நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்?

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

“அண்ணா! உங்களுக்கு ஐஸ் க்ரீமும் குலோப் ஜாமூனும் தனித்தனியாக வேண்டுமா, அல்லது, ஒரே கிண்ணத்தில் தரட்டுமா?” என்று கேட்டாள் சௌம்யா.

“ஒரே கிண்ணத்தில். அதுதான் அற்புதமாக இருக்கும்”

“அண்ணா! என்னிடமும் ஒரு கேள்வி உண்டு. பிரார்த்தனை வெற்றி பெற உதவாது என்று சொன்னீர்கள். ஆனால், நம்முடைய அபிலாஷைகள், ஏமாற்றங்கள், ஆழ்ந்த உணர்வுகள் ஆகியவற்றை மற்றவர்களிடம் நாம் சுலபமாகப் பகிர்ந்துகொள்ள முடியாது என்பதால் கடவுளிடம் அவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் எப்போதுமே நம்பி வந்துள்ளேன்”.

“உண்மை. பலர் அதைப் பிரார்த்தனை என்றே நம்புகிறார்கள். அந்தமாதிரியான ஒரு பார்வையைச் சட்டென்று மாற்ற முடியாது”.

“அப்படியென்றால் அம்மாதிரியான பிரார்த்தனை தவறு என்றாகுமா?”

“அப்படியில்லை. ஆழ்மனதில் உள்ள உணர்வுகளைக் கடவுளிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம் என்கிற ஆறுதலைத் தருகிறது. அதோடு மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் பாரங்களை இறக்கிவைக்கின்ற நிவாரணத்தையும் ஒருவருக்குத் தருகிறது. நிச்சயமாக ஏமாற்றம், கோபம் போன்றவற்றை விலக்கி மனதை லேசாக்குகிறது”, என்று கௌசல்யாவுக்கு விளக்கிய மஹாதேவன், ஸ்நேஹாவின் பக்கம் திரும்பி,
“சரி ஸ்நேஹா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அமர் சித்ர கதா புத்தகத்தை விரும்பிப் படிப்பாய் என்பது எனக்குத் தெரியும். நான் உன்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் – பக்தப் பிரகலாதனுக்குச் செய்ததைப் போலக் கடவுள் காப்பாற்ற வரும் கதைகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“மாமா! இப்போதுதான் பிரார்த்தனை என்பது ஒரு தொடர் நிகழ்வு என்று குறிப்பிட்டுச் சொன்னீர்கள். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.”

“சரி. வாழ்நாள் முழுவதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பக்தி செலுத்தியதால், அவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, அவர்களைக் காப்பாற்றக் கடவுள் வந்தார். நம்பிக்கையிழந்த நிலையில் இறுதியான வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றினார் என்பதைப் போன்ற சாதாரண விஷயமல்ல இது. உன் முன்னே இருக்கும் ஒவ்வொரு வேலையைச் செய்யவும், ஒவ்வொரு நடவடிக்கையை மேற்கொள்ளவும், உன்னுடைய உடல் (Body), மனம் (Mind), அறிவு (Intellect) ஆகியவற்றுக்குப் பலம் வேண்டும். ஒரு செடி செய்வதைப் போல, நீ அவற்றை ஒரு ஆதாரத்திடம் நாடுகிறாய். செடியானது கடைசி நேரத்தில் சூரியனை நாடுவதில்லை. அது ஒரு தொடர் நிகழ்வு; எல்லா காலங்களிலும் நாளும் இரவும் தொடர்ந்து நிகழ்வது”.

“நான் ஆரம்பத்திலிருந்தே, எப்போதும், பிரார்த்தனை என்பது ஒரு பயனைப் பெறுவதற்கு என்று நம்பியிருந்தால்? அதை நான் எப்படி மாற்றிக்கொள்வது?”

“நல்ல கேள்வி. நீ தேடியது கிடைப்பதற்கு உனக்குப் பிரார்த்தனை உதவியதா என்கிற கேள்வியை நீ உன்னிடத்திலேயே கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சில முறை நடந்திருக்கலாம். அனால் எப்போதும் அப்படி நடந்திருக்காது. விதிவிலக்கை விதியாக்க முடியாது. உண்மியிலேயே கடவுள் நீ கேட்கும் பயன்களையெல்லாம் தந்துகொண்டிருந்தால் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தானே! ப்ரூஸ் அல்மைட்டி (Bruce Almighty) திரைப்படம் ஞாபகம் இருக்கிறதல்லவா?”.

“அண்ணா! இந்தக் காலத்துக் குழந்தைகள் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கிறார்கள். நான் எப்படிப் பதில் சொல்வது?” என்று தன் கவலையைத் தெரிவித்தாள் சௌம்யா.

“இந்த நவீன காலத்துக் குழந்தைகள் தான் ஆதாரம் கேட்கின்றன என்று நீ உண்மையிலேயே நினைக்கிறாயா? பண்டையகாலம் தொன்றுதொட்டு, மனித இனம் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து, இதே கதைதான். சமயத்தைத் தெரிந்துகொள்வதற்கான, ஆன்மிகத்தைப் புரிந்துகொள்வதற்கான வழி, தன் உள ஆய்வு (Introspection) தான். அதாவது தன் உள்ளத்தை தானே ஆய்வு செய்து கொள்வது. கேள்விகள் கேட்கச் சொல்லி நாம் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டால், அவர்களுடைய நம்பிக்கை மேலும் வலிமை பெற்றுவிடும். உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய சமய / ஆன்மிக நூல்களில் பெரும்பான்மையானவை குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் போலவும், கேள்வி பதில் பகுதிகளாகவும் தான் இருக்கின்றன.

“ஸ்நேஹா எப்போதும் ஆதாரங்கள் கேட்கிறாள். நான் எப்படிப் பதில் சொல்வது?”

“சுலபம்! பிரார்த்தனையினால் பயன் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பை விலக்கச் சொல்லுங்கள். அதுதான் உண்மையான தீர்வு. நீ கடவுளிடம் வேண்டிக்கொண்டால் உனக்கு இது கிடைக்கும்; வேண்டிக்கொள்ளாவிட்டால் அது கிடைக்காது; என்றெல்லாம் நாம் தான் குழந்தைகளுக்குச் சொல்லித்தர ஆரம்பிக்கிறோம். அங்கே தான் குழப்பமும் ஆரம்பமாகிறது”.

“பயன் என்று சொல்லும்போது நீங்கள் செயலின் பயனைக் குறிப்பிடுகிறீர்களா?”

“ஆம். அதைத்தான் குறிப்பிடுகிறேன்”.

“ஒரு விதத்தில் பார்த்தால், புத்தி, பலம், தைரியம் ஆகியவையெல்லாம் கூட பிரார்த்தனையின் பயன்கள் தானே?”

“முழுமையாக! ஆனால் செயலின் பயன்களுக்கும் பிரார்த்தனையின் பயன்களுக்கும் வித்தியாசம் உண்டு. நீ பலத்தை வேண்டும்போது, தாராசிங்கை மல்யுத்தத்தில் தோற்கடிக்க வேண்டும் என்று வேண்டுவதில்லை; பலம் வேண்டும் என்று பிரார்த்திக்கிறாய்; அவ்வளவுதான்!”

“அப்பா, தான் கடவுளிடம் பயபக்தியுடன் இருப்பவர் என்றும், நானும் அவ்வாறே கடவுளிடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்” என்று புகார் சொல்வது போலச் சொன்னான் கௌசிக்.

“ஆஹா…! நீ சொன்னதைச் சற்றே சரி செய்ய வேண்டும். கடவுளிடம் பயப்பட வேண்டிய அவசியம் என்ன? தவறிழைத்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்பது மேற்கத்தியக் கோட்பாடு. உண்மையில் கடவுள் அன்பே உருவானவர். நீ கடவுளிடம் அன்பைத்தான் செலுத்த வேண்டுமே தவிர அவரிடம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும் அது (கடவுள் பயம் என்பது) வெறும் பேச்சுப்பொருள் தான்.”

“மாமா! பிராத்தனைப் பற்றிய ஒரு அபிப்பிராயம் எனக்குக் கிடைக்கிறது. அதாவது, பிரார்த்தனையை ஒரு சடங்காகப் பார்க்காமல் அதை ஒரு தனிப்பட்ட விஷயமாகப் பார்க்கிறேன். என் பிரார்த்தனை இடம், காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாகத் தனித்து இருக்கிறது என்கிற உண்மையே அதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள வைக்கிறது. அப்படியிருக்கும்போது, அதை ஏன் ஒரு முக்கியமான கடமையாகவும் செயலாகவும் முன்னிறுத்த வேண்டும்?”

“உண்மையில் அப்படியில்லை கௌசிக். வெளியுலகுக்குக் காண்பிக்காமலேயே நீ உன் பிரார்த்தனையில் உச்சக்கட்ட ஈடுபாட்டுடன் இருக்க முடியும். அது உன்னுடைய தனிப்பட்ட தொடர்பும் விருப்பத்தேர்வும் ஆகும்”.

“பூஜை மற்றும் பலவித சடங்குகள் சம்பிரதாயங்களால் என்ன பயன்?”

“அவை சுத்தத்திற்கும் தூய்மைக்கும் உதவுகின்றன”.

“விளக்கிச் சொல்ல முடியுமா?”

“கண்டிப்பாக. சங்கரின் நிர்வாக இயக்குனர் வரும் சனிக்கிழமையன்று வீட்டிற்குச் சாப்பிட வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இங்கே வீட்டில் என்னவெல்லாம் செய்வீர்கள்?”

“அனைத்துப் பொருட்களையும் முறையாக அதனதன் இடத்தில் வைத்து வீட்டைச் சுத்தப்படுத்துவோம். வரவேற்புக் கூடத்தைச் சுத்தமாகப் புதியதாக நறுமணத்துடன் வைத்திருப்போம். சுவையான விருந்து தயார் செய்வோம். எல்லாவற்றையும் முறையாகச் செய்வோம்.”

“சரி. வேறு ஒரு நபருக்கு, அவர் உங்களுடைய நிர்வாக இயக்குனர் என்கிற காரணத்துக்காகவே, நீங்கள் இவ்வளவு செய்யும்போது, இவ்வுலகையே படைத்தவர் உங்கள் வீட்டிற்கு வருகிறார் என்றால் என்ன செய்வீர்கள்?”

“ஆஹா! புரிந்தது!! அதை வேறு ஒரு நிலைக்கே உயர்த்தி விடுவோம்!”

“மிகவும் சரியாகச் சொன்னாய்! கடவுளைக் காலமுறைப்படி அவ்வப்போது நீ உன் வீட்டிற்கு அழைக்க, உன்னை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே, அனைத்துப் பூஜைகளும் முறையாக விதிக்கப்பட்டுள்ளன. அவை உன் வீட்டைச் சுத்தப்படுத்தவும், அனைத்தையும் முறைப்படுத்தவும் பயன்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, போற்றுதலைப் பழப்படுத்திக்கொள்ள உதவுகின்றன.”

“அப்புறம்?”

“உண்மையில், தினப்படி பூஜையை வழக்கமாகக் கொள்வது பொருட்களை சுத்தமாகவும் முறையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், உன் பிரார்த்தனை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் செய்துவிட்டுப் பிறகு மறந்துவிடுவது அல்ல.”

“அம்மா கடவுளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட இனிப்புகளையும் பதார்த்தங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்போது, பிரசாதம் என்று அவற்றை ஏற்றுகொள்ளச் சொல்கிறார். அதன் அர்த்தம் புரியவில்லை. பிரசாதம் என்றால் என்ன?” என்று கேட்டாள் ஸ்னேஹா.

“நான் அதை விளக்குகிறேன். சௌம்யா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து அரை கிலோ மைசூர்பாகு வாங்கி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். வீட்டிற்கு வரும் வழியில், பல்வேறு நண்பர்களைச் சந்திக்கிறார். ஆனால் ஒருவருக்கும் அவர் ஒரு துண்டு மைசூர்பாகு கூடத் தரவில்லை. வீட்டிற்கு எடுத்துவந்து, அதை சாப்பாட்டு மேஜையில் வைத்துவிடுகிறார். உங்களில் யார் கண்ணில் அது பட்டாலும், அதிலிருந்து ஒரு துண்டு எடுத்துச் சாப்பிட்டுவிட்டுக் கைகளைக் கழுவிக்கொண்டு உங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவீர்கள், இல்லையா?”

“ஆமாம். நிச்சயமாக.”

“அதற்குப் பதிலாக, சௌம்யா அந்த மைசூர்பாகு டப்பாவை ஒரு கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கோவிலுக்குச் சென்று, குருக்களிடம் அதைக்கொடுத்து, கடவுளுக்கு நைவேத்யம் செய்யுமாறு சொல்கிறார். குருக்களும் கடவுளின் காலடியில் அதை வைத்துச் சில சடங்குகளைச் செய்துவிட்டுச் சில துண்டுகளை எடுத்துக்கொண்டு மீதமிருப்பதை சௌம்யாவிடம் தருகிறார். அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள் சௌம்யா?”

“அதை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். ஒரு சிறிய துண்டு கூடக் கீழே விழாமல் கவனமாகப் பார்த்துக்கொள்வேன்.”

“ஆம், அதுவே சரி. வீட்டிற்குத் திரும்பும்போது, யாருக்காவது அதைக் கொடுப்பீர்களா?”

“கண்டிப்பாக. வழியில் சந்திக்கின்ற அனைவருக்கும் கொடுப்பேன்”.

“அவர்கள் முழு துண்டை எடுத்துக்கொள்வார்களா, அல்லது, ஒரு சிறிய துண்டை எடுத்துக்கொள்வார்களா?”

“ஒரு பிரசாதத்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அப்படி ஒவ்வொருவரும் ஒரு சிறிய துண்டைத்தான் எடுத்துக்கொள்வார்கள்”.

“பிறகு வீடு வந்தவுடன் அதை எங்கே வைப்பீர்கள்?”

“ஒரு சுத்தமான இடத்தில் வைத்துவிட்டு அனைவரிடமும் அந்தப் பிரசாதத்தைப் பற்றிச் சொல்வேன்”.

“மிகச்சரி. பிரசாதம் என்பதன் சாரம் இதுதான். அது பிரசாதமாக இருந்தால் நாம் அனைவரிடமும் அதைப் பகிர்ந்துகொள்வதில் ஆவலுடன் இருக்கிறோம். அதே பிரசாதமாக இல்லாவிட்டால், நாம் அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்வதில்லை”.

“ஏன் இதைச் சொல்கிறீர்கள்?”

“இந்த மனப்பாங்குதான் பயன்களை மதித்துப்போற்ற உனக்கு உதவுகிறது. பரீட்சைகளிலோ, தொழிலிலோ, வேறு எதிலானாலும், நீ பெறும் வெற்றி உன்னுடைய முயற்சியால் மட்டுமே அல்ல. வேறு பலரும், தெரிந்தும் தெரியாமலும், தீவிரமாகவும் பரபரப்பின்றியும், அதற்குப் பங்காற்றியிருக்கிறார்கள்”.

“அதனால்?”

“பயனைப் பிரசாதமாக நீ ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள உன்னைத் தூண்டும். பெற்ற பயனை, அளவு, தரம் என்கிற பாகுபாடின்றி, அவற்றுக்கு அப்பாற்பட்டு, அதைக் கடவுளின் பிரசாதமாக ஏற்றுக்கொள்வது, உன்னைக் கடவுளிடமும் உனக்கு உதவியவர்களிடமும் நன்றி உடையவனாக ஆக்கும். நீ எதிர்பார்த்த பயன் அப்படியே கிடைக்காமல் போனாலும் கூட, கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் உனக்கு வரும்”.

“பிரார்த்தனை நம்மை மிகவும் மென்மையானவர்களாக ஆக்கிவிடுமா? இதில் நிறைய சுயநலமின்மையும் அன்பும் இருப்பது போல் தோன்றுகிறது” என்று கேட்டான் கௌசிக்.

“நல்ல கேள்வி. உடல், மனம், அறிவு ஆகியவற்றில் நீ பலம் பெற்றிருந்தால், மென்மையானவனாகவும், அதே சமயத்தில் வலிமை மிகுந்தவனாகவும் உன்னால் இருக்க முடியும். உன்னால் எப்பேர்பட்ட தருணத்தையும் சந்திக்கக் கூடிய தைரியமும், பிரச்சனையை அலசக்கூடிய திறனும், தீர்வு காணக்கூடிய வல்லமையும், அனைத்தையும் சரியாகச் செய்யக்கூடிய திறமையும் உன்னிடம் இருக்கும். இதற்கும் மேல் வேறென்ன வேண்டும் உனக்கு?”

“மிகவும் நன்றி மாமா! இப்போது எனக்கு, பிரார்த்தனை என்றால் என்ன, ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும், எப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும், பிரார்த்தனை மூலம் என்ன கிடைக்கும், கிடைப்பதைப் பிரசாதமாக எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், என்பவை எல்லாம் நன்றாகப் புரிகிறது”.

“நல்லது. இரவு நன்றாக உறங்குவதற்காக இப்போது கலைந்து செல்வோம். பிறகு சந்திப்போம்”.

(தொடரும்)

One Reply to “நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்?”

  1. Good article. Swamy Pujya Sri Dayanada Saraswathi Ji had written about prayers and its effects. Neema Majumudar Ji, a student of Swamy Dhyanada Ji has given a talk on prayers its effects in You Tube. In a nutshell: All actions will have a result ( cause and effect), hence prayers, as action, ( as long as the goal is Dharmic) will result in an effect. Example: One who prays and who doesn’t, apply for the same job and when both are equally qualified, then the guy who prays adds on one EXTRA UNKNOWN factor, prayer, a positive factor to his application. All being equal, he adds another unknown variable to his job prospects. This is called Intelligent living as per Swamy Ji. Watch Neema Ji’s videos on you tube on this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *