காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக் கிளப்பி உள்ளது. 2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்தி தான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் நட்வர் சிங். இதுவரை, தேடிவந்த பிரதமர் பதவியை மறுத்த தியாகியாக, பாரத தேசத்தைக் காக்கவென்றே இத்தாலியில் பிறப்பெடுத்துவந்த அன்னையாக  காங்கிரஸ்காரர்களால் புகழ் பாடப்பட்டுவந்த சோனியா அம்மையார், உயிரச்சத்திற்குப் பயந்தே அந்தப் பதவியை மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

புயலைக் கிளப்பும் நட்வரின் சுயசரிதை
புயலைக் கிளப்பும் நட்வரின் சுயசரிதை

“சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர் பதவியை மறுக்கவில்லை. அவர் இந்தியப் பிரதமராக தயாராகவே இருந்தார்.  எனினும் அப்போது சோனியா பிரதமராவதை ராகுல் காந்தி விரும்பவில்லை. தனது பாட்டி இந்திரா காந்தி,  தந்தை ராஜீவ் காந்தி ஆகியோருக்கு ஏற்பட்டது போன்ற துயரமான முடிவு தனது அம்மா சோனியாவுக்கும் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் தான் ராகுலின் எதிர்ப்புக்கு காரணம். ஒரு மகனாக சோனியா பிரதமராவதை தான் விரும்பவில்லை என்றும் ராகுல் கூறினார். அதனால்தான் சோனியா பிரதமர் பதவியை ஏற்கவில்லை” என்று புதிய குண்டை வீசி இருக்கிறார் நட்வர் சிங்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் தனது சுயசரிதையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் நட்வர் சிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது சுயசரிதை பரபரப்பாக விற்பனையாக நட்வர் சிங் செய்துள்ள விளம்பர உத்தியே இது என்று மன்மோகன் சிங் பதில் அளித்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன் சோனியாவுக்கு நல்லுறவு இருக்கவில்லை என்பதையும் பகிரங்கப்படுத்தி இருக்கிறார் நட்வர் சிங். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. ஆனால், அதிகார மையத்தில் புழங்கிய ஒருவரின் வாயிலிருந்து வரும் வாக்குமூலத்திற்கு அதிரடிப் புயலைக் கிளப்பும் சக்தி இருக்கவே செய்கிறது.

தவிர, ஊழலில் கரை புரண்ட காங்கிரஸ் கட்சி தனது நேர்மையை நிரூபிக்க பலிகொடுத்த ஆடு தான் நட்வர் சிங் (இராக் நாட்டுடனான உணவுக்கு எண்ணெய் ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேட்டால் 2005 டிசம்பரில் அமைச்சர் பதவியை இழந்தார் நட்வர் சிங்).. எனவே புகைச்சலில் காரநெடி அதிகமாகவே இருக்கிறது. அவரது சுயசரிதையின் பெயர் ‘ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப்’. உண்மையில் காங்கிரஸின் கயமைகளைத் தோலுரிக்க இந்த ஒரு நூல் போதாது. சோனியாவும் தன் பங்கிற்கு சுயசரிதை எழுதப் போகிறாராம்.  மன்மோகனும் கூட எழுதலாம்.

ஆயினும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த பல தலைவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருப்பது புதிராக இருக்கிறது. பாஜகவை சீண்டுவதற்காக செய்தியாளர்களை சந்திக்கவென்றே நியமிக்கப்பட்டிருந்த தில்லி வழக்கறிஞர் கபில் சிபல் ஏளனமாகப் பேசுவதில் வல்லவர். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை; மணிஷ் திவாரியையும் காணோம்; அபிஷேக் சிங்வி, திக்விஜய் சிங், ஜெயந்தி   உள்ளிட்ட பல வாயாடி வித்தகர்களும் மௌனமாகிவிட்டனர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சோனியாவுக்கு சலாம் போட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொண்டு பதவி சுகம் அனுபவித்த பலர் இப்போது கட்சித் தலைமையகம் பக்கமே வருவதில்லை. இப்போதுதான் தெரிகிறது, காங்கிரஸ் கட்சியை இதுவரை ஒன்றுசேர்த்து வைத்திருந்தது அதிகாரப்பசி மட்டுமே என்பது.

அதனால் தான் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தேசியத் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். குறிப்பாக ராகுல் காந்திக்கு எதிராக பல தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டத் தயாராகிவிட்டார்கள். 3 மாதங்களுக்கு முன்னிருந்த நிலைமையே வேறு!

தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பானது. ஆனால் ஒரே படுதோல்வியில் காங்கிரஸின் எதிர்காலமின்மை பூச்சாண்டியாக அக்கட்சியினரை மிரட்டுகிறது. அதனால் தான் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் முதல்வர்களுக்கு எதிராக பூசல் கிளம்பி இருக்கிறது. மகாராஷ்டிராவில் நாராயண் ரானே, ஹரியானாவில் சௌத்ரி பீரேந்தர் சிங், அசாமில்  ஹிமந்தா பிஸ்வ சர்மா தலைமையிலான 40 எம்எல்ஏக்கள் ஆகியோரின் கலகக்குரலால்  காங்கிரஸ் தலைமை ஆடிப்போயிருக்கிறது. கர்நாடகாவில் சித்தராமையாவுக்கும், இமாச்சலப் பிரதேசத்தில் வீரபத்ர சிங்கிற்கும் கூட எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் குத்துவெட்டு துவங்கிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடனான காங்கிரஸின் கூட்டணி முறிந்துவிட்டது. வரும் தேர்தலில் அங்கு 4 முனைப்போட்டி உறுதி. பாஜக முதல்முறையாக அங்கு ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் கனிந்து வருகிறது. ஜார்க்கண்டிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி விரைவில் முறியலாம்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாம், மகாராஷ்டிரா, பிகார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இப்போதே நிலைகுலைந்து போயிருக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கட்சி மாறும் காட்சிகளை வரும் நாட்களில் அதிகமாகக் காண முடியும். மூழ்கும் கப்பலில் தங்கியிருக்க எவரும் விரும்புவதில்லை.

லோக்சபா தேர்தலில் அசாமில் பாஜக பெற்ற பெரும் வெற்றி, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகளுக்கு பூகம்பம் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனை- பாஜக கூட்டணிக்கு கிடைக்கப்போகும் வெற்றியைத் தடுக்க முடியாது என்பதை காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இப்போதே புரிந்துகொண்டுவிட்டது.

இந்நிலையில் புதிய அரசியல் சாகசத்தை பிகார் மாநிலத்தில் அரங்கேற்றியுள்ளது காங்கிரஸ். அங்கு பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் பாஜக கூட்டணியின் செல்வாக்கை முறியடிக்க, நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது காங்கிரஸ். அக்கட்சிகளுக்கும் பாஜகவை எதிர்க்க வேறு துணையில்லை என்பதால் தங்கள் முன்பகையை மறந்து, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கீட்டில் காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளன.

Dinamani Cartoon 30.07.14
நன்றி: திரு. மதி/ தினமணி- 30.07.2014

பிகாரில் நிலவிய நிதிஷ்- லாலு மோதல் அனைவரும் அறிந்தது. லாலுவின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கியவர் நிதிஷ்குமார் தான். பாஜகவுடன் அவர் ஏற்படுத்திய கூட்டணியால் தான் அங்கு லாலுவின் காட்டு தர்பாருக்கு எதிரான மக்கள்சக்தியை ஒன்றுதிரட்டி, ராப்ரிதேவியை (லாலுவின் மனைவி) வீட்டுக்கு அனுப்ப முடிந்தது. நாட்டின் பிற மாநிலங்கள் பலவகையில் முன்னேறிவந்த சூழலில் பிகார் இன்னமும் 40 வருடங்கள் பின்தங்கியிருக்கிறது. அதை மாற்ற நிதிஷ்குமார்- சுஷீல்குமார் மோடி கூட்டணி பெரும்பாடுபட்டது. அதற்கு வித்திட்டவர் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அவர்தான் நிதிஷ்குமாரை பிகார் கூட்டணிக்கு தலைமை தாங்க அனுப்பிவைத்தார். அதையெல்லாம் மறந்துவிட்டார் நிதிஷ்.

அதனால் தான் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து மோடியை எதிர்ப்பதாகக் காரணம் கூறி விலகினார் நிதிஷ். அந்த முடிவு எத்துணை தவறானது என்பதை அவர் தேர்தல் முடிவுகளில் உணர்ந்திருப்பார். ஆனால், அதனால் அவர் படிப்பினை பெற்றதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வராக்கி, பிரதமர் நரேந்திர மோடியை அலுவல்ரீதியாகச் சந்திப்பதிலிருந்து தன்னைத் தவிர்த்துக்கொண்ட நிதிஷ்குமார், இதுவரையிலும் யாரை எதிர்த்து அரசியல் நடத்தினாரோ அவர்களுடனேயே கொஞ்சிக் குலாவத் தயாராகி இருக்கிறார். நிதிஷின் வீழ்ச்சி மிகவும் செங்குத்தானது.

அரசியல் கணிதத்தில் கூட்டல் கழித்தல் கணக்குகள் நாம் நினைப்பது போல முடிவுகளைத் தருவதில்லை என்பதை காங்கிரஸோ, நிதிஷோ, லாலுவோ அறியாமல் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கொருவர் முரண்பட்ட மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது, அக்கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் குலைக்கும் என்பதை வரும் சட்டசபைத் தேர்தலில் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

போதாக்குறைக்கு ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியுடனான கூட்டணியும் முன்னாள் துணை முதல்வர் சுஷீல்குமார் மோடியின் செல்வாக்கும், பிகார் அரசியலில் பாஜக கூட்டணியை வலுவாக வைத்திருக்கின்றன. எதிரிகள் சேர்ந்திருப்பதால், அவர்களை எதிர்க்கவும் அவர்களின் முகத்திரையைக் கிழிக்கவும் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தவிர, இடதுசாரிக் கட்சிகள் (சிபிஎம், சிபிஐ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி) ஆகியவை இணைந்து  ‘மாபெரும் கூட்டணி’யை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருக்கின்றன. இக்கட்சிகள் மூன்றும் இதுவரை தனித்தனியே காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி கண்டிருந்தவை. கூட்டணி பேரத்தில் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கருதும் இக்கட்சிகள் தனியே அணி அமைத்திருப்பது, காங்கிரஸின் கனவுகளை கூடுதலாகச் சிதைக்கும்.

இவ்வாறாக தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை புயலில் சிக்கிய பாய்மரக் கப்பல் போலத் தள்ளாடுகிறது. துடுப்புகளும் உடைந்துபோய், மாலுமிகளும் வேறு கப்பல்களுக்குத் தாவும் நிலையில் தலைமை மாலுமி சோனியாவும் தளபதி ராகுலும் என்ன தான் செய்ய முடியும்? சுயநலமொன்றே பின்னிப் பிணைத்திருந்த, அதிகார அரசியலை மையமாகக் கொண்ட காங்கிரஸுக்கு இது ஒரு சோதனைக்காலம்.

வரும் மாதங்களில் மத்திய அரசால் எடுக்கப்படும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளும், தொடுக்கப்படும் வழக்குகளும் காங்கிரஸ் கட்சியின் நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம். உள்கட்சி ஜனநாயகம் இல்லாத கட்சிக்கு-  சம்பாத்தியத்தையே குறிக்கோளாகக் கொண்ட தலைவர்களால் நடத்தப்பட்ட கட்சிக்கு – என்ன நடக்குமோ அதுதான் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு நடக்கிறது.

அதிகார இடைத்தரகர்களின் கட்சியாக எப்போது காங்கிரஸ் மாறியதோ, சோனியா என்ற தனிநபருக்கு ஜால்ரா போட எப்போது நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் துணிந்ததோ, அப்போதே அதன் படுகுழி நோக்கிய பயணம் துவங்கிவிட்டது. இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவுக்கும் பாடம் இருக்கிறது.

.

.

12 Replies to “காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி”

  1. The hidden histories of the Real patriots should be exposed to the common people.It is very essential that B.J.P top leaders to recollect and recognise the sacrifice of the basic Sangh Parivar and party workers.

  2. பெரிய அக்கா அவர்கள் பிரதமர் பதவி ஏற்காமல் 2004- லே விலகிக்கொண்டது புத்திசாலித்தனமான காரியம் தான். ஏமாளி பொம்மை மண்ணை அந்த நாற்காலியில் உட்காரச்செய்துவிட்டு, எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் பத்துவருடம் பிரதமரை ஆட்டுவித்த புத்திசாலித்தனம் யாருக்கும் வராது. பிரதமர் வீட்டிலும், அலுவலகத்திலும் வைக்கப்படிருந்த ஒட்டுக் கேட்கும் கருவிகளில் ஒரு சத்தமும் கேட்கவில்லை என்று எல்லா பத்திரிக்கைகளும் நக்கல் அடிக்கின்றன. மண்ணு வாயை திறந்து ஏதாவது பேசினால் தானே பதிவாகும் ? நிச்சயம் பெரிய அக்கா பிரதமர் பதவிக்கு வந்திருந்தால் , பல வழக்குகளில் சிக்கி பதவியை இழந்து சிறைக்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்திருக்கும். பொம்மையை பிரதமர் நாற்காலியில் அமர்த்தி, இந்திய அரசியல் சாசனத்தையே கேலிப் பொருளாக்கிவிட்ட காங்கிரஸ் குரங்குகளுக்கு இந்தப் பிறவியில் மக்களிடம் மன்னிப்பு கிடைக்காது. காங்கிரஸ் ஒழிக , ஜனநாயகம் வாழ்க.

  3. An Unknown Man — Thanks. here is the Tamil version of the same news….

    20 வயது ஆசிரியையை கடத்தி, மதமாற்றம் செய்து பலாத்காரம் செய்த கும்பல்.. உ.பியில் பதட்டம்

    மீரட்: உ.பியில் தொடர்ந்து பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் கொதிப்படைந்து வருகின்றனர். மீரட் நகரில் 20 வயது ஆசிரியை ஒருவர், கடத்திச் செல்லப்பட்டு பலரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மீரட்டின் கர்கடா பகுதியைச் சேர்ந்தவர் இந்த ஆசிரியை. இவரை கடத்தியவர்கள் கட்டாய மதமாற்றத்தையும் செய்ததாகவம் சர்ச்சை எழுந்துள்ளது.இதையடுத்து மீரட் மற்றும் அண்டை மாவட்டங்களில் போலீஸார் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போலீஸார் பெருமளவில் பதட்டமான பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மதரசா அமைந்துள்ள சர்வா கிராமத்தில், போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட ஆசிரியையை 3 நாட்கள் முசாபர்நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து அக்கிரமம் செய்துள்ளது அந்தக் கும்பல். கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தப்பி வந்த அந்த ஆசிரியை தனது வீ்ட்டை அடைந்து நடந்த அக்கிரமத்தை விவரித்தார். தன்னை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீஸுக்குத் தகவல் போனது.முன்னதாக இந்தப் பெண்ணை மதரசாவைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதசரா நிர்வாகி ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கிராமத் தலைவர் நவாப் கான் மற்றும் மதரசா அதிகாரி சன்னாவுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. அதில் 2 பேர் கைதாகி விட்டனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.சம்பந்தப்பட்ட மதரசாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியையாக இவர் இருந்து வந்தார். நடந்தது குறித்து அவர் கூறுகையில், கிராமத் தலைவர் மற்றும் சன்னாவுல்லா, இன்னும் சிலர் தன்னை ஹபூர் மாவட்டத்தில் உள்ள மதராசவுக்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து தன்னை மதமாற்றம் செய்தனர். பின்னர் பெயரையும் மாற்றினர். அதன பின்னர் முசாபர்நகருக்குக் கொண்டு சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று கூறியுள்ளார்.கடத்தல், கட்டாய மதமாற்றம், பாலியல் பலாத்காரம் ஆகியவை காரணமாக மீரட், ஹபூர் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.

  4. நட்வர்சிங் ஒரு உத்தமர் அல்ல. அதே போன்று பிஜேபி மற்றும் காங்கிரசு கட்சிகளும் யோக்கியமான கட்சிகள் அல்ல. இரண்டுமே ஊழலுக்கு பேர் போன கட்சிகள் தான். ஒரே தளத்தின் இரண்டு புள்ளிகள் அவ்வளவே. காங்கிரசில் கல்மாடி என்றால் பிஜேபிக்கு ஒரு பிரமோத் மஹாஜன். ஆனால் இங்கே உற்று நோக்கத் தக்க விடயம் ஒன்றுண்டு. ஒருவர் பதவிக்கு வர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நிர்ணயிப்பது மக்கள் மட்டுமே அல்ல. புவிசார் அரசியலில் பல்வேறு சக்திகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  5. Are these type of incidents happen after new govt only? Were all the previous incidents like these suppressed by department?

  6. Hello Mr. “An Unknown Man”,
    I see only one link. Please give the other link, too.
    A good gesture was rudely rebuked. Ensuing fight resulted in ….
    I understand. I know Indian media cannot be trusted to give proper, balanced news. If the fight is between two Hindu groups, or between Dalits and other Hindu groups, the media would be loud in proclaiming the inequalities of Hindu religion…
    The politians are using different sons of India to lead them astray. Let us try to be beacon of friendship and educate misunderstood bretheren.

  7. Arizonian,

    If you’ve read Indian history, you’ll be aware that our ‘good gesture’ has always been rudely rebuked – for centuries. It’s sad that we still haven’t learned the lesson. If 1000 years of brutal slavery can’t wake up Hindus, nothing will.

    PS: I posted two comments above – with two different links. You can check it out above.

  8. காங்கிரஸை சுதந்திரத்திற்குப்பின் காந்தி கலைக்கச் சொன்னார் அவரின் கனவு இப்போது நிறைவேறப் போகிறதோ எனத் தோன்றுகிறது தற்போதைய காங்கிரஸாரின் நடவடிக்கை 1947லிலேயே கலைத்திருந்தால் தேசம் தப்பித்திருக்கும் காலம் கடந்த செயல் என்றாலும் தேசத்திற்கு நல்லகாலம் பிறந்திருப்பதற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்திருக்கிறது பதவி ஒன்றே குறிக்கோள் என இணைந்த கூட்டத்திடம் நல்லதை எதிர்பார்க்க ஒன்றுமில்லை சுதந்திரத்திற்கு பாடுபட்ட காங்கிரஸ் என மக்கள் நினத்தால் அது தவறு தற்போது இருப்பது இ[ணைந்தவர்கள்] காங்கிரஸ் இது கொள்கைக்காக இணைந்த கூட்டமல்ல கொள்ளைக்காக இணைந்த கூட்டம்

  9. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 10 சட்டப்பேரவைகளிலும், பாஜக கூட்டணி 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. முக்கியமாக இந்த இடைத்தேர்தல்களில் நம் மக்கள் மாநில ஆளுங்கட்சிகளுக்கே அதிக வாக்களித்துள்ளனர். எப்போதுமே சட்டசபை இடைத்தேர்தல்களில் மாநில ஆளுங்கட்சிக்கு வாக்களிப்பதே வழக்கம். மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்தால் தான் எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில் எஞ்சிய பதவிக்காலம் மாநில சட்டசபைக்கு இருப்பதால், எதிர்க்கட்சிக்கு ஓட்டுப் போடுவதால் ஒரு பலனும் கிடைக்காது. மாநில வாரி வாக்குகள் இந்த 18 தொகுதிகளில் வருமாறு:-

    மாநிலம் பாஜக கூட்டணி காங்கிரஸ் கூட்டணி

    ம பி 236997 163875

    பஞ்சாப் 101432 78072

    கர்நாடகம் 185165 243659

    பீகார் 477962 563294

    மொத்தம் 10,01,556 10,48,900

    பாஜக/ பாஜக கூட்டணி ஆளும் ம பி , பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் அது கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ்/ காங்கிரஸ் கூட்டணி ஆளும் பீகார், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குக்களைப் பெற்றுள்ளது.

    இதில் சில முக்கிய விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது, தனியாகப் போட்டியிட்ட தேவகவுடாவின் கட்சி, இந்த முறை இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பதாக நாடகம் ஆடி, மறைமுகமாக காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கியது. அப்படி இருந்தும், இந்த இடைதேர்தலில் பாஜக கர்நாடகத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுவிட்டது.

    சென்ற 2013- ஆம் ஆண்டில் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற சிக்கொடி சடலகா சட்டப்பேரவை தொகுதியில், தேவகவுடாவின் மறைமுக ஆதரவு இருந்தும் காங்கிரசின் வாக்கு சுமார் பத்தாயிரம் குறைந்துள்ளது. ஆனால் பாஜக தோல்வி அடைந்தபோதும், சென்ற சட்டசபை தேர்தலை விட,
    வாக்கு சுமார் 35000 அதிகரித்துள்ளது.

    பீகாரில் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தனியாகப் போட்டியிட்ட ஊழல் லல்லு, ஊழல் காங்கிரஸ் மற்றும் செக்குலர் மோசடி நிதீஷ் மூன்று தீய சக்திகளும் இந்தமுறை ஒன்று கூடி, கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோதும், பாஜக நாலு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது.மேலும் பீகாரில் சென்ற பாராளுமன்ற தேர்தலை விட , இந்த இடைத்தேர்தலில் சுமார் 20 சதவீதம் வாக்குப்பதிவு குறைவு ஆகும். இதிலிருந்து என்ன தெரியவருகிறது என்றால், காங்கிரசின் ஊழல் கூட்டாளிகளும் , செக்குலர் மோசடி நிதீஷ் குமாரும் , தேவகவுடாவும், கைகோர்த்தும் கூட, பாஜக எட்டு தொகுதிகளில் வெற்றிபெறுவதை தடுக்கமுடியவில்லை என்பது தான். இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை வழங்கும் வழக்கமான வாக்காளர்கள், பீகாரில் மொத்தம் 10 இல் பாஜகவுக்கு நாலு இடம் கொடுத்துள்ளதால், நிச்சயம் வரும் சட்டப்பேரவை தேர்தல்களில் பீகாரில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான பாஸ்வானும் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *