பாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா? அரசியலா?

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் அம்பேத்கர் இல்லையென்றால் நான் பிரதமராக ஆகியிருக்க முடியாது என்றும் டாக்டர் அம்பேத்கர் சாதித்த சாதனைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார். இதை வைத்து ஒரு தொலைக்காட்சி விவாதத்தை வைத்தது. நேற்றுதான் அதை நான் காண நேர்ந்தது. அதில் பேசிய மூவர் (விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னிஅரசு, சுப.வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர்) பாஜகவுக்கு எதிராகவே பொய்யையே பேசினர். பாஜக பீகார் தேர்தலை முன்னிட்டே பிரதமர் இப்படி பேசியிருக்கிறார். இந்துமதத்தை எதிர்த்த அம்பேத்கரை பாஜக எப்போதுமே ஏற்றுக்கொண்டது இல்லை, மராத்தா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டுவதில் எதிர்ப்பு தெரிவித்தது பாஜக என்றெல்லாம் பொய்யை அடுக்கிக் கொண்டே போனார்கள்.  இந்த நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சிதான். பாஜகவைப் பற்றி எவ்வளவு அபாண்டமாக புளுகுகிறார்கள் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதனால் உண்மை என்ன என்று எல்லோருக்கும் தெரியவேண்டும் என்ற காரணத்தால் எழுதப்பட்டதுதான் இந்த கட்டுரை.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அம்பேத்கரை காங்கிரஸ்கட்சிக்கார ர் என்பதுபோலவே கட்டமைத்தார். அம்பேத்கர் மரகதம் சந்திரசேகருக்கு காங்கிரஸ்கட்சியை புகழ்ந்து எழுதிய கடிதம் இருப்பதாக சொன்னார். ஆனால் யாரிடமும் அவர் காட்டவில்லை. அதை வன்னி அரசும் சுப.வீயும் கேட்கவில்லை. ஆனால் அவர் பல விஷயங்களை மறந்துவிட்டார் அல்லது மறைத்துவிட்டார். அண்ணல் அம்பேத்கர் கடைசிவரை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே இருந்தார் என்பதுதான் அது. அண்ணல் அம்பேத்கர் சர்வதேச மையம் விவகாரத்திலும் தடைபோட்டவர்கள் காங்கிரஸ்கட்சிதான்.

டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம்

1992ல் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் புதுடெல்லியில் தொடங்க திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டது. எத்தனை வருடங்கள் தெரியுமா? 22 வருடங்களுக்கும் மேலாக. யாரால்? காங்கிரஸ் அரசால்! ஆனால் திரு.மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்திற்கு 20-4-15 அன்று அடிக்கல் நாட்டினார். மேலும் 20 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என்று திரு.மோடி கட்டளையிட்டிருக்கிறார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 195.74 கோடி ஒதுக்கியுள்ளார்.

C20DAMBE

அதுமட்டுமல்லாமல் இந்த டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் 1) பொதுநூலகம், 2) ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், 3) ஊடகம் மற்றும் பொருள்விளக்க மையம், 4) மாநாட்டு மையம், 5) இரண்டு அரங்கம், 6) டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை விளக்க கண்காட்சி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் கெலாட் கூறியிருக்கிறார்.

https://www.dinamani.com/india/2015/04/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/article2774490.ece

லண்டனில் அண்ணல் அம்பேத்கர் இல்லத்தை வாங்கிய பாஜக

லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் கடந்த 1921-22ம் ஆண்டுகளில் பொருளாதாரம் படித்தார் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர். அப்போது லண்டனின் கிங் ஹென்றி தெருவில் உள்ள 2050 சதுர அடி பரப்பளவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்தார். இந்தக் கட்டிடம் சிலமாதங்களுக்கு முன் ஏலத்துக்கு வந்தது. அதைத் தொ டர்ந்து அதை விலைக்கு வாங்குவதற்காக பாஜக மகாராஷ்டிர கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே லண்டன் சென்றார்.

ambedkar illam london

அதைத் தொடர்ந்து அப்போது சுவிட்சர்லாந்தின் டாவாஸ் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உடன் ஆலோசனை செய்தார். அதைத் தொடர்ந்து ரூ.35 கோடிக்கு இந்தக் கட்டிடத்தை வாங்குவதாக முடிவு செய்யப்பட்டது.  இந்தக் கட்டிடத்தை வாங்குவது குறித்து மும்பையின் பாஜ தலைவர் ஆசிஷ் ஷேலர், ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ashaish bjp

jetley

இந்தக் கட்டிடத்தை வாங்கும் முடிவுக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசின் முடிவை மகாராஷ்டிர தலித் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ளனர். முதல்வுக்கு நன்றி தெரிவிப்பதாக பாரிப் பகுஜன் மகாசங்கத் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார். இந்தக் கட்டிடத்தை வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பிருதிராஜ் சவான் அப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தார். ஆனால் அதன் மீது காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ரூபாய் 35கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128694

மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசுகையில், “லண்டனில் டாக்டர் அம்பேத்கர் படித்தபோது, தங்கியிருந்த வீட்டை கையகப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் தில்லி அலிப்பூர் சாலையில் அண்ணல் அம்பேத்கர் உயிரிழந்த வீடு, நினைவு இல்லம் ஆக்கப்படும் என்றும் கெலாட் அறிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த வீட்டை நினைவுசின்னமாக்கிய பாஜக

மத்திய பிரதேசத்தில் கடந்த 50 வருடங்களாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் வீட்டை பற்றிய அக்கறை என்பதே இல்லாமல் இருந்தது அக்கட்சி. தீக்ஷாபூமி, சைத்யபூமி புகழ்பெற்ற அளவிற்கு அண்ணல் அம்பேத்கர் பிறந்த இடம் (மத்தியபிரதேசம், மோ (Mhow) கிராமம்) புகழ்பெறவில்லை. காரணம் யாருக்கும் தெரியாமலே இருந்தது. பிறகு சிவராஜ்சிங் சௌகான் அவர்கள் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தபோது அண்ணல் அம்பேத்கர் வீட்டை புதுப்பித்து நினைவுச்சின்னமாக்கி, தேசிய அளவில் புகழ்பெற வைத்தது பாஜக கட்சி. நாட்டுக்கு அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சியில் திரு.அத்வானியும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

advani ambedkar house mhow house

இன்று மூன்று இடங்கள் ( JANMABHOOMI, DEEKSHABHOOMI AND CHAITYABHOOMI) தலித்துகளுக்கு முக்கியமான இடங்களாக இருக்கிறது என்று சொன்னால் அன்று பாஜக அண்ணல் அம்பேத்கர் பிறந்தவீட்டை நினைவுசின்னமாக்கியதுதான் காரணமாகும்.

https://lkadvani.in/press-releases2.php

தீக்ஷாபூமியை அழகுபடுத்திய பாஜக

மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த நிதின்கட்காரி அமைச்சரானபோது (பொறுப்பு) அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய இடமான தீக்ஷாபூமியில் பல்வேறு பணிகளைச் செய்தார்.

https://keralabjp.com/nitin_gadkari.html

புதுடெல்லியில் அண்ணல் அம்பேத்கர் வீட்டை வாங்கி நாட்டுக்கு அர்ப்பணித்த பாஜக

அண்ணல் அம்பேத்கர் டெல்லியில் வாழ்ந்த வீட்டை விலை கொடுத்து வாங்கியது அப்போதைய பிரதமராக திரு.வாஜ்பாய் அவர்கள்தான். அந்த வீட்டை ரூபாய் 16 கோடி கொடுத்து வாங்கிய திரு.வாஜ்பாய், அவ்வீட்டை நாட்டுக்கு அப்போது அர்ப்பணித்தார். பிறகு வந்த காங்கிரஸ் அரசாங்கம் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. அதை எதிர்த்து அப்போது தலித் இயக்கங்கள் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து போராட்டங்கள் நடத்தின.

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/memorial-at-ambedkars-residence-sought/article759460.ece

1991ல் நடைபெற்ற அகில இந்திய பிஜேபி மாநாட்டின் முக்கியத்துவம்

1991 பிப்ரவரி 1,2,3ம் தேதிகளில் ஜெய்பூரில் அகிலபாரத மாநாடு நடைபெற்றது. அப்போது தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.முரளிமனோகர் ஜோஷி அவர்கள் அம்மாநாட்டில் ஆற்றியத் தலைமையுரையில், தலித் மக்களின் உள்ளங்களில் ஏற்படுகின்ற எண்ணங்களை அவர் பிரதிபலித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

திரு.முரளிமனோகர் ஜோஷி பேசியதாவது : சுதந்திரம் பெற்று 43 ஆண்டுகள் ஆன பின்பும் இந்த சகோதரர்கள் தாழ்த்தப்படுவது குறையவில்லை. ஹைதராபாத், அலிகர், ஆக்ரா, ஜெய்பூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற சமீபத்திய வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது தாழ்த்தப்பட்ட மக்கள்தான். ஷெட்யூல்டு ஜாதியினர், மரபினரது உரிமைகளுக்கான போராட்டத்திலும், ஜாதியில் உயர்வு தாழ்வு, தீண்டாமை ஆகியவை வேரோடு களையவும் முன்னணியில் நின்று போரிடுமாறு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை நான் வேண்டுகிறேன். இந்த மக்களை வறுமைக்கோட்டின் எல்லையிலிருந்து உயர்த்த இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகக் குறைவு. அவைகள் அரைமனதுடன் செய்யப் பட்டவைகளே.

எனவே, உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

1.ஷெட்யூல்டு ஜாதியினர் மற்றும் மரபினர் முன்னேற்றத்துக்காகவே குறைந்தபட்சம் 2000 கோடி ரூபாய் மூலதனத்துடன் ஒரு நிதி நிறுவனம் nabord போலவே அமைக்கப்பட   வேண்டும்.

2. விசேஷ ஒருங்கிணைந்த திட்டம் எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் நிறைவு பெற வேண்டும்.

3. ஏழைகள் குறிப்பாக ஷெட்யூல்டு ஜாதி மற்றும் மரபினர் பொருளாதார சுயசார்பு பெறும் வகையில் எட்டாவது ஐந்தாண்டு திட்டம் டாக்டர் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

4. உடல் தகுதியும் கல்வித்தகுதியும் உள்ள ஷெட்யூல்டு ஜாதியினர் ராணுவத்தில் சேர அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

5. மகரிஷி வால்மீகி மற்றும் சந்த் ரவிதாஆ ஆகியோரது பிறந்த நாட்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும்.

6. ஷெட்யூல்டு ஜாதி மற்றும் மரபின் பெண்கள் கல்வி கற்க ஊக்கம் தருதல் வேண்டும்.

7. 1980 வனப்பாதுகாப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். ஒரு புதுகொள்கை உருவாக வேண்டும். அரசு நிர்வாகத்துக்கும் காட்டிலே வாழும் மக்களுக்கும் பங்குதேவை. முன்னேற்றத் திட்டங்கள் காரணம் காட்டி காட்டிலே வாழ்ந்து வரும் மக்களை அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு வேறொரு காட்டு இடம் மாற்று ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

8. வன கிராமங்கள் எல்லாம் ரெவின்யூ கிராமங்களாகட்டும். காட்டு விளைபொருட்கள் தான் அந்த மக்களது ஜீவாதார அடிப்படை. எனவே அது பாதிக்கப்படக்கூடாது.

9. ஷெட்யூல்டு பிரிவினரது நன்மை குறித்து ஒரு தனித்திட்டம் தேவை.

10. தலையில் மலம் சுமந்து செல்வது தடை செய்யப்பட வேண்டும்.

(ஆதார நூல் : பாரதீய ஜனதா என்ன சொல்கிறது?)

இந்த தீர்மானங்கள் 1991லேயே இயற்றப்பட்டதாகும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எட்டாவது ஐந்தாண்டு திட்டம் டாக்டர் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கருக்கு உயரிய மதிப்பளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முத்ரா வங்கிக்கான விதை (1வது தீர்மானத்தைப் பாருங்கள்) அப்போதுதான் போடப்பட்டது.

அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் கார்ட்டூனை எதிர்த்த பாஜக

ambedkar-cartoon2

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் 11ம் வகுப்பு பாட புத்தகத்தில் வெளியிடப் பட்ட  கார்ட்டூனை நீக்க வேண்டும் என பா.ஜ., வினர் மற்றும் எதிர்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக லோக்சபாவில் இன்று அமளி ஏற்பட்டது. அமளியின் இடையே குறுக்கிட்டு பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சர்ச்சைக்குரிய கார்ட்டூன் திரும்பப் பெறப்படும் என உறுதி அளித்தார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=467131&Print=1

டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது

பாரத நாட்டை பல ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பலபேருக்கு பாரத ரத்னா விருதை வழங்கியிருக்கிறது. ஆனால் அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்த அண்ணல் அம்பேத்கருக்கு வழங்க காங்கிரஸ் மறந்துவிட்டது அல்லது கொடுக்க மனம் வரவில்லை. 1990ல் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு  ஆட்சி நடத்திய வி.பி.சிங் அரசுதான் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருதை வழங்கியது. பாஜக இதற்கு ஆதரவு தெரிவித்தது.

பாஜக ஆட்சியில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் திட்டங்கள்

குடிசை வீடுகளை ஒழிப்பதற்காக, 2001ல் வால்மீகி அம்பேத்கர் அவாஸ் யோஜனா (வாம்பே) எனும் திட்டம், பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது பின்பு காங்கிரஸ் அரசால் பெயர்மாற்றம் பெற்றது. இந்த திட்டம் பெயர் மாற்றப்பட்டு ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம், 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=991824&Print=1
2001-2002 பாஜக மத்திய அரசு பாபாசாஹேப் அம்பேத்கர் ஹஸ்தா சில்ப விகாஷ் யோஜனா என்ற பெயரில் (Baba Saheb Ambedkar Hasta Silpa Vikash Yojana (AHVY)ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. கைவினையாளர்களுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
https://as.ori.nic.in/dhorissa/hc_baba.htm

அண்ணல் அம்பேத்கர் திரைப்படம்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் 1998 ஆம் ஆண்டுத் தயாரான போதிலும், இது டிசம்பர் 15 , 2000 ஆம் ஆண்டு அன்று வணிகரீதியாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பின்பு இப்படம் ஒன்பது இந்திய மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதர்க்கு தமிழக அரசு சார்பாக  பத்து லட்சம்நிதியுதவியை படத்தின் தயாரிப்பாளரிடம் வழங்கப் பட்டது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் தமிழகத்தில் பத்து ஆண்டுக்குப் பின் டிசம்பர் 3 , 2010 அன்று தான் தமிழில் வெளிவந்தது.

இத்திரைப்படத்திற்க்கு “சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்” மற்றும் மகாராஷ்டிரா அரசுஇணைந்து நிதி உதவியுடன், இந்திய அரசுக்குச் சொந்தமான தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் தயாரித்து நிர்வகிக்கப்பட்டது. இப்படத்திற்க்கு மொத்தம்  8.95 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் தேசிய தலைவர்கள்

எப்போதுமே பாஜகவில் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதலில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கும் அண்ணல் அம்பேத்கர் திருவுருவத்திற்கும் மரியாதை செலுத்துவதை கடமையாகவே வைத்திருக்கின்றனர். திரு. அமித்ஷா அவர்கள் பாஜக தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவர் நாக்பூர் சென்றார். முதலில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்பு புரட்சியாளர் அம்பேத்கரின் தீக்ஷா பூமிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

amitsha 1 amitsha 2

https://samvada.org/2014/news/bjp-chief-amit-shah-visits-smruti-mandir-samadhi-of-rss-founder-dr-kb-hedgwar-at-nagpur/

இதற்கு முன் திரு.நிதின் கட்காரி தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரும் தீக்ஷாபூமிக்குச் சென்று அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். பீகார் தேர்தலுக்காக இதெல்லாம் நடைபெறவில்லை. பல வருடங்களாக இது இயல்பாகவே நடைபெற்றுவருகிறது.

https://zeenews.india.com/news/nation/nitin-gadkari-visits-deekshabhoomi-smriti-mandir_590712.html

மராட்வாடா பல்கலைக்கழக அம்பேத்கர்  பெயர் மாற்றப் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸும்

1978இல் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மராட்வாடா பல்கலைக்கழக பெயர்மாற்ற மசோதா நிறைவேறியது. அப்பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பல அரசியல் கட்சிகள் அதை எதிர்த்தன. அதனால் பெயர்மாற்றம் செய்வது தள்ளிக்கொண்டே போனது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ்ஸும் மராட்வாடா பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன. பெயர்மாற்றம் தள்ளிப்போவதை பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் விரும்பவில்லை. 1993, அக்டோபரில் பெயர்மாற்றத்தை ஆதரித்துப் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்பது பற்றி விவாதம் நடந்தது. ஒரு ஊழியர் ஸ்ரீ சேஷாத்ரிஜியிடம் கேட்டார்:- ‘பெயர்மாற்றம் தொடர்பாக நமது நிலை என்ன?’. அவர் தெளிவாகப் பதில் அளித்தார் :’சங்கம் பெயர்மாற்றத்தை எதிர்க்கவில்லை. பெயர்மாற்றம் ஏற்பட வேண்டும். மராட்வாடா பல்கலைகழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் வைக்கப்பட வேண்டும்’’

இந்த முடிவை செயல்வடிவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டு 1993 நவம்பரிலிருந்தே சுகதேவ் நவ்லேயும் சரத் குல்கர்ணியும் இணைந்து மராட்வாடா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்தனர். இதில் சரத் குல்கர்ணி மராட்வாடா பாஜகவின் அமைப்புச் செயலாளர். சுற்றுப்பயணத்தின்போது ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்களில் உள்ளூர் ஊழியர்கள் அனைவரது வருகையும் எதிர்பார்க்கப்பட்டது. நவ்லே கேட்பார் :- பெயர்மாற்றத்தை யாராவது எதிர்க்கிறீர்களா?’ சிவசேனையின் தாக்கத்தினால், எங்கோ ஓரிடத்தில் சிலர் ‘நாங்கள் பெயர்மாற்றத்தை விரும்பவில்லை’ என்பார்கள். இதற்கு பாஜகவைச் சேர்ந்த சரத் குல்கர்ணி பதில் சொல்வார் :-’பெயர்மாற்றத்தை எதிர்க்க விரும்புபவர்கள் தாராளமாக எதிர்க்கலாம். ஆனால் கட்சி மேடையில் பேசும்போது எதிர்க்க அனுமதியில்லை. எதிர்ப்பவர்கள், முன்னதாக கட்சியிலிருந்து விலகிவிட வேண்டும்’.

இப்படி கடுமையான முறையில் முடிவைச் செயல்படுத்த தொடங்கின பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும்.

உடனே  1993 டிசம்பர் 19ல் ஆர்எஸ்எஸ் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் பிக்கு இதாதே சங்கத்தின் பெயர்மாற்ற ஆதரவுக் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கடிதம் :-

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்

(மகாராஷ்டிரம்)

மோத்திபாக், 309,

சனிவார்பேட், புனே – 411030

பெயர்மாற்றம் உடனே தேவை

மராட்வாடா பல்கலைக்கழகத்தின் பெயர்மாற்றப் பிரச்சினை தீர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினையில் அம்பேத்கர்வாதிகளின் உணர்வு மிகவும் தீவிரமாக உள்ளது. பெயர் மாற்றத்திற்காக, கௌதம் வாக்மாரே தீக்குளிக்க நேர்ந்தது; மிகவும் துயரம் தருவதாகும். சட்டப்பேரவைத் தீர்மானம் எப்போதோ செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இன்னும் காலங்கடத்தாமல், மகாராஷ்டிர அரசு, மராட்வாடா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம் செய்யும் முடிவை உடனே நிறைவேற்ற வேண்டும் என நான் மகாராஷ்டிர அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் பெயர் மாற்றத்திற்கு எந்த நிபந்தனையுமின்றி தனது முழு ஆதரவையும் அறிவிக்கிறது. பெயர்மாற்றம் என்பது தேசிய கௌரவப் பிரச்சினை. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிறந்த தேசபக்தர். அவர் தேசசேவையில் முழுமையாக அர்ப்பணமானவர். கோடானுகோடி மக்களின் மனதில் அவர்மீது பக்தியுணர்வு இருக்கிறது. அவரைத் தக்கமுறையில் கௌரவிப்பது, மகாராஷ்டிர அரசுக்கும்  – சமுதாயம் முழுவதற்குமே கடமையாகும். இது சங்கத்தின் தெளிவான கருத்தாகும்.

பெயர்மாற்றப் பிரச்சினையை யாரும் ஜாதிக்கலவரம் ஆக்கிவிடக்கூடாது. பெயர்மாற்றத்தைக் கொண்டு சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்த முயலவேண்டும். பெயர்மாற்றத்தினால் இது ஏதோ ஒரு பிரிவினரின் வெற்றி அல்லது வேறு ஒரு பிரிவினரின் தோல்வி எனக் கருதக்கூடாது. அதற்கு அவ்வாறு தோற்றம் தருவது மிகவும் கெடுதியை விளைவிக்கும்.

ஹிந்து சமுதாயத்தின் பரவலான சமுதாய நன்மைகளைக் கருதுங்கள். பெயர்மாற்றத்தை எதிர்க்க வேண்டாம். சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயிடம் பணிவுடன் வேண்டுகிறோம்.  அம்பேத்கர்வாதிகளும் நமது உடன்பிறப்புகளே. அவர்களை எதிர்த்து உட்பூசல் பாதையைக் கைக்கொள்ளக்கூடாது.

அனைத்து ஹிந்துத்துவவாதிகளுக்கும்கூட எனது பணிவான வேண்டுகோள். அவர்கள் பெயர் மாற்றத்தை ஆதரிப்பதில் உறுதிகாட்ட வேண்டும். பெயர்மாற்றப் பிரச்சினையினால் சமுதாயத்தில் மோதல் ஏற்படக்கூடாது. இதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். மராட்வாடாவின் சங்க ஸ்வயம்சேவகர்களும்கூட மிகவும் எச்சரிக்கையுடனிருந்து பெயர்மாற்றத்தை உறுதியுடன் ஆதரிக்க வேண்டும். சமுதாயத்தில் மோதல் ஏற்படாமலிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

(பிக்கு இதாதே)

மாநில செயலாளர்

டிசம்பர் 1993

(நவாகாள், ஸகால், மகாராஷ்டிரா டைம்ஸ், லோக்ஸத்தா, மும்பை தருண்பாரத் ஆகிய நாளிதழ்களில் இது வெளியானது)

பாஜக, சங்க ஊழியர்கள் பெயர்மாற்ற விஷயத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டனர். பாஜக மற்றும் சங்கத்தினர் பல பத்திரிகைகளில் பெயர்மாற்றத்தை ஆதரித்து கட்டுரைகள் எழுதினார்கள். சமரஸதா மன்ச் சார்பில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. சங்கமும் பாஜகவும் ஆதரித்தவுடன் சிவசேனையின் எதிர்ப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே நின்றுவிட்டது. இறுதியில் 1994 ஜனவரி 14ல் மகாராஷ்டிரா அரசு மராட்வாடா பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்டியது. 13 ஆண்டுகளாகத் தொங்கலில் இருந்த இந்தப் பிரச்சினை பாஜக மற்றும் சங்கத்தின் செயல்திட்டம் மூலம் அமைதியாக தீர்க்கப்பட்டது.

(நூல் : ஆர்எஸ்எஸும் மனுவாதமும், ரமேஷ் பதங்கே)

அண்ணல் அம்பேத்கரின் நூலுக்கு ஆதரவளித்த பாஜக

அண்ணல் அம்பேத்கர் இந்துமதத்தின் புதிர்கள் என்ற நூலை எழுதினார். (இந்த புத்தகம் சம்பந்தமாக பல குளறுபடிகள் இருக்கின்றன. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்) இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா போராடியது. ஆனால் பாஜக அண்ணல் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று சொன்னது. பிறகு இந்த கருத்துகள் அரசாங்கத்திற்கு சம்மதமில்லை என்ற குறிப்போடு வெளிவந்ததாக தகவல் இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் போராடிய கலாராம் கோயிலில் பாஜகவின் வெற்றி

பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே தலித்துகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ளது. 2004 தேர்தலின்போது பாஜக  ‘தொலைநோக்கு ஆவணம் 2004’ என்ற அறிக்கையை வெளியிட்டது. அதில் சமூக நீதியை (சாமாஜிக் நியாய்) நிலைநாட்டுவதற்கு சமூக நல்லிணக்கம் (சாமாஜிக் சம்ரஷ்ட) அவசியம் என்று குறிப்பிட்டது. சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்கும் திட்டத்தை பாஜக, மகாராஷ்டிர மாநிலத்தில் 1983ம் ஆண்டுமுதலாகவே சாமாஜிக் சம்ரஷ்ட என்ற பிரசாரத்தின் மூலமாக நடைமுறைப்படுத்த முனைந்தது. இந்தப் பிரச்சாரத்தின் முதல் நோக்கம், தீண்டாமையையும் சமுதாயத்தில் ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளையும் நீக்க வேண்டும் என்பது. இரண்டாவது நோக்கம், தலித் மக்களுக்கு கல்வி, மருத்துவம், தொழில் பயிற்சி ஆகியவற்றை அளித்து அவர்களை சமுதாயத்தின் மையநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பது…. இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம், உயர்சாதி மக்களின் மனமாற்றமே சமுதாயத்தில் ஒற்றுமையை  நிலைநாட்ட முடியும் என்பதை உணர்த்துவதுதான். இதற்காக மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பிரச்சாரத்தின் முதல்கட்ட நடவடிக்கையாக, நாசிக் நகரில் உள்ள காலாராம் கோயில் முன்பாக பேரணி ஒன்றை பாஜக, ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்தது.          காலாராம் கோயிலைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இந்தக் கோயிலில்தான் டாக்டர் அம்பேத்கர் கோயில் நுழைவுப் போராட்டத்தை 1930ல் நடத்தினார். அப்போது கோயிலின் தலைமைப் பூசாரியாக இருந்தவர் தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. அப்போது மாபெரும் போராட்டமாக உருவெடுத்தது. பல தலித்துகள் உயிரிழந்தனர்.

மேற்கண்ட சம்பவத்தை நினைவுபடுத்தும்விதமாக பாஜக ஒரு பிரசாரப் பேரணிக்கு ஏற்பாடு செய்தது. பாஜகவின் பிரசார இயக்கம் தொடங்கியபோது, அந்தப் பேரணி குறித்துக் கேள்விப்பட்ட கோயில் பூசாரி, அந்தப் பேரணியின் நோக்கத்தை அறிந்து, அதற்காகச் சிறப்பு பூஜை ஒன்றை செய்தார். கோயிலுக்குள் நடந்த அந்தப் பூஜையில் பல தலித் மக்கள் கலந்துகொண்டனர். அதன்பிறகு பக்தர்கள் கோயிலின் கருவறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.  முன்பு டாக்டர் அம்பேத்கரை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்த தலைமைப் பூசாரியின் பேரன்தான் இந்த சம்பவத்தின்போது பூசாரியாக இருந்தவர். அந்த பூசாரி யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்தார். அவர், தனது பாட்டனார் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். 1989ம் ஆண்டில் ஹெட்கேவரின் நூற்றாண்டுப் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் இணைந்து ஹெட்கேவர் சேவா நியாஸ் என்னும்  அமைப்பை ஆரம்பித்தனர். தலித் மக்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தலித்துகளோடு உயர்சாதியினர்  இனி தீண்டாமையை அகற்றுவோம் என்பதை உணர்த்த சமபந்தி விருந்து மற்றும் இலக்கிய விழாக்கள் நடத்தப்பட்டன.   மேலும் தலித்துகளுக்காக தயானந்த் சிக்ஷ கேந்திரம், சுவாமி விவேகானந்தர் சிக்ஷ கேந்திரம், ஜெயபாபா ராம்தேவ் கேந்திரம் போன்றவை உருவாக்கப்பட்டன.

பாஜகவில் தேசிய, மாநிலத் தலைவராக தலித்துகள்

அண்ணல் அம்பேத்கரை பெருமைப்படுத்துவதில் மட்டுமே தலித் சமுதாயம் முன்னேறிவிடாது. அண்ணல் அம்பேத்கரின் நோக்கம் தலித்துகள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதுதான். அதை செயல்படுத்தி வரும் ஒரே கட்சி பாரதிய ஜனதாகட்சிதான்.

1885ல் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இதுவரை எந்த ஒரு தலித்தும் வந்ததில்லை. திறமை இருந்தும் காங்கிரசில் தலித்துகள் தேசியத் தலைவராக வர முடியாத சூழ்நிலையே அந்தக் கட்சியில் உள்ளது.

அதேபோல, 1920களில் ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில்கூட தேசியத் தலைவராக இதுவரை எந்த ஒரு தலித்தும் வந்ததில்லை. திறமை இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியில் தலித்துகள் தேசியத் தலைவராக வர முடியாத சூழ்நிலையே அந்தக் கட்சியில் உள்ளது.

ஆனால் 1980ல் ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக பங்காரு லட்சுமணன் என்ற ஒரு தலித் வர முடிகிறது. அந்த அளவிற்கு பாரதிய ஜனதா கட்சியில் ஜனநாயகத் தன்மையும், யாருக்கும் வாய்ப்புத்தரும் தன்மையும் உள்ளது. அதுமட்டுமல்ல தேசியத் துணைத்தலைவராகவும், தேசியப் பொதுச்செயலாளராகவும் தலித் தலைவரான சூரஜ்பான் அவர்கள் வர முடிந்திருக்கிறது. மற்ற தேசியக் கட்சியில் இதை நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அடுத்து மாநிலக் கட்சியிலும் இதை நாம் பார்க்கலாம்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் – 1997ல் ஆரம்பிக்கப்பட்டது. 1997லிருந்து லாலுபிரசாத் யாதவ் தலைவராக இருந்து வருகிறார்.

சமாஜ்வாதி கட்சி – 1992ல் ஆரம்பிக்கப்பட்டது. 1992லிருந்து முலாயம்சிங் யாதவ் தலைவராக இருந்து வருகிறார்.

தேசியவாத காங்கிரஸ் – 1999ல் ஆரம்பிக்கப்பட்டது. 1999லிருந்து ஷரத் பவார் தலைவராக இருந்து வருகிறார்.

சிவசேனை – 1966ல் ஆரம்பிக்கப்பட்டது. 1966லிருந்து பால்தாக்கரே தலைவராக இருந்து வருகிறார்.

அதிமுக – 1972ல் ஆரம்பிக்கப்பட்டது. 1972லிருந்து எம்ஜியார் தலைவராக இருந்தார். அதன்பிறகு 1988லிருந்து செல்வி ஜெயலலிதா தலைவராக இருந்து வருகிறார்.

ஜனதா தளம் (மதசார்பற்ற) – 1999ல் ஆரம்பிக்கப்பட்டது. 1999லிருந்து எச்.டி.தேவகவுடா தலைவராக இருந்து வருகிறார்.

திமுக – 1949ல் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் அண்ணாதுரை இருந்தார். 1974லிருந்து கருணாநிதி தலைவராக இருந்து வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி – 1991ல் ஆரம்பிக்கப்பட்டது. 1991லிருந்து எஸ்.ராமதாஸ் தலைவராக இருந்து வருகிறார்.

சிரோமணி அகாலிதளம் – 1921ல் ஆரம்பிக்கப்பட்டது. 1992லிருந்து பிரகாஷ்சிங் பாதல் தலைவராக இருந்து வருகிறார்.

தெலுங்கு தேசம் கட்சி – 1983ல் ஆரம்பிக்கப்பட்டது. 1995லிருந்து சந்திரபாபு நாயுடு தலைவராக இருந்து வருகிறார்.

இந்திய தேசிய லோக்தள் – 1999ல் ஆரம்பிக்கப்பட்டது. 1999லிருந்து ஓ.பி.சவுதாலா தலைவராக இருந்து வருகிறார்.

மதிமுக – 1994ல் ஆரம்பிக்கப்பட்டது. 1994லிருந்து வைகோ தலைவராக இருந்து வருகிறார்.

ராஷ்ட்ரீய லோக்தளம் – 1999ல் ஆரம்பிக்கப்பட்டது. 1999லிருந்து அஜித்சிங் தலைவராக இருந்து வருகிறார்.

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட (தலித் கட்சி அல்லாத) எந்தக் கட்சியிலும் மாநிலத் தலைவராக எந்த ஒரு தலித்தும் பொறுப்பு வகித்தது இல்லை. ஆனால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் டாக்டர் எஸ்.கிருபாநிதி என்கிற தலித் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார்.

ஒரு தலித்தை கவர்னராக நியமித்த ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். திரு.சூரஜ்பானை உத்திரபிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் கவர்னராக நியமித்தது பாஜகதான்.

ஹரியானா மாநிலத்தில் சூரஜ்பான் என்கிற தலித் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார். பல்வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் மாநிலத்தலைவராக இன்றும் உள்ளனர். தற்போது பிரதம வேட்பாளர் மோடி – கனிதேலி என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக கருதப்படுகிறது.

தலித் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அதிகரித்தல்

ஆதிதிராவிட ஆய்வு மாணவர்களுக்கான ராஜிவ்காந்தி தேசிய கல்வி உதவித்தொகை முதன்முறையாக பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை ஆய்வாளர்களுக்கு (ஜே.ஆர்.எப்) இரு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்ட 16ஆயிரம் ரூபாய் 25ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூத்த ஆய்வாளர்களுக்கு (எஸ்.ஆர்.எப்) மீதமுள்ள ஆண்டுகளுக்கு 18ஆயிரம் ரூபாய் 28ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆய்வு உதவித்தொகை பெறும்காலம் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10989153_628036483997329_4718199531764690783_n Revision-of-fellowship-page-001

 

தலித் மக்கள், பிற்படுத்த மக்களுக்காக முத்ரா வங்கி

இன்று சிறு, குறு தொழில் செய்கிறவர்கள் பெரும்பான்மையான தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். அவர்களுக்கு வங்கியில் கடன் கிடைப்பதில்லை. அதனால் வாழ்க்கையில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணமுடிவதில்லை. இதற்காக கொண்டுவரப்பட்டதுதான் முத்ரா வங்கி.

02_03_2015_004_005

இப்படி அண்ணல் அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் கட்சியாக தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கட்சிதான் பாஜக. ஏதோ ஆட்சிக்கு வந்தவுடன் பீகார் தேர்தலுக்காக செயல்படும் கட்சி அல்ல பாஜக. அண்ணல் அம்பேத்கரின் கனவான தலித்துகளின் அரசியல் அதிகாரம், பொருளாதார அதிகாரம், சமூக அதிகாரம் இம்மூன்றையும் வென்றெடுக்கும் கட்சியாக செயலாற்றிக் கொண்டிருக்கும் கட்சியும் பாஜகதான்.

தினமும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கும் ஒரு அமைப்பு உலகத்தில் உண்டு என்று சொன்னால் அது ஆர்எஸ்எஸ்தான். ஏகாத்மாதா ஸ்தோத்திரத்தில் அண்ணல் அம்பேத்கரின் பெயரை தினமும் உலகம் முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் உணர்வோடு உச்சரித்துகொண்டுவருகிறார்கள். அதனில் பயிற்சிப்பெற்று வந்திருக்கின்ற திரு.நரேந்திரமோடி அண்ணல் அம்பேத்கரை உணர்வுபூர்வமாக நேசிப்பவர். அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை உள்வாங்கியவர். அவர் அண்ணலை போற்றுவது உணர்வுபூர்வமானது. அண்ணல் அம்பேத்கரை தினமும் உச்சரிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தாயாக ஏற்றுக்கொள்கிற பாஜக அண்ணல் அம்பேத்கரை போற்றுவது உணர்வுப்பூர்வமான செயல். பாஜக தேர்தல் அரசியலுக்காக ஒருபோதும் யாருக்கும் ஜால்ரா போடாது. அப்படிப்போட்டதாக வரலாறும் இல்லை.

25 Replies to “பாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா? அரசியலா?”

  1. மிக அழகான கட்டுரை. ஆம். ஆர்எஸ்எஸ்ஸில் தினசரி சொல்லப்படும் ஏகத்மதா மந்திரத்தில், பாரத நாட்டின் பெருமை மிக்க புராண, அக்கால, இக்கால முன்னோடிகளின் பெயர்களில் அம்பேத்கர் பெயரும் உண்டு. அவரது இயற்பெயரான பீமாராவ் என்ற பெயர் இதில் இடம்பெற்றுள்ளது

  2. நல்லகட்டுரை, ஆதாரங்களுடன் நன்றாகப் பகிர்ந்துள்ளீர்கள், எங்களுக்கு புரிகிறது. ஆனால் பெருவாரியான மக்களுக்கு இந்த விபரங்கள் சென்று சேர்வது எப்படி?

    இந்த தாமரை தொலைக்காட்சி ஏன் இன்னும் முன்னணிக்கு வரவில்லை? ஏனோ தமிழக பா.ஜ.க.வை நினைத்தால் நந்தவனத்தில் ஒரு ஆண்டி பாடல் நினைவிற்கு வருகிறது.

  3. உங்களின் கட்டுரையை முழுவதும் பொருமையுடன் படித்தேன். வாழ்த்துகள் . மேலும் அண்ணல் அம்பேத்கரை பெருமைபடுத்தும் விதமாக அண்ணலின் பிறந்தநாளான ஏப்ரல் 14 & அண்ணலின் நினைவு நாளான டிசம்பர் 6 ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறையாகவும் மதுபானக்கடைகளை மூடவும் அரசாணை ஒன்றை பிரகடனப்படுத்தனால் பா.ஜ.க வை இன்னும் பலர் நன்றியோடு நினைவுகூறுவர் என்பது பலகோடிகளில் ஒருவனாக வேண்டுகோள் வைக்கிறேன். நன்றி . ஜெய் பீம் !! ஜெய் பாரத் !!

  4. திரு தீரன் சொல்லி இருப்பது போல் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் இந்தச் செய்திகள் போய்ச் சேர வேண்டும். அதற்கான பிரசாரத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். எப்போதும் போல் மெத்தனமாக இருத்தல் கூடாது.

  5. இந்திரா காங்கிரஸ், திக மற்றும் விசிக ஆகிய மூன்றுமே ஒருவித மன நோய் பிடித்த குழுக்கள். இந்திரா காங்கிரஸ் தேசவிரோத கட்சி. திக தமிழ் மொழி மற்றும் தமிழ் இனவிரோத கம்பெனி. விசிக இவை எதிலும் சேரமுடியாத விசித்திரப்பிறவி. வரலாறு தெரியாமல் ஏதோ உலருவதே இவர்களின் தொழில். வெங்கடேசன் அவர்களின் கட்டுரையை படித்தும் திருந்த மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் வியாபாரம் படுத்துவிடும்.

  6. வழக்கம் போலவே ம.வெ. கட்டுரைகள் உண்மை மற்றும் ஆதாரங்களுடன் உள்ளது பாராட்டுக்கள் இவை பிரசாரப்படுத்தப்படவேண்டும்

  7. ஆப்ரஹாமிய சக்திகளுக்கு விலைபோயுள்ள த்ராவிட சக்திகள் ஹிந்து ஒற்றுமையைக் குலைக்க தொடர்ந்து சமூஹத்தில் பொய்ப்பரப்புரைகளை செய்து வருகிறார்கள். சமுதாயத்தை ஜாதியின் அடிப்படையில் ஒன்று சேராமல் பிளக்க முற்பட்டு வருகிறார்கள்.

    தேச ஒற்றுமையிலும் சமுதாய ஒற்றுமையிலும் நாட்டமுள்ள சக்திகள்…… அனைத்து பாரத மக்களும் ஜாதி, மொழி, மதங்கள் கடந்து எப்படி ஒற்றுமையைத் தங்கள் செயல்பாடுகளில் பேணுகிறார்கள் என்ற விஷயம் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். தொடர்ந்து செய்யப்பட வேண்டும்.

    சமூஹ விரோத சக்திகளுக்கு எதிராக …………… ஜாதி வெறி மிகுந்த………. மக்களை ஜாதியின் அடிப்படையில் நிரந்தரமாக தனித்தனித் தீவுகளாக மட்டிலும் வைத்திருக்க விழையும் இந்தசக்திகளது…… பொய்ப்பரப்புரைகள் அனைத்தும் தொடர்ந்து தரவுகள் சார்ந்து மறுதலிக்கப்பட வேண்டும். ஹிந்துத்வ தரப்பிலிருந்து நிறைய உண்மைகளை பொதுதளத்தில் வைக்க நிறைய எழுதப்பட வேண்டியிருக்கிறது.

    பேரன்பிற்குரிய ஸ்ரீ ம வெங்கடேசன் ஜீ அவர்களை இப்படிப்பட்ட ஒரு செயற்பாட்டின் ஊற்றுக்கண்ணாகவே காண்கிறேன். மற்றைய ஹிந்துத்வ சஹோதரர்களை இப்படிப்பட்ட வ்யாசங்களை தொடர்ந்து பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களது அபிலாஷையான தலித் சமூஹ முன்னேற்றத்துக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமும் பாரதீய ஜனதா கட்சியும் எப்படி பங்களிக்கின்றன என்பது ஸ்ரீ ம.வெ அவர்களால் ………… பல படிநிலைகளாக………… பற்பல செயற்பாடுகளின் வாயிலாக…………. முழுமையான தரவுகள் சார்ந்து……….அருமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

    ஏகாத்மதா ஸ்தோத்ரத்தில் ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் மட்டுமின்றி பாரதத் தாய் பெற்றெடுத்த தலித் சமுதாயத்தில் பிறந்த ………….தலித் சமுதாய முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட…………ஒட்டு மொத்த ஹிந்து சமூஹமும் தினந்தோறும் காலையில் நினைவுறுத்தி துதிக்க வேண்டிய ………… மேலும் சில சான்றோர்களையும் இங்கு நினைவு கூற வேண்டும்.

    ठक्करो भीमरावश्च फुले नारायणो गुरुः

    டக்கரோ பீமராவஸ்ச ஃபுலே நாராயணோ குரு :

    டக்கர் பப்பா என்று அறியப்படும் அம்ருத்லால் வித்தல்தாஸ் டக்கர்

    பீமராவ் என்று துதிக்கப்படுவது ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர்

    ஃபுலே என்று துதிக்கப்படுவது மஹாத்மா ஜ்யோதிராவ் கோபிந்த்ராவ் ஃபுலே

    இவரையடுத்து தக்ஷிணபாரதத்தில் கேரளத்தில் தாழ்த்தப்பட்ட சஹோதரர்களுடைய ஆன்மீக மற்றும் சமுதாய முன்னேற்றத்துக்கு வழிவகுத்த ஸ்ரீ நாராயண குரு.

    இந்த வ்யாசத்தில் பகிரப்பட்ட ஒரு கருத்தில் பிழை இருக்கிறது என்றுபடுவதால் அதற்கு மாற்றுக்கருத்தை முன்வைக்கிறேன்.

    \\ 1885ல் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இதுவரை எந்த ஒரு தலித்தும் வந்ததில்லை. திறமை இருந்தும் காங்கிரசில் தலித்துகள் தேசியத் தலைவராக வர முடியாத சூழ்நிலையே அந்தக் கட்சியில் உள்ளது. \\

    மதிப்பிற்குரிய ஸ்ரீ சீதாராம் கேசரி அவர்கள் காங்க்ரஸ் கட்சியில் முதலில் பொருளாளராக இருந்து பின்னர் கட்சித் தலைவராக இருந்தவர். இவர் வால்மீகி எனும் தலித் சமுதாயத்தைச் சார்ந்த அன்பர். மறைந்த பாரத ப்ரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி அவர்களது நம்பிக்கைக்கு பாத்ரமாக இருந்தவர். ந காதா ந பய் ஜோ கேசரி கெஹ்தா ஹை ஒஹி சஹி என்று ஒரு வசனமே இவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு. na katha na bahi jo kesri kehta hai ohi sahi. நோட்டாவது பொஸ்தகமாவது கேசரி சாஹேப் சொல்வதே கணக்கு வழக்கு என்பது பொருள்.

    இந்தத் தகவல் பிழை சுட்டுவதற்காகச் சொல்லப்பட்டது என்று அன்பின் ஸ்ரீ ம.வெ அவர்கள் எண்ண வேண்டாம்.

    கட்சி வேறுபாடுகளின்றி எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி கட்சிக்காகப் பணியாற்றிய தலித் சமூஹத்தைச் சார்ந்த ஒரு அன்பருக்கு அவரது பணியை வெகுமானிக்கும் விதமாக கட்சியின் உயர்ந்த பொறுப்புநிலைகள் அளிக்கப்படுவது பாராட்டத் தகுந்த விஷயமே. காங்க்ரஸ் கட்சி என்ற ஸ்தாபனம் ஹிந்துஸ்தானத்துக்கு மிகப்பல கெடுதிகளைச் செய்திருந்தாலும் இந்த ஸ்தாபனம் இதற்கு உழைத்த ஸ்ரீ சீதாராம் கேசரி அவர்களுக்கு அவருக்கு உரிய ஸ்தானத்தை அளித்தமை போற்றுதலுக்குரியதே.

    ஹிந்துத்வ ஆதர்சங்களைப் பின்பற்றும் எமக்கு இதில் உகப்பு உள்ளது என்ற படிக்கு இந்தக் கருத்து பகிரப்பட்டுள்ளது.

    ஜெய் பீம்.

  8. அன்புள்ள க்ருஷ்ணகுமார் ஐயா அவர்களுக்கு

    திரு.சீதாராம் கேசரி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி சொல்லியிருக்கிறார்.
    ‘காலஞ்சென்ற சீதாராம் கேசரி காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்தவர்.
    சோனியா காந்தி அவர்கள் அவருக்குப் பிறகுதான் அந்த பொறுப்பை ஏற்றார். சீதாராம் கேசரி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கு தந்தைபெரியாரின் ஆங்கில மொழியாக்க நூல்களை அளித்திருந்தோம்.’ என்று அவர் கூறுகிறார்.
    https://thenkoodu.in/index.php/manage_blogs.php?blogid=79552&url=thamizhoviya.blogspot.com/2014/07/blog-post_16.html
    மேலும் பார்க்க,
    Sitaram Kesari was from a backward class. Soniaji wanted him out of her way: Modi
    https://twitter.com/firstpost/status/463284355310182400

  9. //சமூஹ விரோத சக்திகளுக்கு எதிராக …………… ஜாதி வெறி மிகுந்த………. மக்களை ஜாதியின் அடிப்படையில் நிரந்தரமாக தனித்தனித் தீவுகளாக மட்டிலும் வைத்திருக்க விழையும் இந்தசக்திகளது…… பொய்ப்பரப்புரைகள் அனைத்தும் தொடர்ந்து தரவுகள் சார்ந்து மறுதலிக்கப்பட வேண்டும்….//

    கிருஷ்ண குமார் அவர்களே.. இதை முறியடிக்கும் விதமாக இந்து அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன. இங்கு தமிழ்நாட்டில் தான் சாதியை வைத்து லாபம் அடையும் தி.மு.க, தி.க, விடுதலை சிறுத்தைகள் போன்ற ஆபிரகாமிய கைக்கூலி தேச விரோத சக்திகள் இருக்கின்றன,அதனால் தங்களின் இந்து அமைப்புகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சரி மேற்ப்படி தேச விரோத கைக்கூலிகள் இல்லாத வட மாநிலங்களில் குறிப்பாக பா.ஜ.க ஆளும் வடமாநிலங்களில் எப்படி ஆதிக்க சாதி இந்துக்களும் தலித் மக்களும் திருமண உறவு கொண்டு சமத்துவமாக தான் வாழ்கிறார்களா. சாதிக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகளை அக்கட்சியும், இந்து அமைப்புகளும் இதுவரை எடுத்து இருக்கின்றன என்பதைக் பட்டியலிட்டால் மிக நன்றாக இருக்கும் அதை பின்ப்பற்றி தமிழ்நாட்டை சாதிய சீர்கேடில்லாத மாநிலமாக மாற்றலாம்.

  10. அன்பின் ஸ்ரீ ம.வெ

    என் புரிதல் தவறானது.

    ஸ்ரீ சீதாராம் கேசரி அவர்கள் வால்மீகி சமுதாயத்தைச் சார்ந்தவர் இல்லை. இந்தத் தகவல் தவறானது.

    ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரா என்பது குழப்பமாக உள்ளது

    https://books.google.co.in/books?id=OAkW94DtUMAC&pg=PA428&lpg=PA428&dq=low+caste+sitaram+kesri&source=bl&ots=lRpWwamyQe&sig=bq_DkolTnDWiOadP21h9yuYySEg&hl=en&sa=X&ei=toQ8VbDwCtSeugSz4IGwBw&ved=0CEoQ6AEwCA#v=onepage&q=low%20caste%20sitaram%20kesri&f=false

    மேற்கண்ட உரல் இவர் பனியா சமூஹத்தைச் சார்ந்தவர் என்னுகிறது

    https://en.wikipedia.org/wiki/Talk:Vaishya/Archive_1

    மேற்கண்ட உரல் பனியா சமூஹத்திலும் பட்டியல் ஜாதியினர் உண்டு என்றும் ஸ்ரீ சீதாராம் கேசரி பட்டியல் ஜாதியைச் சார்ந்தவர் என்று குறிப்பிடுகிறது.

    குழப்பியதற்கு மன்னிக்கவும்.

    ஆனால் மிகத் தெளிவான குழப்பமில்லாத விஷயம்………… சங்கம் மற்றும் ஹிந்துத்வ இயக்கங்களில் …………. ஜாதி ஏற்றத்தாழ்வுகளில்லாமல் இயக்கத்தில் பங்கு பெறும் அன்பர்கள் சஹோதரர்களாகப் பழகுவது .

  11. ////////////ஆனால் பெருவாரியான மக்களுக்கு இந்த விபரங்கள் சென்று சேர்வது எப்படி?

    இந்த தாமரை தொலைக்காட்சி ஏன் இன்னும் முன்னணிக்கு வரவில்லை? ஏனோ தமிழக பா.ஜ.க.வை நினைத்தால் நந்தவனத்தில் ஒரு ஆண்டி பாடல் நினைவிற்கு வருகிறது.///////////

    அன்பு சகோதரரே! நானும் இங்கே பலமுறை எடுத்து சொல்லிவிட்டேன். ஆனால் அதை காது கொடுத்து கேட்கத்தான் யாருமில்லை. சில நேரத்தில் சீ! போ, என்று வெறுத்து போய் இனிமேல் இந்த இணைய தளத்திற்கே வரகூடாது என்று கூட இருந்ததுண்டு. ஆனாலும் என்னால் அந்த வைராக்கியத்தை காப்பாற்றமுடியவில்லை. தோல்வியை ஒப்புகொள்கிறேன். தமிழ் நாட்டில் பிஜேபி கட்சி வளரவேண்டுமே என்ற அடிமனதில் இருக்கும் தீவிர எண்ணம்தான் என்னை (அவமான்பட்ட பின்னும்) மீண்டும் மீண்டும் இழுத்து வருகிறது

    மேற்படி அருமையான கட்டுரையை (அந்த குறிபிட்ட டிவி விவாதத்தை பார்த்த) அனைவரும் படிப்பார்கள் என்று நீங்கள் நினைகிறீர்களா? சத்தியமாக கிடையாது. அப்படியானால் அந்த விவாதத்தை பார்த்த அப்பாவி ஜனங்கள் அனைவரும் பிஜேபி பற்றி என்ன நினைப்பார்கள்.? அவர்களின் சந்தேகங்கள் எல்லாம் முறையாக தீர்க்கபடாவிட்டால் அந்த கட்சி பற்றிய தவறான எண்ணங்கள் அகலவே அகலாது. அதனால்தான் அந்த கட்சி தமிழ் நாட்டில் வளர மாட்டேன்கிறது.என்பது உங்களுக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன். நேற்று பொறந்த கட்சிக்காரன் எல்லாம் மேடை ஏறி பிஜேபி யைப்பற்றி (ஆளில்லாத அநாதை கட்சி, கொடி பிடிக்க கூட ஆள் இல்லாத கட்சி என்றெல்லாம்) ரொம்ப கேவலமாக பேசுகின்றனர். நான் அந்த கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க எங்க ஊரில் பல இடங்களுக்கு சென்றபோது பலர் “”‘அது ஒரு கட்சியா? வகுப்பு வாதத்தை வளர்க்கும் கட்சி. அது இருக்கும் வரை நாட்டில் ரத்த ஆறுதான் ஓடும். போய் எதுனா நல்ல வேலையை பாரு சார்””” என்று முகத்தில் அடித்தாற்போல சொன்னார்கள். ஆக, அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஆழமாக தவறான எண்ணங்கள் பதிந்துள்ளன. அவற்றை மாற்ற கட்சியில் உள்ள எவரும் என்ன செயலாம் என்று யோசித்ததே இல்லை. அவர்கள் யோசனை எல்லாம் எதில்தான் உள்ளது என்றே தெரிந்து கொள்ளமுடியவில்லை.

    திரு ம. வெங்கடேசன் கூட இங்குதான் மறுப்புகளை எழுத முடிகிறது. இதையே Lotus டிவி யில் (அந்த குறிப்பிட்ட ””டிவி விவாத கருத்துக்களுக்கு மறுப்பு”’ என்ற தலைப்பில்) 3 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பினால் அவற்றை பலர் கேட்க வாய்ப்புள்ளது. ஒ! இப்படியா சமாச்சாரம் என்று உண்மையை உணர்ந்து அந்த புளுகாண்டி மன்னர்களை (=டிவி விவாதம் செய்தவர்கள்) காரி காரி துப்புவார்கள்.அந்த lotus டிவி ஒரு சாவு கிராக்கி டிவி. அந்த டிவி திருச்சி சுவாமிஜியின் ஜோசியம், ”பலான பலவீனத்திற்கு மாத்திரை” விளம்பரம் போன்ற இவைகளில் தான் அக்கறை காட்டுகிறார்கள்.((அந்த டிவி ஏன் முன்னணிக்கு வரவில்லை என்று உங்களுக்கு இப்போது புரிகிறதா?) நம்ம பிஜேபி தமிழ் நாட்டு தலைவர் ஒரு சரியான தூங்கு மூஞ்சி தலைவர். எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் கட்சி வளரும் என்று யோசித்து பார்ப்பதே இல்லை. ஆனால் மேடையேறினால் ”2016ல் நாங்கள் ஆட்சியில் அமர்வோம்” என்று பேசுவதில் மட்டும் ஒண்ணும் குறைச்சலே இல்லை.

    சகோதரா! உங்களை போலவே தமிழ் நாட்டில் வாழும் பலருக்கு (தமிழக) பிஜேபி யை பார்த்தால் அந்த பாட்டை பாடத்தான் தோணுது . திரு எம். வெங்கடேசன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: ((நீங்களாவது செவி மடுப்பீர்களா என்று தெரியவில்லை – ஆண்டவனுக்குத்தான் தெரியும்)). உங்கள் கட்டுரைகளை “விஜயபாரதம்” வார இதழில் வெளிவர செய்தால் அனைத்து ஊர்களிலும் உள்ள அரசு லைப்ரரி வாசகர்களாவது படித்து உண்மையை உணர்வார்கள். செய்வீர்களா? “Lotus டிவி” யில் உங்கள் மறுப்பு கருத்துக்களை கூற உங்களால் முடியுமா? அவர்களை தொடர்பு கொண்டு முயன்று பாருங்கள். வாழ்த்துக்கள்

  12. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

    \\ சாதிக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகளை அக்கட்சியும், இந்து அமைப்புகளும் இதுவரை எடுத்து இருக்கின்றன என்பதைக் பட்டியலிட்டால் மிக நன்றாக இருக்கும் அதை பின்ப்பற்றி தமிழ்நாட்டை சாதிய சீர்கேடில்லாத மாநிலமாக மாற்றலாம். \\

    ஒரு ஜாதிக்காரர் அடுத்த ஜாதிக்காரரை விவாஹம் செய்து கொள்வது என்பது கிட்டத்தட்ட ஒரு கடைசீப்படி. அந்த இலக்கு கை சொடுக்கில் நிகழ்ந்து விடக்கூடிய ஒரு சமாசாரம் இல்லை. அந்தப் படிக்கு செல்ல வேண்டிய பாதை வெகுதூரம்.

    முதல் படியாக வெவ்வேறு ஜாதியினர், வெவ்வேறு மொழியினர்………… சற்று இன்னமும் விரிவாக வெவ்வேறு மதத்தினர் தேச ஒற்றுமைக்காகவும் தேசப்பணிக்காகவும் தினசரி கூடி ஒருவருடன் ஒருவர் அளவளாவுதல்……………. மனிதர்களிடையே இடைவெளியைக் குறைக்கும். பரஸ்பர விரோதங்களைக் குறைக்கும்.

    இதை அன்றாடப் பணியாக ஷாகாக்களில் நிகழ்த்தி வருவது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம். ஜாதி என்ற அலகீடு இல்லாமல் ஹிந்துக்களை ஹிந்துக்களாக மட்டிலும் ஒருங்கிணைக்கும் முயற்சி தொடர்ந்து நடை பெறுகிறது. இன்றைய திகதியில் ஹிந்துஸ்தானமளாவி தினசரி கிட்டத்தட்ட ஐம்பது லக்ஷத்துக்கும் மேற்பட்ட அன்பர்கள் இப்படிப்பட்ட தினசரி ஷாகாக்களில் கூடுகிறார்கள்.

    அண்டைய நாடான நேபாளத்தில் பூகம்பம் நிகழ்ந்ததும் இருபத்துநாலு மணிநேரத்துக்குள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அல்லலுறும் மக்கள் என்ன ஜாதி என்ன மதம் என்று பாராது………… அல்லது உதவி செய்கிறேன் பேர்வழி என்று மதமாற்றத்தை குறிக்கோளாகாக் கொண்டு பணியாற்றாது………. உதவுவதை மட்டிலுமே குறியாயக் கொண்டு அவர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த குழுவாக மீட்புப்பணி செய்ய நேபாளம் சென்றுள்ளார்கள் ஸ்வயம் சேவகர்கள்.

    இந்த இயக்கப் பயிற்சிகளே ஹிந்துஸ்தானத்திற்குத் தலைமுறை இடைவெளிகள் இல்லாமல் தலைவர்களைத் தொடர்ந்து அளித்து வருகிறது. அனைத்து ஜாதிகளிலிருந்தும் தலைவர்களை அளித்து வருகிறது. ஜாதிகளைக் கடந்து ஒருங்கிணைந்து சமூஹத்துக்குப் பாடுபடும் மாண்பை சங்கத்தின் அன்றாடப் பயிற்சியே இவர்களுக்கு அளித்து வருகிறது. சங்கப்பயிற்சி முகாமிற்கு நீங்கள் ஒருமுறை சென்று பாருங்கள்.

    இப்படிப்பட்ட இயக்கப்பயிற்சி பெற்ற அன்பர்களில் ஜாதி இணக்க விவாஹம் செய்தவர்களும் உண்டு. மாற்று மதத்திலிருந்து விவாஹம் செய்தவர்களும் உண்டு. தமிழகத்திலும் சங்கப் பணி சிறப்பாக நடைபெறுகிறது.

  13. வாழ்க RSS , வாழ்க பிஜேபி, வாழ்க தமிழ் ஹிந்து பணி,
    வாழ்க தமிழகம், வாழ்க பாரதம்.

  14. //ஒரு ஜாதிக்காரர் அடுத்த ஜாதிக்காரரை விவாஹம் செய்து கொள்வது என்பது கிட்டத்தட்ட ஒரு கடைசீப்படி. அந்த இலக்கு கை சொடுக்கில் நிகழ்ந்து விடக்கூடிய ஒரு சமாசாரம் இல்லை. அந்தப் படிக்கு செல்ல வேண்டிய பாதை வெகுதூரம்.//

    வெகுதூரப் பாதைதான் என்றாலும் அது ஒரு நாள் வந்தே தீரும். ஆனால் மொழி வாரியாகப் பிரிந்து கிடக்கின்ற இந்த நாட்டில் ஒருங்கிணைந்த நிலை எப்போது வரும் ? கன்னடத்துக்கு ஹிந்தி ஆகாது, ஹிந்திக்கு மலையாளம் ஆகாது, தெலுங்குக்கு ஓடிஸா ஆகாது, வங்கத்துக்கும், தமிழுக்கும் எதுவுமே ஆகாது. ஒவ்வொரு மாநிலத்தில் எடுத்துக்கொண்டாலும் அங்கும் மொழிப் பிளவு. நாக்பூரில் போய் மகாராஷ்டிரா என்று சொன்னேன். அங்கு ஒருவர் உடனே பாய்ந்தார் – நாங்கள் மராத்தி அல்ல – எங்களது தேசம் விதர்பா என்றார். தமிழ் நாட்டையே எடுத்துக் கொள்ளுங்களேன். இங்கு தாயுமானவன் தமிழ்க் காவலனாக இருக்கின்றார். ஒரு வேளை தனித் தமிழ் நாடாக ஆகிறது என்றே வைத்துகொள்வோம். அப்போது எங்கள் தொண்டை மண்டலத்து கதி என்ன . வந்து பாருங்கள் தெரியும் – மொழியிலும் வறட்சி, ஆறுகளிலும் வறட்சி.

    இப்படி நாடு முழுவதும் மொழி வெறி இருக்கின்றபோது சாதி மட்டும் வெகு சீக்கிரம் ஒழியும் என்று எப்படி சாதி மட்டும் சீக்கிரம் ஒழியும் என்று நினைக்கின்றீர்கள் ?

  15. \\ வெகுதூரப் பாதைதான் என்றாலும் அது ஒரு நாள் வந்தே தீரும். \\

    வந்து கொண்டு தான் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளிலும் உபஜாதிகள் காலி.

    ஜாதி விட்டு ஜாதி விவாஹம் மதம் விட்டு மதம் விவாஹம் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முன்னது சர்வ சாதாரணம். பின்னது அங்கொன்று இங்கொன்றாக விதிவிலக்கு. ஆனாலும் பின்னதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

    \\ இங்கு தாயுமானவன் தமிழ்க் காவலனாக இருக்கின்றார். ஒரு வேளை தனித் தமிழ் நாடாக ஆகிறது என்றே வைத்துகொள்வோம். அப்போது எங்கள் தொண்டை மண்டலத்து கதி என்ன . வந்து பாருங்கள் தெரியும் – மொழியிலும் வறட்சி, ஆறுகளிலும் வறட்சி. \\

    ம்………….ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களிடம் தமிழகத்திலும் வன்னியநாடு என்ற கருத்தாக்கம் உள்ளதே. வன்னியநாடு அன்னியருக்கில்லை என்று முழக்கமெல்லாம் கூட தமிழகத்தில் கேட்டிருக்கிறோமே என்று வினவியிருந்தேன். ஆந்த்ரப்ரதேசத்தை இரு துண்டாக்கியது போல ………….தமிழகத்தை இரு துண்டாக்க தமிழகத்து அரசியல் சக்திகள் …………ஜாதி என்ற கருத்தாக்கத்தின் மீது வேறேதாவது ப்ராந்தியம் என்பது போல முகமூடி அணிந்து தமிழகத்தைக் கூறுபோட விழைந்தால்…………. ஒப்புக்கொள்வீர்களா என்று வினவியிருந்தேன்………… அவர் வர்க்கம் சொர்க்கம் என்று வேறு ஏதேதோ சொல்லியிருந்தார். ஆனால் எந்த அலகீடிலாவது தமிழகம் தமிழகத்து மக்களால் கூறு போடப்படுவது ஒப்புக்கொள்ளப் படவேண்டுமா என்பதற்கு அவர் கருத்து என்ன என்பது புரிபடவில்லை.

    மொழி வாரி மாகாணம் என்ற குளறுபடியை இன்னமும் குளறுபடி செய்து ஆந்த்ரம் பிளக்கப்பட்டது தவறு. பாஜக வே அதை ஆதரித்திருந்தாலும் கூட சரி. பக்கத்து மாகாணத்து காத்து தமிழகத்தில் அடிக்காது என என்ன நிச்சயம்?

    ஆனால் மொழி, ஜாதி இவைகள் கடந்து …………. ஏன் மதம் என்ற ஒரு கருத்தாக்கம் கூட கடந்து அனைத்து ஹிந்துஸ்தானியரையும் ஒன்றிணைக்கும் சக்தி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்.

  16. திரு. கிருஷ்ண குமார்…..

    //ஜாதி விட்டு ஜாதி விவாஹம் மதம் விட்டு மதம் விவாஹம் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முன்னது சர்வ சாதாரணம்.//

    மிகவும் அபத்தமான கருத்து. இந்தியா முழுவதும் சாதிய கலப்பு திருமணங்கள் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளனவோ அதை விட கலப்பு திருமணங்களுக்கு எதிரான “கௌரவ கொலைகளும்” இந்நாட்டில் அதிகரித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு செய்தி நாளேட்டில் படித்ததாக நினைவு “2013ஆம் ஆண்டைக் காட்டிலும் 2014ஆம் ஆண்டில் இந்த மேற்ப்படி கௌரவ கொலைகளின் எண்ணிக்கை 6% உயர்ந்திருப்பதாக தேசிய குற்ற புலனாய்வு துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக அந்த பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. முடிந்த அளவிற்கு அதற்க்கான ஆதாரத்தை பருண்மையாக திரட்டி தர முயற்சிக்கிறேன்.

    இங்கு நடக்கும் திருமணங்களில் நூற்றுக்கு 90% திருமணங்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட அகமண முறைப்படியிலான திருமணங்கள் தான் எனும்பொழுது எப்படி கிருஷ்ண குமார் அவர்கள் கலப்பு திருமணங்கள் அதிகரித்து விட்டதாக கூறுகிறார் என்பது “சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம்” என்று கீதையில் கூறி அருளிய அந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு தான் வெளிச்சம்.

    //ம்………….ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களிடம் தமிழகத்திலும் வன்னியநாடு என்ற கருத்தாக்கம் உள்ளதே. வன்னியநாடு அன்னியருக்கில்லை என்று முழக்கமெல்லாம் கூட தமிழகத்தில் கேட்டிருக்கிறோமே என்று வினவியிருந்தேன்.//

    இப்பொழுதும் கூறுகிறேன், இந்தியா….. தப்பு.. தப்பு .. ஹிந்துஸ்தானம் என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடாரம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

    பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இங்கிருக்கும் மக்கள் “இந்தியநாடு இந்தியருக்கே” என்று எழுப்பிய கோசம் முற்போக்கானதாகவும் தேசபற்று மிக்கதாகவும் தங்களின் காதுகளில் தேனாக பாய்கின்ற பொழுது. தமிழ்நாடு தமிழருக்கு என்பதில் எந்த பிற்போக்கு தனமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதுத் தவிர வன்னிய நாடு, வேளாளர் நாடு என்பதெல்லாம் கடைந்தெடுத்த சாதிய பிழைப்பு வாதம் தான் என்பது அந்தந்த சாதி உழைக்கும் மக்களுக்கு நன்கு தெரியும். மேலும், நம்மை 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள் கூட இந்நாட்டு மக்களின் மீது ஆங்கிலத்தை வலிந்து திணித்ததில்லை, ஆனால் அதிகாரம் கைமாறிய மறுநிமிடமே இந்தி என்கிற மொழியை தமிழ் மக்களின் தலையில் திணித்த பிற்ப்போக்கான “சுயராஜ்யம்”!!!!!! நம்முடையதாகத் தான் இருக்கும்.

    இதற்க்கு மேலும் நீங்கள் தமிழ் தேசிய இனப் போராட்டத்தை இங்கிருக்கும் சாதி வெறி கைக்கூலிகளின் ஊளை சத்தத்துடன் ஒப்பிட்டால், இந்திய சுதந்திர போரையும் அவ்வாறு தான் நாங்கள் ஒப்பிட வேண்டி வரும். இந்தியாவில் இருந்து தமிழ்நாடோ அல்லது காஸ்மீரமோ தனி நாடக போவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்களோ நானோ அல்ல. அந்தந்த மாநிலத்தின் மக்களே தான்!!!

    //ஆனால் மொழி, ஜாதி இவைகள் கடந்து …………. ஏன் மதம் என்ற ஒரு கருத்தாக்கம் கூட கடந்து அனைத்து ஹிந்துஸ்தானியரையும் ஒன்றிணைக்கும் சக்தி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்.//

    உலகமே ஒரு நிமிடம் கதிக் கலங்கி ஸ்தம்பித்து நின்று விட்டது போங்கள். தங்களின் சித்தத்தை தெளிய வைத்து, உண்மையை புலப்படுத்த எம் இறைவனாம் சிவபெருமான் தங்களுக்கு அருள்புரிவாராக. ஈசனின் திருவடி தங்களுக்கு எப்போதும் துணை இருப்பதாக. நம சிவாய

  17. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

    \\ மிகவும் அபத்தமான கருத்து. இந்தியா முழுவதும் சாதிய கலப்பு திருமணங்கள் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளனவோ அதை விட கலப்பு திருமணங்களுக்கு எதிரான “கௌரவ கொலைகளும்” இந்நாட்டில் அதிகரித்திருக்கிறது \\

    ஜாதி என்பது மனிதர்களால் மனிதர்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு அமைப்பு. சமய நூற்கள் விதிக்காத ஒரு அமைப்பு. இவை ஒன்றுடன் ஒன்று கலப்பது காலத்தின் கட்டாயம்.

    ஜாதி இணக்க விவாஹங்களுக்கு எதிராக கொலைகள் வன்முறைகள் இவையெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் ஜாதி இணக்க விவாஹங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கின்றன தானே.

    \\ இங்கு நடக்கும் திருமணங்களில் நூற்றுக்கு 90% திருமணங்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட அகமண முறைப்படியிலான திருமணங்கள் \\

    இதே தளத்தில் ஸ்ரீ சேக்கிழான் அவர்கள் எழுதிய இது சம்பந்தமான ஒரு வ்யாசத்தை தாங்கள் வாசித்துப் பார்க்கவும். சமூஹம் காலத்தின் கட்டாயத்தால் ஜாதி இணக்கம் என்ற பாதையில் நிச்சயமாக நகரத் தொடங்கி விட்டது. மெதுவான ஆனால் உறுதியான பயணம் அது.

    \\ ஹிந்துஸ்தானம் என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடாரம் தான் \\

    ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களுடைய ஹாஸ்ய ரசத்தை ரசிக்கிறேன்.

    \\ இதற்க்கு மேலும் நீங்கள் தமிழ் தேசிய இனப் போராட்டத்தை \\

    அப்படீன்னா என்ன?

    தமிழகத்தில் இருக்கும் தமிழர்களையெல்லாம் க்றைஸ்தவராக மாற்ற வேண்டும் என்று ரெபெக்கா என்ற ஒரு அம்மணி இந்த தளத்தில் கூசாது அறைகூவல் விட்டார்களே அதை நீங்கள் தமிழ் தேசிய இனப்போராட்டம் என்று சொல்லுகிறீர்களா?

    அல்லது நாம் டம்ளர் என்ற ஒரு கும்பலின் தலைவரான சீமார் என்ற ஒரு அன்பர் தெருத்தெருவாக சைவ சமயத்தையும் லிங்க வழிபாட்டையும் இழிவு செய்து வருகிறாரே அதைச் சுட்டுகிறீர்களா?

    அல்லது மசூதியில் அரபியில் மட்டும் தொழுபவர்கள் தமிழகத்தை இஸ்லாமிய மயமாக்க………. இஸ்லாமிக் ஸ்டேட் ……. போன்ற அமைப்புகளுடன் கைகோர்த்து தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்களே? அதைச் சுட்டுகிறீர்களா?

    புறச்சமயங்களுக்கு புறநாடுகளின் பணத்தால் தமிழர்களை விலைபேசும் ஒரு அமைப்பினையோ அல்லது ஒரு இயக்கத்தினையோ தேசியம் என்று சொல்லுகிறீர்களா?

    தமிழ் தேசிய இனப்போராட்டம் என்பது தமிழகத்தில் ஆப்ரஹாமியர்களால் விலை பேசப்பட்டு ………… ஆப்ரஹாமியர்களால்…….. ஆப்ரஹாமியர்களுக்காக………. ஆப்ரஹாமியத்துக்காக நடைபெறும் ஒரு கேலிக்கூத்து………. இதன் ஒரு அங்கமாகவே தமிழகத்து கோவில்கள் புனருத்தாரணம் என்ற பெயரில் மண்வீச்சடிக்கப்பட்டு பாழாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே கோவில் நிலங்கள் ஆப்ரஹாமியரால் கபளீகரம் செய்யப்பட்டு வருவதை ………. இந்த உதிரி இயக்கங்கள் ஆதரித்து வருகின்றன.

    \\ உலகமே ஒரு நிமிடம் கதிக் கலங்கி ஸ்தம்பித்து நின்று விட்டது போங்கள். தங்களின் சித்தத்தை தெளிய வைத்து, உண்மையை புலப்படுத்த எம் இறைவனாம் சிவபெருமான் தங்களுக்கு அருள்புரிவாராக. ஈசனின் திருவடி தங்களுக்கு எப்போதும் துணை இருப்பதாக. நம சிவாய \\

    ஈசனின் கோவிலில் சமயம் சார்ந்த அக்கறை ஹிந்துத்வ இயக்கங்களுக்கு மட்டிலும் தான். ஆர் எஸ் எஸ் போன்ற ஹிந்துத்வ இயக்கங்கள் மட்டிலும் தான் தொடர்ந்து கோவில்களில் உழவாரப்பணி போன்ற பணிகளை செய்து வருகின்றன. இந்தக் கோவில் நிலங்களை ஆப்ரஹாமியருக்கு தாரை வார்க்க முனைவதில் தமிழ் தேசிய உதிரி இயக்கங்கள் அயராது பாடுபட்டு வருகின்றன.

    சத்ய ஸ்வரூபனான சிவபெருமான் தங்களுக்கு உண்மையை நிச்சயம் புலப்படுத்துவார் ஐயா. ஈசனின் திருவடி நீழல் எப்போதும் தங்களுக்கு துணை இருப்பதாக. நம சிவாய.

  18. அன்பின் ஸ்ரீ தாயுமானவன், உங்கள் பகற்கனவினை கலைக்கும் படிக்கான ஓரிரு நிகழ்வுகள் :-

    ஒரு இஸ்லாமிய அராபியர் ………….. அது தாங்க………… நம்முடைய அன்பார்ந்த ஜெனாப் சுவனப்ரியன் சாஹேப் அவர்கள் பணிசெய்யும் நாட்டிலிருந்து ஒரு அராபிய முஸ்லீம்…………ஹிந்துஸ்தானம் வந்து இங்கு மக்கள் ஒருங்கிணைந்து வாழும் பாங்கை விதந்தோதும் விஷயம்………
    ………………

    யானையில் செல்லும் மக்கள் – கலாஃப் அல் ஹர்பி என்ற அரபு முஸ்லிம் எழுதிய பதிவு அரபு நாளேடுகளில் வந்துள்ளது. அதன் மொழி மாற்றம் உங்களுக்காக. எழுதியது ஒரு RSS குண்டன் அல்ல. அரேபிய முஸ்லிம்.

    அதிசயங்களின் நாடான இந்தியாவில் இருந்து இதை நான் எழுதுகிறேன். இந்த தருணம் நான் அரேபியர்களின் கனவு நகரமான மும்பையில் இருக்கிறேன்.

    நாற்புறமும் பாயும் மனித கடல்கள் நிறைந்துள்ளது இங்கு. இதே உடையில் சென்றால் சட்டென்று அடையாளம் கண்டு உள்ளூர்காரனில்லையே என்று சந்தேகக்கண்ணோடு நோக்குவார்கள். உடனே எங்கிருந்து வருகிறோம் என்ற ஆராய்ச்சி தொடரும்.

    மும்பையில் ராஜபோகமாக விண்ணை முட்டும் கட்டிடங்களின் அருகேயே தகரத்தை கூரையாக கொண்டு வாழும் சேரிகள் உண்டு. எப்படி இவர்கள் இருவரும் எந்த பிரச்சனையும் இன்றி வாழ்கிறார்கள் என்று சொல்லி புரியவைக்க முடியாது. வந்து பார்த்தால்தான் தெரியும்.

    இந்தியாவில், நூற்றுக்கணக்கான மொழிகளும், மதங்களும் உள்ளன. ஆனால் இங்குள்ள மக்களால் அமைதியாக ஒற்றுமையாக வாழ முடிகிறது. எல்லோரும் ஒன்றாக கை கோர்த்து, ஊசி முதல் ராக்கெட் வரை தயாரிக்கும் ஒரு பலமான தேசத்தை உருவாகியுள்ளார்கள்.

    ஒரே மதம், ஒரே மொழி இருந்தும் எங்கு நோக்கினும் கொலைகள் நடக்கும் என் நாட்டோடு பார்த்தால் எனக்கு சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது.

    சகிப்புத்தன்மையின்மை பற்றி எவ்வளவுதான் பேசினாலும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மைக்கு சிறந்த பள்ளியாக இந்தியா திகழ்கிறது. மத வேற்றுமை, சமூக வேற்றுமை, அரசிய வேற்றுமை,இன வேற்றுமை என்று எவ்வளவோ இருந்தாலும் எப்படி ஒற்றுமையாக வாழ்வதேபதை சொல்லித்தரும் மிக பெரும் பழமை வாய்ந்த பள்ளியாகவே இந்தியா இருக்கிறது.

    இந்தியா என்றால் பிற்படுத்தப்பட்டதன்மை, ஏழ்மை என்று நமக்கு சொல்லி தரப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. நாமே உருவாக்கி கொண்ட மாய கருத்து இது. எண்ணெய் கிடைக்கும்வரை நாம் ஏழையாக இருந்த போது இந்தியா என்றால் கலாசார நாகரிகமும், செல்வ செழிப்புமே நமக்கு சொல்லி தரப்பட்டது. நமது நிலை மேன்மை அடைய ஆரம்பித்ததும் நாம் இந்தியாவை ஏழை நாடாக, பிற்படுத்தப்பட்ட நாடாக பார்க்க துவங்கினோம்.

    நமக்கு ஏதேனும் ஞானம் இருந்திருந்தால், நமக்கு இந்தியாவின் வளமும் செல்வமும் கண்ணில் பட்டிருக்காது. மாறாக, மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், சகிப்புத்தன்மையும், மற்றவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கும் தன்மையும், இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் எந்த பதட்டமோ, பயமோ இன்றி அமைதியாக தெருக்களில் சென்று வரும் தன்மையும் கண்ணில் பட்டிருக்கும்.

    உலகில் உள்ள அரேபியர்களை எல்லாம் எடுத்து ஒரு ஆராய்ச்சிக்காக , இந்தியாவில் வைத்தால், அவர்கள் தனித்து நிற்க மாட்டார்கள். பயமற்ற இந்த சமூகத்தில் கலந்து கரைந்து விடுவார்கள். தங்களுடைய இன வேறுபாடு, தேசிய சிந்தனை அனைத்தும் தங்களுடைய சொந்த சகோதர சகோதரிகளை கொல்வதை நியாப்படுத்த முடியாது என்று கருணையுடன் உணர்வார்கள்.

    இந்தியா பழமையான மிக பெரிய மக்களாட்சியை கொண்ட நாடு. மிக பெரிய வேறுபாடுகளை, பாகுபாடுகளை அறியாத நாடு. ஏழைகளை மோசமாக காண்பதில்லை. பணக்காரர்களை கண்டு எரிச்சலடைவதில்லை. காந்தியை கண்டும் பெருமை கொள்கிறார்கள், தங்களை ஆண்ட பிரிடிஷார் கண்டும் பெருமை கொள்கிறார்கள்.

    மிகவும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். இவர்கள் மிக பெரிய மனிதர்கள்தான். பொறாமை கொண்டோரும், நன்றிகெட்டவர்களும் இதை மறுக்கலாம்.

    அப்படி கற்பனையாக அரேபியார்களை இங்கு கொண்டு வைத்தால், அரேபியர்கள் வேண்டுமானால் இந்தியர்கள் மனதை கெடுத்து, வேறுபாடுகளை நினைவு படுத்தி, இந்த காரணத்துக்காகவே ஒருவரை ஒருவர் கொல்லலாம் என்று நியாப்படுத்தி கொல்ல தூண்டலாம்.

  19. //இப்பொழுதும் கூறுகிறேன், இந்தியா….. தப்பு.. தப்பு .. ஹிந்துஸ்தானம் என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடாரம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள தேவையில்லை.//

    //இதற்க்கு மேலும் நீங்கள் தமிழ் தேசிய இனப் போராட்டத்தை இங்கிருக்கும் சாதி வெறி கைக்கூலிகளின் ஊளை சத்தத்துடன் ஒப்பிட்டால், இந்திய சுதந்திர போரையும் அவ்வாறு தான் நாங்கள் ஒப்பிட வேண்டி வரும். இந்தியாவில் இருந்து தமிழ்நாடோ அல்லது காஸ்மீரமோ தனி நாடக போவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்களோ நானோ அல்ல. அந்தந்த மாநிலத்தின் மக்களே தான்!!!//

    சரிங்க தாயுமானவன். எப்படியோ தமிழ் தேசிய இனப் போராட்டத்தின் மூலம் தனித் தமிழ்நாடு கிடைத்துவிட்டது.

    இப்போது தமிழ் “இனத்திலிருந்து” ‘ஹிந்துஸ்தான ‘ இனத்தில் திருமணம் நடக்க அனுமதி உண்டா? 90% பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் வேண்டாம். காதல் திருமணம் ‘இனங்களுக்குள்’ நடக்க உங்கள் அனுமதி கிடைக்குமா ?

    தனித் தமிழ் நாட்டில் வேறு ‘இனங்கள்’ வாழ அனுமதி உண்டா ? இங்கிருக்கும் இதர ‘இனங்களை’ என்ன செய்வதாக உத்தேசம் ? தமிழ் இனத்துக்கு ‘இனமாற்றம்’ செய்ய வைக்கலாமா ?

    ரயில்களில் ” கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” என்ற வசனங்கள் போன்ற அணுகுமுறை எல்லாம் நாங்கள் எப்போதோ பார்த்து சாப்பிட்டு துப்பியும் ஆகிவிட்டது. வேறு எதாவது புதுவிதமாக வசனங்கள் இருந்தால் கூறுங்கள் கேட்கிறோம்.

    அது என்ன தமிழ் ‘தேசிய; இனப் போராட்டம் ? அதிலும் அந்த தேசிய என்ற வார்த்தை தமிழ் அல்லவே !

    //உலகமே ஒரு நிமிடம் கதிக் கலங்கி ஸ்தம்பித்து நின்று விட்டது போங்கள்.//

    Away from the gaze of cameras @RSS_Org workers have been doing yeoman’s service in providing relief material in quake hit Nepal. Commendable

    //https://twitter.com/rahulkanwal/status/593430252077981696//

    மேலே சொல்லப்பட்ட twitter செய்தி ராகுல் கன்வால் என்பரவால் நேற்று ( 29.04.2015) அனுப்பப்பட்டது. இவர் Headlines Today in பிரபல செய்தியாளர் – இந்த channel க்கு RSS என்றாலே விஷம் மாதிரி.

    //“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம்” என்று கீதையில் கூறி அருளிய அந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு..//
    //ஈசனின் திருவடி தங்களுக்கு எப்போதும் துணை இருப்பதாக. நம சிவாய//

    ஒன்று முழு ஆன்மிகவாதியாக இருங்கள் – அல்லது வீரமணியின் சீடராகப் போய் விடுங்கள். வைணவம் – சைவம் – சாக்தம் இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.

  20. அன்பின் ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் கவனத்துக்கு இன்னொரு பதிவு……….. இதுவும் முகநூல் பதிவு……….

    ஹெட்லைன்ஸ் டுடே நிருபர் ஸ்ரீ ராகுல் கன்வல் ஆர் எஸ் எஸ் நேபாளத்தில் செய்யும் சேவையை மனமாறப் பாராட்டியுள்ளார்.

    கவனமாகக் குறித்துக்கொள்ளுங்கள். ஏதும் பகற்கனவு கண்டு அல்ல. நேபாளத்தில் புனரமைப்பு வேலைகளை பகிரும் வண்ணம் ஒரு நிருபராக. அவர் இந்த சேவைகளை நேரில் கண்டபடிக்கு இந்தக் கருத்துப் பக்ரிந்துள்ளார். பகிர்ந்தது ட்விட்டரில். இதை அவர் ஆப்ரஹாமிய சர்ச்சுக்கு விலைபோகியுள்ள Main Stream Media வில் பகிர முடியாது. பகிர விட மாட்டார்கள். ஆனாலும் பாருங்கள் உண்மை உலகுக்குத் தெரிய வந்து விடுகிறது.

    வாயில் நுரை தள்ள …………… நாம் டம்ளர் கட்சியினர் போல……….. சைவ சமயத்தை தெருத்தெருவாக இழிவு செய்து கூச்சல் போடுவதற்குப் பெயர் போராட்டம் அல்ல. பரங்கி சர்ச்சுக்கு வாங்கிய பணத்துக்குக் கத்தும் கூலி வேலை.

    எந்த ப்ரதிபலனையும் எதிர்பாராமல் பொதுமக்களுக்கு தேவையான சமயத்தில் ஆற்றும் தொண்டு ஆர் எஸ் எஸ் செய்யும் தொண்டு. ஆர் எஸ் எஸ் எந்த தொண்டு செய்தாலும்……….. இதுவரை எவரையும் தாங்கள் செய்த தொண்டிற்காக மதம் மாற்றியதில்லை. மதம் மாற்றுதலை இலக்காகக் கொண்டு எந்தத் தொண்டும் ஆற்றியதில்லை.

    இதே நேபாளத்தில் பிணந்தின்னிக்கழுகுகளாக ………….மதமாற்றத்தை மட்டிலும் குறியாகக் கொண்டு………. தொண்டு என்ற போர்வையில் களம் இறங்கியுள்ள …………. மிஷ நரிகளும் உண்டு.

    ஹைந்தவ ஆப்ரஹாமியம் எனும்…………. மண்ணின் மணம் கமழும்……….. தேசப்பண்பாட்டை ஒட்டிய இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவத்தின் பேரில் என்றும் என்றென்றும் எனக்கு மதிப்பு உண்டு.

    ஆனால் ஹிந்துஸ்தானத்தையும் உலகத்தையும் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய மயமாகவும் க்றைஸ்தவ மயமாகவும் மாற்ற விழைவதையே ஒரே குறிக்கோளாகச் செயல்படும் சமூஹ விரோத ஆப்ரஹாமிய சக்திகளையும் ……………

    எந்த ப்ரதிபலனையும் எதிர்பாராது……………. எப்போதும் எதிர்த்து வரும் பொது ஜன வெகுஜன ஊடகவாதிகள் கூட……… பாராட்டும் வகையில் சேவை செய்யும் ஆர் எஸ் எஸ்ஸையும்………….

    இரு வேறு துருவங்களாக மட்டிலுமே பார்க்க முடியும்.

  21. திரு. தாயுமானவன்….

    தாங்கள் எப்பொழுது கிறித்துவத்திற்கு மாறப் போகிறீர்கள், இன்னும் நேரம் கூடி வரவில்லையோ. சீக்கிரம் முடிவெடுங்கள்.

  22. அம்பேத்கரை மதிப்பதாக இருந்தால் அவருடைய கொள்கைகளைத்தான் முதலில் பரப்ப வேண்டும்.வெறும் சிலைகளை மதிப்பதுமட்டுமல்ல

  23. இந்த மதத்திற்குள்ளே இருக்கும் குறைகளையே உங்களால் திருத்த முடியல.நீங்க எப்படி மற்ற மதத்தை விமர்சீக்கிறங்க

  24. //இந்த மதத்திற்குள்ளே இருக்கும் குறைகளையே உங்களால் திருத்த முடியல.நீங்க எப்படி மற்ற மதத்தை விமர்சீக்கிறங்க//

    குறை இல்லாத மதம் ஒன்றை சொல்லுங்கள் , அங்கு போயி எல்லாறும் கல்லை எறிவோம்

  25. ///////அம்பேத்கரை மதிப்பதாக இருந்தால் அவருடைய கொள்கைகளைத்தான் முதலில் பரப்ப வேண்டும்.வெறும் சிலைகளை மதிப்பதுமட்டுமல்ல/////

    அம்பேத்கர் ரொம்பவும் ஆழ்ந்து யோசனை செய்தபின்னரே கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை பிடிக்காமல் அவர் புத்த மதத்திற்கு மாறினார் அவரது அந்த கொள்கையை அப்படியே பின்பற்றாமல் அவரது தொண்டர்கள் வேறு மதங்களுக்கு மாறுவதேன்? இதுதான் அவரது கொள்கைகளை பின்பற்றும் லட்சணமா? அவரது கொள்கைகளை பின்பற்றாமல் அவரது சிலைக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி பூ மாலை போடுவது சரியல்ல என்று கூட்டமாக சென்று காட்டமாக தொல் திருமாவிற்கு சொல்.

    தமிழ் அமுதன் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர் போல தெரிகிறது. இந்து மதத்தில் உள்ள குறைகள் மட்டும்தான் அவர் கண்களுக்கு தெரிகிறது. அவர் உடனடியாக குர் ஆன் மற்றும் Hadith ஆகியவற்றை ஆழ்ந்து படிக்க வேண்டும் அப்போது “””அட. இதுவும் அவ்வளவுதான்டா லட்சணம்””” என்று அவருக்கு தெரிய வரும்.

    திரு தாயுமானவன் அவர்களே! தயவுசெய்து திருமதி Rebecca Mary யின் அன்பான வேண்டுகோளை ஏற்று கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிடும். அந்த அம்மா ரொம்ப நாளா உம்மை தொந்திரவு செய்து வாட்டி வதைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *