சிறை செய்த காதை —  மணிமேகலை 23

இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனை இரவுகள் முடிந்து ஞாயிறு இருள் அகற்றக் கிளம்பியிருப்பான்?  இதோ மீண்டும் ஓர் இரவு – அது இரவா என்ன? கொடிய விபரீதத்தைத் தன்னுள் சுமந்துசென்ற இரவல்லவா? அந்தக் கொடூரமான இரவு முடிந்ததும், ஆதவன் தனது கதிர்களைப் பரப்பியபடி மேலே எழுந்தான்.

சக்கரவாளக் கோட்டம் திறக்கப்பட்டது. பூசைகளுக்கு ஏற்பாடுகள் நடந்தேறின. கடவுளைத் தொழுவதற்கு ந்த மக்கள் அம்பலத்தைச் சுற்றிவரும்போது நந்தவனத்தில் சோழமன்னனின் புதல்வன் கொலையுண்டு கிடப்பதைக் கண்டார்கள்.

செய்திகேட்டு நகரமே மிரண்டது. புகார்நகருக்கு இன்னும் என்னவென்ன கேடுகள் நிகழப்போகிறதோ என்ற பயம் மக்கள் மனதைச் சூழ்ந்தது.

அந்த வளாகத்தில் இருந்த புத்தத் துறவிகள் ஒன்றுகூடினர். அனைவருக்கும் சம்பாதி கோவிலுக்குள் காயசண்டிகை உருவில் மணிமேகலை இருந்ததும், இளவரசன் அவளைக் கோவில்வரைக்கும் துரத்திவந்ததும் தெரியும்.

“மணிமேகலை! இப்படி இளவரசர் வெட்டுப்பட்டுக் கிடக்கிறாரே! உனக்கு இதுகுறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் கூறு“ என்றனர்.

மணிமேகலை நடந்தவற்றை ஒன்றும் மறைக்காமல் கூறினாள்.

“உன்மீது குற்றம் இல்லை, மணிமேகலை. இருப்பினும் கொலையுண்டு கிடப்பது அரசகுமாரன். இன்னும் சற்றுநேரத்தில் அரசனும், அவன் அதிகாரிகளும் இங்கு வந்துவிடுவார்கள். அரசனுக்கு உன்னைப் பார்த்ததும் ஆத்திரம் மிகும். ஒன்றுசெய். சிறிது நேரம் அரசர் கண்ணில் நேரடியாகப்படாமல் உள்ளே மறைந்திரு,“ என்றனர்.

மணிமேகலையை உள்ளே அழைத்துச்சென்றனர்.

அரசிளங்குமரனின் உடல் உள்ளே எடுத்துச்செல்லப்பட்டு, முறையாகக் கிடத்தப்பட்டது.

கோட்டத்தின் வாசலில் சலசலப்பு ஏற்பட்டது. சோழமன்னன் மாவண்கிள்ளி அதிகப் பரிவாரகளின்றி வாயிற்காப்போனுக்குத் தகவல் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது. அந்தக் கோட்டத்தின் முதன்மை துறவி மேலும் சில துறவிகளுடன் மன்னரை எதிர்கொண்டு வரவேற்றார்.

“வானின் உச்சியில் உயர்ந்தோங்கி விளங்கும் நிலாவானது தனது குளிர்ச்சியான ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவதுபோல — மன்னா தங்கள் வெண்கொற்றக்குடை இந்தப் பூமண்டல மக்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கட்டும். தங்கள் கையிலிருக்கும் வேலும், தண்டமும் தர்மநெறியுடன் விளங்கட்டும். உங்களது ஆணைச் சக்கரம் குற்றமில்லாமல் சுழலட்டும். ஆயுள் உள்ளவரையில் நீங்கள் மனதில் மகிழ்ச்சியுடன் வாழிய, மன்னா!” என்று போற்றினர்.

மன்னன் அவர்களை நோட்டமிட்டான்.

இன்னொரு துறவி முன்னால் வந்தார்.

“இன்று மட்டுமல்ல மன்னா, பன்னெடுங்காலமாகவே செம்மையான கள்ளை உண்டு, அதன் போதை தலைக்கேறியதால் பத்தினிப்பெண்கள், தவம் செய்யும் பெண்துறவிகள் இப்படி எல்லாப் பெண்கள் பின்னாலும் காமவேட்கையில் அலைந்து உயிரைப் போக்கிக கொண்ட தீயமதி படைத்த ஆடவர்கள் பலர் உள்ளனர்.” என்றார்.

இது வாழ்த்து போல இல்லையே? எதற்காக இந்தக் குறிப்பேற்றம்?

மன்னன் விளங்கிக் கொள்ளமுயன்றான்.

“மன்னா! உங்கள் முன்னோர் பெருமையை உங்களிடமே கூறுவது முறையாகாது. இருப்பினும் கூறுகிறேன். தான் இல்லாத நேரத்தில் தன்னால் கொலைசெய்யப்பட்ட கார்த்தவீரியனின் புதல்வர்கள் தனது தந்தை ஜமதக்கினி முனிவரைக் கொன்ற ஆத்திரம் தீர, திருமாலின் அவதாரமான பரசுராமன் என்னும் முனிவர், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை இல்லாமல் பூண்டோடு அழிக்கக் கையில் சிவபெருமான் அளித்த மழுவை ஏந்தியபடி இந்தப் பூமண்டலம் மீது படையெடுத்து வந்தபோது, இந்தப் புகார்நகரத்திற்கும் வந்தார். அப்போது இந்தச் சோழ சாம்ராஜ்யத்தைக் காந்தன் என்ற சோழமன்னன் ஆண்டுவந்தான். பரசுராமரின் கண்களில் படாமல் வேறு எங்காவது செல்லுமாறு அவனைச் சம்பாதிதெய்வம் எச்சரித்தது. தான் அங்கிருந்து அகன்றால் இந்தச் சோழ சாம்ராஜ்ஜியத்தை யார் காவல் காப்பார்கள் என்ற அச்சம் அரசனுக்கு ஏற்பட்டது. முடிவாகத் தனக்கும் தனது காமக் கிழத்திகளில் ஒருத்தியாக விளங்கிய கற்புநெறி வழுவாத கணிகை ஒருத்திக்கும் பிறந்த ககந்தன் என்ற யுவனைப் புகார்நகரின் அரசனாக்க உத்தேசித்தான்.

“எங்கே பரசுராமர் தன்னை அழித்துவிடுவாரோ என்ற ஐயம் சுகந்தனுக்கு ஏற்பட்டது. அதற்குச் சமாதானம்செய்யும் வகையில் அவனது தந்தையான காந்தன், ‘என்னைத் தேடி வருபவர்கள் உன்னைக் கொல்லமாட்டார்கள். நீ வெறும் பாதுகாவலன் மட்டும்தான். அரசனாகப் பதவிப் பிரமாணம் உனக்குச் செய்யவில்லை. தெய்வமுனி  அகத்தியன் எனக்குக் கட்டளை இடும்நாள் வரையில் நீ இங்கே அரசாட்சிசெய்துவா.’ என்றான். காகந்தன் காவல் புரிவதால் இந்த நாட்டிற்குக் காகந்தி என்று பெயர்சூட்டிவிட்டுக் காந்தன் வேற்றுருக்கொண்டு இந்த நாட்டைவிட்டு நீங்கினான்.”

“மன்னரே, உள்ளே வாருங்கள். அமர்ந்தபடி பேசலாம்.” என்று அழைத்தார் வேறொரு துறவி.

 “நான் அமர்வதற்கு  வரவில்லை.“ என்று கூறிவிட்டு மற்ற துறவியைப் பார்த்து, “நீங்கள் தொடருங்கள்,” என்றார் மன்னர்.

“காகந்தனுக்கு ஒரு அரசிளங்குமரன் இருந்தான். வாலிப வயது. ஒருநாள் காவேரிக் கரையோரமாகப் போய்க்கொண்டிருந்தபோது ஓர் அழகான அந்தணமாதைப் பார்த்தான். அந்த அந்தணமாது ஒரு சிறந்த பத்தினி. அரசிளங்குமரன் அவள் நெகிழ்வான தனமையுடையவளாக இருப்பாள் என்று அவள் கைகளைப் பற்றி நீ வா என்று கூப்பிட்டான்.”

“அயோக்கியப்பயல்! அவனை அங்கேயே வாளால்வெட்டி வீசியிருக்க வேண்டாமா? “ என்றார் மன்னர், சீற்றத்துடன்.

“அந்தப் பத்தினிப்பெண் கலங்கிநின்றாள். கணவரைத்தவிர வேறு ஓர் ஆடவனைச் சிந்தையாலும் நினையாத உத்தமப்பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும்.  ஆனால் நானோ சிந்தை திரிந்தவள் போலும். அதனால்தான் என்னைத் தவறான வழிக்கு அரசிளங்குமரன் அழைத்தான். நான் என் கணவன் தினமும் புரியும் மூன்று வேள்விகளுக்கு அக்னி சந்தானம் அளிக்கும் பாத்தியதையை இழந்தவள் ஆனேன், இனி இல்லத்தில் வாழத் தகுதியற்றவள் என்று சிந்தையில் தீர்மானித்து பூதச்சதுக்கம் நோக்கிச் சென்றாள். அங்குள்ள பூதகணத்திடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினாள். ‘கணவனுக்குப் பிழை எதுவும் செய்யவில்லை. இருப்பினும் அந்நிய ஆடவன் தவறான நோக்கத்துடன் பார்ப்பதற்கு இடமளித்து விட்டேன். மழ வளம் கொண்டு வரும் திண்மையுடைய கற்பு என்னும் அறம் பிழைந்தேன். இது தெரிந்துசெய்த குற்றமன்று.’ என்று கூறி நின்றாள்.

பூதச்சதுக்கத்தில் இருந்த பூதகணம் வாளதிருக்கவே, ‘குற்றம் புரிந்தவர்களைப் பிடித்துத் தின்பாய் என்று இங்குள்ளவர்கள் கூறும் கூற்று பொய்யா?‘ என்று வினவினாள்.  அப்போது ஒரு பெரிய பூதம் அவள்முன் தோன்றி, அவளிடம், ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள், பெய்யனப் பெய்யும் மழை.‘ என்ற பொய்யாமொழிப் புலவனின் குறளின்படி பத்தினிப் பெண்டிரின் மொழிக்கு ஏற்ப மழைபொழியும் என்பது உண்மைதான். ஆனால் பத்தினிப்பெண்ணான நீ சொல்லி மழைபெய்யவில்லை என்பதற்கு வேறு காரணங்களை மனதில்போட்டு உழப்பிக்கொள்ளாதே. அக்கம்பக்கத்தினர் கூறிய கட்டுக்கதைகளையும், பொய்களையும் நம்பி உன் கணவனை விட்டுவிட்டு பிறதெய்வத்தைத் தொழுததால்தான் அவ்வாறு நேர்ந்தது. வேறு குற்றம் எதுவும் நீ புரியவில்லை என்பதால் உன்னை நான் பீ’டிக்கவில்லை,‘ என்றது. மனம்போனபடி செல்லும் பெண்களைப் பீடிப்பதுபோல உன்னை நான் கட்டமாட்டேன். ஒரு தேசத்தின் ஒரு குற்றம் நிகழ்ந்தால் மன்னன் ஏழு நாட்களுக்கு விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கவேண்டும் என்பது அரசநீதி. நீ ஏழு நாட்கள் பொறுத்துக்கொள். மன்னர்மகனுக்குக் காகந்தன் தண்டனை வழங்காவிட்டால் அவனுக்கு நான் தண்டனை வழங்குவேன்.’ என்றது. பூதம் கூறிய நாட்கணக்கு முடிவதற்குள் காகந்தன் நடந்த குற்றத்தை விசாரித்துத் தன் மைந்தன் பெயரில்தான் தவறு என்று அறிந்து, தன் மகனை வாளால் வெட்டிக்கொன்றான்.” என்றார் அத்துறவி.

king-and-monks“அவ்வளவுதானா? வேறு ஏதாவது பண்டைய வரலாறுகள் உள்ளதா?” என்றார் மன்னர்.

உரையாடல் செல்லும் போக்கைப் புரிந்துகொண்டு, “மேலும் கேள், மன்னா!“ என்று வேறொரு துறவி முன்வந்தார்.

“கூறுங்கள்,“ என்றார் மன்னர்.

“தருமதத்தன் என்றொரு வணிகன் இருந்தான். அவனுக்கு விசாகை என்றொரு மாமன் மகள் இருந்தாள். இருவரும் தேவ ஓவியர்கள் வரைந்த ஓவியம்போலத் தோற்றம் கொண்டிருந்தனர். தருமதத்தனின் மாமன் மகள்தான் விசாகை என்றாலும் அவன் அவளுக்கு மைத்துனன் உறவாகும். இவர்கள் இருவரும் இணைந்து சுற்றியதால் ஊரில் வம்புப்பேச்சு எழுந்தது. தன்மீது தவறு எதுவும் இல்லாதலால் உலக அறவியுள் இருக்கும் ஊர் அம்பலத்தினுள் சென்று கம்பத்தெய்வத்திடம் முறையிட்டாள். தான் கற்புநெறி பிறழாதவள் என்பதை ஊருக்கு அறிவிக்கச் சொன்னாள்.  கம்பக்கடவுளும் உரத்தகுரலில் விசாகை நெறிபிறழாதவள் என்று ஊர்மக்களுக்கு அறிவித்தது. இருந்தும் ஊர் சமாதானம் ஆகாததால், தருமதத்தனுடன் இப்பிறவி நீங்கி மறுபிறவியில் கூடுவேன் என்று தாய்க்குச் சமாதானம் கூறிவிட்டு விசாகை கன்னிமாடத்தினுள் புகுந்தாள். தருமதத்தனின் பெற்றோரும் கம்பத்தெய்வம் நல்வாக்குக் கூறியதைக்கேட்டு மனம்மகிழ்ந்து, அங்கிருந்து தென்மதுரை நோக்கிப் பயணித்தனர். தருமதத்தனும் தன் மாமன் மகள் விசாகையைத் தவிர வேறொரு பெண்ணைத் திருமணம் புரியமாட்டேன் என்று விரதம் பூண்டான். செட்டிகுலத்தின் வழிவழியாகவந்த மரபின்படி பொருள் ஈட்டுதலை முறைமையாகச் செய்து, சிறந்த வணிகன் என்ற சிறப்புப் பெயரையும், மன்னர் கைகளினால் எட்டிப்பூ என்ற சிறப்புப் பதக்கத்தையும் பெற்றான். இப்படியே வாணிபத்தில் இவனுடைய வயது அறுபதை எட்டியது. அப்போது அறுபது ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாட தருமதத்தன் ஒரு அந்தணனை அணுகினான். அந்தணனோ செல்வம் எத்தனை ஈட்டினாலும் உடன் வாழ்க்கை துணைவி இல்லையென்றால் மோட்சம் செல்லமுடியாது என்று கூறிவிட்டான். அதனால் மனம்வாடிய தருமதத்தன் தென்மதுரையை விட்டுப் புகார்நகரம் வந்துசேர்ந்தான்.

“தருமதத்தன் மீண்டும் இந்த ஊருக்கு வந்தது அறிந்து விசாகையும் நாணம்பார்க்காமல் அவன் இல்லத்தையடைந்து வேறொரு ஊரில் பலதரப்பட்ட மக்கள் நடுவில் வாழ்ந்தாலும் எவ்விதக் கெட்டபழக்கமும் பழகிக்கொள்ளாத அவனுடன் அளாவளாவத் தொடங்கினாள்.

” ‘என்ன ஒரு கொடுமை பார்த்தீர்களா? ஒருவருக்கொருவர் சரியாக அடையாளம் கூடத் தெரியவில்லை. நமது இளமைப் பருவத்தில் நம்மை மயக்கமுறச்செய்த வனப்பு எங்கே போனது? உங்களுக்கு அறுபது வயதாகிறது. வாசனைத் தைலங்கள் தேய்த்து மணம்வீசிய எனது கூந்தல் நரைக்கத் தொடங்கிவிட்டது. இளமையும், காமமும் எங்க போயிற்று என்றே தெரியவில்லை. நிலையில்லாத மனதை உடையவரே, எனக்கு இதனைக் கூறுங்கள். இந்தப்பிறவியில் நிச்சயமாக நான் உங்களுடன் வாழப்போவதில்லை. அடுத்தபிறவியில் உங்களுக்குக் குற்றேவல் புரிவேன்.‘ என்றாள்.  அதுமட்டுமன்றி, ‘இளமையும் நிலையாது; இந்த உடலும் நிலையாது. சேர்த்த பெருஞ்செல்வம் அது வானளாவியது என்றாலும் நில்லாது. மோட்சத்தைப் புதல்வனும் கொடுக்கமாட்டான்.  போகும்போது நமக்குத் துணையாக நிற்பது நாம் செய்யும் நல்ல தர்மங்களேயாகும்‘ என்று அவள் கூறியதைக் கேட்டு தருமதத்தன் செய்த தானங்களும் தர்மங்களும் ஆகாயத்தில் உள்ள விண்மீன்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையுடையவையாகும்.”

“இந்தக் கதை மூலம் தாங்கள் எனக்குக் கூறவிழையும் உட்பொருள் என்ன?“ என்றார் மன்னர்.

“மன்னா! கதை இன்னும் முடியவில்லை. முழுவதும் கேளுங்கள்,“ என்றார் துறவி.

“தொடருங்கள்,“ என்றார் மன்னர்.

“பாவம், முதிர்கன்னியாகத் திரிந்த அந்த விசாகை, ஒருநாள் தனது தோழிகளுடன் கொடிகள் பல பறக்கும் வீதி ஒன்றில் போய்க்கொண்டிருந்தபோது, மருதி என்ற பார்ப்பனப்பெண்ணிடம் வம்புசெய்து இறந்துபோன அரசிளங்குமரனின் மற்றொரு சகோதரன் எதிர்ப்பட்டான். அவள் முதிர்கன்னி என்பதையும் பாராமல் காமம் முற்றிய நெஞ்சுடன் அவளை நெருங்கினான். அப்போது மலர்மாலை விற்றுக்கொண்டு ஒருவன் வந்தான். அவனிடம் ஒரு பூமாலையை வாங்கி, அவள் கழுத்தில் போடக் கரங்களை உயர்த்தினான். அவளுடைய கற்பின் திண்மை காரணமாக உயர்ந்த கரங்கள் தாழாமல் அப்படியே நின்றுவிட்டன. இந்தச் சேதியைக் கேள்விப்பட்ட மன்னன் ககந்தன், அவனைத் தன் மகன் என்றும் பாராமல் அவன் செய்த குற்றத்திற்காக வாளால் வெட்டிக்கொன்றான்.”

“துறவிகளே. நல் வினையாற்ற இன்னும் தங்களுடைய அறவுரைகள் ஏதேனும் உளதோ? “ என்றார் மன்னர்.

மன்னவன் இவ்வாறு கேட்டதும், “மன்னா! உனது வேல் தீயவை அறுத்து நல்லவை காத்து வெல்லட்டும். நான் கூறுவதைக் கேளுங்கள்,“ என்று வேறொரு துறவி முன்வந்தார்.

“விலக்கப்படவேண்டியவை  ஐந்து என்று உலகில் உண்மைப் பொருளை நோக்கி ஆய்வுசெய்து உணர்ந்த ஆன்றோர்கள் கூறுகின்றனர். கள், பொய், களவு, கொலை மற்றும் காமமாகும். இவற்றுள் காமம் மற்ற நான்கையும் தனக்குள் கொண்டதாகும். காமத்தை நீக்கியவர்கள் மற்ற குற்றங்களை நீக்கியவர்களாவர். காமத்தை ஒழித்தவர்களே நிறைந்த தவமுடையவர்கள். காமத்தை நீக்காதவர்கள் பொறுக்கவியலாத துயரை அடைவார்கள்” என்றார்.

மன்னர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டார்.

“மன்னா! நின் வெண்கொற்றக் குடை வாழ்க. நின்  செங்கோல்  வாழ்க …மன்னா” தலைமைத் துறவி இழுத்தார். தான்  சொல்லப்போகும் செய்திக்கு  மன்னனனைத் தயார்செய்ய அவருக்குப் போதிய அவகாசம் வேண்டியிருந்தது.

“கூறுங்கள் ஐயனே. விதியை யாரால்  வெல்ல இயலும்?“ என்றார் மன்னவர்.

“புகார்நகரின் பெரும் கணிகை சித்ராபதியின் மகளான மாதவி தனது காதல் கணவன் மதுரையம்பதியில் கொலைக்களபட்டான் என்பதை அறிந்து, உலக அறவியில் புத்தமதத்தைத் தழுவினாள். அவளுடைய பெண்ணான மணிமேகலையும் தாயுடன் புத்தமதத்தில் சேர்ந்தாள்.  பாவம், அவள் இளம்பெண். ஆயினும் மனம் உவந்து துறவறம் பூண்டவள். அவளும் அன்னையுடன் அம்பலத்தில் தங்கியிருந்தாள்.”

“தெரியும்.“

“அப்படிப்பட்ட இளந்துறவியை அவள்மேல்கொண்ட தீராத மையலால் ஒருவன் துரத்தியபடி சென்றான். அவளுடைய நிழல்போல அவள் சென்ற இடமெல்லாம் துரத்தினான். நேற்று நடுஇரவில் அவள்மேல்கொண்ட காமம் அவனது ஆயுந்தறியும் அறிவை வென்றது. ஒருவரும் அறியாதவண்ணம் அவள் தங்கியிருந்த கோவிலை அடைந்தான். அவளோ விஞ்சையன் ஒருவனின் மனைவியான, யானைத்தீ என்ற அதிசய நோயுடன் நகரில் சுற்றிக் கொண்டிருந்தாளே காயசண்டிகை உருவில்தான் மணிமேகலை இருந்தாள். காயசண்டிகையைத் தேடிவந்த அவள் கணவன் விவரமறியாமல் மணிமேகலையைத் துரத்தியவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டான்

“அந்த அவன்  எவன்?” மன்னரின் குரல் நடுங்கியபடி கேட்டது.

“விதியின் பயனால் அம்பலத்தில் உங்களுடைய திருக்குமாரன் வாளால் வெட்டுண்டு இறந்து விட்டான், மன்னா!” என்றார் அந்தத் துறவி.

மாவண்கிள்ளி பதில் எதுவும் சொல்லவில்லை. சொல்லவந்த விபரீதச் செய்தியை அந்தப் புத்தத்துறவிகள் எவ்வளவு எளிய உதாரணங்களுடன் குறிப்பால் உணர்த்திக் கூறினர் என்பதை எண்ணி வியந்தான். இருப்பினும் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

துறவிகள் உதயகுமாரனைக் கிடத்தியிருந்த அறைக்கு மன்னரை அழைத்துச் சென்றனர். புவியாளும் மன்னவராயினும் அவரும் தந்தைதானே! மார்பிலும் தோளிலும் துள்ளியாடிய மகன் இப்படி இளமைப்பருவத்தில் பழிச்சொல்லுக்கு ஆளாகி வெட்டுண்டு இறந்துகிடப்பதைக் கண்டதும் மனம் கலங்கியது. கண்ணீர் திரையிட்டது. ஒரு கணம்தான், உடனே தான் புகார்நகரின் மன்னன் என்ற நினைப்பும் எழுந்தது.

சோழ நாட்டின் ஏனாதியைப் பார்த்து,” சோழ இளவரசன் புரிந்த குற்றத்திற்காக நான் அவனுக்குத் தண்டனை அளித்திருக்கவேண்டும். எனக்கு பதில் விஞ்சையன் அந்தச் செயலைப் புரிந்து தவறிழைத்துவிட்டான். அறம்புரிபவர்களின் தவத்தையும், கற்புடைய பெண்களின் கற்பையும் காப்பாற்றவேண்டியது அரசனின் கடமை. கன்றின்மேல் தேரோட்டிக் கொன்றவன் தன் மகன் என்றும் பாராமல் தாய்ப்பசுவின் வேண்டுகோளை ஏற்றுத் தேர் ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழனின் பரம்பரையில்வந்தவன் என்று கூறிக்கொள்ளும் பெருமையை இழந்து நிற்கின்றேன்.“ என்றார்.

துறவிகள் மன்னரின் மாண்பினை வியந்து பாராட்டினார்கள்.

“நடந்தது நடந்துவிட்டது. இந்தச் சேதி வேற்று அரசர்கள் அறியும்முன்னர் உதயகுமாரனின் ஈமைக் கிரியைகளை இந்த வளாகத்திலேயே செய்வதற்கு ஏற்பாடுசெய்யுங்கள். அந்த இளம் துறவி மணிமேகலையை விசாரணைக்காகக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள், ஏனாதியாரே!“ என்றார் மன்னர்.

பின்குறிப்பு: பரசுராமர் குறித்து இங்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆய்வுக்குரியன. மணிமேகலைக்கு உரை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார் மற்றும் ஔவை . சு. துரைசாமிப் பிள்ளை அடிக்குறிப்பாகப் பரசுராமரின் வரலாற்றை மிக விளக்கமாகக் கூறினாலும் மணிமேகலையில் “மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்” என்றே குறிப்பிடப்படுகிறது.  அதேபோலக் காந்தமன்னன் தனது காதல்கிழத்தியான கணிகையிடம் பிறந்த மகனிடம் பரசுராமனுக்கு அஞ்சி ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அகத்திய முனிவன் கூறும் அருள்மொழியைத் தான் கேட்கும் காலம்வரை ஆட்சி புரியுமாறு கூறிவிட்டுச் செல்வதாக  வருகின்றது. ஆனால் இதன் விவரம் குறிப்பிடப்படவில்லை. அகத்தியருக்கும், பரசுராமருக்கும் இடையில் என்ன உறவு என்பதும், பரசுராமரிடமிருந்து அரசர்களைக் காக்கும் தேவை அகத்தியருக்கு எதனால் வந்தது என்பது குறித்தும் இங்கு ஆராயத்தக்க விடயமாகும்.

[தொடரும்]

6 Replies to “சிறை செய்த காதை —  மணிமேகலை 23”

  1. பாகம் 24 முதல் மற்ற பாகங்களையும் வெளியிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *