தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

பெ.சுந்தரம்பிள்ளை

1. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலைப் போன்றே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. பங்கிம் சந்திரர், சுந்தரம்பிள்ளை உட்பட பல இந்தியக்கவிஞர்கள் அந்த தேசிய எழுச்சிக் காலகட்டத்தில் அத்தகைய பாடல்களைப் புனைந்தனர். வந்தே மாதரம் குறித்து அனாவசியமான சர்ச்சையை உண்டாக்கி அதனை எதிர்க்கும் இஸ்லாமிய மதவெறியர்களின் தரப்பை பல தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஆதரிப்பார்கள். திராவிட இயக்க, இடதுசாரி கும்பல்களும் அதற்கு ஒத்து ஊதுவார்கள். ஆனால், அதே போன்ற, சொல்லப் போனால் அதைவிடவும் வெளிப்படையாக (கீழுள்ள குறிப்புகளைப் பார்க்கவும்) இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டும் எதிர்க்க மாட்டார்களாம், ஏற்பார்களாம்! பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்.

2. நீராரும் கடலுடுத்த நில மடந்தை என்பது ’ஸமுத்ர வஸனே தேவி’ என்ற பதத்தின் நேரடி மொழிபெயர்ப்பன்றி வேறில்லை. கடலை ஆடையாக உடுத்த பூமி என்ற தொன்மையான படிமம் வேதங்களிலிருந்து தான் வருகிறது. குறிப்பாக, அதர்வவேதத்திலுள்ள பூமி சூக்தம் இதுபோன்ற பற்பல அழகிய உவமைகளையும் போற்றுதல்களையும் பூமியைக் குறித்துக் கூறிச்செல்கிறது.

3. பரதகண்டம் என்ற சொல் புராண காலத்தியது. இன்றும் சுபகாரியங்களுக்கான சங்கல்பங்களில் ‘ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே’ என்று கூறப்படுகிறது. தக்கணம் என்பது தட்சிணம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் தான். இந்தியா, தென்னிந்தியா, தமிழகம் ஆகியவற்றைக் குறிக்க முறையே பரதகண்டம், தட்சிணாபதம், திராவிடம் ஆகிய மூன்று புராண சம்ஸ்கிருதச் சொற்களை பாடலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். மேலும், திராவிடம் என்பதை இனம் சார்ந்ததாக இல்லாமல், நிலப்பரப்பு சார்ந்ததாக மட்டுமே அவர் கொண்டிருக்கிறார், ‘திராவிட உத்கல பங்கா’ என்று ஜனகணமன பாடலில் வருவது போல.

சீராரும் வதனமெனத் திகழ் பரதக்கண்டமிதில்
தக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்..

4. தரித்த நறும் திலகமுமே: பெண்கள் நெற்றியில் இடும் திலகம் என்பது இந்துப்பண்பாட்டின் ஆதாரமான மங்கலச்சின்னம். மேலும், நமது கவிமரபில், திலகம் என்பது ஒரு பொருளின் உயர்வையும் மேன்மையையும் எடுத்துக் காட்டுவதற்காகக் கூறப்படும் சொல்.

புனைகழல் இராகவன் பொன் புயத்தையோ?
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?

என்று கம்பராமாயணத்தில் வருகிறது (சுந்தர காண்டம், காட்சிப் படலம்).

ரகுகுலதிலகன் என்று ராமனைப் புகழ்வார்கள். நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற பிரபல பட்டப் பெயர்களும் கூட இந்த இந்துப் பண்பாட்டு உவமையிலிருந்து தான் வருகின்றன.

5. வாழ்த்துதுமே என்பது ’வந்தே’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஈடான ஒன்று தான். இப்போதைய தமிழில் அது பொதுவான ஒரு சொல்லாக ஆகிவிட்டாலும், தமிழ் இலக்கியங்களில் தெய்வங்களைப் போற்றுவதற்கான ஒரு சொல்லாகவே இருந்துள்ளது. ’மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரிய புராணம்.

6. தமிழ்த்தாயைப் போன்றே தெலுகு தல்லி, கன்னட மாதே ஆகிய கருத்தாக்கங்களும் உள்ளன. உதாரணமாக, புகழ்பெற்ற கன்னடக் கவிஞர் குவெம்பு எழுதிய கர்நாடக வாழ்த்துப் பாடல் ‘ஜய பாரத ஜனனிய தனுஜாதே ஜய ஹே கர்நாடக மாதே’ என்று தொடங்குகிறது. பரதகண்டத்தை வதனமாகவும் தமிழ்நாட்டைத் திலகமாகவும் சுந்தரம்பிள்ளை வர்ணித்தது போலவே, பாரதத்தாயின் மகளாக கன்னடத்தாய் விளங்கிறாள் என்று குவெம்பு பாடுகிறார்.

7. பாடலின் முழுவடிவத்தில் கீழ்க்கண்ட பகுதியும் சேர்ந்தே உள்ளது. அரசு ஏற்றுக்கொண்ட வடிவத்தில் இவ்வரிகள் நீக்கப் பட்டுள்ளன.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

வேதாந்த தத்துவத்தில் பிரம்மத்தின் இயல்பாகக் குறிப்பிடும் சிறப்புத் தன்மையை தமிழின் மேல் ஏற்றிப் பாடுவதாக முதல் இரண்டு அடிகள் அமைந்துள்ளன. கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடரும் அத்வைதியுமான சுந்தரம்பிள்ளை இத்தகைய ஒரு உவமையைக் கையாண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் தமிழின் உதரத்திலே உதித்தன என்ற கருத்தை இந்த மொழிகளைப் பேசுபவர்களிடம் போய் அப்படியே கூறினால் அது நிராகரிப்புக்கு உள்ளாகும். மொழியியல் ரீதியாகவும் அந்தக் கருத்து முழுமையாக ஏற்புடையதன்று. ”கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் தமிழின் மகள்கள். அவர்கள் மூன்று பேரையும் பழங்காலத்தில் சில சமூகங்களில் இருந்த வழக்கப்படி சம்ஸ்கிருதம் என்ற ஒரே ஆண்மகனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டார்கள்” என்று ஏ.கே.ராமானுஜன் கூறிய உவமை இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🙂

ஆரியம் போல் உலகவழக்கொழிந்து என்று எழுதியிருப்பது, அறிஞரான சுந்தரம்பிள்ளையும் கால்டுவெல் உருவாக்கிய ஆதாரமற்ற திராவிட இனவாதத்திற்கும் மொழிக் காழ்ப்புணர்வுக் கொள்கைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. உண்மையில், ஆரியம் என்று இங்கு சுட்டப்படும் சம்ஸ்கிருத மொழி உலகவழக்கு என்று சொல்லப் படும் பாமரர்களின் பேச்சு வழக்குத் தளத்தில் எப்போதுமே இயங்கியதில்லை என்னும்போது, அது எப்படி அழிந்தொழியும்? பல சம்ஸ்கிருத நாடகங்களிலேயே கூட, இடையிடையே வரும் உரையாடல்கள் பிராகிருதம், அபப்ரம்சம் முதலான பேச்சு மொழிகளிலும், கவிதைகள் சம்ஸ்கிருதத்திலும் உள்ளதை நாம் காணமுடியும். அந்தப் பேச்சு மொழிகளும் இன்றைய வட இந்திய மொழிகளும் எல்லாம் கூட சம்ஸ்கிருதத்தின் வடிவங்களே.

உண்மையில், சுந்தரம்பிள்ளை இந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. கீதையும் உபநிஷதங்களும் சாகுந்தலமும் மேற்கத்திய அறிஞர்களால் பயிலப் பட்டுக் கொண்டிருந்தன. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை. ஒரு மாபெரும் நகைமுரணாக, அவரது பெயரிலும், அவர் எழுதிய இந்தப் பாட்டிலுமே சுந்தரம், நீர், வதனம், பரதகண்டம், தக்கணம், திராவிடம், திலகம், வாசனை, உலகம், திசை, பரம்(பொருள்), உதரம், உதித்தே என்று இத்தனை சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. மேலும், இன்றும் உயிர்த்துடிப்புடன் வாழும் பெருமதங்களின் (இந்துமதம், பௌத்தம், ஜைனம்) ஆதார நூல்களை உள்ளடக்கிய ஒரு மொழி சிதைந்து ஒழிந்தது என்று சுந்தரம்பிள்ளை கருதியிருந்தால் அது அபத்தமானது.

எனவே, அன்றைய தமிழ்நாடு அரசு, மேற்கண்ட வரிகளை நீக்கிவிட்டு மற்ற வரிகளை மட்டும் அதிகாரபூர்வ வாழ்த்துப் பாடலாக வரையறை செய்தது மிகச் சரியான முடிவு.

8. தமிழ்த்தாய்க்கு உருவம் கொடுத்து சிலை அமைக்க அன்றைய தமிழ்நாடு அரசு திட்டமிட்டபோது, அதற்காக ஸ்தபதிகள் தேர்ந்தெடுத்தது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய ஞான சரஸ்வதி வடிவத்தைத் தான்.

அருக்கோதயத்தினும் சந்திரோதயம் ஒத்து அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோது நாதனும் தானுமெப் போதுமினி திருக்கும்
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே.

என்று சரசுவதி அந்தாதி செந்தமிழ்ப் பாவை என்றே கலைமகளைக் குறிப்பிடுகிறது.

இங்ஙனம் இந்துப்பண்பாட்டுக் கூறுகளின் சிறந்த வெளிப்பாடாக அமைந்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பிழையின்றிக் கற்றுக் கொண்டு அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் பாடி மகிழ்வோம்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
வந்தே மாதரம்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது

13 Replies to “தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்”

  1. மனோன்மணீயம் சுந்தரனாரின் “தமிழ் தெய்வ வணக்கம்” – பதிகத்தினை “தமிழ்த்தாய் வாழ்த்து” ஆக்கிய பெருமையை திருவாளர் மு கருணாநிதி கொண்டாடிக்கொள்ளலாம். ஆனால், மூலத்தை சிதைத்து தானே அதனை பலரையும் பாட வைத்திருக்கிறார் என்ற உண்மையை பலரும் மறந்து விட்டார்கள்.

    அந்த பதிகத்தில் “திருவாசகம்” பற்றி ஓர் அருமையான செய்தி வருகிறது.

    கடல் குடித்த குடமுனி – அகத்தியர் பற்றிய ஓர் அருமையான செய்தி வருகிறது.

    ஒருபிழைக்க அரணார் முன் – என்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றுரைத்த நக்கீரன் மற்றும் இறையனார் பற்றிய செய்திகள் வருகின்றன.

    அத்தனையும் இருட்டடிப்பு செய்து விட்டு, இன்று இருந்தும் இல்லாமலிருப்பவர்களை நினத்தால் – ஒன்று நினைவுக்கு வருகிறது.

    “அரசன் அன்று கொல்வான் – தெய்வன் நின்று கொல்லும்”

  2. வடமொழியும் தென்மொழியும்
    ———————————-
    /***ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்***/
    மனிதன் ஒரு மநநஶீலனான ப்ராணியாவான். அவன் எப்பொழுதும் சிந்தனை செய்துகொண்டே கார்யங்கள் ஆற்றுவான். ||மத்வா கர்மாணி ஸீவ்யதி|| பொருள்: -மனத்தால் கார்யங்களை சிந்திப்பவன் மனுஷ்யன் .
    இப்படி செய்தால் நான் வேண்டியது கிட்டும்(இஷ்ட சாதனம்) என்றும் “என் முயற்சியினால் இப்பணியில் வெற்றி கிட்டும்(க்ருதி சாத்யம்) என்றும் சிந்திப்பவன். இது என்பதினால் 1)விஷயம் , எனக்கு என்பதினால் 2)அதிகாரி ,வேண்டியது என்பதினால் 3)ப்ரயோஜனம் மற்றும் சாதனம்,சாத்யம் என்னும் சொற்களினால் 4)சம்பந்தம் என்று நான்கு சொற்கள் தேறுகின்றன. அவ்வாறே ஒரு நூலினை இயற்றும் பொழுது அனுபந்த சதுஷ்டயங்கள் அதாவது 1) இந்த நூல் எதைச் சொல்லுகிறது ,2) இதைப் பயிலப் போகும் வாசகர்கள் யார் ,3) இந்நூற்பயன் மற்றும் 4) இம்மூன்றின் சம்பந்தம் என்ன என்பதனை சொல்வது வழக்கம்.
    ஒரு மொழியை கருவி (அ) சாதனம் என்று கொண்டால் ,அதற்கும் இந்த சாதன சதுஷ்டயங்க்கள் பொருந்தும். இங்கு விவாதத்திற்கு 1)விஷயம், 2)அதிகாரி ,3)பயன் என்று மூன்றை மட்டும் வைத்துக் கொள்வோம். (சம்பந்தம் என்பது தர்க்க விஷயம். அதை சொன்னலும் பலருக்கு புரியாது. எனவே அதனை விட்டு விடுவோம்).

    தமிழ் மொழிக்கு 1)விஷயம் -12 உயிர் எழுத்துக்கள் ,18 மெய்யெழுத்துக்கள் மற்றும் உயிர்மெய்யெழுத்துக்கள் 216 ,1 ஆய்த எழுத்து.

    2) அதிகாரி – தமிழை தாய்மொழியாகவோ (அ) அம்மொழி பேசும் மக்கள் சம்பந்தம் உள்ளோர் எனலாம்.

    3) பயன் – இயல் ,இசை, நாடகம் என்னும் சாமான்ய வ்யவஹாரங்கள் – சமூகம், வணிகம், அரசியல், போன்றன.

    இப்பொழுது வடமொழிக்கு வருவோம்.
    1) விஷயம் – இதற்கு எழுத்து வடிவம் கிடையாது. சப்தம் மட்டுமே உண்டு. (அசார்யன் சொல்ல ,அதனை காதால் கேட்டு வாயால் உச்சரித்தல் வேண்டும். இதற்கு ஶப்த ப்ரமாணம் என்று பெயர். எழுத்து இல்லை என்பது குறையல்ல ,மாறாக நிறை என்பதனை பின்னர் பார்ப்போம்)
    உதாத்தம், அனுதாத்தம் ,ஸ்வரிதம், ப்லுதம்,ரங்க ப்லுதம் (நம்ம குறில்,நெடில் மாதிரி..ஆனா உச்சரிப்பது ரொம்ப கஷ்டம்) என உச்சரிப்புக்கள் உண்டு.
    உயிர் எழுத்துக்கள் ,மெய் எழுத்துக்கள் மட்டும் 56.(வேறுபாடு உண்டு).(எழுத்து என்பது இங்கு சப்தத்தை குறிக்கும்)
    இதற்கு மேல் உயிர்மெய்,கூட்டு எழுத்துக்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. (எழுத்து என்பது இங்கு சப்தத்தை குறிக்கும்)

    2) அதிகாரி – த்ரை வர்ணிகர்கள் (ப்ராம்ஹண, க்ஷத்ரிய, வைஶ்யர்கள்).
    இதை எழுதும் நான் ஒரு SOFTWARE ARCHITECT/நான்காம் வர்ணத்தை சார்ந்தவன் என்பதனை பெருமையுடன் கூறிக் கொள்வேன். “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து ,அடியை அடைந்து உள்ளம் தேறி ,ஈறிலின்பத் திருவெள்ளம் யான் மூழ்கினேன்” –ஜன்மாந்தர ஸஹஸ்ரங்க்களில் பல குலங்களில் பிறந்து இப்பொழுது வடமொழியில் சொல்லும் கலைகளை; தென்மொழியில் பெரியோர் சொல்லக் கேட்டும், வாசித்தும் கற்றேன். மேலும் இக்கலியுகத்தில் எவரும் இக்கலைகளை பயிலும்படி ஆகிவிட்டது. நாங்க படிக்கலைன்னாகா …..அந்த கலைக்கு எப்டி….கெத்து வரும் …ந்றேன்… நாங்களும் படிக்கிறதாலதான் அதுக்கு ஒரு MERIT.

    3) பயன் – அதாதோ தர்ம ஜிக்ஞாஸ: என்று தர்மங்களும் ,அதற்கு பலனை அளிக்கும் தேவர்களும் மற்றும்
    அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸ: என்று –அந்த தர்மங்களை தனக்கு உபாசனமாகவும்,அந்த தேவர்களை அந்தர்யாமியாகவும் உடைய பரப்ரஹ்மத்தை அடைவது இதன் பலன்.

    உலகில் பேசவல்லவர்களை நாம் பலவாறாகக் காண்கிறோம். கப்பலானது தண்ணீரில்தான் போகும்; ஆகாசத்திலோ தரையிலோ போகாது. ஏரோப்ளேன் ஆகாசத்தில்தான் போகும்; தண்ணீரிலோ தரையிலோ செல்லாது. மாட்டுவண்டிகள் குதிரைவண்டிகள் சைகல்கள் மோடர்கள் தரையில்தான் போகும்;தண்ணீரிலோ ஆகாசத்திலோ போக மாட்டா. ரைல்வண்டிகள் தரையில்போனாலும் தண்டவாளத்தின் மீதுதான் போகும்- என்றிப்படி ஓயாமல் பேசிக் கொண்டிருப்பர்கள். இவற்றுக்கு வாசாடோக்தி யென்று பெயர்.

    சிலர் இத்தகைய வீண்வம்புப் பேச்சுக்களை சிறிதுமறியாமல் ஶ்ருதி, இதிஹாஸ, புராண, திவ்யப்ரபந்த சூக்திகளையே பொழிந்து “கேட்டறியாதன கேட்கின்றோம் “ என்று பலரும் உகந்து கொண்டாடும்படி அம்ருத வர்ஷமாகப் பேசுவார்கள். இரண்டின் வாசியையுமறிந்து மகிழவல்ல யாரோ அவர் சிலரேயாவர். மற்றையோருக்கு இரண்டும் ஒன்றாகவே தோன்றும். இஃது எங்ஙணேயென்னில் ; காட்டில் நரிகள் ஊளையிடுகின்றன. மற்றொருபக்கம் குயில்கள் கூவுகின்றன. இரண்டொலிகளும் எருமைகடாக்களின் காதிலும் விழுகின்றன. ஏதேனும் வாசியறியுமோ அவை !

    ||வாசாடோக்தௌ வாகம்ருதே வா ஸுகவீநாம் ஸ்தோகப்ரக்ஞாஸ் துல்யத்ருஶோ ஹந்த பவந்தி|
    கோமாயூநாம் கோகிலயூநாமபி ஶப்தேஷு ஏகாகாரா மாநச வ்ருத்திர் மஹிஷாணாம்|| -அரசாணிபாலை வேங்க்கடாத்வரியின் ஸுபாஷித கௌஸ்துப வரிகள். (நன்றி PBA ஸ்வாமி -ஶ்ரீராமானுஜன் 376 இதழ்)

    எனவே வடமொழி வைதீக மொழியாம் லௌகீக வ்யவஹாரத்திற்கு அன்று. அது பேச்சுமொழியல்ல.

  3. வினாக்கள் :
    1. வடமொழிக்கு எழுத்துக்கள் உண்டா ?
    2. வடமொழி இறந்த போன பாஷையாமே ? யாரும் பேசுவதில்லையாமே ?
    விடை:
    இது நான், ராமாயண உபன்யாசத்தில் கேட்ட ஒரு நிகழ்ச்சி. அதாவது ,ராவண வதம் முடிந்து அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறி கிஷ்கிந்தை அடைந்தனர். அங்கிருந்த வானர பெண்டிரும் விமானத்தில் ஏறி பிராட்டியைக் காண அவா. “இவ்வளவு ப்ரயாசைப் பட்டு ,கடலில் அணை கட்டி ,

    கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய்,
    சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
    மலைகொண்டு அலைநீர் அணைகட்டி மதிள்நீர் இலங்கை வாளரக்கர்
    தலைவன் தலைபத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடைநெஞ்சே. – பெரிய திருமொழி

    கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கைநகர்
    அம்பெரி உய்த்தவர் தாளிணை மேலணி,
    வம்பவிழ் தண் அம்துழாய் மலர்க்கே இவள்
    நம்புமால் நானிதற்கு என்செய்கேன் நங்கைமீர். –திருவாய்மொழி

    அரக்கர் தலைவனை வதைத்து ,திரும்ப கொணர்ந்த பேரழகியை காண அவா. பெருமாள் அனைவருக்கும் தேவியின் தரிசனம் செய்வித்தார். உடனே அங்கு ஒரே …கீச் ..கீச் ….கொர்…கொர்….சத்தம் எழுந்த்து.
    பெருமாள் சுக்ரீவனை வினவுகின்றார். வானரிகள் என்ன பேசினார்கள் என்று. அதற்கு சுக்ரீவரும் –“இந்த கொம்புபோல் சீதைக்கா இவ்வளவு ஆர்பாட்டம் !!! இவள் முகம் இப்படி இருக்கின்றது. இவள் மூக்கு இப்படி இருக்கின்றது. அட! போனால் போகிறது ! இம்மா துண்டு வால் கூட இல்லியே “ –என்று கேலி செய்கின்றனர் என்றார். பெருமாளும் பிராட்டியும் சிரிந்தார்களாம்.

    பிராட்டிக்கு வால் எவ்வாறோ அவ்வாறே வடமொழி எழுத்தும்,அதன் பேச்சு வழக்கும். அதாவது அசம்பவம். வடமொழியில் யாரும் வ்யவஹாரம் செய்வதில்லை. அன்றும் இல்லை. இன்றும் இல்லை. அது வெறும் ஆத்மா ஞானம் பெற மட்டுமேயாம்.

  4. // அவர் எழுதிய இந்தப் பாட்டிலுமே சுந்தரம், நீர், வதனம், பரதகண்டம், தக்கணம், திராவிடம், திலகம், வாசனை, உலகம், திசை, பரம்(பொருள்), உதரம், உதித்தே என்று இத்தனை சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. //

    தமிழில் இவ்வாறு 40 விழுக்காடுகளுக்கு மேல் சமஸ்கிரத வார்தையும் அல்லது அதன் வேர் சொல்லும் உள்ளது என்று சொன்னால் பலர் ஏற்க மறுக்கிறார்கள்.

    // எனவே, அன்றைய தமிழ்நாடு அரசு, மேற்கண்ட வரிகளை நீக்கிவிட்டு மற்ற வரிகளை மட்டும் அதிகாரபூர்வ வாழ்த்துப் பாடலாக வரையறை செய்தது மிகச் சரியான முடிவு //
    .
    இதை மாற்றிய பொழுது யார் முதல் அமைச்சராக இருந்தார் ? இன்றும் பல நிகழ்சிகளில் இந்த வரியையும் சேர்த்துதான் பாடுகிறார்கள் – அரசு நடத்தும் விழாக்களிலும் இதை கேட்கலாம் !!!!????

  5. Well done! Correct interpretations !!

    Tamil Nadu Government of DMK made an error in making this a State anthem. Just as Tagore composed a new song for National Anthem, a new song for Tamil anthem should have been composed and made operational. There were no dearth of poets with us. It’s not sufficient to remove a few lines from Pillai’s composition. It’s too late to go for a new one because the chances of DMK coming to power are dim. The song will continue as it is.

    By the way, it’s wrong to say the Tamil Muslims, as a whole, stand up for this song. As with all kinds of people, so with Tamil Muslims, there’re two kinds: one accepts all w/o minding anything; the other accepts only if their religious belief is not violated. I’ve seen certain Muslims not standing up. Unless it is made compulsory, they won’t stand up. As with the National anthem, here too, we must force people to stand up when Pillai’s song is relayed.

    Vedam Gopal stated the obvious. About 90 percent of Tamil is from Sanskrit.

    (As usual, my message will be blocked 🙁 )

  6. After the line, there were no dearth of poets with us, add these:

    However, a poet’s immediate imagination is to visualize his native land or language as a female, a mother, or a goddess. So, in any new anthem for Tamil Nadu the Tamil language will be a mother only to worship – a notion that’s completely repugnant to an orthodox Muslim who shouldn’t worship anyone except Allah.

  7. தமிழ் தாய் வாழ்த்தில் இந்து மத கூறுகள் உள்ளது என்று கூறுவது விசமத்தனமான பிரச்சாரம் !

    சுந்தரம் பிள்ளை அவர்கள் ஆரியம் வெறுப்பவர் !

    இந்த பாடலின் கடைசி வரியில் அது தெளிவாகும் , அதே போல் எல்லா கருத்தையும் வேத கருத்தாக மாற்றுவது

    வேதத்தில் சொல்லுதே அவர் கையாண்டு இருக்கிறார் என்று சொல்வது அவரை சிறுமை படுத்துவது !

    சுந்தரம் பிள்ளை அவர்கள் விவேகானந்தர் சந்தித்தபோது

    நான் இந்து அல்ல திராவிடன் என்று பெருமையாக கூறியவர் !

    திருவனந்தபுரத்தில் விவேகாநனந்தர் தங்கியிருந்த நாட்களில் ஒருநாள், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

    விருந்திற்குப் பிறகு சுவாமி விவேகானந்தரும், சுந்தரம் பிள்ளை அவர்களும் மகிழ்வோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விவேகானந்தர் சுந்தரம் பிள்ளையைப் பார்த்து, தங்கள் கோத்திரம் என்ன? என்று கேட்டார். சுந்தரம் பிள்ளை ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் சுந்தரம் பிள்ளை அவர்களே எழுதியுள்ளார். வாருங்கள் அப்பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

    உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.

    பார்த்தீர்களா, இவர்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இனி சங்க நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் வாருங்கள்.

    வந்த மாதரம் பாட்டுக்கும் தமிழ்தாய் வாழ்த்து பாட்டுக்கும் உள்ள வித்யாசம்

    இந்த நாட்டை வணங்குவது வந்தே மாதரம் !

    தமிழ் தாயாய் போற்றி வாழ்த்துவது தமிழ் தாய் வாழ்த்து !

    அது வேறு இது வேறு !

    வந்தே மாத்ரமும் இந்த பாடலும் வேறு !

    ஏக இறைவன் அல்லாஹ்வை தான் வணங்குவேன் என்பது முஸ்லீம் நம்பிக்கை !

    தமிழ் தாய் வாழ்த்து பொருள் இதோ

    அறிஞர்களின் பொருள் :
    ~~~~~~~~~~~~~~~~~~~

    நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

    இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

    எளியவார்த்தையில் :
    ~~~~~~~~~~~~~~~~~~
    அதாவது — இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை …பாரத நாடே அவளின் முகம் …தென்திசை அதன் நெற்றியாம்…. அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் …அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

    எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்

    கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

    சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

    ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் எப்போது இளமை யாக இருக்கின்ற உன்னை வாழ்த்திகிறோம்

    என்பது பொருள் !

    இந்த பாடலை MS சுப்புலக்ஷ்மி பாட மறுத்தார் என்பது வேறு செய்தி !

  8. ஆரியம் வெறுப்பவர்களாயினும் சரி, தமிழ்க் காதலர்களாயினும் சரி, எழுதும்போது வடமொழிச்சொற்களைப் போட்டெழுதுவது எங்கும் காணப்படுவது. பரிதிமாற்கலைஞரின் நூலொன்றைப்படித்தபொழுது அவர் தனித்தமிழ் ஆர்வலர்; போராளி என்ற போதிலும் தன் எழுத்துநடையில் வடமொழிச் சொற்கள் ஆங்காங்கே போட்டுத்தான் எழுதுகிறார்.

    பிள்ளையும் அதே தவறைச்செய்துவிட்டார் போலும்! பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள வடமொழிச்சொற்களையும் காட்டித்தான் பேசுகிறார கட்டுரையாளர். அவரைப்போன்றவர்கள் இப்பாடலைத் தங்கள்வயப்படுத்தி தமிழ்நாடே ஆரியத்தின் காலடியில் வீழ்ந்ததுதான் என இகழாமலிருக்க, இப்பாடலுக்குப் பதிலாக வேறொரு பாடலை – வடசொற்கள் ஒன்றுமேயில்லாமல் – எழுதி அரசிடம் கொடுக்கலாம். அரசு முன்பேயிதைச் செய்திருக்க வேண்டும்.

    தமிழ்மொழியில் எதையும் வடமொழிச்சொற்கள் கலக்காமல் எழுதவியலும். தமிழுக்கு பிறதுணையில்லாமல் தானே நிற்க வலிமையுண்டு.

    சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே அதைத்
    தொழுது படித்திடடி பாப்பா
    (பாரதியார் தன் மகளுக்குச் சொல்லியது)

  9. “About 90% of Tamil is from Sanskrit” This statement is absolutely wrong.தமிழ், உயர் தனிச் செம்மொழி என்பது அனைவரும் அறிந்ததே.
    Note: This is the third time I am conveying my views on this.I hope this time also this will not be published,as usual.This is contrary to your declared policy on publishing reader’s comments.

  10. ‘மனோன்மணி’ என்ற பெயரோ அல்லது சொல்லோ தூய தமிழ் இல்லை. மனோன்மணீயம் என்ற சொற்றொடர் தமிழ் இலக்கணத்திற்குப் புறமாக உள்ளது. வடமொழியில்தான் அந்த சொற்றொடருக்கு முறையான இலக்கணம் இருக்கிறது. ‘நாராயணீயம்’, கிராதார்ஜுனீயம்’ என்ற இடங்களில் சொல்லப்படும் இலக்கண முறைதான் ‘மனோன்மணீயம்’ என்பதற்கும் பொருந்தும். அதன் பொருள் ‘மனோன்மணீயைப் பற்றி’ என்பதாகும். ஆரியத்தைச் சாடிய சுந்தரனார், ஆரிய இலக்கணப்படி தம் நூலுக்கு பெயர் சூட்டியதேன்?

    நாடகத்தில் வரும் கதா நயகனின் பெயர் ‘புருஷோத்தமன்’, கதாநாயகி ‘மனோன்மணி, வில்லன் பெயர் ‘குடிலன்’, நல்லதற்கும் அல்லனவற்றுக்கும் வேறுபாடு தெரியாமல் தத்தளிக்கும் மன்னனின் பெயர் ‘ஜீவகன்’, மனோன்மணியின் தந்தை. இவர்களைத்தவிர ‘வாணி’, ‘நடராஜன்’ மற்றும் சுந்தர முனிவரின் வடமொழிப் பெயர் கொண்ட சீடர்கள். ஏன் இந்த வடமொழிப் பெயர்கள்?

    ‘பரத கண்டம்’, ‘வதனம்’, ‘திலகம்’ ‘வாசனை’ போன்ற வடமொழிச் சொற்களை முதல் பாடலிலேய புகுத்தி விட்டு, நாடக பாத்திரங்களுக்கெல்லாம் வடமொழிப்பெயர்களிட்டு, இவை எல்லாம் போதாது என்று, தமிழன் புரிந்துகொள்ள முடியாத கடும் வடமொழிச் சொற்களை (உதாரணம்: ‘இந்தனம்’: விறகு) அங்கங்கே புகுத்திவிட்டு, அதே சமயம், ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன்’ என்று அந்த வடமொழியின் மீது வெறுப்பை உமிழ்வது, ஒரு வகையான ‘intellectual dishonesty’ இல்லையா?

    நூலின் வாயிலாக ஆசிரியர் என்ன கருத்தை வலியுறுத்துகிறார் தெரியுமா? ஆரியர் சொல்லும் ‘ஜீவாத்மா, பரமாத்மா’ தத்துவமே. இதை அவரே பெருமையாகக் கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?

  11. It seems to be correct.The peoples of Tamilnadu shd say onlyTamilnadu instred of Dravidanadu.

  12. This is a great dishonest stand taken by Sundaram pillai. When he says”Aariyam Vazhakkozhindu” he need not use Aariya words.
    Only regret is such a God’s language is almost dead now but why he should mention it.
    Let’s take it as his lamentation that Sanskrit has been destroyed and Tamizh should not go the same way.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *