியின் பினாமி. அதை அடித்து செல்லும் மோடி எனும் சுனாமி. மேற்கு வங்காளத்தில், கேரளாவில் காணாமல் போன communisim இப்போது தமிழ் நாட்டிலும் காணாமல் போகப் போகிறது நிச்சயம். நரேந்திர மோடி வருவார். நல்லாட்சி தருவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *