சாதி அரசியல் செய்கிறாரா மோதி?

modi_vs_priyankaமோதி வெட்கமில்லாமல் சாதி அரசியல் செய்கிறார் என்று ஊடகங்களும் காங்கிரசும் ஊளையிட ஆரம்பித்து விட்டன. அமேதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் சில நடவடிக்கைகளை காட்டமாக மோதி விமர்சித்தார். இதனால் கோபமடைந்த பிரியங்கா வதேரா “மோதி கீழான அரசியல் (நீசீ ராஜ்நீதி) செய்கிறார்” என்று சாடினார். “மோதியை எப்படி வேண்டுமானாலும்  எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால்  எனது சாதியை வைத்து, கீழ் சாதிகளில் பிறக்க நேர்ந்து விட்ட மக்களை (நீசீ ஜாதி மே பைதா ஹுயே லோக்) அவமதிக்காதீர்கள்”  என்று  மோதி பதிலடி கொடுத்தார்.  உ.பியில்  நேற்று நடைபெற்ற ஒவ்வொரு கூட்டங்களிலும் மோதி இதைக் கூறியபோது  மக்கள் திரள் ஆர்ப்பரித்தது.

மோதியின் இந்த பிரம்மாஸ்திரத்தால், மற்ற கட்சிகளுக்கு உடனடியாக பயங்கர கிலி பிடித்து விட்டது..  பிரியங்கா “கீழ்த்தரமான அரசியல்” என்று சொன்னதை வேண்டுமென்றே  “கீழ் சாதி” என்று மோதி தவறாக அர்த்தப் படுத்துகிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.  மாயாவதி  உடனடியாக ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து வளவளவென்று  ஏதேதோ பேசினார். மோதி உண்மையிலேயே பிற்பட்ட சாதிக் காரர் தானா? அவரது சாதி என்ன என்பதை இதுவரை அவர் சொல்லவே இல்லையே.  இந்த சாதியா, இந்த சாதியா என்று சில வட இந்திய பிற்பட்ட சாதிகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போனார்.. மோதி அருவருக்கத் தக்க அரசியல்  (ghinauni rajniti – घिनौनी राजनीति) செய்கிறார். கீழ்த்தரமான அரசியல் (ghatiyaa rajniti – घटिया राजनीति) செய்கிறார்  என்று  முழங்கினார். எல்லா ஊடகங்களும் இதை ஒளிபரப்பின.

நிற்க. பிரியங்கா நேரடியாக சாதியைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது, மோதி வலிந்து இதில் சாதியை நுழைக்கிறார் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம். தனது மொழியறிவுக் குறைபாட்டினாலோ, அல்லது மிகச் சரியான சொற்களைத்  தேர்ந்தெடுத்து பேசும் பயிற்சி இல்லாததாலோ, பிரியங்கா “நீசீ” என்ற அந்தச் சொல்லைப் பயன்படுத்தியது  இதற்கு  இடமளித்து விட்டது என்பதே உண்மை. “நீச்” என்ற சொல் உடனடியாக  ஹிந்தி பேசும் பாமர ஜனங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு எப்படிப் பட்டது  என்பதை மேல்தட்டுகளிலேயே புழங்கிய பிரியங்கா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மக்களோடு மக்களாக புழங்கிய மோதி உடனடியாக அறிந்து கொண்டு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.  சொல்லேர் உழவரான, வசீகரமான பேச்சாளரான மோதி  இப்படி செய்ததில் வியப்பில்லை.

மாயாவதி தனது பேச்சில் எங்கும் மோதியின் அரசியலைக் குறிக்க  “நீச் / நீசீ” என்ற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை என்பதை, உன்னிப்பாகக் கேட்டவர்கள் கவனித்திருக்கக் கூடும். ஏன் அவர் அந்தச் சொல்லைத் தவிர்த்தார்? ஏனென்றால், அந்தச் சொல்லின் உண்மையான கனம் அவருக்குத் தெரிந்திருந்ததால் தான். இதன் மூலம், மாயாவதி, பிரியங்கா மீது மோதி கூறிய குற்றச்சாட்டு அர்த்தமற்றதல்ல என்று தானே நிரூபித்து விட்டார் !

இன்னொரு விஷயம். இதே போல, மோதியோ அல்லது வேறு பாஜக தலைவரோ “நீச்” போன்ற சொற்களைப் பயன்படுத்தி இருந்து, முலாயம் சிங் யாதவோ அல்லது லாலுவோ அதை கப்பென்று பிடித்துக் கொண்டு (காங்கிரஸ் தலைகளில் யாருக்கும்  இவ்வளவு சாதுரியம் உண்டா என்பது சந்தேகமே) இதே போல தாக்குதல் நடத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஊடகங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்று கற்பனை செய்வது  கடினமானதல்ல.  தாம் தூம் என்று குதித்து  பாஜகவையும் ஆர் எஸ் எஸ்ஸையும்  கிழித்திருப்பார்கள். மோதிக்கு  இது நன்றாகத் தெரியும். அதனால் தான்  அடித்து ஆடுகிறார். இதன் மூலம், ஊடகங்களுக்கும் ஒரு எச்சரிக்கையை, செய்தியை அவர் சொல்ல விரும்புகிறார்.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

என்ற குறளுக்கு  இலக்கணமாக இன்றைய அரசியல் களத்தில் நரேந்திர மோதி இருக்கிறார்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

11 Replies to “சாதி அரசியல் செய்கிறாரா மோதி?”

  1. “நான் சூத்திரன், சாமானியன் என்பதால் என்னை எதிர்க்கிறார்கள்” என்றெல்லாம் கருணாநிதி பேசியபோது வாய் பிளந்து கேட்டு மகிழ்ந்த கூட்டம் இன்று மோடியைப் பார்த்து ஒரு சிறு பெண், அரசியல் அரிச்சுவடி, “தரம் தாழ்ந்த பேச்சு” என்று விமர்சனம் செய்தவுடன் ஆர்ப்பரிப்பது ஏன்? மோடி சொன்னதில் என்ன தவறு? மற்ற எந்த பா.ஜ.க. தலைவருக்கும் இல்லாத அளவில் மோடியை காங்கிரசார் விமர்சிப்பதற்குக் காரணம் இரண்டு. ஒன்று அவர் விஸ்வரூபம் எடுத்து இவர்களில் வயிற்றில் புளியைக் கரைக்கிறார், இரண்டாவது அவர் ஒரு “சாமானியன்” இவரை என்ன வேண்டுமானாலும் பேசலாம், இழிவு படுத்தலாம், குற்றம் சாட்டலாம், எவரும் இவர் சார்பாக வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரமாட்டார்கள் என்று இளைத்தவன் கூட சண்டப் பிரசண்டம் செய்கிறான். அறுபத்தேழு வயதில் நாற்பதை அணைக்கும் குரல் ஒன்று இப்போது காணோம். ஏன்?

  2. மோடியின் நாய்க்குட்டி பேச்சை திரித்துப் பேசியவர்களுக்கு சரியான பதிலடி. இப்படித்தான் நாமும் செய்யவேண்டும்

  3. இந்தியில் 96 பிரிவுகள் உண்டு. அவற்றை விக்கி பீடியாவைப் பார்க்காமல் மனப்பாடமாக ஒப்பிக்கும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. உபியில் கிழக்கு பகுதி இந்தி , டெல்லியில் உள்ள இந்திவாலாக்களுக்கு புரியாது. ஏனெனில் எல்லா மொழிகளின் லட்சணமும் அது தான். நெல்லையில் பேசும் தமிழில் மூன்றில் ஒரு பங்கு சென்னை தமிழனுக்குப் புரியாது. சென்னை தமிழ் கோவைமக்களுக்கு 30% புரியாது.

    வட சென்னை வாழ் தெலுங்கு பேசும் மக்கள் பேசுகிற தெலுங்கு விசாகப்பட்டினம் வாழ் தெலுங்கர்களுக்கு புரியாது. வட்டார வழக்கு என்பது அப்படி வித்தியாசப்படுவது ஒன்றும் தவறல்ல. பிரியங்கா பேச்சில் குற்றம் கண்ட மோடிக்கும், மோடியின் பேச்சில் குற்றம் காணும் பிரியங்காவுக்கும் தாய் மொழிகள் வேறு. பிரியங்கா டெல்லி இந்தி பேசுபவர். மோடி அவர்களோ குஜராத்தி பேசுபவர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திப் பேசுவது தேவை இல்லை.

    மோடி பிரதமர் ஆவது அட்சய துர்க்கா போட்ட உத்தரவு. எனவே பதவியிழக்கப்போகும் இந்திரா குடும்பமும், அந்த குடும்பத்தின் சொம்புகளும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்புவது ஒன்றும் வியப்பில்லை. சோனியா காங்கிரசை முற்றிலும் அழித்து, எள்ளு பால் தண்ணீர் ஊற்றிவிட்டுத்தான் அதாவது காங்கிரசுக்கு இறுதிச் சடங்கு செய்து விட்டுத்தான் செல்வார். பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறும். எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டால் உங்கள் கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டிய மராட்டிய துணை முதல்வர் அஜித் பாவர் மேமாதம் 17-ஆம் நாள் தூக்கிலே தொங்குவார். ஏனெனில் அவர் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர் என்றும் , காங்கிரசின் கூட்டணி கட்சிக்காரர் என்றபோதும், சிறிது சொரணை உள்ளவர் என்றும் சொல்கிறார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. மேமாதம் 17- ஆம் தேதி தெரிந்துவிடும். அவருக்கு சொரணை இருக்கிறதா என்பது.

  4. வாராணசியில் போட்டியிடும் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அங்கு பொதுக்கூட்டம் நடத்த முடியாது.

    ஆனால் ஹிந்துஸ்தானத்தின் மிகப்பெரும் வக்கீலான ஸ்ரீ ராம்ஜெத்மலானி அவர்களால் ஒரு க்ளார்க் உத்யோகத்துக்குக் கூட லாயக்கில்லை என்று சான்றிதழளிக்கப்பட்ட ராஹுல் காந்தி வாரணாசியில் நடுத்தெரு ட்ராமாக்கள் நடத்த டிஎம் அனுமதி.

    பாஜக வாராணசியிலும் தில்லியிலும் தர்ணா.

    இதையெல்லாமும் ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் வகையறாக்கள் ஆதரிக்கிறார்களா பார்ப்போம்.

    ஒவ்வொரு மீடியா காரர்களிடமும் நரேந்த்ரபாய் பேசும் விதம் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றால் மிகையாகாது.

    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று காட்டுக்கத்தல் கத்தும் அர்ணாப் கோஸ்வாமி என்ற கூச்சல் பேர்வழிக்கு மற்றும் ப்ரோக்கர் பரக்காவட்டி தத் இத்யாதி கழிசடைகளுக்கு இதுவரை நரேந்த்ரபாய் பேட்டி கொடுக்கவில்லை.

    இதில் அர்ணாப்பு ரொம்ப கடுப்பில் இருப்பதாகக் கேழ்வி. பாஜக காரர்களை தினம் தினம் குதறியெடுக்கிறார் என்றறிகிறேன். ஆங்க்ல தொலைக்காட்சிகளின் ஒம்பது மணி கூச்சல் நிகழ்ச்சிகள் செவிப்பறையை கிழிப்பதல்லாது வேறு எதையும் கிழிப்பதில்லை என்பதால் இதைப் பார்ப்பதை கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டேன்.

    குஜராத் நில ஆர்ஜித மாடல் டாஃபி மாடல் என்று குழந்தை ராஹுல் காந்தி தொண்டை கிழிய கத்தியபின்பும் — குழந்தையின் மம்மியுடைய ப்ரபலமான சொம்பு தூக்கி மந்த்ரியான ஆனந்த் ஷர்மாவின் — மந்த்ராலய ரிபோர்ட் ஆனால் குஜராத்தின் நில ஆர்ஜித மாடல் சிறப்பான மாடல் என்று நற்சான்றிதழ் அளிக்கிறது. குழந்தைக்கு யாராவது சரியாக ஆனா ஆவன்னா சொல்லித்தர மாட்டங்களோ காங்க்ரஸில். பசி மந்த்ரி, சர்தார் மனமோஹன சிங்கனார் இதுகளெல்லாம் எதுக்கு சம்பளம் வாங்குகிறார்கள்?

    மொம்தா தீதியுடைய பொரிபொர்த்தன் பற்றி நரேந்த்ரபாய் விளாசியுள்ளார். இந்த அம்மணி பார்லிமெண்டில் பாங்க்ளாதேஷிலிருந்து ஹிந்துஸ்தானத்தில் நுழையும் ஊடுருவல் காரர்களைப் பற்றி காட்டமாகப் பேசியதைக் குறிப்பிட்டுள்ளார். காம்ரேடுகள் இந்த்ரஜித் குப்தா (காலம் சென்ற) மற்றும் புத்ததேப் பட்டாசார்யா போன்றவர்களெல்லாம் பாங்க்ளாதேஷிலிருந்து ஊடுருவல் பற்றிப் பேசினால் அது தக்காளி சட்னி. மோதி பேசினால் அது ரத்தம்.

    இந்தக் கண்றாவியைப் பற்றியும் பாக் சார் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

  5. வாரணாசி உயர் வகுப்பினருக்கு கூட முரளிமனோகர் ஜோஷியை வெளியே தள்ளி விட்டு ஒரு பின் தங்கிய வகுப்பை சேர்ந்த மோடியை ஆதரிப்பதிலும் தயக்கம் இருப்பதாக தோன்றுகிறது. அதன் வெளிப்பாடு தான் மடாதிபதிகள் சிலர் மோடிக்கு எதிராக கச்சை கட்டுகிறார்களோ? அரசியலில் மதம் நுழையக்கூடாது அரசியல் என்பது அனைவருக்குமான ஒன்று அதில் சில விஷ்யங்களை நீக்குபோக்காகத்தான் கடைபிடிக்க வேண்டும். மோடி ஜாதியை சொல்லி ஓட்டு கேட்கும் நிலையில் இல்லை. அவர் அப்படிப்பட்டவரும் அல்ல. ஆனால் சந்தர்ப்பத்தை சம்யோசிதமாக மாற்றிக்கொள்வதில் அவர் ஒரு புலி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

  6. புல்லரிக்குதையா! மோடியின் சாதுரியம். சாதி அரசியலை வேறு வடிவமாக நீட்டிந்துகொண்டே செல்வோம். விரைவில் முன்னேறலாம்!!

  7. என்னவாக இருந்தாலும் தலைவர் செய்த தவறு இது

  8. மோடி அவர்களை தவிர்த்து மற்ற இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் மஹா உத்தமர்கள்.

  9. காங்கிரசும், அரவிந்த கேஜ்ரிவாலரும் தங்கள் அரசியல் மேடைகளில் மத சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்று கூவோ கூவு என்று கூவுகிறார்கள். காங்கிரஸ் முயல்வது மக்கள் சார்பற்ற ஆட்சியைத்தான். அது நம் நாட்டில் நடக்க விடமாட்டார்கள் நம் மக்கள். ஏனெனில் இது ஜனநாயக நாடு. காங்கிரஸ் ஆம் ஆத்மி இரண்டுமே முழு விஷம் ஆகிவிட்டன. சவூதி, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து ஆம் ஆத்மிக்கு ஏராளம் நன்கொடை வந்துள்ளது. ஆம் ஆத்மியின் மீது , வெளிநாட்டுப் பணம் வந்த வகையை அறிய ஒரு விசாரணையை மத்திய உள்துறை இலாக்கா மேற்கொள்ளவேண்டும். முன்னரே மத்திய அரசு கேட்ட விளக்கங்களை இன்றுவரை அரவிந்த கேஜ்ரிவால் கொடுக்கவில்லை.

  10. ஆன்மிகத்தில் இருக்கும் மடாதிபதிகள் தங்களுக்கு உரித்தான மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதையும் பேசலாம். அரசியலில், அதுவும் சம்பந்தமில்லாமல் மடாதிபதிகள் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. துவாரகா பீட சாமியார் விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிப்பது இது முதல் முறை அல்ல. பூரி சாமியாருக்கு என்ன வந்தது? இவர்களுக்கெல்லாம் இவர்கள் பணி என்ன என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

  11. மடாதிபதிகள் பேச்சை கேட்டு அரசியலில் யாரும் வாக்குஅளிக்க மாட்டார்கள். இந்துக்களின் ஆன்மீக விஷயங்களில் இடைஞ்சல் ஏற்படுத்தும் விதத்திலும், இந்துக்களின் அன்றாட வாழ்வுக்கு தொல்லைகள் கொடுக்கும் விதத்திலும் எந்த அரசியல் கட்சியாவது செயல்பட்டால், அந்த அரசியல் கட்சியை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது இந்து மத தலைவர்களின் மற்றும் இந்துக்களின் கடமை ஆகும் . ஆனால், காங்கிரஸ் கட்சி காஷ்மீரத்து பண்டிதர்கள் நாலு லட்சம் குடும்பங்கள் காஷ்மீரை விட்டு வஹாபி தீவிரவாத இஸ்லாமியர்களால் விரட்டி அடிக்கப்பட்டபோது, இந்த மடாதிபதி என்ன புல்பறித்துக்கொண்டிருந்தாரா ? அப்போது நாட்டில் பதவியில் இருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக என்ன போராட்டம் நடத்தினார் ? எனவே இந்த பூரி சங்கராச்சாரியாரையும், இவரது வேண்டுகோளையும் ஒட்டுமொத்தமாக இந்து மக்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டார்கள். இவரைப் பற்றிப் பேசவேண்டாம். வெட்டிவேலை என்றே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *