வேரை அரிக்கும் கரையான்கள்

ஒருவழியாக 16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் முடிவடைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் 39 தொகுதிகளிலும் சராசரியாக 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன; புதுவை தொகுதியில் 82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967-க்குப் பிறகு, அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆயினும் நூறு சதவிகித வாக்குப்பதிவு இன்னமும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச வாக்குப்பதிவு ஏமாற்றம் அளிக்கிறது.

Polling
ஜனநாயகக் கடமையாற்றும் மக்கள்

பெரிய அளவிலான எந்த அசம்பாவிதமும் இன்றி தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும், இத்தேர்தலில் திணிக்கப்பட்டுள்ள பணப்பட்டுவாடா கலாச்சாரம், மிகுந்த அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் அளிக்கிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியினர் எந்த மனக்கிலேசமும் இன்றி பணத்தை வாக்காளர்களுக்கு வாரியிறைத்ததைக் கண்டபோது நமது மக்கள் மீதே கோபம் வந்தது.

தேர்தலில் பணபலத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது வழக்கம்போல திமுக தான். 1988க்குப் பிறகே இத்தகைய நடைமுறை தமிழகத்தில் பரவத் துவங்கியது. அதுவரையிலும், கட்சித் தொண்டர்கள் கொண்ட கொள்கைக்காக உயிரைக் கொடுத்து தேர்தல் பணியாற்றுவார்கள். அரசியல் தலைவர்களின் பேச்சுக்கும் மதிப்பிருந்தது. ஆனால், சொந்தக் குடும்பத்தை வாழவைக்க ஊழல் செய்யும் தலைமைகளைப் புரிந்துகொண்ட தொண்டர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் இழந்தபோது, பண விநியோகம் தொண்டர்கள் மட்டத்தில் துவங்கியது. அதுவே, இன்று வளர்ந்து, வாக்காளர்களைப் பிச்சைக்காரர்களாக்க் கருதும் மனநிலைக்குக் கொண்டுவந்து விட்டுள்ளது.

கிராமப்புறங்களில் ‘கலைஞர்’ என்று சொல்லாமல் ‘கருணாநிதி’ என்று சொன்னாலே சொன்னவரை அடித்துவிடும் அதிதீவிர திமுக தொண்டர்களை எனது சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவரும் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரின் மிகவும் மூத்த ஊழியர்களை பேர் சொல்லி மேடையிலேயே அழைத்து, அவர்களை ஆனந்தக் கண்ணீரில் அழவைப்பார். இந்தப் பழைய கதைக்கு இங்கென்ன தேவை இருக்கிறது?

நன்றி: மதிதினமணி கார்ட்டூன் (18.04.2014)
நன்றி: மதி
தினமணி கார்ட்டூன் (18.04.2014)

நமது ஜனநாயக வேரில் கரையான்கள் எந்தக் காலகட்ட்த்தில் பரவத் துவங்கின என்பதைக் கண்டறிய இச்சசம்பவங்கள் உதவக்கூடும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலாவதியாகி, திமுக ஆட்சிக்கு வந்தபோதே, அப்போதைய முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், ‘தமிழகத்தில் விஷக் கிருமிகள் நுழைந்துவிட்டன’ என்று சொன்னார். அது உண்மையே. ஆனால், இந்த விஷக் கிருமிகள் பணபலத்துடன் ஆட்டமிடத் துவங்கியது 1970க்குப் பிறகுதான்; சர்காரியா விசாரணை ஆணையம் கூறியது போல, விஞ்ஞானரீதியான ஊழலுக்கு வித்திட்டவர் கருணாநிதி தான்.

அதிலும், எம்ஜிஆர் இறந்தபிறகு ஆட்சிக்கு வந்த திமுக, தேர்தல் அரசியலில் தொடர்ந்து வெல்லவும், வாராது வந்த வெற்றியை நழுவவிடாமல் தக்கவைக்கவும் முயன்றபோது தான், தமிழக அரசியலில் புதுவிதமான ஊழல் பெருகியது. அதுதான் தேர்தலுக்காக, அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணம் சேர்க்கும் கலை.

இதில் கருணாநிதி அனுபவஸ்தர் என்றாலும், 1988-க்குப் பிறகு தான் அதன் வேகம் அதிகரித்தது. எனவே தான் கருணாநிதியின் குடும்ப ஊழல்கள் வெளியானபோது, முந்தைய பாச உணர்வுடன் அவருக்கு ஆதரவாக முழக்கமிடுபவர்களைக் காண முடியவில்லை. இப்போதெல்லாம், தலைவருக்காக தொண்டை கிழிய கோஷமிடும் ஆத்மார்த்தமான திமுக தொண்டனைக் காண்பது அரிதாகிவிட்டது.

எந்த ஒரு அரசியல் அம்சத்திலும் திமுகவுக்கு சரிநிகர் போட்டியான அதிமுக, 1991 தேர்தலில் வென்றபிறகு அதை மேலும் வேகமாக வளர்த்தெடுத்தது. 1991- 96 காலகட்ட ஊழல்கள் இன்றும் தமிழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றன. இன்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார் அதிமுக தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா. அண்மையில் கூட, சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் அப்போதைய அதிமுக அமைச்சரும் இப்போதைய திமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்தவருமான செல்வகணபதிக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். (இதுகுறித்து இவ்விரு கட்சிகளுமே இதுவரை வாய் திறக்கவில்லை)

திமுக அமைத்துக் கொடுத்த ஊழல் பாதயை விரிவுபடுத்தியது அதிமுக. அதை அடுத்துவந்த (1996- 2001) திமுக அரசு மேலும் அகலப்படுத்தியது. இவ்வாறாக, அடுத்தடுத்து (2001, 2006, 2011) தமிழகத்தில் ஆட்சி அமைத்த திமுக, அதிமுக அரசுகள் அதிகார துஷ்பிரயோகம் வழியாக எல்லை மீறிய சொத்துக் குவிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக துவங்கிய இந்த ஊழல், ருசி கண்ட அரசியல்வாதிகளால் மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

இதன் விளைவாக, தொண்டர்கள் கட்சித் தலைமையிடம் நம்பிக்கை இழந்து, போலி மரியாதை காட்டத் துவங்கினர். தேர்தல் பணிகளை, ஒற்றை வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டுச் செய்த காலம மலையேறியது. அந்த இடத்தை மதுவும், பிரியாணியும், உப்புமாவும் ஆக்கிரமித்தன. அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்தல் பணிகளுக்கு தொண்டர்களுக்கு கூலி கொடுக்கப்பட்டது. இறுதியில் பெரும்பாலான தேர்தல் பணிகளை கூலி வாங்கிக்கொண்டு செய்துதரும் தனியார் நிறுவனங்களிடமே இரு திராவிடக் கட்சிகளும் ஒப்படைத்துவிட்டன. இப்போது பிரமாண்டமாக நடத்தப்படும் மாநாடுகளில் அலங்கார வேலைகளுக்கு திரைப்படக் கலை இயக்குநர்களை பணியில் அமர்த்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

கொடி நட, சுவரொட்டி ஒட்ட, சுவரெழுத்து பிரசாரம் செய்ய, ஃபிளக்ஸ் விளம்பரங்கள் வைக்க, துண்டுப்பிரசுரம் விநியோகிக்க, புதுக் கூட்டங்களுக்கு ஆள் சேர்த்து கோஷமிட,… என எந்த அரசியல் பணியும் இப்போது ஒப்பந்தத் தொழிலாகிவிட்டது. ஆக, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதென்றால் கோடிக் கணக்கில் பணம் திரட்டும் வல்லமையும், கோடிக் கணக்கில் பணம் பதுக்கியிருக்கும் பெருமிதமும் தான் தேவை என்றாகிவிட்டது.

திமுக, அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது ஒரு பெரும் அரசியல் வியாபாரக் கலையாகவே உள்ளது. பொதுக்கூட்ட்த்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் அந்தந்த இடத்திற்கு ஏற்ற தினப்படிக் கூலி, பிரியாணிப் பொட்டலங்கள், ஆண்களுக்கு குவாட்டர் மது வழங்காமல், ஆட்களைத் திரட்ட முடிவதில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியின் கூட்டங்களுக்கு வரும் மக்கள் பெருந்திரள் இவ்விரு கட்சிகளுக்கும் வியப்பானதாகவே இருக்கிறது. எம்ஜிஆரும் அண்ணாதுரையும் கூட்டிய லட்சக்கணக்கான மக்கள் திரண்ட உண்மையான கூட்டங்கள் இனி திராவிடக் கட்சிகளுக்கு கனவாகவே இருக்கும்.

50 ஆயிரம் பேர் கூடும் கூட்டத்தைக் கூட்டவே திமுகவும் அதிமுகவும் செலவிடும் தொகை பல லட்சம்! எனவே தான், தமிழகத்தில் அரசியலை நேர்த்தியான வியாபாரமாக்கிவிட்ட இவ்விரு கட்சிகளுடன் போட்டியிட முடியாமல், உண்மையான தொண்டர்கள் உள்ள கட்சிகள் தவிக்கின்றன.

தேர்தல் ஆணைய விளம்பரம்: ஓட்டுக்கு பணம் தர்வோருக்கு தண்டனை இல்லையா?
தேர்தல் ஆணைய விளம்பரம்: ஓட்டுக்கு பணம் தருவோருக்கு தண்டனை இல்லையா?

திமுகவில் இப்போது அடிமட்டத் தொண்டனுக்கு எந்த மதிப்பும் இல்லை. கூட்டம் கூட்டவும், நிகழ்வுகளை கச்சிதமாக நடத்தவும் பணத்தை அள்ளிவீசத் தயாராக உள்ள மாவட்டச் செயலாளர்கள் தான் இப்போது திமுகவின் நடத்துநர்கள். தனிநபர் துதியின் உச்சகட்டம் அங்கு அதீதமாக ஒலிக்கிறது.

இதற்குப் போட்டியாக அதிமுகவிலும், தனிநபர் துதி வானளாவ எழுந்திருப்பதற்குக் காரணம், சம்பாதிக்க வாய்ப்பளிக்கும் அம்மாவை வணங்காவிட்டால் கதிமோட்சமில்லை என்பது தான். திமுகவில் அய்யா, அதிமுகவில் அம்மா. அதிலும் திமுகவை ஓரம் கட்டிவிட்டார் அம்மா. இங்கு ஜனநாயகம் என்ற கருணாநிதியின் வாய்ஜாலமும் கூட இல்லை. இங்கு எல்லாமே அம்மா வைத்தது தான் சட்டம்.

அதிலும், அதிமுகவை நிர்வகிக்கும் கைப்பிடி அளவுள்ள சிறு குழுவில் இருப்பவர்கள் அதிமுகவை ஒரு வர்த்தக நிறுவனமாகவே மாற்றிவிட்டார்கள். திமுகவின் ஊழல அரசியலின் அடுத்த பரிமாணத்தை அதிமுக அசுரத்தனமாக வளர்த்துவிட்டது. கட்சித் தொண்டர்களுக்கு கூலி கொடுத்த காலம மாறி, வாக்களிக்க கூலி கொடுக்க அதிமுக துணிந்துள்ளதனை வேறு எவ்வாறு சொல்வது?

இதற்கு அடித்தளமிட்டவரும் திமுக தலைவர் தான். மதுரை, திருமங்கலத்தில் (2009-10) நடைபெற்ற இடைத்தேர்தலில் கருணாநிதியின் தவப்புதல்வன் மு.க.அழகிரி (இவர் இத்தேர்தலில் பாஜக அணியை ஆதரித்ததாக செய்தி. இதுதான் நமது ஜனநாயகத்தின் தலையெழுத்து) நடத்திக் காட்டிய பணப்பட்டுவாடாவும், திமுகவின் வெற்றியும், ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்ற புதிய சொல்லாட்சியை தமிழக அரசியல் உலகிற்கு அளித்தது. அங்கு திமுக வெல்ல ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆயிரக் கணக்கில் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டது. அத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றியால், மேலும் பல இடைத்தேர்தல்களில் இந்த உத்தி வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் போட்டியிட்ட திருவாரூரிலும் இதே உத்தி பயன்படுத்தப்பட்டது.

இந்த உத்தியைத் தான் தற்போது அதிமுக தலைவியாம் அம்மா, தனது நம்பகமான ஊழியர் படையுடன் மாநிலம் முழுவதும் விஸ்தரித்திருக்கிறார். இப்போது கண்ணைக் கசக்கிக்கொண்டு, ஜனநாயகம் செத்துவிட்டது என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கலாகார். தான் இதுவரை கண்ட எந்த்த் தேர்தலிலும் இத்தகைய வரைமுறையற்ற அராஜகத்தைக் கண்டதில்லை என்று வாக்குமூலம் வாசித்தார் அவர். தான் அமைத்த ஊழல் மண் பாதையில் கான்கிரீட் சாலையே அமைத்துவிடும் ஜெயலலிதாவைப் பார்த்து பெரியவரால் பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக பணப் பட்டுவாட்டா செய்யப்பட்டிருப்பதைப் பற்றிய செய்திகள் ஆங்காங்கே வெளியாகி உள்ளன (பல இடங்களில் செய்திகளை ஊடகங்கள் கத்தரித்துவிட்டன). குறைந்தபட்சம் ரூ. 300-லிருந்து ரூ. 1,000 வரை வாக்காளர்களுக்கு பணம் பரிமாறப்பட்டுள்ளது. இதில் அதிமுக மட்டுமே ஈடுபடவில்லை. திமுகவினரும் நீலகிரி, தஞ்சாவூர், மத்திய சென்னை போன்ற பல தொகுதிகளில் இதே வித்தையை அரங்கேற்றினார்கள். காங்கிரஸாரும் சிவகங்கை, தேனி போன்ற தொகுதிகளில் இதே உத்தியைக் கடைபிடித்தார்கள். ஆனால், அவர்களால் மாநிலம் முழுவதும் அதிமுகவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே விரக்தியில் புலம்புகிறார்கள்.

நன்றி: மதிதினமணி (09.04.2014)
நன்றி: மதி
தினமணி கார்ட்டூன் (09.04.2014)

இதில் வேதனை என்னவென்றால், வாக்காளர்கள் எவருமே, கொடுக்கப்பட்ட பணத்தை மறுதலித்ததாக தகவல்கள் இல்லை. வாக்களிக்க தனக்கு கையூட்டாக பணம் தரும் அரசியல்வாதியின் முகத்தில் காறி உமிழும் துணிவு எந்த வாக்காளரிடமும் இல்லையா? தங்களை பிச்சைக்காரர்களாகக் கருதும் மனோபாவமே இந்தப் பணப் பட்டுவாடா என்பதை தமிழக வாக்காளர்கள் ஏன் உணரவில்லை? எந்த இடத்திலும் சிறு அதிருப்தி கூட பதிவாகவில்லையே, ஏன்? மக்களும் ஊழல்மயமாகிவிட்டார்களா?

விரும்பியோ, விரும்பாமலோ பணம் பெற்ற வாக்காளர்கள், அந்த நன்றியுணர்ச்சி காரணமாகவே பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குவதே, ஊழல் பேர்வழிகளின் நோக்கம். சில மலைப்பகுதிகளில் ஊர்த்தலைவர்களுக்கு பெருமளவில் பணம் கொடுத்து, ஒட்டுமொத்த வாக்குகளை விலைபேசிய காட்சிகளும் உண்டு. இந்தப் பணத்தைத் தரும் ஊழல் பேர்வழிகள் நாளை ஆட்சியில் அமர்ந்தால், இதை மீண்டும்  ‘சம்பாதிக்க’ ஊழலில் தானே ஈடுபடுவார்கள்? அதனால் நமது வளர்ச்சிதானே பாதிக்கப்படும்? என்ற சிந்தனை ஏன் மக்களுக்கு வரவில்லை?

குஜராத் ஏன் வளர்ந்திருக்கிறது? தமிழகம் ஏன் தொடர்ந்து தாழ்கிறது என்ற கேள்விக்கான பதிலும் இதுவே.

வாக்களிக்கும் தினத்தில் பல வீடுகளுக்கு பிரியாணிப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. தேர்தல் நாளுக்கு மூன்று நாள் முன்னதாகவே மதுக்கடைகள் மூடப்பட்டபோதும், தடையை மீறி மது ஆறாகப் பெருகி ஓடியது. தேர்தல் நாளுக்கு ஒருவாரம் முன்பிருந்தே தெருத் தெருவாக பணம் பட்டுவாடா ஆகியுள்ளது. பல இடங்களில் சேலைகள், டிபன் பாக்ஸ்கள், கடிகாரங்கள், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தெரியாதா? ரூ. 50,000-க்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிய தேர்தல் ஆணையம், பல லட்சம் பணம் தெருக்களில் இறைக்கப்பட்டபோது எங்கு போயிருந்தது?

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நாள் வரை, முறையற்ற பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த 7,000-க்கு மேற்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் கூறியிருந்தார். இக்குழுக்களும் பறக்கும் படைகளும் ரூ. 25.5 கோடி ரொக்கப் பணத்தையும், ரூ. 28 கோடி மதிப்புள்ள நகைகள், பரிசுப் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளன. ஆனால், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எந்த அச்சமும் இன்றி அதிமுக தொண்டர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர். எனில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் வெறும் கண்கட்டி வித்தை தானா?

பூட்டியிருந்த வீடுகளிலும் கூட கர்மசிரத்தையாக கதவுச் சந்துகளில் பணத்தை நுழைத்துச் சென்றிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அவர்களது தேர்தல் பணி புல்லரிக்கச் செய்கிறது. இதுகுறித்து அதிமுக நிர்வாகியான நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது அதிர்ந்தேன். “சார் ஒவ்வொரு வாக்காளருக்கும் மேலிடம் கொடுக்குமாறு ஒதுக்கியது ரூ. 500. ஆனால், இவர்கள் கொடுப்பது ரூ. 200, ரூ. 300 என இடத்திற்கு ஏற்றாற்போல. லஞ்சம் கொடுப்பதிலும் ஊழல். பிறகு ஏன் இப்பணியில் ஈடுபட மாட்டார்கள்? ஆனாலும், தலைமை நினைப்பதுபோல, பணப் பட்டுவாடா முழுமையாக நடப்பது சந்தேகமே’’ என்றார் அவர்.

இதுதொடர்பான புகார்களை தேர்தல் அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் சொன்னால், அவர்கள் உடனடியாகக் கண்டுகொள்ளவில்லை என்பதையும் களத்தில் காண முடிந்தது. பெரும்பாலும் அசிரத்தையாக பதில் அளிக்கும் காவல்துறையினர் சில இடங்களில் மட்டும் அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதுவும், அவர்களிடம் ரூ. 4,000, ரூ. 5,000 போன்ற சிறுதொகைகளை வைத்திருந்ததாக! இவ்வழக்குகள் தேர்தல் முடிந்தபிறகு எடுபடாது என்று தெரிந்தே நாடகம் ஆடப்படுகிறது. இந்த வழக்குகளும் கூட, மேலிடத்தின் கவனத்திற்காக அதிமுகவினரே விரும்பி நிகழ்த்தும் நாடகம் என்றார் அதிமுக நண்பர்.

பணம் பட்டுவாடாவில் கட்சியினர் ஏமாற்றியதால் தான் தோல்வி ஏற்பட்டது என்ற நிலை வருமானால், தங்கள் கட்சிப் பதவியைக் காப்பதற்காக, கட்சியின் நிர்வாகிகளே சில இடங்களில் இவ்வாறு சிறு தொகையுடன் கைதாகியிருப்பதாக அவர் கூறியபோது, நமது அரசியல் தலைவர்களின் சமயோசிதம் பளிச்சிட்டது.

இந்நிலையில், தேர்தலுக்கு இரு நாட்கள் முன்னதாக மாநிலம் முழுவதும் அமலாக்கப்பட்ட 144 தடைச் சட்டமும், அதிமுகவினரின் பணப் பட்டுவாடாவுக்கு உதவவே கொண்டுவரப்பட்டது என்ற புகார்களும் கூறப்படுகின்றன. கோவை, ராமநாதபுரம் பகுதியில் பணம் பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகியை கையும் களவுமாகப் பிடித்து புலியகுளம் காவல்நிலையத்திற்கு பாஜகவினர் கொண்டுசென்றபோது, “144 தடையுத்தரவு உள்ளபோது எப்படி இத்தனை பேர் இங்கு சேர்ந்து வந்தீர்கள்? 3 பேருக்கு மேல் கூடினால் கைதாகிவிடுவீர்கள் என்று தெரியாதா?” என்று எகிறினார் அங்கிருந்த காவல் அதிகாரி. இதன்மூலமாக, 144 தடையுத்தரவின் பின்புலம வெளிப்படுகிறது. இதனை அதிமுக தவிர்த்த பெரும்பாலான கட்சிகள் கண்டித்தபோதும், எப்பயனும் விளையவில்லை.

தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமார்
தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமார்

‘இரவு 10 மணிக்குப் பிறகும் வீடு வீடாக வாக்கு சேகரிக்கலாம்’ என்று தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன் தன்னிச்சையாக அறிவித்த தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமார், அதற்கு எழுந்த எதிர்ப்பையும், சட்டரீதியான சிக்கலையும் உணர்ந்து பின்வாங்கினார். அந்த அறிவிப்பே ஆளுங்கட்சிக்காக – இரவு நேர பணப் பட்டுவாடாவிற்காக- செய்யப்பட்டது தான் என்ற எதிர்க்கட்சியினரின் புகாரை நம்பாமல் இருக்க முடியவில்லை. தேர்தல் நடத்தும் ஆணையமும் அதிகாரிகளும் நடுநிலைமையுடனும், துணிவுடனும் செயல்படாவிட்டால், நமது ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்.

தேர்தலுக்குப் பிறகு இதே ஆளும்கட்சியின் கீழே தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தமும் கூட நேர்மையான அதிகாரிகளின் செயல்பாட்டை முடக்குகிறது. இதுவிஷயத்தில் நாம் புதிய மாற்றுக்களை கண்டறிந்தாக வேண்டும்.

தேர்தல் என்பது மக்களால் நிறைவேற்றப்படும் அதிகார மாற்ற வழிமுறை. இங்கு பணபலமும், நடுநிலையற்ற அதிகாரவர்க்கமும் இணைந்து, ஊழல் பேர்வழிகளுடன் கைகோர்த்தால், மிஞ்சுவது, போலித்தனமான தேர்தலாகவே இருக்கும். ஏற்கனவே போலி ஜனநாயகமாக மாறிவரும் நமது ஆட்சிமுறைக்கு போலித் தேர்தல்கள் சவப்பெட்டியாக மாறிவிடும்.

கொள்கைகளை முன்வைத்தும், நேர்மையான ஆட்சிமுறையை வாக்குறுதியாக அளித்தும் போராடும், பாஜக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசியல் கட்சிகளுக்கு இந்த அனுபவம் அதிர்ச்சியாகவே இருக்கிறது. ஆனாலும் போராடித் தான் ஆக வேண்டும். தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதே இக்கட்சிகள் கொண்டிருக்கும் நம்பிக்கை. அது உண்மையாகுமா?

விலைக்கு வாங்கப்படும் செய்திகளும் (பெய்டு நியூஸ்) லாபம் காணத் துடிக்கும் ஊடகங்களின் தேர்தல் வியாபாரமும், நமது தேர்தலின் இழிந்த பக்கத்தை முழுமையாகக் காட்டாமல் மறைக்கின்றன. இனிமேலும் இந்தப் புண்களை மூடி மறைத்துக்கொண்டு வேடமிடுவதால் புண் புரையோடி, உயிருக்கே உலை வைக்கும் ஆபத்தே ஏற்படும்.

ஜனநாயகம் என்னும் மரத்தின் வேர் நமது தேர்தல் முறையே. இங்கு பல்கிப் பெருகும் ஊழல் கரையான்கள் நமது ஜனநாயக மரத்தை அரித்து, வீழ்த்திவிடக் கூடாது. பணபலத்தை மீறி வாக்களிக்கும் வாக்காளர்களும், பணத்திற்கு மயங்காத மக்களும் தான் நமது இப்போதைய ஒரே நம்பிக்கை. மே 16-ல் வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகளில் தான் நமது நம்பிக்கை உயிர்த்தெழும். அதுவரை, மனச்சுமையுடன் காத்திருக்க வேண்டியது தான்.

20 Replies to “வேரை அரிக்கும் கரையான்கள்”

  1. திரு சேக்கிழானின் மனக்குமுறல் பல வாக்காளர்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. தமிழகத்தில் பணபலம் இல்லாத கட்சிகள் பாஜக, வைகோ, விஜயகாந்த், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவை. இந்த கம்யூனிஸ்டுகளும் , ஆம் ஆத்மியும் வெளிநாட்டு ஏஜெண்டுகள் ஆவார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு நிதி குவிகிறது. கேரளா மற்றும் மேற்கு வங்காளத்து கம்யூனிஸ்டுகள் ஊழல் மற்றும் வன்முறை, எதேச்சதிகாரம் ஆகியவற்றின் சின்னங்கள். ஆம் ஆத்மி காங்கிரசின் பினாமி.

    திருமங்கலம் பார்முலாவை இப்போதாவது திரும்பிப்பார்த்தால், கலைஞர் வாயை திறக்கவே யோக்கியதை கிடையாது. எல்லா மோசமான வழிகளும் கலைஞரால் உருவாக்கப்பட்டவையே ஆகும். கருணாவுக்கு பிறகு வந்தவர்கள் , மண் சாலையை தார் ரோடு போட்டு, பிறகு சிமெண்ட் ரோடு ஆக்கி விட்டனர். இப்போது அவர் புலம்பினால் எல்லோரும் எல்லினகையாடுகின்றனர். மத்திய சென்னை, நீலகிரி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் , திமுகவினர் புத்திசாலித்தனமாக பணப்பட்டுவாடாவை சில தினங்கள் முன்னரே செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ, திமுகவினரின் கவலை எல்லாம், எல்லா தொகுதியிலும் கொடுக்க , அனுமதிக்க வில்லையே என்பது தான். கன்னியாகுமரியிலும் வாக்காளர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்ட வரலாறு புலனாய்வு பத்திரிகைகளில் வந்துவிட்டது. நிலைமை இப்படி இருக்க, தேர்தல் முடிவுகள் வந்த மறுநாள், கட்டையாய் மிதந்த தலைவர் , தமிழனுக்கு கொடுக்க இருக்கும் சாபங்களையும், அவர் மீண்டும் கடலில் கட்டையாய் மிதக்க போவதாக சொல்லப்போகும் அறிக்கையையும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து, ஆறுதல் சொல்ல தயாராய் இருக்கிறார்கள். இந்த தேர்தலுடன் திமுக, அதிமுகவினரின் ஆட்டம் சிறிது சிறிதாக குறைந்து, இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மத்தியில் மோடி தலைமையிலான அமைச்சரவை அமைந்தவுடன் மேலும் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.வாழ்க இந்தியா வளமுடன். உலகெங்கும் அமைதியும், ஆனந்தமும் பெருகட்டும்.

  2. மகாராஷ்டிரத்தில் சுமார் 60 லட்சம் வாக்காளர் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறது அங்குள்ள தேர்தல் கமிஷன் கிளை. மகாராஷ்டிரத்தில் இந்த சதி திட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களை அடையாளம் கண்டு பிடித்து , அரசுப் பணியில் இருந்து நீக்க வேண்டும். இந்த சதி திட்டங்கள் , காங்கிரசின் தோல்வி கண்டு பயந்து, இப்படி கேவலமான செயல்களை செய்கிறார்கள் என்றே சந்தேகப்பட வேண்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் உடனடியாக விடுபட்ட 60 லட்சம் பேரும் வாக்களிக்க மாற்று ஏற்பாடுகள் செய்து, கூடுதல் வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மகாராஷ்டிரத்தில் அதன் துணை முதல்வர் அஜித் பாவார் என்பவர் , ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஓட்டுப்போடாவிட்டால், குடிநீர் சப்ளையை துண்டிப்போம் என்று மிரட்டிய விடியோ ஏற்கனவே வந்து விட்டது. எனவே, இது காங்கிரஸ் கட்சியினரின் ஈனச்செயல் தான் என்று நாடே சந்தேகப்படுகிறது. காங்கிரசை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்போம். காங்கிரஸ் ஒழியட்டும், ஜனநாயகம் வாழட்டும்.

  3. ‘யார் கொடுக்கும் பணத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் வாக்கை எங்களுக்குப் போடுங்கள்’என்று கேஜ்ரிவால் பேசியுள்ளார்.விஜயகாந்தும் அது போலக் கூறியதாக நாளிதழ்களில் வந்தது.ஒருவகையில் இது மக்களை வாக்குக்குப் பணம் வாங்குவது தவறல்ல் என்ற மனநிலைக்குத் தள்ளுவதாகவே தோன்றுகிறது.

    தேர்தல் நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பிருந்தே ‘பிரித்துக்கொடுங்க‌ அண்ணே; ஒருத்தன் கையிலேயே எல்லாத்தையும் கொடுக்காதீங்க” என்று கொஞ்சம் பெரிய தலைகளிடம் குஞ்சு குளுவான்க‌ள் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டேன்.
    தலைமை கொடுத்த பணத்தில் 25 சதவிகித‌ம்தான் வாக்காளருக்குச் சென்று சேர்ந்திருக்கும்.

  4. தமிழகத்தில் இறுதி வாக்குப்பதிவு விழுக்காடு இன்று தேர்தல் ஆணையாளர் திரு பிரவீன் குமார் அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழக சராசரி வாக்குப்பதிவு 73.67 % ஆகும்.

    இதில் பாண்டி சேர்க்கப்படவில்லை.

    39 தொகுதிகளில்,

    4 – தொகுதிகளில் 80 விழுக்காட்டுக்கு மேல் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. அவை ஆரணி, தர்மபுரி, பெரம்பலூர் , & கரூர்.

    17 – தொகுதிகளில் 75 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

    8 – தொகுதிகளில் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவு ஆகியுள்ளது.

    7- தொகுதிகளில் 65 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவு ஆகியுள்ளது.

    3- தொகுதிகளில் 60 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவு ஆகியுள்ளது.

    பாண்டியிலும் 80 விழுக்காட்டுக்கு மேல் வாக்குப்பதிவு ஆகி உள்ளது. 75 சதவீத வாக்குப்பதிவுக்கு மேல் ஆகியுள்ள 22 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறோம்.

    தேர்தலுக்கு தேர்தல் இன்னார் ஜெயிப்பார் என்று கருத்து கூறும் கருத்துக் கந்தசாமிகள் கூட இந்தமுறை கருத்து சொல்ல முடியவில்லை என்று ஒத்துக்கொள்கிறார்கள். பத்திரிகை கருத்துக்கணிப்புக்களோ சொல்லவே வேண்டாம். ஒரு தமிழ் வாரம் அல்லது வாரம் இருமுறைப் பத்திரிகை , தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று எழுதியுள்ளது. இதனைப்பற்றி , விவரம் தெரிந்த ஒருவரிடம் கேட்டேன். இரண்டு தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாது. அந்த பத்திரிக்கைக்காரன் சூட்கேஸ் வாங்கியவராக இருக்கலாம் என்றார்.

    அனைவரும் மோடி பிரதமர் ஆவார் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறார்கள். ஆனால் தமிழக நிலவரம் மேமாதம் 16- வெள்ளிக்கிழமை அன்று தான் தெரியும். 40 தொகுதியிலும் காங்கிரஸ் காரனுக்கு ஜாமீன் பறிபோனதை கொண்டாடி , இனிப்பு வழங்க அனைவரும் தயாராக உள்ளனர்.

  5. பணம் என்னடா பணம் பணம்
    குணம் தானடா நிரந்தரம்????

  6. //இத்தேர்தலில் திணிக்கப்பட்டுள்ள பணப்பட்டுவாடா கலாச்சாரம், மிகுந்த அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் அளிக்கிறது. //

    இந்த கேவலம் ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடங்களில்தான் நடைபெறுகிறது. படித்த மக்களிடம் இவர்கள் பணம் கொடுக்க வருவதில்லை. அப்படி பணம் வாங்கும் எளிய மக்கள் வாங்கிய நபருக்குத் தவறாமல் வாக்களித்து விடுகிறார்கள். மனசாட்சி பற்றியும் இவர்கள் பேசுகிறார்கள். அதனால்தான் இந்த வழக்கம் இன்று வரை மாறாமல் இருந்து வருகிறது. வாங்கும் எண்ணம் மாறாத வரை கொடுக்கும் பழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். மனமாற்றம் ஒன்றே இதற்கு வழி.

  7. ஒரு ஊரில் டிபன் பாக்ஸில் பணம் வைத்துக் கொடுக்கும்போது பிடிக்கப்பட்டது. டிபன் பாக்ஸில் ஆயிரம் ரூபாய் இருந்ததாம். பணம் கொடுத்தவர்களுக்கு அதிர்ச்சி, கொதிக்கச் சொன்னது இரண்டாயிரம், இதில் ஆயிரம் இருக்கு, மீதி ஆயிரம் என்னாச்சு என்பது அவர்களுக்குப் புதிராக இருந்ததாம். பொதுவாக தேர்தலுக்குப் பிறகு இடைத் தரகர்கள் கையில் கணிசமான காசு சேர்ந்துவிடுகிறது என்பது பொதுவான கணிப்பு. கறுப்புப் பணம் பரவலாக்கப் படுகிறது.

  8. ‘ நவீன நெற்றிக்கண் ‘ தனது 2-5-2014 தேதிய இதழில் , தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் சர்வே நடத்தி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி ,

    1. அதிமுக 26

    2. திமுக 9

    3. பாஜக + 4

    இந்த நிலவரம் இப்போது எதற்கு குறிப்பிடப்படுகிறது என்றால், இதற்கு முந்திய 2006- தமிழக சட்டசபை தேர்தலில் , திமுக அதிக இடங்களைப் பெறும் ஆனால் தனி பெரும்பான்மை கிடைக்காது . திமுகவை விட அதிமுகவுக்கு 25 இடம் குறைவாகவே கிடைக்கும் என்று துல்லியமாக கணித்த பத்திரிகை அது.

    இந்த கருத்துக்கணிப்பில் குறைந்த வித்தியாசம் உள்ள 10 தொகுதிகளில் வெற்றி கைமாறினால், அதிமுக 3 அல்லது 4 தொகுதிகளைக் கூடுதலாக பெறவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பாஜக அணிக்கு சொல்லப்பட்ட 4 என்பது , ஒன்று கூடி ஐந்தாக மாற வாய்ப்பு உள்ளது. திமுகவுக்கும் அதே நிலை தான் 9 என்பது 6 ஆகக் குறையலாம் அல்லது ஒன்று கூடி பத்தாகலாம். நெற்றிக்கண் பத்திரிக்கையின் கணிப்பு 95% சரியாக வரும் வாய்ப்பு உள்ளது.

    இந்த கருத்து கணிப்பின் படி, மத்திய சென்னையில் தயாநிதிமாறனும், நீலகிரியில் ஆ இராசாவும் தோற்க நேரிடும். தஞ்சையில் டி ஆர் ஆர் பாலு வெற்றி பெறுவார். வைகோ விருதையில் வெற்றிவாய்ப்பினை இழப்பார். காங்கிரஸ் 40 தொகுதியிலும் ஜாமீன் தொகையை இழக்கும். ஆம் ஆத்மி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் அதே காங்கிரசினுடைய கதைதான். ஏனெனில் காங்கிரசின் பினாமி மற்றும் டம்மி தான் ஆம் ஆத்மி என்பது உலகெங்கும் தெரிந்த ரகசியம் ஆகிவிட்டது.

    கன்னியாகுமரி , தருமபுரி, வேலூர், தென்காசி ஆகிய நாலு தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  9. தென் சென்னை, கன்னியாகுமரி போன்ற தொகுதிகளில் இத்தனை கீழான வாக்குப் பதிவு ? வெட்கக்கேடு. அத்விகா சொன்னபடிதான் வரும் போல் இருக்கிறது கள நிலவரம். 4 winner 8 runner என்று தோன்றுகிறது. எந்த நாலு என்றுதான் தெரியவில்லை, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் மோடி ம தி மு க, தி மு தி க கட்சிகளுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுத்து மந்திரி ஆக்க வேண்டும். மோடிக்காக விஜயகாந்தும், பிரேமலதா அவர்களும், வைக்கோவும் செய்த பிரசாரம் கொஞ்ச நஞ்சம் இல்லை.

  10. dear sir Rightly said we the public have no escape There is no party without a corruption tag each party is trying to outbeat others scams ater scam 2g coalGod save mother India Let Mr Modi come and help us all Indians and all India altogetherk r subramanian

  11. வோட்டிற்கு பணம் தருவதின் மூலம் பொது மக்களையும் லஞ்ச வட்டத்திற்கு இழுத்துவிடுகின்றனர். நாளை இதே பொதுமக்கள் அரசாங்கத்தை எப்படி லஞ்சக் குறை கூற முடியும், கேள்வி கேட்க முடியும்? கேட்பதற்கு யோக்யதையே பொது மக்களுக்கு இல்லாமல் போய்விடுமே?

    சிவா கிருஷ்ணமூர்த்தி

  12. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது லஞ்சம் என்று சொல்லமுடியாது. அப்படி சொல்வதும் சட்டப்படி தவறு அல்ல. ஏனெனில் பணம் எல்லா கட்சியினரும் அதாவது சுயேச்சைகளையும், இறந்த கட்சிகளையும் தவிர எல்லோரும் கொடுக்கிறார்கள். ஒரே வித்தியாசம் தொகை சிறிது கூட அல்லது குறைய. அவ்வளவுதான்.

    பணம் பெறும் வாக்காளர் பணம் கொடுத்த தானவானுக்கு தான் ஓட்டுப் போடுவார் என்பதற்கு எவ்வித நிச்சயமும் இல்லை. ஆளுங்கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு , எதிர்க்கட்சிக்கும் போடலாம். எதிர்க்கட்சிக்காரரிடம் பணம் வாங்கிய வாக்காளர் ஆளுங்கட்சிக்கோ அல்லது சுயேச்சைக்கோ அல்லது பணம் கொடுக்காத வேறு ஒரு கட்சி வேட்பாளருக்கோ ஓட்டுப் போட வாய்ப்பு உள்ளது. ஒரு குறிப்பிட்டகட்சிக்கு ஓட்டுப் போட நினைக்கும் வாக்காளர் , வேறு கட்சிக்காரன் பணம் தந்தான் என்பதால், ஓட்டை மாற்றிப் போடுவது தான் குற்றம்.

    அப்படி பார்க்கப் போனால் நமது அரசியல் சட்டம் மட்டும் என்ன யோக்கியதை ? தமிழ் நாட்டுக்காரன் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர்க்காரன் தமிழ் நாட்டில் நிலம் வாங்கமுடியும். இது என்னடா கொய்யாலா ? காஷ்மீர் பண்டிட்டுக்களை காஷ்மீரை விட்டு 25 வருடங்களுக்கு முன்னரே விரட்டி விட்டு, மத சார்பின்மை பற்றி பாரூக் அப்துல்லாவும், அவர் மகனும் பேசுவதை பார்த்து , உலகமே சிரிக்கிறது. மதசார்பின்மை என்று பேச நம் நாட்டில் இந்திரா குடும்ப அடிமைகளான இந்திரா காங்கிரஸ்காரனுக்கும், மூன்றாவது அல்லது முப்பதாவது அணி என்று சொல்லிப் பிதற்றும் மாயா, மமதா, ஜெயா,கருணா, நிதீஷ், ஷரத்துப் பாவர் , முலயாம், மாட்டுத்தீவனம், தலைமறைவாய்ப் போன கம்யூனிஸ்டுகள் ஆகிய யாருக்கும் யோக்கியதை கிடையாது.

    நம் நாட்டில் சட்டங்கள் போடும் முன்னர் போதிய சிந்தனை இல்லாமல் செய்கின்றனரோ என்று நினைக்க வேண்டியுள்ளது.

  13. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது லஞ்சம் என்று சொல்லமுடியாது. அப்படி சொல்வதும் சட்டப்படி தவறு அல்ல.

    —– காஞ்சிப் பெரியவர் 1949 இலேயே இதைப் பற்றியும், இதற்கு முன்பு நம்மிடையே இருந்த ஜனநாயகத்தைப் பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார் . கீழே லிங்க்

    https://www.kamakoti.org/tamil/part4kural224.htm

  14. ஐயா, நீங்க உங்க நிலையிலிருந்து எழுதுகிறீர்கள். பேசுகிறீர்கள். ஆனால், சராசரி மனிதனின் சூழ்நிலையும், மனநிலையும் வேறு. கிராமங்களில் விவசாய கூலிவேலையும் இல்லை. குடிக்க தண்ணீரும் இல்லை. அவர்களுக்கு 10 ரூபாய் என்பது பெரிய தொகை. 30 ரூபாய் இருந்தால் ரேசனில் 10 கிலோ அரிசி வாங்கி 1 மாதத்திற்கு சாப்பிடுவார்கள். பணம் வாங்கும் அனைவருமே சாராயம்தான் குடிக்கிறார்கள் என்பது தவறானது.

    ஓட்டுக்கு ஏழைகள் பணம் வாங்குவது லஞ்சம் என்றால், 100 நாள் வேலை திட்டத்தை என்னவென்று சொல்வீர்கள்….?

    பணம் வாங்கிக் கொண்டால், பின்பு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைத் தட்டிக் கேட்க முடியாது என்கிறீர்கள். இதற்கு முன்பு ஏழை எளிய மக்களால் எத்தனை அரசியல்வாதிகளைத் தட்டிக் கேட்க முடிந்தது ?

    அது, சினிமாவில் வேண்டுமானால் நடக்கலாம். நிஜ வாழ்க்கையில் சிரமமான ஒன்று.

    ஆக, ஏதோ அவர்களுக்கு அன்றைய வயிற்றுப் பசியை போக்கினார்களே என்று சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்….

    படித்துவிட்டு பட்டணத்தில் வாழும் எத்தனை பேர் ஓட்டுப் போட்டுள்ளார்கள் ? இவர்கள் எல்லாம் நியாயவான்கள்? ஒருநாள் கூலியை இழந்துவிட்டு ஓட்டுப் போடுப்வர்கள் லஞ்சப்பேர்வளிகளா….?

    படித்த ஓட்டுப் போடாதவர்களை முதலில் தண்டியுங்கள். பிறகு காசு வாங்கி ஓட்டுப்போடும் அப்பாவி ஏழைகளை திருத்திக் கொள்ளலாம்.

  15. Nellaikannan is doing lot of comedy in the facebook. his latest comedy;
    முப்தி முகம்மதுவின் மகளுக்காக தீவிரவாதிகளை அவர்கள் நாடான ஆப்கானிஸ்தானிலேயே விட்டு விட்டு வந்தவர் ஜ்ஸ்வந்த் சிங். அவரைத் தான் பாஜக மோடியின் உத்தரவில் வெளியேற்றியுள்ளது

  16. இந்திரா காங்கிரஸ் கம்பெனியின் மத்திய அமைச்சராக உள்ள திருவாளர் ஜெயராம் ரமேஷ் அவர்கள் ஏதோ ஒன்றும் அறியாத கடைநிலை ஊழியரைப் போல, பேட்டி அளித்துள்ளார். திமுகவினர் நன்றி மறந்தவர்கள் என்பதையும், மன்மோகன் சிங்க் ஆட்சிக்கு டி ஆர் ஆர் பாலுவை அமைச்சராக சேர்த்தது ஒன்று மட்டுமே பெரிய தலைக்குனிவு என்பது போலப் புலம்பி உள்ளார். உண்மை என்ன ?

    மன்மோஹனார், சனகாதியருக்கு கல்லாலின்புடைஅமர்ந்து ஞானமூர்த்தியாம் கைலாசபதி மவுன உபதேசம் செய்ததைப் போல, தனது பத்தாண்டு பிரதமர் பதவிக்காலத்தில் , நீண்ட நிஷ்டையில் , மோனநிலையில் இருந்தார். அப்போது திமுகவினர்

    1. டூ ஜி,

    2. சேதுசமுத்திரம்,

    3. பி எஸ் என் எல் என்று தொடர்விளையாட்டுக்களை நிகழ்த்தினர்.

    இந்திரா காங்கிரஸ்காரர்களும் தங்கள் பங்குக்கு

    1. ஆதர்ஷ்,

    2, நிலக்கரி,

    3.சுரங்கம் ,

    4.டெல்லி விமானநிலையம் அருகே உள்ள நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றது,

    5. மூன்று லட்சத்தை 3000 கோடி ஆக்கியது

    என்று பலவிதமான போட்டி விளையாட்டுக்களை நிகழ்த்தினர். என் நண்பர் கேட்கிறார் என்னய்யா 300 கோடிதானே, 3000 எப்படி வந்தது என்று கேட்கிறார். அவர்களால் வெள்ளையாக்க முடிந்தது 300- கோடி மட்டுமே. எஞ்சியது எதிர்வரும் ஆண்டுகளில் சிறிது சிறிதாக வெள்ளையாக்கப்படும். ஒரு சில வருடங்களிலேயே எல்லா ஊழல் பணத்தையும் வெள்ளையாக்கி கணக்கு காட்ட ஏதாவது வழி இருந்தால் , அதனை விட்டுவைத்திருப்பார்களா ? 2009-ஆம் ஆண்டில் டி ஆர் ஆர் பாலுவை அமைச்சராக்க மறுத்த காங்கிரஸ் கட்சி , தயாநிதி, கல்மாடி,மற்றும் காங்கிரசின் சுரங்க ஊழல் அமைச்சர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க மறுத்திருந்தால், காங்கிரசுக்கு இந்த புலம்பல் புலம்ப தேவை வந்திருக்காது. கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம். காலம் கடந்தபின்னர் ஞானோதயம். என்ன செய்வது ? விதியின் கரங்களில் நாம் ஒரு விளையாட்டுப் பிள்ளை தானோ ?

    ஆனால் உலகிலேயே பெரிய நகைச்சுவை நடிகர் நம் பிரதமர் மன்மோஹனார் அவர்கள் தான். சுரங்க ஊழல் கோப்புக்களை அவர் காணாமல் தேடிய விதம் மிக சிறந்த ஜோக்கு. இந்தியா வாழ்க ! இந்திய ஜனநாயகம் வெல்க ! காங்கிரஸ் ஒரு இருபது ஆண்டுகள் வனவாசம் போகட்டும். இந்தியா சிறிதாவது முன்னேற எல்லாம் வல்ல சிவகுருநாதனாம் முருகப்பெருமான் அருளட்டும்.

  17. இன்றைய குமுதம் ரிபோர்ட்டரில் , தமிழகத்தில் திமுக 14 பாராளுமன்ற தொகுதிகளில் மூன்றாவது இடம் தான் பெறும் என்று திமுகவினரே திரு ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. ஆனால் இராஜா, தயாநிதி மாறன், டி ஆர் ஆர் பாலு ஆகிய மூவருக்கும் டிக்கெட் கொடுக்காமல் , வேறு நபர்களுக்கு டிக்கெட் கொடுத்திருந்தால், திமுக எப்படியாவது தப்பி பிழைத்திருக்கும். ஊழல் குற்றச்சாட்டில் வழக்கு நிலுவையில் உள்ள இராசாவுக்கு டிக்கெட் கொடுத்தபோதே, திமுகவின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது. அத்வானி அவர்கள் மீது ஹவாலா குற்றம் சுமத்தப்பட்டது. அந்த வழக்கு விசாரணை முடிந்து தான் குற்றமற்றவர் என்ற தீர்ப்பு பெறும்வரை , அத்வானி தேர்தலில் நிற்க மறுத்துவிட்டார். திமுகவினரிடம் அதைப்போல ஒரு நிலையை எதிர்பார்க்க முடியுமா ? திமுகவின் நிலை பற்றி பலரும் கருத்து தெரிவிக்கையில் , 10 முதல் 18 தொகுதிகள் வரை , திமுக 3-ஆம் இடம் பெறும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை 16-5-2014 மாலை ஐந்து மணிவரை பொறுத்திருந்தால் தான் உண்மை என்னவென்று தெரியும். 300க்கு மேற்பட்ட இடங்களை பெற்று , நரேந்திர மோடி பிரதமர் ஆகி , வெற்றிபெறுவார். தமிழக நிலை 16-5-2014 வரை காத்திருக்க வேண்டியதுதான்.

  18. மேமாதம் ஆறாம் நாள் மதுரை அருகே கே புதூரில் நடைபெற்ற மதிமுக வின் 21-ஆம் ஆண்டு விழாவில், திரு வைகோ அவர்கள் பேசும்போது, அவர்கள் கட்சியினரின் குடும்ப விழாக்களுக்கும் மற்றும் கட்சியின் இதர கூட்டங்களுக்கு தன்னை மட்டுமே அழைக்காது தனது கட்சியின் ஆறு எம் பி க்களையும் அழைக்குமாறு கூறியுள்ளார். மதிமுக போட்டியிடுவதோ ஏழு தொகுதிகள் மட்டுமே. அதில் ஆறுபேர் எம் பி ஆவார்கள் என்று வைகோ அவர்கள் நம்புவது இதிலிருந்து தெரிகிறது. அவரது நம்பிக்கை மெய்யாக , அவருக்கு இறை அருள் கிட்டட்டும்.

    2. காசி – வாரணாசி தொகுதியில் மோடிக்கு வாக்காளர் மத்தியில் சராசரி 56 % (விழுக்காடு ) ஆதரவு இருப்பதாகவும், எதிர்த்துப்போட்டியிடும் எந்த கட்சியின் வேட்பாளருக்கும் ஜாமீன் தொகையை திரும்பப் பெறுவதற்கு தேவையான 16.67 % (விழுக்காடு ) வாக்கு கிடைக்காது எனவும், மோடி, காங்கிரசின் அஜைராய், ஆகிய இருவருக்கும் பின்னே மூன்றாவதாக மட்டுமே ஆம் ஆத்மியின் அரவிந்த கெஜ்ரிவாலர் வருவார் எனவும், வெற்றிபெறும் மோடியை தவிர ஏனைய வேட்பாளர்கள் கட்டுத்தொகையை இழப்பார்கள் என்றும், இந்தியா டுடே -சிசெரோ பிரத்யேக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மோடி அவர்களின் வாரணாசி வெற்றி மேலும் சிறப்பு பெறுக.

    3. மஞ்சள் பெரியவர் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள சமீபத்து பேச்சில், ஆயிரம், இரண்டாயிரம் ஊழல் செய்தவர்கள் மீது போடும் வழக்குகளில் விசாரணை முடிந்து சில மாதங்களிலேயே தீர்ப்பு வந்துவிடுகிறது. ஆனால் பல்லாயிரம் கோடி குவித்துள்ள ஒருவர் தமிழகத்தின் முதல்வராகவே இருக்கிறார் என்று தன் வயிற்று எரிச்சலை வெளிப்படுத்தி உள்ளார். டூஜீ நாயகருக்கு வாய் திறந்து பேச கூச்சமாக இல்லையா ? மஞ்சளாரின் குடும்ப உறுப்பினர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இரு வழக்குகளையும் மூன்று மாதத்தில் முடித்து, துணைவியார் மற்றும் மகள் , அக்காள் மகன், ஆகியோருக்கு தீர்ப்பு வழங்கிவிட்டால் தான் மஞ்சளாரின் குறை தீரும். விரைவில் டூ ஜி வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் அனேகமாக சுதந்திர தினத்துக்கு முன்னரே தீர்ப்பு வந்துவிடும். மஞ்சளாரின் விருப்பம் நிறைவேறும்.

    4. மஞ்சளாரின் பெரிய பொய் என்னவெனில், இவரது டம்மி அரசு , போட்ட பல பொய்வழக்குகள் நீதிமன்றத்தால் முடிக்கப்பட்டு விட்டன. எல்லா வழக்கிலும் ஜெயா வெற்றி பெற்றார். சொத்துக்குவிப்பு வழக்கை போட்டது , சுப்பிரமணிய சாமி தான். திமுக பின்னர் வெட்டியாக சேர்ந்து தானும் பொய் விளம்பரம் தேடிக்கொண்டது. திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்குகளின் யோக்கியதை என்ன என்பதை திமுக கட்சியின் முன்னாள் ராஜ்ய சபா எம் பி திரு செல்வகணபதி அளித்துள்ள சமீபத்திய பத்திரிகை பேச்சில் , அந்த வழக்கு திமுக அரசால் போடப்பட்ட பழிவாங்கும் பொய் வழக்கு என்று தெளிவாக கூறியுள்ளார். அவர் உங்கள் கட்சியின் இராஜ்யசபை உறுப்பினராக நேற்று வரை இருந்தவர் என்பதை நாடே அறியும். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். விஞ்ஞான பூர்வ ஊழல் வரலாறு படைத்து , சர்க்காரியா சான்றிதழ் பெற்ற தாங்கள், மற்றவர் ஊழலைப் பற்றி பேசும் போது நாடே சிரிக்கிறது. காமராஜர் சரியாக சொன்னார் – கழகங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. திக, திமுக, இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய அசிங்கங்களே. திமுக அளவுக்கு அதிமுக ஊழல் இதுவரை செய்யவில்லை. சன் டிவியால் பல ஆயிரம் முறை திரும்ப திரும்ப காட்டப்பட்ட, சுமார் 700 செருப்புக்கள் உட்படவே , திமுக அரசின் வழக்கில் அருபதுகொடிக்கு சிறிது கூடுதலாக சொல்லி இருக்கின்றனர். இதில் சசிகலா மற்றும் அவரது உடன் இருந்த உறவினர்களது சொத்தும் சேர்ந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் உண்மை வெளிவரும். அந்த வழக்கை நீர்த்துப்போக செய்ததே கருணாவின் பழிவாங்கும் புத்தியும், குறுக்கு சால் ஓட்டியதும் தான். கருணா செய்தது போல, டூ ஜி வழக்கில் ஜெயாவும் உள்ளே புகுந்து பெட்டிஷன் போட ஆரம்பித்தால் , திமுகவினரின் ஊழல் மேலும் வெளிச்சமாகும் . ஆனால் ஜெயா சும்மா இருக்கிறார். போனால் போகட்டும் என்று. போகிறவன் வருகிறவன் எல்லாம் கலைஞரின் இந்த பேச்சை படித்துவிட்டு , ‘ டேய், அண்ணனைப் பாருடா , ஊழலைப் பற்றி இவர் பேசுறாரு’ – என்று நக்கலடிக்கிறான். திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் ஆட்சிக்கட்டில் ஏறியபோது, விஷக்கிருமிகள் பரவி விட்டன என்றார் பெரியவர் பக்தவத்சலம். அது எவ்வளவு பெரிய உண்மை என்று நாடே இப்போது உணருகிறது.

    டூ ஜி நிறப்பிரிகை வழக்கில் , இரண்டு வழக்கிலும் தீர்ப்பு வந்த பின்னர் , தமிழனுக்கு இன்னும் என்ன என்ன வசவு கிடைக்கப் போகிறதோ இவரிடமிருந்து என்று தமிழன் ஆர்வமாக காத்திருக்கிறான். தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு கழகங்கள் எவ்வித திட்டமிடலோ, திட்டத்தை அமல் செய்யவோ இல்லை. தமிழனை குடிக்கு அடிமை ஆக்கி, நடைப் பிணமாக்கியது ஒன்று தான் , திமுகவின் சாதனை.

  19. ஊடகங்களில் உள்ளவர்களில் சிலர் என்னவோ முக்காலமும் உணர்ந்த ஞானிகள் என்ற பிரமை நம் சமூகத்தில் சில நண்பர்களிடம் உள்ளது. ஊடக துறை நண்பர்களும் நம்மைப் போல உள்ளவர்களே. அவர்களது தொழில் சூழல் காரணமாக அவர்கள் சிறிது பரபரப்பை உற்பத்தி செய்கிறார்கள் அவ்வளவு தான். இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 50-க்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்கிறார் என் நண்பர் ஒருவர். காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு 10- முதல் 12 வரைதான் கிடைக்கும் என்கிறார். இன்னொரு சிறுவியாபாரி நாடு முழுவதும் அடிக்கடி சுற்றுபவர், ( வியாபாரத்துக்காக ) காங்கிரசு 30-ஐ தாண்டாது. அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 50-க்குள்தான் என்று சொல்கிறார். மூணாவது, நாலாவது, ஐந்தாவது அணிகள் ( மாநிலக் கட்சிகள் + ஆம் ஆத்மி + கம்யூனிஸ்டுகள்) எல்லாம் சேர்ந்து 135 இடங்களை பெறும். எஞ்சிய 363 இடங்களை பாஜகவின் என் டி ஏ கூட்டணியே ஜெயிக்கும் என்கிறார்.

    தமிழகத்தில்

    அம்மாவுக்கு 34-
    பாஜக கூட்டணிக்கு 5
    திமுகவுக்கு –
    காங்கிரசுக்கு-
    கம்யூனிஸ்டுக்கு –
    ஆம் ஆத்மிக்கு-
    சுயேச்சைகளுக்கு எல்லாம் வெறும் சைபர்தான் இந்தமுறை என்கிறார் இவர். எல்லாம் நாளை இரவு 9-00 மணிக்குள் தெரிந்துவிடும்.

    கேரளாவை சேர்ந்த சிரியன் கிறித்துவ நண்பர் சொல்கிறார் கேரளாவில் 20- தொகுதியில் 18- காங்கிரசுக்கும், அதன் கூட்டணியை சேர்ந்த கட்சிகளுக்கும் கிடைக்கும். கம்யூனிஸ்டுகளுக்கு இரண்டு இடம் தான் என்கிறார். மேலும் அஸ்ஸாம், கேரளா தவிர வேறு எங்கும் காங்கிரஸ் வெற்றிபெறாது. எல்லா மாநிலங்களிலும் ஒன்று அல்லது இரண்டு என்று சேர்த்தால் மொத்தமே 50 தான் தேறும் என்கிறார். இம்முறை மகாராஷ்டிரத்தில் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான சரத்பாவரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியும் தேறாது என்று சொல்கிறார்.

    மோடி கூட்டணிக்கு 300-க்கு மேல் கிடைக்கும் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது. ஏனெனில் 56- கோடி மக்கள் வாக்களித்துள்ள அற்புதமான தேர்தல் இது. மக்கள் அதிகாரம் வெல்க. சுதந்திரம், ஜனநாயகம். சமத்துவம், சஹோதரத்துவம் இவை மட்டுமே என்றும் வெல்லும். கம்யூனிசமும், ஆபிரஹாமிய காடையர்களின் சர்வாதிகாரமும் என்றும் வெல்லாது. மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் சக்திகளை அடையாளம் கண்டு , புறக்கணிப்போம். இந்தியா வெல்க. இந்த 16-ஆவது பொதுத்தேர்தல் இந்திய ஜனநாயகத்தின் மற்றுமொரு மணிமகுடம் ஆகும்.

  20. எனது முந்தைய மறுமொழியில்(15-5-2014), திமுக ,காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தமிழகம் , பாண்டியில் மொத்தம் 40 இடத்தில் ஒரு இடமும் கிடைக்காது என்ற எண்ணம் இப்போது சரியாகப் போய்விட்டது.

    அதிமுக 34-என்று என் நண்பர் சொன்னது இப்போது 37 என்று ஆகிவிட்டது. ஆனால் பாஜக கூட்டணிக்கு 5 என்று அவர் சொன்னது 2 என்று ஆகி விட்டது. பாஜக கூட்டணி 330-340 ரேஞ்சில் அதாவது 330க்கு மேல் 340-க்குள்ளாக வந்துள்ளது. சுமார் 340- இடங்களை பாஜக கூட்டணி பெரும் என்று சரியாக கணித்தவர்கள் TODAYS CHANAKYA – கருத்துக் கணிப்பாளர்களுக்கு இந்தியா முழுவதும் பாராட்டு தெரிவிக்க கடமைப் பட்டுள்ளது. ஏனெனில் இதே கருத்துக்கணிப்பு குழு டெல்லி சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மிக்கு 30- இடம் கிடைக்கும் என்று யாரும் சொல்லாத உண்மையை யூகித்து சொன்னது. இப்போதும் 340- என்று சொன்னது TODAYS CHANAKYA – குழு மட்டுமே. அவர்களுக்கு நமது இதயங்கனிந்த பாராட்டுக்கள்.

    இந்திய ஜனநாயகம் மீண்டும் வென்றது. இந்தியா மீண்டும் மீண்டும் வென்றது. இனியும் இந்தியா வெல்க.

    பாரதப்பிரதமர் ஆகும் திரு நரேந்திரமோடிக்கு எல்லாம் வல்ல மாசிப்பெரியசாமியின் அருள் என்றும் கூடுக.அவர் ஆட்சியில் இந்தியா புதிய இனிய வரலாறுகளை படைக்க பராசக்தி கடைக்கண் திறப்பாளாக.

    தமிழக பாராளுமன்ற முடிவுகள் பற்றி:

    பொய்யர்கள் கூறும் பல பொய்களை இந்த தேர்தலில் தமிழக வாக்காளப்பெருமக்கள் முறியடித்துள்ளனர். அந்தப் பொய்யர்கள் இனியாவது திருந்துவார்களா என்று தெரியவில்லை. நமது தமிழ் கூறு நல்லுலகின் பத்திரிக்கையாளர்கள் செய்த கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 20- முதல் 31 இடங்கள் வரை கிடைக்கும் என்று சொல்லியிருந்தனர். மாறுபட்ட கருத்துக்கணிப்பாக ஒரே ஒரு தமிழ் வாரம் இருமுறை மட்டும் திமுக அணி ( வி சி 1 , முஸ்லீம் லீக்கு 1 உட்பட) 21, அதிமுக 16, பாஜக அணி 2, ஆக 39 எனவும் பாண்டியில் காங்கிரசுக் கட்சி வெற்றி என்றும் போட்டிருந்தது. அந்தப் பத்திரிகை சென்ற 2011- சட்டசபை தேர்தலிலும் திமுக அணி வெல்லும் என்று தேர்தல் தினத்தன்று கூட கணிப்பு செய்த பத்திரிகை ஆகும். எனவே அந்த பத்திரிக்கையின் கணிப்பு வழக்கம் போல பொய்த்துப் போனது.

    பெரும்பாலானோர் இந்த கருத்துக் கணிப்புக்களை நம்பி திமுக அணி ஒரு 5 முதல் 10 இடமாவது வரும் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். கோவையிலிருக்கும் ஒரு 70- வயது தாண்டிய முதியவரை தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்பு ஏப்பிரல் 22-அன்று தொலைபேசியில் தொடர்பு கொள்ள நேரிட்டது. அய்யா , தங்களுடன் தேர்தல் பற்றி கேட்கவேண்டும் அனுமதிப்பீர்களா என்றேன் . தாராளமாக கேளுங்க என்றார். தமிழக முடிவுகள் எப்படி இருக்கும் என்றேன். உடனே சொன்னார் ‘இதிலே என்னங்க தயக்கம் ? நாடு முழுவதும் காங்கிரசின் கேவலமான ஆட்சியால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விலைவாசியோ விண்ணைப் பிடித்துவிட்டது. எனவே காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வி அடையும். பாஜக அணியே நிச்சயம் 300-க்கு மேல் வெற்றி பெறும் என்றார்.

    அய்யா , திமுக தமிழகத்தில் காங்கிரசை உதைத்து வெளியே அனுப்பி விட்டதே – எனவே திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்றேன். அவர் சொன்னார்’ திமுக 9 வருட காலம் தொடர்ந்து காங்கிரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்து, டூஜீ- சேதுசமுத்திரம்- பி எஸ் என் எல் – ஸ்டெர்லிங்க் சிவசங்கரன்- திகார் – என்று பேர் ரொம்ப கெட்டுப் போச்சு. மேலும் இந்த புகார்களில் சம்பந்தப்பட்ட
    கனிமொழி தயாநிதிமாறன் இராசா டி ஆர் ஆர் பாலு ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை கொடுக்காமல் வேறு புதுமுகங்களுக்கு கலைஞர் கொடுத்திருந்தால் ஒரு ஐந்து இடமாவது கிடைக்கும். ஏனெனில் மின்சாரத்தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை , பால் விலை , பஸ்கட்டணம், மின்கட்டணம் ஆகிய உயர்வுகள் காரணமாக மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள திமுக கூட்டணியால் இயலாது போனதற்கு, இவர்களுக்கு டிக்கெட் கொடுத்த முட்டாள் தனமும் ஒரு காரணம் ஆகும்.

    இலங்கையில் அப்பாவி சிவிலியன் தமிழர்கள் தலையில் கொத்து எரிகுண்டினைப் போட்டுக் கொன்ற இராஜபக்ஷேவுக்கு அழிவு ஆயுதங்களை வழங்கிய சோனியாவை சொக்கத்தங்கம் என்று சொல்லியது மட்டுமல்லாது , பதவியை இராஜினாமா செய்யாமல், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன இலாக்கா என்ற பேரம் செய்து கொண்டிருந்தார் கலைஞர். நாடே பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்த கதையைப் போல. எனவே தமிழக மக்களை ஏமாற்றி வாக்கு வாங்குவதற்காக , மத்திய அரசில் இருந்து விலகுவதுபோல ,ஒரு நடிப்பு நடித்து , தன்னுடைய மகள் கனிமொழிக்காக பதவி வேண்டி , மீண்டும் சொக்கத்தங்கம் காலில் விழுந்து , காங்கிரஸ் ஆதரவுடன் இராஜ்ய சபா உறுப்பினர் பதவி பெற்றார். எனவே காங்கிரஸ் கூட்டணி இல்லை என்று விலகியதாக வெளியே நாடகம் ஆடினாலும் , திமுக மஞ்சள் தலைவர் காங்கிரசுடன் கூட்டு சதிகளை செய்யும் கொடியவர் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

    மேலும் 2011-லே எம் ஜி ஆர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவுடன் , வயிற்றெரிச்சல் காரணமாக மத்திய அரசிலிருந்து கொடுக்கப்படும் ரேஷன் அரிசி , மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவைகளின் அளவை குறைத்து , தமிழக ஏழை மக்களின் வயிற்றில் அடித்தார். திமுகவினரின் இந்த திருவிளையாடல்கள் சாதாரணப் பாமரனுக்கும் தெரிந்துவிட்டது. மேலும் மத்திய அரசில் இருந்துகொண்டு , மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் பெற இவர்கள் எவ்வித உதவியும் செய்யவில்லை.

    எனவே , இந்த திமுக அணிக்கு ஒட்டுமொத்தமாக இந்தமுறை நிச்சயம் சைபர்/ அதாவது பூஜ்யம் தான். ஒரு இடமும் கிடைக்காது என்றார். அது சரியாகப் போய்விட்டது. அதுதான் நடந்தது.

    வாக்கு வித்தியாசமும் மத்திய சென்னை , வேலூர் , கோவை ஆகிய 3 இடங்களை தவிர மற்ற எல்லா 36 தொகுதிகளிலும் சுமார் ஒரு லட்சத்தில் துவங்கி மூன்று லட்சத்து 25 ஆயிரம் வரை உள்ளது. திமுக அணியை விட , அதிமுக அணிக்கு சுமார் 21% வாக்கு கூடுதலாக வந்துள்ளது. பாஜக அணி இரண்டு இடத்தில் வென்றதுடன் , திமுக அணியை ஆறு அல்லது ஏழு இடங்களில் மூன்று அல்லது நாலாவது இடத்துக்கு தள்ளிவிட்டது. திமுக ஆதிக்கம் இனி நிச்சயம் அவ்வளவுதான்.

    திரு அழகிரி அவர்கள் ஆதரவாளர்கள் எதிர்த்து வேலை செய்தது, திமுகவின் தோல்வி வாக்கு வித்தியாசத்தினை சில ஆயிரங்கள் மாற்றியது – அவ்வளவுதான். அழகிரி அவர்கள் திமுகவை ஆதரித்திருந்தாலும் திமுகவுக்கு ஒரு இடமும் கிடைத்திருக்காது. அதிமுகவின் வெற்றி மக்களால் பூரணமாக எழுதப்பட்டு விட்டது. பாஜக ஆதரவு மனநிலை கொண்ட பல லட்சம் வாக்காளர்களில் ஒரு 40 விழுக்காட்டிற்கும் மேல் , அம்மாவுக்கு வாக்களித்ததால் அம்மாவின் வெற்றி வித்தியாசம் சிறிது கூடியது. அவ்வளவே.

    காவிரித்தீர்ப்பாயம், முல்லைப் பெரியாறு என்று அதிமுகவின் வெற்றிகள் தொடரும். பாஜக அரசுக்கு அதிமுக நிச்சயம் பெரிய துணையாக இருக்கும் என்று தமிழக வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    வையகம் வளமுடன் வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *