மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!

Narendra-Modi
பதவியின் கண்ணியத்தை மீட்கும் பிரதமர் மோடி.

நாட்டின் 15வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. தனது பதவியேற்பு விழாவிலேயே தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்து பிரமிப்பூட்டிய மோடியின் ஒவ்வொருநாள் நடவடிக்கையும் ஊடகங்களால் பெரிதும் வியந்தோதப்படுகிறது.

டி.என்.சேஷனால் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த மரியாதை போல, இதுவரையிலும் இழந்துபோன பிரதமர் பதவியின் மதிப்பு மோடியால் மீட்கப்படும் காட்சி தெளிவாகவே தென்படுகிறது. பிரதமர் மோடியின் முதல் ஒருவாரகால செயல்பாடுகள் அவர் செல்லும் திசையை தெளிவாகவே காட்டுகின்றன.

‘தனது அரசு ஏழைகளின் அரசாக இருக்கும்’ என்று துவக்கத்திலேயே பிரகடனம் செய்துள்ள பிரதமர் மோடி, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் இணைந்து நாட்டை உயர்த்த வருமாறு அழைப்பு விடுத்தார். தேர்தல் கால விரோதங்கள் தொடரக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தான் சார்ந்த கட்சியினருக்கு அளிக்க வேண்டிய மரியாதையும் மதிப்பையும் அளிப்பது போலவே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியினரின் மதிப்பை உணர்ந்தவராக அவர்களின் ஒத்துழைப்பையும் மோடி நாடி இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ள அதீதப் பெரும்பான்மை பலம் மோடியை மேலும் பண்புள்ளவராகவே மாற்றி இருக்கிறது.

.

முத்தான முதல் உத்தரவு:

Modi sign
முத்தான முதல் கையெழுத்து.

சுயநலம் அற்றவர்களால் தான் மற்றவர்களையும் சுயநலமின்றிச் செயல்படவைக்க முடியும் என்பதற்கும் மோடி உதாரணமாகி உள்ளார். தனது பதவியேற்பு விழாவுக்கு தனது குடும்பத்தினரையோ, மனைவி குடும்பத்தினரையோ அழைக்காத மோடியை உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது.

அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் தனிநபராக அவர் நுழைந்ததை வியக்காத ஊடகங்கள் இல்லை. இதுவே மோடியின் தனிச்சிறப்பு. அதனால் தான், அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களில் தங்கள் உறவினர்களை பணியாளர்களாக நியமித்துக் கொள்ளக் கூடாது என்று எந்த தயக்கமும் இன்றி அவரால் உத்தரவிட முடிகிறது.

அமைச்சர்கள் யாரும் அந்தரங்கப் பணியாளராக தங்களது உறவினர்களை நியமிக்கக் கூடாது என, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் மூலம் மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டது. பிரதமராகப் பதவியேற்றதும் மோடி கையெழுத்திட்ட முதல் கோப்பே இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.

 அமைச்சர்களின் அந்தரங்கப் பணியாளர் அல்லது உதவியாளர் பதவிக்கு உறவினர் அல்லாத பொதுவான ஒருநபரைத் தான், அதற்கென உள்ள பட்டியலிலிருந்து தேர்ந்து நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளபோதிலும், கடந்த காலங்களில் பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் அதனை அலட்சியப்படுத்திவிட்டு, தங்களது உறவினர்களையே அந்தரங்க உதவியாளராக நியமித்துள்ளனர்.

தாங்கள் நடத்தும் பேரம், காண்டிராக்ட், கமிஷன், முக்கிய சந்திப்பு போன்ற ரகசியங்கள், வெளிநபர்களை அந்தரங்க உதவியாளராக நியமித்தால் கசிந்துவிடும் என்பதாலேயே பெரும்பாலான அமைச்சர்கள் தங்கள் உறவினர்களை அப்பதவிக்கு நியமித்துக் கொண்டனர் என்பதை சொல்லத் தேவையில்லை.

உதாரணமாகச் சொல்வதென்றால் முந்தைய மன்மோகன் சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்து ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவியிழந்த பவன்குமார் பன்சாலைக் குறிப்பிடலாம். இவர் தனது மருமகன் விதுல் குமார் ஓஎஸ்டி  ஆகவும்,  சகோதரியின் மருமகன் ராகுல் பண்டாரி, இன்னொரு மருமகன் விஜய் சிங்லா ஆகியோரை அந்தரங்கச் செயலாளர்களாகவும் நியமித்துக்கொண்டார்.  இதில் சிங்லா தான், ரயில்வேயில் உயரதிகாரிகளை நியமிக்க கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றதில் சிக்கினார். இதன் காரணமாகவே பன்சால் பதவி இழக்க நேரிட்டது.

இத்தகைய அவலநிலை ஏற்படுவதை முளையிலேயே கிள்ளி இருக்கிறார் மோடி. இதனை  குஜராத் முதலவராக இருந்த காலகட்டத்திலேயே மோடி வெற்றிகரமாக அனுசரித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அமைச்சர்கள் தங்கள் கீழுள்ள அதிகாரிகளை இஷ்டம் போலக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் அதனது பத்து கட்டளைகளில் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

.

பத்து கட்டளைகள்:

Modi with Officials
பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் மோடி.

பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் மே 29-ல் அமைச்சரவையைக் கூட்டிய மோடி, தனது சக அமைச்சர்களுக்கு அளித்துள்ள பத்து கட்டளைகள் அவரது ஆட்சித்திறனுக்கு சான்றாக விளங்குகின்றன. அந்த பத்து கட்டளைகள்:

1. பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளை அகற்ற வேண்டும்;  பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

2. கல்வி, சுகாதாரம், எரிசக்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

3. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து, உலக அரங்கில் இந்தியாவை உற்பத்திக் கேந்திரமாக மாற்ற வேண்டும்.

4. நல்ல நிர்வாகம் இருந்தால் மட்டும் போதாது; மக்கள் சார்ந்த அரசாக இருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிப் பாதையில் செல்லமுடியும்.

5. எந்தத் திட்டமாக இருந்தாலும், அதை குறித்த காலத்தில் செயல்படுத்துவது அவசியம்.

6. நீடித்த, நிலையான கொள்கைகளை வகுக்க மத்திய அமைச்சர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

7. அரசின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். ஏலம் விடும் நடைமுறைகள் மின் ஆளுகை மூலம் கொண்டுவரப்பட வேண்டும்.

8. அமைச்சகங்களிடையிலான பணிகளை ஒருங்கிணைக்க பிரத்யேகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

9. அரசு துறை அதிகாரிகள் அச்சமின்றி செயல்படும் சூழ்நிலை வேண்டும்.

10. அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை முழுமையாகச் செயல்படுத்தவும் சுதந்திரமாகச் செயல்படவும் அனுமதிக்க வேண்டும்.

மேலும்  ‘ஒவ்வொரு அமைச்சரும் தாம் பொறுப்பேற்ற நூறு நாள்களில் நிறைவேற்றக்கூடிய பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும். அத்திட்டங்களின் செயல்பாடு தொடர்பான அறிக்கையை  (நூறு நாள் செயல்திட்டம்) தம்மிடம் 100-ஆவது நாளில் அனைத்து அமைச்சர்களும் தாக்கல் செய்ய வேண்டும்’  என நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், குறைந்தபட்ச செயல்திட்டத்தை அமைச்சர்களிடம் பிரதமர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதில் தவறும் அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்வது சந்தேகம் என்பதால், அமைச்சர்கள் முழுமூச்சாக இயங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இது ஒருவகையில் தன்னிச்சையான ஆளுகை போலத் தெரியலாம். ஆனால், பிரதமர் பதவியின் மதிப்பை வெகு விரைவில் மீட்கவும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்தவும் இதைவிட சிறந்த வழிமுறை இருப்பதாகத் தெரியவில்லை.

.

மாநிலங்களுக்கு முக்கியத்துவம்:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி

அமைச்சர்கள் மட்டுமல்ல, தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடமும் பணிக் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படுத்த மோடி முயல்கிறார். பதவியேற்றவுடன், பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் அளவளாவிய பிரதமர் மோடி, மக்களின் குறைகளை துரித கதியில் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த வேண்டும்;  வலுவான வகையில் கண்காணிக்க ஏற்ற விதத்தில் அமைப்புமுறையையும் செயல்முறைகளையும் உருவாக்க வேண்டும் என்று தனது சக அதிகாரிகளுக்கு மோடி வலியுறுத்தினார்.

மாநிலங்கள் எழுப்பக்கூடிய பிரச்னைகளைப் பரிசீலிப்பதில் பிரதமர் அலுவலகம்  அதிக உணர்திறனுடன், முன்னுரிமையுடனும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விரும்புவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

மாநிலங்களின் முன்னேற்றத்தில் தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கி இருக்கிறது என்பதால் இது முக்கியம் வாய்ந்தது எனவும்,  இதுதான் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும் என்றும் மோடி கூறியுள்ளார்.

ம்க்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது நாடாளுமன்ற நடைமுறைகளின் மூலமோ முன்வைக்கும் பிரச்னைகளை கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் தனது அலுவலக அதிகாரிகளுக்கு மோடி விளக்கினார். நல்ல நிர்வாகம் நடப்பதற்கு அனைவரும் குழுவாக இணைந்து செயல்படுவது அவசியம் என்ற மோடி, அதிகாரிகள் எப்போதும் தங்களது யோசனைகளுடன் தன்னை தாராளமாகச் சந்தித்துப் பேசலாம் என்று கூறி அவர்களை ஊக்கப்படுத்தி உள்ளார்.

நான் பிரதமர்; நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்றில்லாமல், தனது அரசுப் பணியில் கீழுள்ள அதிகாரவர்க்கத்தையும் சுமுகமாக அழைத்துச்செல்ல முற்படும் பிரதமர் மோடி, அதிகாரவர்க்கத்தின் கண்களைத் திறக்க முயன்றிருக்கிறார்.

தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய ஒரு தலைமையின் கீழ் பணிபுரியும்போது அதிகார வர்க்கமும் தன்னை மாறிக் கொள்ளும் என்பதை குஜராத்தில் முதல்வராக இருந்தபோதே மோடி நிரூபித்திருக்கிறார்.

.

சிறிய அமைச்சரவை, சிதறாத இலக்கு:

மோடியின் அமைச்சரவை சகாக்கள்
மோடியின் அமைச்சரவை சகாக்கள்

மோடி அமைத்துள்ள அமைச்சரவை மிகச் சிறியதாக இருப்பது அனைவரது கவனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. நாடாளுமன்ற (லோக்சபை மற்றும் ராஜ்யசபை) மொத்த உறுப்பினர்களில் 10 சதவிகிதம் பேரை அமைச்சர்கள் ஆக்கலாம் என்று விதி இருந்தாலும், தனது அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 45க்குள் கட்டுப்படுத்தி இருக்கிறார் மோடி.

கேபினட் அமைச்சர்கள் 23 பேர், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10 பேர், இணை அமைச்சர்கள் 12 பேர் என 45 பேருடன் மோடி அமைத்துள்ள மத்திய அமைச்சரவை  முழுவதும் அவரது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் விதமாக உள்ளது.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளபோதும், தேர்தலுக்கு முன் அறிவித்தது போலவே, சிவசேனை, அகாலிதளம், தெலுங்குதேசம், லோக்ஜனசக்தி, ராஷ்ட்ரீய சமதா கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. 7 பெண்கள் உள்பட புதிய முகங்களையும் களம் இறக்கியுள்ள மோடி, ஓரளவிற்கு அனைத்து வகையிலும் பிரதிநிதித்துவம் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார். இதில் விடுபட்ட மாநிலங்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.

அதிகப்படியானவர்களுக்கு அமைச்சர் பதவிகளை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பல அமைச்சரகங்கள் பலகூறாகப் பிரிக்கப்பட்டன. மோடி அவற்றை ஒருங்கிணைத்து ஒரே அமைச்சரின் கீழ் தொடர்புடைய துறைகள் அனைத்தும் வரும்வகையில் அமைச்சர்களை நியமித்திருக்கிறார்.

உதாரணமாக, நித்தித்துறையும் கம்பெனிகள் விவகாரத் துறையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அவை அருண் ஜேட்லி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீர்வள அமைச்சரான உமாபாரதியிடம் கங்கை பாதுகாப்புத் துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகாரத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜிடம், வெளிநாடுவாழ் இந்தியர் நலன் துறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக அமைச்சர் அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவது குறையும்;  தொடர்புடைய துறைகளில் முடிவெடுப்பது அமைச்சர்களுக்கு எளிதாகும். பல அமைச்சர்களும் இரண்டுக்கு மேற்பட்ட துறைகளைக் கவனிக்கும் வகையில் தான் இந்த அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காகவே தினசரி 18 மணிநேரம் உழைக்கக் கூடிய திறன் உள்ளவர்களே அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மோடி கூறி இருக்கிறார்.

தவிர, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைக்கப்பட்ட உயரதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழு, அமைச்சர்கள் குழு ஆகியவற்றைக் கலைத்து உத்தரவிட்ட பிரதமர் மோடி, அந்தந்த அமைச்சகப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களே இனிமேல் முடிவெடுக்கலாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.  இதனால், முடிவுகள் எடுப்பதில் ஏற்படும் தாமதமும், முடிவெடுக்காமல் ஆறப்போடும் உத்தியும் தவிர்க்கப்பட்டுள்ளன.

இம்முடிவை பெரும்பாலான அதிகாரிகளும் ஊடகங்களும் வரவேற்றுள்ளனர். செயல்திறன் மிக்க ஒருவர் பிரதமரானால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர் நிரூபித்து வருகிறார்.

.

பெருந்தன்மையான அணுகுமுறை:

முன்னாள் பிரதமரை சந்திக்கும் பிரதமர் மோடி
முன்னாள் பிரதமரை சந்திக்கும் பிரதமர் மோடி

பிரதமராகப் பொறுப்பேற்ற மறுதினமே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த மோடி, முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இத்தகைய பெருந்தன்மையான அணுகுமுறைகளை கடந்த பத்தாண்டுகளாக்க் காண முடியாததால் தான் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அறிவித்த கங்கை- காவிரி இணைப்பு திட்டத்தை காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி எப்படி உதாசீனம் செய்தார் என்பதை நாடு மறந்திருக்காது.

‘முந்தைய ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்றும், பிரதமர் நரேந்திர மோடி,  அமைச்சரவை சகாக்களுக்கு பெருந்தன்மையுடன் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘முந்தைய காங்கிரஸ், ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட, ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் பெயர் மாற்றப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.அதேபோல மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு,  ‘ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் விமான நிலையத்தின் பெயரை என்.டி.ராமாராவ் விமான நிலையம் என மாற்றுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.

அமைச்சர்களின் இந்த கருத்துகளால் ஊடகங்களில் தேவையற்ற விவாதம் கிளம்பியது. உடனடியாக இதில் தலையிட்ட பிரதமர் மோடி, பெயர்மாற்ற விவகாரங்களில் அமைச்சர்கள் தங்கள் சக்தியை வீணடிக்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

பஞ்சாப், உ.பி, தமிழகம் போன்ற மாநிலங்களில், புதிய அரசு பதவியேற்றதும் முந்தைய அரசுக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ரத்து செய்வதையும், அவற்றின் பெயர்களை மாற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளன. முந்தைய மன்மோகன் சிங் அரசே கூட சுமார் 4,000 அரசுத் திட்டங்களுக்கு நேரு, இந்திரா, ராஜீவ் பெயர்களை சூட்டி, அரசியலில் விபரீதமான போக்கை வளர்த்துள்ளது.

ஆனாலும், மோடி அவற்றை மாற்றுவதில் நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். மோடி குறித்து பீதி கிளப்பிய பலரும் இப்போது என்ன சொல்வதென்று தெரியாமல் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

.

சுய கட்டுப்பாடின் இலக்கணம்:

பிரதமராக மோடி பதவியேற்பு
பிரதமராக மோடி பதவியேற்பு

அதிகாரபீடம் என்பது சுற்றிலும் ஜால்ராக்களை உருவாக்குவதாகவே எப்போதும் உள்ளது. புகழுரைகளை அள்ளிவீசும் ஓதுவார்கள் சூழ்ந்திருக்கும்போது ஆட்சியாளரின் கண்கள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. அப்போது, ஆட்சிக்கும் மக்களுக்கு இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. இதனை மோடி உணர்ந்திருக்கிறார் என்பது, தனது வாழ்க்கை வரலாற்றை பாடங்களில் சேர்க்கக் கூடாது என்ற அவரது அறிவுரையில் புலப்படுகிறது.

குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்,  பள்ளிப் பாடப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்தைச் சேர்க்க அம்மாநில அரசுகள் முடிவு செய்தன.  2015 கல்வியாண்டில், நரேந்திர மோடியின் வாழ்க்கைக் குறிப்புகள், வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இனி மோடி வாழ்க்கை வரலாறு கற்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசமா கூறுகையில், ‘மோடியின் பிறப்பு, அவரது குடும்பப் பின்னணி, அவரது பள்ளி நாட்கள்,  வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் முதல் பிரதமராக உயர்வடைந்தது வரை அந்தப் பாடப் புத்தகத்தில் அறிமுகம் செய்யப்படும்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்ப்பது என்ற இரு மாநில முடிவுகளையும் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக மோடி டிவிட்டர் மூலம் வெளியிட்ட செய்தியில், “சில மாநில அரசுகள், எனது வாழ்க்கைப் போராட்டத்தை பள்ளிப் பாடத்தில் சேர்ப்பது என முடிவு எடுத்துள்ளதாக செய்திகளைப் படித்தேன்.  வாழும் தனிநபர்களின் வாழ்க்கை வரலாறு, பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கூடாது என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இந்தியாவின் மகத்தான வரலாற்றில் எத்தனையோ வல்லவர்கள் நிறைந்திருக்கின்றனர். அந்த மாபெரும் மனிதர்களின் வாழ்க்கையைத் தான் இளம் சிறார்கள் படிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, மோடியின் வரலாற்றை பாடத்தில் சேர்க்கும் முடிவை குஜராத், ம.பி. மாநில அரசுகள் கைவிட்டுள்ளன. தேநீர் விற்பவராக இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த மோடியின் வாழ்வின் பல நிகழ்வுகள் இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், மோடியே கூறுவது போல, இந்தியா எண்ணற்ற வல்லவர்களின் நாடு. அவர்களின் வாழ்க்கையை சிறார்கள் படிக்க வேண்டும். இது, மோடியின் புகழுக்கு மயங்காத சுய கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. தான் எப்போதும் ஒரு சாதாரண ஸ்வயம்சேவகன் என்பதையும் அவர் நிரூபித்திருக்கிறார்.

.

கருப்புப்பண மீட்புக்கு முதல் நடவடிக்கை:

நீதிபதி ஷா
நீதிபதி ஷா

வெளிநாடுகளில் இந்திய செல்வந்தர்கள் பதுக்கிவைத்திருக்கும் பல்லாயிரம் கோடி கருப்புப்பணத்தை பாஜக அரசு மீட்கும் என்று தேர்தலின்போதே மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.  ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் மன்மோகன் சிங் அரசைக் கேட்டிருந்தது. அந்த அரசு அப்போதைக்கு கல்லுளிமங்கனாகக் காட்சி அளித்தது.  திருட்டுப் பொருளை மீட்க திருடனையே கோரினால் எப்படி காரியம் நடக்கும்? செயல்படாத மன்மோகன் சிங் அரசுக்கு  இதற்காக  உச்ச நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மோடியின் அரசு பதவியேற்றவுடனேயே உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே (மே 27) வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  அதன்படி,  கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அர்ஜீத் பசாயத் துணைத் தலைவர் பதவி வகிக்கிறார். வருவாய் உளவுப்பிரிவு இயக்குநர், போதைப்பொருள் தடுப்புத்துறையின் இயக்குநர், பொருளாதார உளவுப் பிரிவின் இயக்குநர்,  ‘ரா’ உளவுப் பிரிவின் இயக்குநர், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் இணைச் செயலர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் கருப்புப் பணம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்குகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள். கருப்புப் பண வழக்குகளின் நிலை குறித்து அவ்வப்போது உச்ச நீதிமன்றத்துக்கு இந்தக் குழுவினர் தகவலும் அளிப்பார்கள்.

இக்குழுவின் முதல் கூட்டம் ஜூன் 3-ல் நடைபெற்றுவிட்டது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான செயல்திட்டத்தை வடிவமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், கருப்புப்பணம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் விசாரணை நிலவரங்களை சமர்ப்பிக்குமாறு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) உள்ளிட்ட அமைப்புகளுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதேபோல, நிலக்கரித்துறை அமைச்சகத்தில் காணாமல்போன கோப்புகள் (ரூ. 1.86 லட்சம் கோடி மதிப்புள்ள நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பானவை) குறித்து விரைவில் முழு விவரமும் வந்தாக வேண்டும் என்று அந்த அமைச்சகத்தின் பொறுப்பாளரான பியூஷ் கோயல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.  நாட்டை அரிக்கும் ஊழல் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிக்கப்படும் என்பதற்கான நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் இவை.

.

அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்:

சகாக்களுடன் ஆலோசனையில் மோடி
சகாக்களுடன் ஆலோசனையில் மோடி

பிரதமர் பொறுப்பேற்ற ஏழாவது நாளில் தனது இல்லத்தில் அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, “மக்களுக்கு நல்லாட்சி தர மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

தில்லியில் தனது இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் 45 பேருடனும் ஜூன் -2ல் அவர்  ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது. இதில் நாட்டின் முன்னேற்றத்துக்கும், நல்லாட்சி தரவும் மத்திய அமைச்சர்கள் 45 பேரும், மத்திய அமைச்சகங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் காலவரையறையை நிர்ணயித்து பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றும்  அமைச்சர்களிடம் மோடி அறிவுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அதிகரிப்பது, முதலீட்டாளர்களை எப்படி ஈர்ப்பது,  அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது குறித்த  கருத்துகளை அமைச்சர்களுடன் மோடி பகிர்ந்து கொண்டார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தன்னிடம் அறிக்கை அளிக்குமாறும் அமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டார்.அரசு நிர்வாகம் தொடர்பான தங்களது ஆலோசனைகளை  அமைச்சர்கள் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கேபினட் அமைச்சர்கள், தங்களது இணையமைச்சர்களை சேர்த்துக்கொண்டு அவர்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் தான் தொடர்ந்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற மே 26 முதல் ஜூன் 2 வரையிலான ஒரு வாரத்திலேயே, எதிர்காலத்தில் மாபெரும் விருட்சமாகும் மரத்தின் இளங்குருத்துப் போன்ற பல நல்ல காட்சிகள் தோன்றியுள்ளன. நாட்டுநலனையே கருத்தாகக் கொண்ட, தேசபக்தியும் அர்ப்பண உணர்வும் மிகுந்த மோடியின் தலைமையில் நாடு வெகுவிரைவில் முன்னேறும் என்பதற்கான கட்டியமாகவே இவற்றைக் காண முடிகிறது.

15 Replies to “மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!”

  1. லஞ்சம் வாங்கி சம்பாதித்த பணத்தை சட்டதிற்கு புறம்பாக வேட்பாளர்களுக்கு கொடுத்து ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்த கட்சியை தள்ளியே வைத்து இருந்தால் நல்லது, வாழ்க ஜனநாயகம்.

  2. looks like a good beginning. Hope it continues. we wish Sri Modi all the best

  3. உண்மையான பதிவு. இந்தியா வல்லரசாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை

  4. thiru modi avarkalin aatchi thodakkam nandraka ullathu. mandthirku santhosamakavum ullathu. nallapadiya aala ellam valla iraivanai prarthikkiren. nandri

  5. ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் மோடியின்

    யோசனைகளுக்கு ஊடகங்களும் மக்களும் உறுதுணையாக நின்று

    இந்தியாவை உலக நாடுகள் முன் சிறந்த நாடாக திகழ முயர்சீக்க வேண்டும்

  6. மோதி சர்க்கார் தடதடவென ஒரு நிமிஷம் கூட வீணாக்காது பணி செய்து வருகிறது. வாழ்த்துக்கள்.

    முகநூல் பதிப்பில் சத்ரபதி சிவாஜியையும் ஸ்ரீ பாளா சாஹேப் தாக்ரே அவர்களையும் அவமானகரமாகச் சித்தரித்ததற்காக 24 வயது மதிக்கத்தக்க ஒரு முஸல்மாணிய சஹோதரரை ஹிந்து ராஷ்ட்ரவாதி சேனா என்ற அமைப்பைச் சார்ந்ததாகச் சொல்லப்படும் நபர்கள் அடித்துக்கொன்றுள்ளார்கள் என்பது ஒரு நிந்திக்கப்பட வேண்டிய விஷயம். மஹாராஷ்ட்ரா சர்க்கார் இப்படிக்கொலையில் ஈடுபட்ட வெறியர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.

    மஹாராஷ்ட்ரத்தில் நிகழ்ந்துள்ளது என்றாலும் மோதி ஆட்சி செய்யும் சமயத்தில் ஹிந்துஸ்தானத்தில் நிகழக்கூடாத ஒரு நிகழ்வு.

  7. உயிரிழந்த இஸ்லாமிய சஹோதரரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் மகனுடைய கொலைக்கு இறையருளால் உரித்த நீதி விரைவாகக் கிட்டுவதாக.

  8. மதிப்பும், மரியாதைக்கும் உரிய எம் பாரத பிரதமருக்கு…,, அவசர கால நடவடிக்கையாக செய்ய வேண்டிய பணிகளை உங்களின் கவனத்திற்கு..,,,

    # பெண்களை காளியாகவும், அம்மனாகவும் பூஜை செய்த இந்த புண்ணிய திரு நாட்டிலா மணிக்கொரு கற்பழிப்பு செய்திகள் எம் காதை துளைக்கின்றன….,,,,

    காரணம்:-
    ஆங்கிலேயனுடைய திட்டத்திலே மிக அபாயமானது

    “ஒரு நாட்டினை அழிக்க அதன் கலாச்சாரத்தை அழித்தாலே
    அந்த நாடு ஆட்டம் கண்டுவிடும்”
    என்ற கொள்கை தான்.

    நாட்டை கொள்ளை அடிக்க அவன் கடை பிடித்த அந்த கலாச்சார சீரழிவினை, நாமும் அதன் கொடுரம் அறியாமல் நாகரிகம், வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயர்களை சூட்டி திரைபடத்தில் ஆபாசம், பேஷன் ஷோக்கள் நடத்தி நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு ஆங்கிலேயனுடைய கனவினை நிறைவேற்றிகொண்டிருகிறோம்.

    இந்த திரைப்பட ஆபாசங்களையும், கவர்சிகளை மக்களின் காம, குரோதங்களை தூண்டி விட்டு பணம் பார்க்கும் பத்திரிக்கை துறை போன்ற வற்றை நாம் சுட்டிகாட்டி திருத்தாத வரையில்.,,,, என்னும் நேற்று டெல்லி, இன்று உத்தரபிரதேசத்தில், நாளை நம் வீடு வரை வந்துவிடும்…,,,,

    ஐயா, இதனை நாளாக தூங்கி கொண்டிருக்கும் சென்சார் போர்டை தட்டி எழுப்பிவிடுங்கள், ஆபாசத்தை பரப்பும் சினிமா காட்சிகளை வெட்டி எரியட்டும்.,,

    இனியாவது என் அன்னை, சகோதரிகளுடன் அமர்ந்து பார்க்கும் திரைப்படங்கள் வெளிவரட்டும்.,,,

  9. ராஜாராம்;
    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.காலத்தின் கோலம் இந்த tamilhindu.com வெப் சைடிலேயே அரை குறையாக மார்பைக் காட்டிக் கொண்டு இருக்கும் விளம்பத்தை போடுகிறார்கள்.இதுவா நம் கலாசாரம்?முதலில் இதை நிறுத்தட்டும்.
    ஆசிரியரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

  10. அன்புள்ள Muthukumar on June 7, 2014 at 9:19 pm அவர்களுக்கு,

    தமிழ்ஹிந்து முற்றிலும் லாப நோக்கற்று நடத்தப் படும் தளம். எனவே தளத்தில் எந்த விதமான விளம்பரங்களும் கிடையாது. நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் உங்களது browser காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் reader வழியாக இத்தளத்தைப் படிப்பதாலோ வருபவையாக இருக்கும்.

  11. உலகினுக்கு கேடு ஏற்படும் பொழுது மக்களைக்காப்பற்ற நான் தோன்றுவேன் என்று கண்ணன் சொன்னதைப்போல தற்போது நம் நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டவரே உயர்திரு நரேந்திர மோடி என்ற உத்தமர்.
    அவர் கரங்களை வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியனும் சூளுரை எடுத்துக்கொண்டு நன் முறையில் செயலாற்ற வேண்டும். அப்பொழுது இந்தியா வல்லரசாகவும் உலகின் முதன்மை நாடாகவும் மிளிர்வதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது .
    வாழ்க மோடி என்ற அற்புத சக்தி! வாழ்க பாரத நாடு!!!

  12. ஆசிரியர் குழுவுக்கு ;
    மன்னிக்கவும்.
    இந்த விளம்பரங்களை தடுக்க ஏதேனும் வழி இருந்தால் தெரிவிக்கவும்.

  13. முறையான திட்டமிட்ட தேர்தல் ப்ரசாரத்தின் மூலமும் முட்டாள் காங்க்ரஸ் ப்ரசாரத்தை முறியடித்ததன் மூலமும் கேந்த்ரத்தில் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் ஆட்சியைப் பிடித்துள்ளார்.

    இதையடுத்து நிகழ இருக்கும் மாகாணத் தேர்தலில் அயராது பாடுபட பாஜக கார்யகர்த்தர்களுக்கு அறைகூவலும் விடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அசத்தலான ஆரம்பத்தில் துவங்கிய சர்க்கார் சறுக்கல்களையும் சந்தித்துள்ளது. அதுவும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய சறுக்கல்கள்.

    ஸ்ரீ மோதி அவர்களின் நேர் பார்வைக்கு உட்பட்ட ராஜதானி தில்லியில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் மின்சாரத்தொல்லையும் உயர்ந்து கொண்டே செல்லும் வெப்பமும் பொதுஜனங்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது. அதே சமயம் அருகாமையிலுள்ள என்ஸி ஆர் பகுதிகளான குர்காவ், நொய்டா, காஸியாபாத், ஃபரீதாபாத் பகுதிகளில் — மாற்று சர்க்கார் ஆட்சி செய்யும் பகுதிகளில் நிலைமை இந்த அளவு மோசம் இல்லை.

    வெக்கையின் போது அடிக்கும் ஆந்தி எனும் பேய்க்காற்றால் பல ட்ரான்ஸ்மிஷன் டவர்கள் விழுந்து பழுதடைந்து உள்ளது என்பதும் அவை பல வருஷங்களாக மரம்மத்து செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இவை முன்னமேயே எதிர்பார்க்கப்பட்டு திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். மின்சாரம் இல்லாததால் தண்ணீர் சப்ளையும் டமாடோல். சொல்லொணா தொல்லையில் பொதுஜனங்கள். இரண்டு வாரங்கள் ஆகும் என சம்பந்தப்பட்ட இலாகாவின் மந்த்ரி ஸ்ரீ பீயூஷ் கோயல் சொல்லியிருக்கிறார். அதுவரை காங்க்ரஸ், ஆப்பு கட்சி தில்லித் தெருக்களில் தமாஷாவை அரங்கேற்றும். இதையெல்லாம் கவர்னர் நஜீப் ஜங்க் ஏன் எதிர்பார்க்கவில்லை?

    ராணுவ தளபதி ஜெனரல் சுஹாக் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட அஃபிடவிட் சர்க்கார் முகத்தில் கரி பூசப்பட்ட செயல் என்றால் மிகையாகாது. காலம் கடந்து ஸ்ரீ அருண் ஜெட்லி அவர்கள் யார் இப்படி ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளது என்று விசாரிக்க முற்படுகிறார். AVOIDABLE GAFFE.

    THIS IS RATHER A WARNING TO GOVT. THE BUREAUCRACY IN DELHI OVER THE PAST FIVE SIX DECADES HAS ALREADY BEEN CONGRESSISED. BEFORE EVEN THINKING OF ANY MEANINGFUL REFORMS, SOONER THAN LATTER, GOVT SINCERELY TAKES STEPS TO MODI FY THE CONGRESSISED BUREAUCRACY. THIS MAY LOOK AS JUST ANOTHER OUT OF THE WIND CONSPIRACY THEORY. BUT THE BUREAUCRACY IS FULL OF CCONGRESS LANDMINES. UNLESS AND UNTIL THE GOVT OF THE DAY PURGE THE WEEDS, THE GAFFES WOULD BE POURING IN DAY IN AND DAY OUT. CHECK THE MEANCE AT THE EARLIEST. GOOD LUCK. ALL CAPS MESSAGE WHICH IS SUPPOSED TO BE SHOUTING IS POSTED INTENTIONALLY AS SUCH. GOOD LUCK TO THE GOVT OF THE DAY.

  14. now a days education institution’s are like business institution’s. so the modi government should separate business and education. in india especially tamilnadu education department is collecting money from the students, and appointment so corruption should be abolish. every government vacancy should fill up by efficient people, poor will become poorer, richer will become richer, so the condition should be change by modi government i believe 100%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *