ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

shiva_paravati_with_rishisசிவாகம மரபில் தீக்ஷை என்பது மிக முக்கியமான கிரியை ஆகும். ஜாதி மற்றும் வருணாச்சிரம பேதங்களுக்கு அப்பால் யாவரும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக விளங்கும் இந்த தீக்ஷைகளை சைவசமயிகள் யாவரும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சிவாகமங்கள் வலியுறுத்துகின்றன.

இதே போல, வைஷ்ணவர்களுக்கும் பாஞ்சராத்திரதீக்ஷை போன்றன இருப்பதாகவும் அது மிகவும் வலியுறுத்தப்படுவதாகவும் தெரிகின்றது.

பொதுவில் உபநயனம் போன்ற சடங்குகள் குறித்த சில வருணத்தாராலேயே அதிகம் பின்பற்றப்பட்டு, அவர்களுக்குரியதாக காட்டப்பட்டு விட்ட சூழலில் தீக்ஷை என்பது அனைவருக்கும் உரியதாக சிறப்பாக கைக்கொள்ளப்படுவது விசேடமானதாகும்.

சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம். எனவே, இத்தீட்சா மரபுகளை நன்கு ஆராய்ந்து கற்றறிகின்ற போதே இதிலுள்ள விளக்கங்களை அறிந்து கொள்ள முடியும்.

சைவாகம செம்பொருளை யாவரும் அறியும் வண்ணம் விரித்துரைத்த பெருமை பதிணெண் பத்ததிகாரர்களுக்கு உரியது. அதில், அகோரசிவாச்சார்ய பத்ததியும் முதன்மையானது. அந்த அகோர சிவாச்சார்யார் தொகுத்த பத்ததிக்கிரமமே பெருமளவில் சைவாகம தீக்ஷைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகின்றது.

நூல்கள் பேசும் தீக்ஷைகள் பல. மானசதீக்ஷை , நயனதீக்ஷை , ஸ்பரிச தீக்ஷை வாசகதீக்ஷை சாஸ்திரதீக்ஷை, யோகதீக்ஷை, ஒளத்திரி தீக்ஷைபோன்ற ஏழு வகையான தீக்ஷைகள் பொதுவாகப் பேசப்படுகின்றன. இந்த ஆகமங்கள் சொல்லும் முக்கிய தீக்ஷைகள் யாவும் ஒளத்திரி தீக்ஷையின் பாற்படுவன.

இதே போலவே, யாகம், கும்பம் போன்றன இன்றிச் செய்யும் தீக்ஷை நிராதார தீக்ஷைஎன்றும் அவற்றோடு கூடிச் செய்யும் தீக்ஷை சாதாரதீக்ஷை என்றும் அழைக்கப்படும். சிவாகமம் பேசும் சமயாதி தீக்ஷைகள் போன்றன சாதாரதீக்ஷையாகும்.

இவ்வாறே பீஜாட்சரங்களுடன் கூடிய மந்திரோபதேசத்தோடு வழங்கப்படும்  தீக்ஷை சபீஜதீக்ஷை என்றும் பீஜாட்சரமின்றி மந்திர உபதேசம் செய்யும்  தீக்ஷை நிர்பீஜதீக்ஷை என்றும் குறிப்பிடுவர். பொதுவில் பெண்களுக்கு நிர்பீஜதீக்ஷையே வழங்குவது வழக்கம்.

சிவாகம மரபில் சமய தீக்ஷை, விசேடதீக்ஷை, நிர்வாண தீக்ஷை என்று மூன்று வகை தீக்ஷைகளும் அதற்கு மேலே சிவாச்சார்ய அபிஷேகம் என்கிற நான்காவது தீக்ஷையும் முக்கியமானவை. இவைகள் செய்யப்படும் விதம் குறித்தும் இவற்றில் உள்ள சில விடயங்கள் குறித்தும் இனி நோக்கலாம்.

பொதுவான அம்சங்கள்

மேலே சொன்ன நான்கு வகையான தீக்ஷைகளுக்கும் பூர்வாங்கமாக தடைகளை நீக்கும் விநாயகவழிபாடு, சுத்தியை உண்டாக்கும் பஞ்சகவ்யபூஜை, புண்யாகவாசனம் போன்றனவும், இடத்தில் சுத்தி செய்யும் வாஸ்து சாந்தி, யாகத்தில் பாலிகை சேர்ப்பதற்கான மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் போன்றனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றோடு தீக்ஷை வழங்கும் குருவும், தீக்ஷை பெறும் சீடனும் ரட்சாபந்தனம் என்கிற காப்பு அணியும் நிகழ்வும் உண்டு.

இவற்றுக்கு அடுத்து  தீக்ஷைக்கான யாகமண்டபபூஜை இடம்பெறும். கும்பாபிஷேகம் போன்ற வைபவங்களில் நடக்கிற யாகபூஜையை ஒத்து இருக்கும். ஆனால், இந்த தீக்ஷைக்கான யாகபூஜையில் வேதிகையில் (மேடை) மண்டலம் அமைத்து பூஜிப்பர். சிவாகமங்களில் சுபத்திரா முதலிய தீக்ஷாமண்டலங்கள் அமைத்து பூஜிப்பர்.

உதாரணமாக சுபத்திரா தீக்ஷாமண்டலத்தை எடுத்துக் கொண்டால் பஞ்சலிங்கங்கள் அந்த மண்டலத்தில் வரையப்பட்டிருக்கும். அவை வௌ;வேறு நிறத்தில் அமைந்திருக்கும். அவற்றை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று விரிவாக பூஜிப்பர். அருகில் இதேபோல ஐந்து கும்பங்கள் வைத்து  சிவபெருமானின் பஞ்சமூர்த்திகளையும் பூஜிப்பர்.

மேலும், யாகத்தில் கணேசர், நந்தி, மஹாகாளர், சுப்ரஹ்மண்யர், போன்ற பல்வேறு சிவசம்பந்தமான மூர்த்திகளும் கும்பங்களில் பூஜை செய்யப்படுவர்.

இந்த யாகத்தில் ஹோமகுண்டம் உருவாக்கப்பட்டு விசேஷ ஹோம வழிபாடும் இடம்பெறுவதுடன், தென்கிழக்கு மூலையில் ஸ்தாலிபாகம் என்று சொல்லப்பட்டுள்ள இடத்தில் நெய் கலந்து அன்னம்(சரு) ஒரு பானையில் உருவாக்கப்படும். குருவால் உருவாக்கப்படும் இந்த ஹவிஸ் என்ற அன்னம் மூன்றாக வகுக்கப்படும்.

முதல் பாகம் குருவுக்கானது. இரண்டாம் பாகம் சிவாக்கினியில் ஹோமத்திற்கு உரியது. மூன்றாவது பாகம் சிவனுக்கு நெய்வேதனத்திற்கு உரியது. மிகுதி ஸ்தாலியில் (பாத்திரத்தில்) இருப்பது சீடனுக்கு உரியதாகும்.

இவ்வாறான கிரியைகள் எல்லா தீக்ஷைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும்.

சமயதீக்ஷை

யாகத்தின் மேற்கு வாசலை நோக்கி சீடனை அழைத்து வந்து குருவானவர் சிவபெருமானை பிரார்த்தனை செய்து, பிரணவாசனத்தில் சீடனை நிற்கச் செய்து, சுத்தி செய்து, நிரீட்சணம், புரோட்சணம் முதலிய சம்ஸ்காரங்களால் அவனை தூய்மையாக்கி, அவனை சிவமாக்குவார்.

yaga-saalaiஅதன் பின் அவனது கண்களை வெண்பட்டால் கட்டி, யாகத்துக்குள் அழைத்து வந்து கையில் பூவை கொடுத்து தீக்ஷா மண்டலத்தில் இடச் செய்வார். அவன் கண்களை மூடிக் கொண்டு பூ இட்ட லிங்கத்தின் பெயரே அவனது தீக்ஷா நாமமாகும். (ஈசான சிவ, தத்புருஷ சிவ, அகோர சிவ, வாமதேவ சிவ, சத்யோஜாத சிவ)

இதன் பின் சில ரஹஸ்ய மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெறும். இதன் பின், குருவானவர் சீடனுக்கு மந்த்ரோபதேசம் செய்வார். அதன் பின், பூர்ணாகுதி வழங்கப்பெறும். சீடன் குருவையும், மண்டலேஸ்வரரான சிவனையும், அக்னியையும் வழிபாடாற்றுவான். ஆசீர்வாதத்துடன் இத் தீக்ஷை நிறைவு பெறும். இது சமய தீக்ஷையாகும்.

விசேட தீக்ஷை

சமயதீக்ஷை பெற்று, சமய ஒழுக்கங்களுடன் வாழும் சீடனுக்கு வழங்கப்பெறுவதே விசேடதீக்ஷை. முன்போலவே, செய்யப்படும் யாகபூஜை, ஸ்தாலீபாகம் என்பவற்றுடன், மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெற்று, தீக்ஷா விதிகளில் சொல்லப்பட்டவாறான ஹோமங்கள் இடம்பெறும்.

குரு தன்னை சீடனுடன் ஐக்கியப்படுத்தி, ஹோமவழிபாடுகள் செய்வார். சீடனால் வழிபாடு செய்யப்பட்டதும் ஆசீர்வாதம் செய்யப்படும். இதன் போது குல மரபுக்கு ஏற்ப யக்ஞோபவீதம்(பூணூல்) வழங்குவதும் சம்பிரதாயம். இதன் பின், சீடன் ஆத்மார்த்த சிவபூஜை செய்ய தகுதியானவன் ஆகிறான்.

நிர்வாண தீக்ஷை

விசேட தீக்ஷை பெற்று சில காலம் ஆகிய பின்னர், குருவானவர் சீடனுடைய பக்குவநிலையை அறிந்து நிர்வாண தீக்ஷை செய்கிறார். இந்த தீக்ஷைக்கும் முன் சொன்ன பூர்வாங்கமான கிரியைகள் அனைத்தும் உண்டு. அநேகமாக இக்கிரியையை இரவில் செய்வது வழக்கம்.

குருவானவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டு யாகத்தில் சிவாக்கினிக்கு அருகில் சீடனை நிற்க வைத்து 38 கலாநியாசம் செய்து, மூன்று இழை கொண்ட நூலை மேலும் மூன்றாக்கி, சுசும்னா நாடியாக பாவித்து,  சீடனின் சிகையில் கட்டி பாதம் வரை தொங்குமாறு செய்வார்.

சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார்.

மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை செய்து, யாகபூஜை முடிந்ததும், சீடன் முதல் நாள் இரவு கனவு கண்டாரா? என்று அறிந்து அதற்கேற்ப ஹோமங்கள் நடக்கும். பின்னர் சிவகும்பம் முன் முதல் நாள் இரவு வைத்த பாசசூத்திரம் என்ற நூல் பின்னரும் சீடனின் சிகையில் கட்டப்பட்டு, கலைகள் வெட்டி எடுக்கப்பட்டு, அக்கினியில் சேர்க்கப்பட்டு ஹோமம் செய்யப்படும். இவற்றுக்கெல்லாம் விரிவான ஹோமங்களும் தத்துவ விளக்கங்களும் அகோரசிவாச்சார்ய பத்ததியில் காணலாம்.

முடிவில் சிறிதளவு சிகையும் வெட்டப்பட்டு கோமயத்தில் வைத்து ஆகுதி செய்து, பின் சீடனை ஸ்நானம் செய்து வரச் செய்து மீண்டும் வழிபாடுகள் ஆற்றி ஆசீர்வாதம் செய்யப்படும். இது நிர்வாண தீக்ஷை யாகும்.

ஆச்சார்ய அபிஷேகம்

தகுதி வாய்ந்த சீடன் ஆலயங்களில் கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உத்ஸவாந்தம், உத்ஸவாதி பிராயச்சித்தாந்தம் என்கிற கிரியைகள் யாவற்றையும், இன்னும், தீக்ஷை முதலியவற்றையும் செய்து நல்ல குருவாக மிளிர குருவால் அதிகாரம் அளிக்கப்படுவதே ஆச்சார்ய அபிஷேகம் ஆகும். ஆனால், இந்த ஆச்சார்ய அபிஷேகம் பெற்ற ஆதிசைவ குலத்து வேதியர்களே ஆலயக்கிரியைகளான பரார்த்தம் செய்யலாம் என்றும், பிறர் ஆன்மார்த்த கிரியைகளையே செய்து வைக்கலாம் என்றும் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

முன் சொன்ன  விதிகள் போலவே யாகபூஜை வரை செய்து ஹோமவழிபாடுகள் ஆற்றி நிறைவாக, சிவகும்பங்களால் சீடனுக்கு அபிஷேகம் செய்து, அதிகாரம் வழங்கப்படும்.

முந்தைய  தீக்ஷைகள் போலன்றி, இந்நிகழ்வுக்கு பின்னர், சீடனானவன் சிவாகமவிதிகளின் படி, ஒரு குருவாக மிளிர்வதால் இந்நிகழ்வு குருத்துவ அபிஷேகமாக பலரும் பார்க்கும் நிகழ்வாக, சிறப்பாக மங்களகரமான வைபவமாக இது இடம்பெறும்.

இலங்கை நீர்வேலியில் சமீபத்தில் நடைபெற்ற கட்டுரையாசிரியரின் குருத்துவ அபிஷேக சடங்குகளின் போது..

இந்நிகழ்வின் நிறைவிலும் சீடன் குரு, மண்டலேஸ்வர சிவன், அக்கினி முதலியவற்றை பூஜிப்பான். தூன் நியமத்துடனும் செழுமையாகவும், ஒழுக்கமுடையவனாகவும், ஆகமவிதிகளின் வண்ணம் சிவாச்சார்யனாக திகழ உறுதி பூண்டு அன்றிலிருந்து செயற்படலாவான்.

இந்த சிவாச்சார்ய அபிஷேகத்தை செய்து வைக்கிற போது ஒருவனது தகுதி மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டும். இல்லாது போயின், தீக்ஷா விதிகளுக்கு அமைவான சிறப்புகள் இங்கே இல்லாது போய் விடும்..

பொதுவில் மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலத்தார் என்று சேக்கிழார் அறிமுகம் செய்யும் சிவாச்சார்ய மரபினரே இந்த நான்காவது தீக்ஷை ஆகிய சிவாச்சார்ய அபிஷேகம் பெறுவதைக் காணலாம்.

இந்த அபிஷேகம் பெற்றுக் கொண்ட பின்னரும் சில நாட்கள் (ஒரு மண்டலம் என்று சொல்லப்பட்ட போதிலும் ஒரு பக்ஷமாவது) நியமம் காக்கும் சீடன் குருவால் அஸ்திராபிஷேகம் என்கிற பாசுபதாஸ்திரமூர்த்தி வழிபாட்டுடனான அபிஷேகம் செய்து வைக்கப்பட்டு முழுமையான சிவாச்சார்யனாவான்.

இவ்வாறு நீண்ட இக்கிரியைகளில் ஒவ்வொரு சைவரும் சமயதீக்ஷையேனும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துவார்கள். இவ்விளக்கம் தீக்ஷை தொடர்பான முழுமையான விளக்கம் அன்று. குருவுடனான தொடர்பும் அது வழியான சிவாகம உணர்ச்சியும், சிவவழிபாடுமே தீக்ஷை குறித்த நிறைவான புரிதலை வழங்கும் எனலாம்.

14 Replies to “ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்”

  1. சிவாகம தீஷை பற்றி கூறப்பட்டுள்ளது வைஷ்ணதேஷை உள்ளதா அதனை கூறினால் நல்லது

  2. இளம் பிராயத்தினரான பேரன்பிற்குரிய மயூரகிரியாரின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல்வேறு தகவல்களை ஆழ்ந்த நிலையில் தருவதால் அவற்றைத் தொடர்ந்து சிறப்பான கவனத்தோடு படித்து வருகிறேன். அவர் குருத்துவ நிலையை எட்டிய சாதனை நிகழ்வைத் தான் கடந்து வந்த தீக்ஷா பாதையைச் சிறப்பாகப் பதிவிட்டு, அதன் மூலம் நமது பாரம்பரியத்தைப் பலரும் அறியும் வண்ணம் தந்திருப்பமை சீரியது. பாராட்டுக்கள். அவருக்கு அஸ்திராபிஷேகமும் நடந்தேறி முழுமையான சிவாச்சாரியாராகத் திகழ எல்லாம் வல்ல பரமேஸ்வரனைப் பிரார்த்திக்கிறேன்.

  3. தர்மம் என்ற சொல்லினுக்கு

    தாரயதி இதி தர்ம: என்றும் த்ரியதே இதி தர்ம: என்றும் தாங்கும் சக்தி தாங்கப்படும் சக்தி என இரண்டுமாக தர்மம் சொல்லப்படுகிறது.

    தர்மத்தை ரக்ஷிப்பது என்பது தனது தலைமுறையில் அது அழியாமல் பாதுகாத்து……….. மேற்கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்துச் செல்வது.

    அந்தப்படிக்கு தீக்ஷா நியமங்களை ஏற்று அவற்றில் ஒழுகும் ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்களது செயற்பாடுகள் சைவ சமயத்தைப் பின்பற்ற விழையும் ஒவ்வொரு அன்பருக்கும் உந்துகோலாக இருக்கும்.

    சிவ தீக்ஷா நியமம் பற்றிய இந்த வ்யாசம் அருமையான தகவற் களஞ்சியம். சுருக்கமாக ஒவ்வொரு தீக்ஷையும் விவரிக்கப்பட்டுள்ளது.

    இது போன்று சிவாலய தர்சன விதிகளைப் பற்றியும் …………. சிவாலயத்தில் தர்சனம் செய்ய விழையும் அன்பர்கள் ………… செய்ய வேண்டியவை …………. செய்யக்கூடாதவை ………. என இது சம்பந்தமாகவும் ஸ்ரீ ஷர்மா அவர்கள் ஒரு வ்யாசம் சமர்ப்பிக்க வேண்டும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன். ஈழத்தில் தர்ம ப்ரசாரத்திற்காக அவர் ஆரம்பித்துள்ள சஞ்சிகை வெற்றிகரமாக நடந்து வர கதிர்காமத்துறை கந்தனை இறைஞ்சுகிறேன்.

  4. அருமையான பதிவு.தங்களின் பிரதிமையை காண கிடைத்ததிலும் மகிழ்ச்சி.
    சர்வம் சிவமயம்.
    சுப்ரமணியம் லோகன்.

  5. திரு நீறு வைப்பதன் பொருள் என்ன ?

  6. சிவாகமங்களின் வழியில் தீக்ஷை செய்விக்கப்படும் முறைகளை மிகத்தெளிவாக விளக்கி இருக்கிறார் நம் அனைவரின் அன்புக்கும் பாத்திரமான மயூரகிரி சிவாச்சாரியார். நூல்களைக்கற்பதோடு அனுபவமும் அனுபூதியும் வேண்டும் என்பதாலும் அனுவத்திலிருந்து எழுதியிருப்பதாலும் இந்தக்கட்டுரை சிறப்புற விளங்குகிறது.குருத்துவம் பெற்ற அவருக்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் ஒருங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

  7. சிவதீக்ஷையின் தாத்பரியம் என்ன என்பதைப்புரிந்துகொள்ளல் அவசியம். நம்முடைய வைதீக ஏன் புத்த ஜைன பாரம்பரியங்களில் கூட தீக்ஷை உண்டு. இன்று பலர் தீக்ஷை பெறாமல் இருக்கிறார்கள். பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலர் கிடைத்தாலும் வேண்டாம் என்கிறார்கள். கண்ணப்ப நாயனார் தீக்ஷை எங்கே வாங்கினார் என்கிறார்கள். நல்ல குருவிடம் பெற்ப்படும் தீக்ஷை நம் பாவங்களைக்கெடுக்கிறது. நம்மை க்ரியை, யோக, ஞான நிலைகளுக்கு உயர்த்துகிறது என்பதை அடியேன் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். தீக்ஷைப்பெற்று சாதனங்களை செய்து வழிபாடு இயற்றினாலே திருமுறைகளிலும் மெய்கண்ட சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்ட பக்தி ஞானக்கருத்துக்களைத்தெளிவாகப்புரிந்துகொள்ளமுடியும்.

  8. ஸ்ரீ மயூரகிரி சர்மா
    “பொதுவில் உபநயனம் போன்ற சடங்குகள் குறித்த சில வருணத்தாராலேயே அதிகம் பின்பற்றப்பட்டு, அவர்களுக்குரியதாக காட்டப்பட்டு விட்ட சூழலில்”.
    இந்த சூழல் மாற்றப்படவேண்டியது. வேதத்தில் நம்பிக்கை இருக்கிற அனைவருக்கும் சாதி ஆண்-பெண் என்ற பேதமின்றி உப நயனம் செய்யப்படவேண்டும்.
    தமிழ் நாட்டில் சிவ தீக்ஷைக்கு சைவ உணவைக்கட்டாயமாக்குகிறார்கள். அசைவ உணவு உண்பவர்களுக்கும் நிர் பீஜ சமயதீக்ஷை வழங்குவதற்கு சைவப்பெரியோர்கள் முன்வரவேண்டும்.

  9. ஸ்ரீ மயூரகிரி சிவாச்சாரியார்
    “பொதுவில் மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலத்தார் என்று சேக்கிழார் அறிமுகம் செய்யும் சிவாச்சார்ய மரபினரே இந்த நான்காவது தீக்ஷை ஆகிய சிவாச்சார்ய அபிஷேகம் பெறுவதைக் காணலாம்”.
    வேதியர் குலத்தவர்கள் மட்டுமல்ல வேறுகுலத்தவர்களும் சிவாச்சாரியார்களாக முடியும். மெய்கண்ட சிவம் எப்படி சகலாகம பண்டிதருக்கு குருவாக விளங்கினார் என்பதை சிந்திக்கவேண்டும். தீக்ஷை செய்விக்கும் அதிகாரமும் எல்லோருக்கும் உண்டு ஏன் என்றால் எல்லாவர்ணத்தாருக்கும் உரியது ஆகமம் என்பது வழக்கு.

  10. ஸ்ரௌத்த சைவசித்தாந்த அறிஞர் ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் சிவமஹாதீக்ஷையின் பெருமையைப்பற்றி எழுதியுள்ளார். அதில் ஷடாத்வ சுத்தி என்னும் சடங்கு வேதமந்திரங்களுடன் உப நயனத்தின் போதும் சிவதீக்ஷையின் போதும்(ஏற்கனவே உப நயனம் செய்யப்பட்டிருந்தாலும்) செய்யப்படவேண்டும் என்று சொல்கிறார். ஆராத்யாயர்கள் உபவீதத்தொடு சிவலிங்கமும் அணிபவர்கள். இந்த ஷடாத்வசுத்தி ஈழத்திலும் தமிழகத்திலும் செய்யப்படுகிறதா? ஸ்ரீ மயூரகிரி சிவாச்சாரியார் பதிலுறைக்கவேண்டும்.

  11. தீக்ஷை குறித்த விரிவான விளக்கக் கட்டுரையை அளித்த திரு மயூரகிரி சர்மா அவர்களுக்குப் பாராட்டுகள். இத்தனை கஷ்டப்பட்டு சிவாசாரியார் ஆக எத்தனை பேரால் இயலும்? பலரும் எளிதில் அடைய வேண்டும் என ஆசைப்படுவதற்கு இந்த வழிமுறைகள் இத்தனை தூய்மையாக நியம நிஷ்டைகளோடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது புரியுமா?

  12. யார் ஆதிசைவர்.. காமிகம் ஏன் ஆதிமார்கம் என்ற சொல்லை தந்திர ஆவர்ண படலம் பயன்படுத்துகிறது.. பாசுபதம் உள்ளிட்ட சைவம்.. ஆதிமார்ககம். சொம சம்பு,போஜன் யார்?. . ஆதிசைவரா பாதி சைவராக? காஷ்மீர். நேபாளில் கிடைக்கப்பட்ட கர்ம காண்ட கர்மவளி(சொமசம்பு) ..ஆதிசைவ என்ற பதமே இல்லை.. சித்தந்தசாரவளி.,இராஜேந்திரன் காலத்தில் வந்ததாக குறிப்பிடுகிறது… கல்வெட்டுகள் சர்வசிவ பண்டிதர் ஈசானசிவ பண்டிதர் மதியதேசம் கௌடதேசத்திலிருந்து வந்ததாக.. 1012 முன் கோயில் இல்லையா என்ன.. காளமுகம்,காபாலிம், பிரதிபாஜ்யம், பாசுபதம்.. 8ம்நூற்றண்டு.. சடையன்மாறனின் குற்றாலநாதர் கோயில் கல்வெட்டு பாசுபத பெருமக்கள் குறிப்பு உள்ளது. திருவெற்றியூர் சதுராயண பண்டிதர், பள்ளிமடம் கல்வெட்டு மஹாவிர சைவத்தை குறிப்பிடுகிறது… சைவம் பல பிரிவுகள் அவர்அர்களுக்கு தனி பூஜை உண்டு.. சிவனின் தத்துவ விளக்கத்தில் ஏற்பட்ட பிரிவு.. அந்த தத்துவத்தை விளக்க ஏற்பட்ட பிரிவு.. (வித்யகாண்ட பிரிவுகள்) அடுத்து கிரியையில் பிரிவு.., ஐரோப்பிய மதம் அல்ல சைவம் .,தத்துவமோ அதன்பால் வித்தையில் பிரிவு அதை தொடர்ந்து கிரியையில் பிரிவு.. ஆனாதி சிவன் … அவனை விளக்க பல வழி உண்டு.. பிரிவு உண்டு.. ஆதி எதுனு பார்க்க… நிறைய இருக்கு,. பார்க்கலாம்… சிவம்….

  13. கீதா சாம்பசிவம்
    “இத்தனை கஷ்டப்பட்டு சிவாசாரியார் ஆக எத்தனை பேரால் இயலும்? பலரும் எளிதில் அடைய வேண்டும் என ஆசைப்படுவதற்கு இந்த வழிமுறைகள் இத்தனை தூய்மையாக நியம நிஷ்டைகளோடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது புரியுமா?”
    அம்மையீர் சிவாச்சாரியார்களாக ஆகாமலேயே ஆச்சாரங்களையும் அனுஷ்டானங்களையும் கடைப்பிடிப்போர் இந்த நாட்டில் உள்ளனர். சிவாச்சாரியார் பொறுப்பு பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் வளர்ப்பினாலே பயிற்சியினாலேயே முதிர்ச்சியினாலே நிகழ்கிறது நிகழவேண்டும் என்பது எம்முடையவிருப்பம். தலைமுறை தலைமுறையாக ஈசனுக்குத்தொண்டு செய்பவர்களை வேண்டாம் என்று யாம் சொல்லவரவில்லை. மற்ற எக்குலத்தவராயினும் ஈசன் பால் அன்புகொண்டு ஆர்வத்தோடு சிவவழிபாட்டினை வாழ்வாகக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு தடைவேண்டாம் என்பதே எம்முடைய வேண்டுகோள்.

  14. சுந்தர்
    ஆதிசைவர் என்ற பதம் திருத்தொண்டர் மாக்கதையாகிய பெரியபுராணத்தில் வருகிறது. ஆக ஆதிசைவர் என்ற பதத்தினைக்கேள்விக்குறியாக்குவதில் நியாயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *