2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!

17வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் முடிவு – வென்றது தேசியம் என்பதே. இந்த வெற்றிக்கு அடித்தளமாக பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்டு, பிரமாண்டமான வெற்றியை தமதாக்கி இருக்கிறார்கள். அவர்களுடன் பலகோடி பாஜக, இந்துத்துவ இயக்கங்களின் தொண்டர்களும் இந்த 4 மாதங்களும் விடாமுயற்சியுடன் களம் கண்டிருக்கிறார்கள்.

2014 லோக்சபா தேர்தலுக்கும் 2019 லோக்சபா தேர்தலுக்கும் அடிப்படையில் பெரும் வேறுபாடு உண்டு. 2004 முதல் 2014 வரை ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கட்டுக்கடங்காத ஊழல்களாலும், சுதந்திரமாகத் திரிந்த பயங்கரவாதிகளால் உள்நாட்டில் நிலவிய பாதுகாப்பின்மையாலும், ஆட்சி மாற்றத்துக்காக தேச மக்கள் ஏங்கித் தவித்த நிலையில் வாராது வந்த மாமணியாக வந்தார் நரேந்திர மோடி. ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் மும்முறை முதல்வராக இருந்த காலகட்டத்தில் மோடி நிகழ்த்திய சாதனைகள் அவரை பிரதம வேட்பாளராக உயர்த்தின. அந்தத் தேர்தலில் பாஜக தனித்து 282 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றதுடன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 331 தொகுதிகளில் வென்றது. தேநீர்க் கடைக்காரரின் மகன் ஒருவர் மாபெரும் ஜனநாயக தேசத்தின் பிரதமராக உயர்ந்ததை அப்போது உலகம் கண்டது.

அதாவது 2014 தேர்தல் காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு புதிய விடியலை எதிர்பார்த்த மக்களுக்கான தேர்தல். 2019 தேர்தல் அப்படியானதல்ல. 2014 முதல் 2019 வரை மோடி பிரதமராக வீற்றிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீதான மதிப்பீடு செய்வதற்கான நேர்மறையான தேர்தல் இது. இத்தேர்தலில் பாஜகவின் இடங்கள் குறைய பல வகைகளில் வாய்ப்பிருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் நிகரற்ற தலைமையும், பாஜகவின் கட்டுக்கோப்பான தேர்தல் பணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வியூகமும், இந்தத் தேர்தலையே பாஜகவுக்கான- மோடிக்கான தேர்தலாக மாற்றம் பெறச் செய்தன.

இந்தத் தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். இவர்களில் சுமார் 8 கோடி பேர் புதிய வாக்காளர்கள். 2019 ஏப்ரல் 1இல் துவங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 67.11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்து நாட்டின் தலைவிதியைத் தீர்மானித்திருக்கிறார்கள். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு சதவிகிதம். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் வாக்களித்த தேர்தலும் இதுவே.

இந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 3 கோடி. பாஜக தலைவர் அமித் ஷாவும் தன் பங்கிற்கு 100க்கு மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்றார். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசியத் தலைவர்களின் பிரசாரக் கூட்டங்களின் எண்ணிக்கை தனி. இவ்வாறாக இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே.

மாறாக எதிர்த் தரப்பில் மோடியை எதிர்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் மக்கள் திரளை இந்த அளவுக்குச் சந்திக்கவில்லை. அந்த அளவுக்கு அக்கட்சிகளுக்கு உள்கட்டமைப்பும், தேர்தல் திட்டங்களும் இல்லை. மேற்கு வங்கத்தில் மமதா, தமிழகத்தில் ஸ்டாலின், ஒடிஸாவில் நவீன் பட்நாயக், ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ், மஹாராஷ்டிரத்தில் சரத் பவார், உ.பி.யில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், பஞ்சாபில் அமரீந்தர் சிங், கேரளத்தில் பினாரயி விஜயன், என ஆங்காங்கே தனிப்பட்ட தலைவர்களின் முயற்சியால் பாஜகவுக்கு எதிரான பேரணிகள் நடத்தப்பட்டனவே ஒழிய, மோடிக்கு எதிராக தேசிய அளவில் ஒருங்கிணைந்த அளவில் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை. பிரதான எதிரக்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரமாண்டமான கூட்டங்களைத் தவிர்த்து சிறு கூட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஒன்றாக மேடையில் தோன்றி பாஜக ஆட்சிக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கும் புகைப்படத்துக்கு காட்சி தந்ததுடன் சரி. ஆனால், அவர்களிடையே உண்மையான பிணைப்பு இல்லை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியையோ, அதன் தலைவர் ராகுல் காந்தியையோ கிஞ்சித்தும் நம்பவில்லை. தவிர, ஒவ்வொருவருக்கும் பிரதமர் பதவிக் கனவு வேறு! மோடி எதிர்ப்பு ஒன்றே அவர்களை இணைக்கும் பசையாக இருந்தது. நாட்டு மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்ய அது மட்டுமே போதுமானதல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. எனவேதான், அவர்களது பிரசாரம் எடுபடவில்லை.

மோடி அரசின் பொருளாதாரச் சீர்த்திருத்த நடவடிக்கைகளான, ஆதாரைக் கட்டாயமாக்கியது, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் நீக்கம், சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு போன்றவற்றால் உடனடியாக ஏற்பட்ட எதிர்விளைவுகளை மட்டும் கணக்கில் கொண்டு அரசுக்கு எதிராக பிரசாரம் செய்த எதிர்க்கட்சிகள், அந்த நடவடிக்கைகளினால் விளைந்த நன்மைகளை கருத்தில் கொள்ளவில்லை. அந்த நன்மைகள் மக்களால் உணரப்பட்டிருந்த நிலையில் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் மழுங்கத் துவங்கின.

அதேபோல, மோடி அரசு மேற்கொண்ட உள்கட்டமைப்புப் பணிகளின் விரிவை எதிர்க்கட்சியினரோ, ஊடகங்களோ இன்னமும்கூட உணரவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் உயர்வு, நீர்வழிப் போக்குவரத்து துவக்கம், விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (உதான் திட்டம்), துறைமுகங்கள் விரிவாக்கம், கங்கை நீர் சுத்திகரிப்பு, ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான உள்கட்டமைப்பில் பாஜக அரசு அதீத கவனம் செலுத்தி வந்துள்ளது. இதனால் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதையும், எதிர்காலத்தில் இவற்றின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பதையும் எதிர்க்கட்சிகள் கணிக்கவில்லை,. அவர்களைப் பொருத்த வரை பாஜக என்றால் இந்து மதவாதக் கட்சி மட்டுமே. இதை மட்டும் பிரசாரம் செய்தாலே போதும் என்று அவர்கள் போட்ட தப்புக் கணக்கிற்குக் கிடைத்த விடையே, மோடி அரசின் இரண்டாவது அத்தியாயம்.

இந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு ஏழ்மை நிலையிலுள்ள 8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி இருக்கிறது. பல லட்சம் வீடுகள் பிரதமரின் வீட்டுக்கடன் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தூய்மை பாரதத் திட்டத்தின் அங்கமாக கழிப்பறை இல்லாத 2 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. முத்ரா திட்டம் மூலமாக கோடிக் கணக்கான சிறுதொழில் முனைவோர் வங்கிக் கடனுதவியை எளிதில் பெற்றிருக்கிறார்கள். இந்தத் தகவல்களை நாம் ஏதாவது ஓர் ஊடகத்தில் படித்தோ, பார்த்தோ அறிந்திருக்கிறோமா? மோடி அரசு செய்த நல்ல திட்டங்களைக் கூட காண மறுத்த ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும் இந்த அரசை மதவாத அரசாக மட்டுமே குறுக்கிப் பார்த்தனர். கள அனுபவமோ வேறு. அரசு நலத் திட்டங்களின் பயனாளிகள் நாடு முழுவதும் பரவலாக- பிரதேச வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி, ஜாதி வித்யாசமின்றி கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தேர்தலில் தங்கள் நன்றிக்கடனை மோடி அரசுக்குச் செலுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், எதிர்க்கட்சியினரோ, இந்து மதவாதப் பூச்சாண்டி காட்டுவதிலேயே குறியாக இருந்தனர். அதன்மூலமாக நாட்டில் உள்ள சுமார் 30 சதவிகித சிறுபான்மையினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற முடியும் என்பதே அவர்களின் வாக்கு வங்கிக் கனவு. தமிழகம், கேரளம் போன்ற சில இடங்களில் இந்த வியூகம் எதிர்க்கட்சியினருக்கு உதவியது உண்மையே. ஆனால், நாட்டில் பெரும்பான்மை மக்கள் எதிர்க்கட்சியினரின் இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியை ரசிக்கவில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளைக் கவர எதிர்க்கட்சியினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதைக் கண்ட பெரும்பான்மை இந்து மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட முடிவெடுத்ததும் இந்தத் தேர்தல் களத்தின் நிகழ்ந்த மாபெரும் மாற்றம். மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியதற்கு, மமதாவின் முட்டாள்தனமான மோடி வெறுப்பே காரணம். தவிர, இஸ்லாமியமயமாகும் வங்கத்தைக் காக்க மமதா தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை அம்மாநில மக்கள் புரிந்துகொண்டார்கள்.

மோடி அரசு மக்கள் நலத் திட்டங்களில் எந்தப் பாரபட்சமும் காட்டவில்லை. அவை அனைத்துத் தரப்பினருக்கும் பயனளித்துள்ளன. பசுவதைக்கு எதிரான போராட்டங்களால் சில இடங்களில் அரசுக்கு பிரச்னை ஏற்பட்டபோதும், அரசின் உறுதியான நடவடிக்கைகள் அவற்றைக் கட்டுப்படுத்தின. தலித் மக்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி சமூகத்தைப் பிளக்க நடந்த முயற்சிகளும் (மகாராஷ்டிரம்) முளையிலேயே கிள்ளப்பட்டன. காஷ்மீரோ, வடகிழக்கு மாநிலமோ, பிரிவினைவாதிகளுக்கு அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதிகள் தங்கள் மறைவிடங்களிலேயே முடக்கப்பட்டதால் நாட்டில் குண்டுவெடிப்புகள் முற்றிலும் நின்றுபோயின. இவை அனைத்தையும் நேரடியாகக் கண்டு, உணர்ந்திருக்கும் மக்களிடம் எதிர்க்கட்சியினரின் ‘பாஜக பூச்சாண்டி’ பிரசாரம் போணியாகவில்லை.

இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல, காஷ்மீரின் புல்வாமாவில் (பிப். 14, 2019) பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்திய மனிதகுண்டு தாக்குதலில் 46 இந்திய வீரர்கள் பலியானது கண்டு தேசம் பதைத்தபோது, பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பாலகோட் பயங்கரவாதப் பயிற்சி முகாமில் குண்டு வீசி இந்திய விமானப் படை பதிலடி (பிப். 26) கொடுத்தது. அதில் 300க்கு மேற்பட்ட பாக். ஆதரவு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் நொந்திருந்த இந்திய மக்கள் மோடி அரசின் துணிச்சலான முடிவால் கவரப்பட்டார்கள். ஆனால், பாலகோட் தாக்குதல் குறித்து எள்ளி நகையாடி எதிர்க்கட்சியினர் தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொண்டதுடன், மக்கள் மனதிலிருந்தும் வெளியேறினார்கள்.

பாலகோட் தாக்குதலுக்குப் பழிவாங்க வந்த பாக். போர் விமானங்களை இந்தியப் போ விமானங்கள் (பிப். 27) துரத்தி அடித்ததையும், அப்போது விமான விபத்தால் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை ஒரே நாளில் இந்திய அரசின் மிரட்டலுக்கு அஞ்சி பாகிஸ்தான் ராணுவம் விடுதலை செய்ததையும் நாடு கண்டது. அதுவே இந்தத் தேர்தலின் திருப்பு முனையாகவும் அமைந்தது. தேசப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே கட்சி பாஜக என்பது வாக்காளர்கள் நெஞ்சில் உறுதியாகப் பதிந்தது.

இவ்வாறு, இந்தத் தேர்தல் களத்தில், பெரும்பான்மையினரின் கௌரவமும், தேசப் பாதுகாப்பும் மையப் பொருளாகின. மேலும், மோடி அரசின் நலத்திட்டங்கள் அரசு மீதான மதிப்பீட்டுக்கு வலுச் சேர்த்தன. அதேவேளையில் நல்ல தலைமை இன்றி, எந்தக் குறிக்கோளும் இன்றி மோடி எதிர்ப்பு கோஷங்களுடன் மக்களை அணுகிய எதிர்க்கட்சியினர் மோடியைக் கதாநாயகனாக உயர்த்தினர். இது ஒருவகையில் எதிர்மறை விளம்பரமாகவே அமைந்தது. ஊழல்வாதிகளும் பிரிவினைவாதிகளும் அடிப்படைவாதிகளும் கொண்ட எதிர்க்கட்சியினரின் கூட்டணிகள் நிகழ்த்திய வெறுப்புப் பிரசாரம் மோடிக்கே சாதகமானது.

மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் செயலிழந்திருந்தாலும், அதை சாதகமாக்கும் திறமை அவசியமானது. இங்குதான் பாஜகவின் தேர்தல் களப்பணியும், மக்களுடன் நேரடித் தொடர்பும் பெரும் பங்காற்றின. வாக்குச்சாவடி மட்டத்திலேயே பாஜகவின் தேர்தல் பணி துவங்கிவிட்டது.மோடிக்கு ஆதரவாக பாஜகவினர் செய்த பணிகளுக்கு நிகராக பாஜக அல்லாத பலரும் மோடி என்ற தனி மனிதருக்காக தேர்தல் பணியாற்றிய காடசிகளையும் நாடு கண்டது. மோடியின் வெற்றிக்காக வெளிநாடுகளில் இருந்து ஒருமாத காலம் வந்து பிரசாரம் செய்த இந்தியர்களும் உண்டு.

பாஜக தொண்டர்களின் தேர்தல் களப் பணி, வாக்குகள் சிதறுவதைத் தடுக்க வலுவாக அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, நல்ல தலைமை, நிகரற்ற பிரதமர் வேட்பாளர் ஆகியவை பாஜக தரப்பில் சாதகமாக இருக்க, எதிர்த்தரப்பில் திசை தெரியாமல் தள்ளாடும் கப்பல் போல காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்க்கட்சியினரும் திணறினர். இவை அனைத்தையும் கண்ட இந்திய மக்கள், மோடிக்கே மீண்டும் வாய்ப்பளித்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தான்களை அழுத்தினர்.

மக்களின் மனோபாவம் எதிர்க்கட்சிகளுக்கு முதல் கட்டத் தேர்தலிலேயே புலப்பட்டுவிட்டது. எனவேதான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும் கூட கிறுக்குத் தனமான விமரசனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக அவர்கள் நடத்திய துஷ்பிரசாரமும் எடுபடவில்லை.

அதனால்தான் 2014ஐ விட அதிக இடங்களில் பாஜகவும் (303), தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (352) 2019 தேர்தலில் வென்றுள்ளன. சென்ற முறை 44 தொகுதிகளில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆயினும் இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கான 60 இடங்களை எக்கட்சியும் பெறவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இடங்கள் 60லிருந்து (2014) 87 ஆக (2019) அதிகரித்துள்ளன. உ.பி.யில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணியால் பாஜகவின் வெற்றிப் பயணத்தை நிறுத்த முடியவில்லை.

ஆக, இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான முழுமையான மதிப்பெண்களை மக்கள் வாரி வழங்கி இருக்கிறார்கள்.

விதிவிலக்காக, கேரளம், தமிழகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கேரளத்தில் சபரிமலை விவகாரத்தால் மார்க்சிஸ்ட் கட்சி மண்ணைக் கவ்வி இருக்கிறது. அதன் நேரடிப் பயன் பாஜகவுக்குக் கிடைக்காமல் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான மக்களின் அதிருப்தியால் ஜெகன்மோகன் ரெட்டி வென்றிருக்கிறார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன. தமிழகம்தான் கவலை அளிக்கிறது. தேசவிரோதப் பிரசாரங்களும், பிரிவினை கோஷங்களும் அதிகம் ஒலித்த தேர்தல் களம் இது. இங்கு அதிமுக- பாஜக ஆகிய கட்சிகள் ஆளும்கட்சியாக இருப்பதே இரு கட்சிகளுக்கு பலவீனமாக மாறியுள்ளன. அதை திமுக அணி சாதகமாக்கிக் கொண்டுள்ளது. இருப்பினும் தேசிய மனநிலையை உணர்ந்து பிரிவினைவாதிகளிடமிருந்து விலகி நிற்பது மு.க.ஸ்டாலினுக்கு நல்லது.

லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல்களும் நடந்துள்ளன. இவற்றில் ஆந்திரப்பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் (ஜெகன் மோகன் ரெட்டி), ஒடிஸாவில் பிஜு ஜனதாதளமும் (நவீன் பட்நாயக்), சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் (பிரேம் சிங் தமங்), அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவும் (பெமா காண்டு) வென்றுள்ளனர். ஆந்திரத்திலும் சிக்கிமிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. நவீன் பட்நாயக் ஐந்தாவது முரையாக முதல்வராகிறார்.

2019 லோக்சபா தேர்தலில் புதிய பிரதேசங்களில் பாஜக வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் 25இல் 18 தொகுதிகளை பாஜக அனி வென்றுள்ளது. ஒடிஸா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத் தக்கது. சுமார் 15 மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. அதேசமயம் குஜராத், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில் முழுமையான வெற்றியை பாஜக ஈட்டி இருக்கிறது. சுமார் 200 தொகுதிகளில் 50 சதவிகிததுக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது பாஜக.

பாஜகவின் ஒட்டுமொத்த வாக்குவிகிதமும் 38 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கேரளத்தில் 12.9 %, மேற்கு வங்கத்தில் 40.3%, உ.பி.யில் 49.6%, தில்லியில் 56.6 %, குஜராத்தில் 62.2% என பாஜகவின் வாக்குவிகிதம் உயர்ந்திருக்கிறது. இவை அனைத்தும் மோடிக்கு அளித்துள்ள அதிகாரம் சாதாரணமானது அல்ல. கிட்டத்தட்ட அதிபர் தேர்தல் முறையில் இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் முடிவு மோடி என்ற தனிப்பட்ட மனிதருக்கானதல்ல என்று தன்னடக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். கோடிக் கணக்கான தொண்டர்களின் இடையறா தவத்தால் கிடைத்த வெற்றி இது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தேசத்தில் ஏழ்மை இல்லாத நிலையை உருவாக்குவதே தனது அரசின் குறிக்கோள் என்ற அவரது முழக்கமே, 2019 தேர்தல் முடிவின் இறுதி இலக்கு. அதை நோக்கி தேசம் நடையிடட்டும்.

10 Replies to “2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!”

  1. சென்ற தேர்தலில் என் டி ஏ 336- இடங்களை வென்றது. இந்த தேர்தலில் இறுதி நிலவரம் என் டி ஏ 354 ஆகும்.

  2. மீண்டும் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய நரேந்திர மோடி அவர்களுக்கு இந்தியா முழுவதுமே கடன் பட்டுள்ளது. சிறிதும் சுயநலமின்றி இரவு பகலாக உழைத்து , கிராமங்களில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள கோடிக்கணக்கில் பெண்களுக்கு சமையல் எரிவாயு, கோடிக்கணக்கில் கிராம மகளிருக்கு இலவச கழிப்பறை , வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கி கொடுத்தது, அரசு அளிக்கும் உதவிதொகைகள் நேரடியாக எந்த இடைத்தரகரும் இல்லாமல் பொதுமக்களின் வங்கி கணக்கில் சென்று சேர்வது, வணிக வரி எனப்படும் சேல்ஸ் டாக்ஸ் ஐ மாற்றி அமைத்து ஜி எஸ் டி என்று ஒரே எளிய வரியாக்கியது, எல்லையில் வாலாட்டி புல்வாமாவிலும் இன்னும் சில இடங்களிலும் இந்திய மக்களையும், இந்திய ராணுவ வீரர்களையும் தாக்கி படுகொலை செய்த பாகிஸ்தான் நாட்டு தீவிரவாத பயங்கரவாதிகளை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, தீவிரவாத முகாம்களையும் அங்கிருந்த தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள், அவர்களின் தளவாடங்கள் எல்லாவற்றையும் சுமார் இருபது நிமிடங்களுக்குள் முற்றிலும் அழித்து திரும்பிய இந்திய ராணுவத்தின் சாதனை ஆகியவை இந்திய வாக்காளப் பெருமக்களால் மிகவும் நன்றியுடன் பாராட்டப்பட்டு அவருக்கு பெரிய வெற்றியை தேடித்தந்தன என்பதே உண்மை.

    வாஜ்பாயி அரசை ஜெயலலிதா , சோனியா , சுப்பிரமணியன் சாமி , இன்னமும் சில வட இந்திய ஜாதிக்கட்சிகள் ஒன்றுகூடி ,தேநீர் அருந்தி , விருந்தின் முடிவில் வாஜ்பாயி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து கவிழச்செய்ய வேண்டும் என்று 1999- இல் முடிவு செய்தனர்.ஏப்பிரல் 1999- இல் வாஜ்பாயி அரசு
    ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்த தவறில் சுப்பிரமணிய சாமி அதனை ஒரு கடமையாக செய்தார். ஏனெனில் அவருக்கு வாஜ்பாயி அவர்கள் மீது தனிப்பட்ட வெறுப்பு இருந்தது.

    ஆனால் ஜெ – வோ ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர் அல்லது பொது செயலாளர் என்ற அந்தஸ்தில் இருந்தவர். அவர் சோனியாவின் சதி திட்டத்தில் பங்கேற்று வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததால் தான் , அதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் இருபது ஆண்டுகள் இடம் கிடைக்காமல் வனவாசம் செய்ய நேரிட்டது.

    ஜெயலலிதாவாவது ஒரே ஆண்டில் விலகி , எதிர்த்தார்.ஆனால் திமுகவோ முரசொலிமாறன் மரணம் அடையும் வரை சுமார் நான்கரை ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் நன்றாக சுரண்டிவிட்டு , கடைசி ஆறு மாதத்தில் வாஜ்பாயியுடன் கூட்டணியை முறித்து இத்தாலிய அடிமைகளாக மாறி , துரோகம் செய்தனர். திமுக தான் அதிமுகவை விட பெரிய துரோகிகள்.

    இந்த தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை வாக்காளர்கள் மாதா மாதம் ஆறாயிரம் ரூபாய் நமது வங்கி கணக்கில் வந்து விழும் , உழைக்காமலேயே சோறு சாப்பிடலாம் என்ற பேராசை காரணமாகவே ராகுலின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து வாக்களித்தனர். அதனால் தான் ராகுல் பிரதமர் ஆனவுடன் மாசாமாசம் நமக்கு ஆறாயிரம் என்று சப்பு கொட்டிக் கொண்டிருந்த தமிழன் , இப்போது இன்னமும் டாஸ்மாக்கை விட்டு வெளியே வராமல் ரோட்டோரம் மயங்கி கிடக்கிறான். அதிமுகவோ, அல்லது அவற்றின் கூட்டணிக்கட்சிகளோ யாரும் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அப்படி சொல்வது தவறு. கண்டிக்கத்தக்கது. எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி அய்யா மாசம் ஆறாயிரம் கிடைக்கும்னு நம்பினேனுங்க எல்லாம் இப்படி பாழாகப்போச்சே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகிறாள். இது தான்பெரும்பான்மை தமிழ் நாடு.

    வட இந்திய மீடியாவிலும் மோடி எதிர்ப்பு பிரச்சாரத்தை 21 கட்சிக்கூட்டனியும் , காங்கிரஸ் ஆதரவு மீடியாவும் தொடர்ந்து கடந்த நாலரை ஆண்டுகளாகவே செய்துவந்தன. ஆனால் மோடி எதிர்ப்பு பொய்ப் பிரச்சாரம் தமிழ்நாடு, கேரளா , ஆகிய இரு மாநிலங்களை தவிர மற்ற மாநில மக்களிடம் எடுபடவில்லை. பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் கூட, அது ராகுல் காந்தியால் கிடைத்த வெற்றி அல்ல. பஞ்சாப் மாநில முதல்வர் முன்னாள் கேப்டன் அமரீந்தர் சிங் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கால் தான் அங்கு வெற்றி கிடைத்தது.மாதம் ஆறாயிரம் ரூபாய் என்ற ராகுலின் பொய்ப் பிரச்சாரம் ஒரு ஏமாற்று வேலை என்பதை வடஇந்திய வாக்காளர்கள் நன்கு புரிந்து கொண்டு அந்த பித்தலாட்டக் கோஷ்டிகளை தூக்கி வீசிவிட்டார்கள்.

    மோடிக்கு எதிராக தமிழக கிறித்தவ மெஷினரிகளும், இஸ்லாமிய வாக்காளர்களும் ஒன்று கூடி , திமுக அணிக்கு வாக்களித்தனர் என்பதே உண்மை. ஆனால் அதனால் மட்டும் திமுக வெற்றிபெறவில்லை. ஏனெனில் மீடியாவில் தமிழகத்தில் தொடர்ந்து மோடிக்கு எதிராக ஓரவஞ்சனையுடன் பொய்ப் பிரச்சாரங்களை கடந்த நாலரை வருடங்களாக விவாதங்களில் அவிழ்த்துவிட்ட திமுக குடும்ப தொலைக்காட்சிகள், புதிய தலைமுறை, நியூஸ் 7 , இன்னபிற ஏராளம் தொலைக்காட்சிகள் மோடி எதிர்ப்பு பிரச்சாரம் செய்து, மோடி வெற்றிபெறமாட்டார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து , ரிசல்ட் வந்தவுடன், கேரளா ,தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் அதிக அளவு ஜெயித்தும், ஒரு புண்ணியமும் இல்லாமல், போய்விட்டதே என்று இந்த எதிர்க்கட்சிகள் இஞ்சி தின்ற குரங்கு போல தவிக்கின்றனர்

    இரண்டாவது முறையாக பார்லிமெண்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் வாக்காளப்பெருமக்களால் வழங்கப்படவில்லை.

    தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விடலாம் என்று நம்பி , அமைச்சரவை பட்டியலை எல்லாம் தயாரித்து , இணையத்தில் முகநூல் , டுவிட்டர் , வாட்சப்- என்று பல தளங்களிலும் உலா வர செய்த பதவி பித்தர்கள் , இப்போது செய்வதறியாது ஏமாந்து போய் விழி பிதுங்குகிறார்கள்.

    தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் தேவை என்று கருதி இருந்தால், 22- தொகுதிகளிலுமே திமுகவுக்கு வெற்றியை அளித்து , ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்து இருப்பார்கள். எனவே அடுத்த தேர்தல் வரை அதாவது மே-2021- வரை அதிமுக அரசு நிச்சயம் நீடிக்கும்.

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடந்து முடிந்த தமிழக சட்டசபைக்கான 22 இடைத்தேர்தல்களில் ,

    20 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குகளை லோக்சபை வாக்குப்பதிவு முடிவுகளுடன் ஒப்பிட்டு இன்றைய தினத்தந்தி சென்னைப்பதிப்பு 29/5/2019 புதன் பக்கம் 2 ல் அட்டவணையாக வந்துள்ளது.

    அதில் தெரியவரும் உண்மை என்னவெனில் , இடைத்தேர்தல் நடந்த 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக , அதே 15 தொகுதிகளுக்கு லோக்சபை தேர்தலில் பெற்றதை விட, மிக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

    அதே சமயம் திமுகவோ இடைத்தேர்தல் நடைபெற்ற 13 சட்டப் பேரவை தொகுதிகளில், லோக்சபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

    இதிலிருந்து தெரியவரும் உண்மை யாதெனில் வாக்காளர்கள் லோக்சபையை விட சட்டப்பேரவைக்கு அஇஅதிமுகவையே அதிகம் ஆதரிக்கிறார்கள் என்பதுதான்.

    மேலும் விளாத்திகுளம் , மானாமதுரை, அரூர், பாப்பிரெட்டிபட்டி, சூலூர், சோளிங்கர் , நிலக்கோட்டை ,சாத்தூர் , பரமக்குடி ஆகிய 9 எம்எல்ஏ தொகுதிகளில் லோக்சபை தேர்தலில் அதிமுக அணி வேட்பாளர்களைவிட அதிக ஓட்டு வாங்கிய திமுக , இந்த 9 எம்எல்ஏ தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்தது.

    (வேலூர் லோக்சபை தேர்தல் ரத்து செய்யப் பட்டதால், வேலூர் லோக்சபை தொகுதிக்கு உட்பட்ட 2 எம் எல் ஏ தொகுதிகளின் வாக்குப் பதிவு விவரங்களை அதே சட்டப்பேரவைத் தொகுதிகளின் லோக்சபை வாக்குப் பதிவுடன் ஒப்பு நோக்கி பார்க்க முடியவில்லை.)

  3. பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தது ஒருவித நிம்மதியை அளிக்கிறது. மோடி தலைமையில் ஊழலில்லாத ஆட்சியை சுதந்திர பாரதம் முதல் முறையாகக் கண்டது.
    ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேசீயவாதிகள் நிம்மதியில்லாமல்தான் இருந்தனர். ஜாதிக்கூட்டணிகளும், துவேஷப் பிரசாரமும், அகில இந்திய ஆங்கில மீடியாக்களின் திரித்து விவரித்த நிலையும் ஓரளவுக்கு நம்பிக்கையைக் குலைப்பதாகவே இருந்தன.
    மோடி வெல்லவில்லை, தேசீயம் வென்றது என்பதே உண்மை. தேர்தல் கட்டத்தில் வளர்சியைவிட தேசீய பாதுகாப்பு என்பதே முக்கியமாக இருந்தது. இதற்கு பாகிஸ்தானுக்கு நன்றி சொல்லவேண்டும்.
    மோடியை மட்டுமே நம்பி செயல்படுவது பாஜவுக்கு உகந்ததல்ல. மோடி பழந்தலைவர்களை ஓரங்கட்டிவிட்டார். பாஜவின் நிலையே மாறிவிட்டது. மோடியைக் கட்டுப்படுத்தும் சக்தி பாஜவில் இல்லை! மோடி Frankenstein ஆக உருவெடுத்து வருகிறார்.
    தவிர, மோடிக்கு திடமான பொருளாதாரக் கொள்கை இல்லை.[ அல்லது அது என்ன வென்று நமக்குத் தெரியவில்லை.] ஜி.எஸ்.டி அடிப்படையில் காங்கிரஸ் திட்டம். ஆதாரும் அப்படியே. ஆனால் இரண்டையும் மூர்கத்தனமாகக் கொண்டுவந்தார் மோடி. இதில் ஜி.எஸ்.டி நன்மை தரும். ஆனால் ஆதார் போலிஸ் ஆட்சிக்கு வித்திடும். மக்களின் தனிமை உரிமை பறிபோய்விட்டது. எல்லோரும் அரசினால் கண்காணிக்கப் படுகிறார்கள். ஸ்டாலின் ரஷ்யாவில் இதுதானே நடந்தது! இந்தியாவில் இது தொடங்கிவிட்டது!
    மோடியின் வளர்ச்சி திட்டங்கள் இருவிதத்தில் மோசமானவை.
    1.இவை செலவில் கொண்டுவிடும். அதற்கான நிதி ஆதாரங்களை அவர்கள் முறையாகக் கருதவில்லை. ஜெய்ட்லி பட்ஜெட்டில் குட்டை குழப்பியிருக்கிறார். Fudging. போகப் போகத் தெரியும். ரிசர்வ் வங்கியை 65,000 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்திருக்கிறார்கள். இது வருடாவருடம் நடவாது- இவர்கள் கஜினி முகம்மதுவாக மாறினால் கூட!
    2. பல வளர்ச்சித் திட்டங்கள் தேசீய நாசகாரித் திட்டங்கள். உ.ம். 100 புதிய விமான தளங்கள். ஒவ்வொரு விமான தளத்திற்கும் 500 முதல் 1000 எக்கர் வரை நிலம் தேவை. விமான தளத்தைச் சுற்றி புது நகரங்கள்’விரிவுப் பகுதிகள் வளரும் இதற்கும் மேலும் நிலங்கள் தேவை. இவை அனைத்தும் பொதுவாக விளை நிலங்கள். ஆக இந்த நாசகாரித் திட்டத்தினால் இந்தியாவில் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும். இதுதான் மோடியின் வளர்ச்சித் திட்டம்! அதேபோல் தான் ஹைவேக்கள். இதுவரை வந்துள்ள ஹைவேக்களைப் பார்த்தால் எத்தனை லட்சக்கணக்கான வளர்ந்த மரங்கள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன,எவ்வளவு விளை நிலம் பாழாகியிருக்கிறது என்பது தெரியும். ஆனால் என்ன, ஜி.டி.பி உயரும்!

    கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹிந்துக்களின் நிலையை வலுப்படுத்தும் எந்த முயற்சியையும் மோடி மேற்கொள்ளவில்லை. Ghar Wapsi, beef ban போன்றவற்றில் மோடி பல்டி அடித்தார். அயோத்யா, சபரிமலை பற்றி கண்டுகொள்ளவில்லை. Common Civil Code, Art.370….மூச்! நமது கோவில்கள் அரசினரின் கொள்ளைக்களனாகவே இன்னமும் இருக்கின்றன. இந்த நிலையில் மோடியை எப்படி நம்புவது? I keep my fingers crossed.
    Except the Lord keep the city, the watchman waketh but in vain.
    Except the Lord build the house, they labour in vain who build it.

  4. நஞ்சப்பா உங்கள் மனதில் உள்ளது நஞ்சு தான்.

    சாலைகள் விரிவாக்கம் செய்யாவிட்டால் இந்தியா கற்காலத்திற்குச் சென்று விடும் நண்பரே.

    தொழில் வளா்ச்சிக்கு தேவையான நிலங்களை எடுத்துததான் ஆக வேண்டும்.வானதிிலா தொழில்சாலைகள் அமைக்க முடியும்.

    (Edited and published)

  5. தமிழ்நாட்டில்மோடிக்கு எதிரான பிரச்சாரம் வலுவாக நடைபெற்றது.எதிர்கட்சிகள் தொலைக்காட்சி சேனல்கள் தவறான செய்திகளை அப்படியே பரப்பி வந்தன. அதை கூட்டணிக்கு முன்பும் பின்பும் அதிமுக எதிர்கொண்டு மோடி அவர்களின் திட்டத்தை நியாயப்படுத்தவில்லை. சிறப்புக்களை எடுத்து சொல்லவேயில்லைபாரதிய ஜனதாக் கட்சியினரின் பிரச்சாரம் தொலைக்காட்சி சேனல்களின் பிரச்சாரம் முன் எடுபடவில்லை. நீட் தோ்வுகள் காங்கிரஸ சர்காா் கொண்டு வந்த போது திமுக ஏம்பி்க்கள் ஆதரித்து வாக்களித்தனர். ஆனால் வெளியே வந்து நீட் கூடாது என்கிற்னா். பழியை மோடி மேல் போடுகின்றனா். நீட் தேர்வின் சாதக பாதகங்கள் பாமர மக்களை எட்டவேயில்லை.மருத்துவ கல்லூரியில் உள்ள இடங்களில் 85 சதம் தமிழக மாணவர்கள்தான் சோ்க்கை அடைந்து வருகின்றனா் என்ற தகவல் உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கூட அறியாதவராக இருந்ததை நான் நேரில் தெரிந்து கொண்டேன். நீட் தோ்வு காரணமாக வெளிமாநில மாணவர்கள் தம்ழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ கல்லூரி இடங்களை பிடுங்கிக் கொண்டதுபோல் பொய்பிரச்சாரம் கடுமையாக நடைபெற்றது.

    பணநோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது-தன் நன்மைகள் மக்களுக்க சொல்லப்டவேயில்லை.கள்ள நோட்டுகள் செய்த அநியாயம் குறித்து மக்களிடம் விழிப்பணா்வு இல்லை. நியுட்ரிநோ மேற்றும் பெட்ரோல் எடுக்கும் திட்டங்கள் அனைத்தும் திமுக தலைவா் ஸ்டாலின் கையெடுத்து போட்டு துவக்கப்பட்ட திட்டம் என்பது மக்களை அடையவில்லை. ஸடெரிலைட் துவக்கியது ஜெயலலிதான அரசு.பின்விரிவாக்கம் செய்ய 250 ஏக்கா் கொடுத்து விரிவாக்க பணிகளைத்துவக்கியது கருணாநிதி தலைமையில் ஆன திமுக அரசுதான். ஆனால் மூட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வில்லை. துப்பாக்கி சுடு பிரச்சனைக்க திரு.மோடி காரணம் அல்ல.ஆனால் அதிலும் திரு.மோடி அவர்களின் பெயா் நாசமாக்கப்பட்டது.
    மொத்தத்தில் தமிழ்நாட்டில் பொய்பிரச்சாரம் வேர்வி்ட்டு நின்றது.திரு.மோடி தலைமையில் ஆன பாஜக தோல்வியை தழுவியது.மீண்டும் சாதிப்போம்.

  6. ஊழல் இல்லை என்றால் தேச வளர்ச்சி இல்லை என்பது உண்மையா? இப்படி ஒரு விபரீத கருத்து சுற்றி வருகிறது.

  7. +Mariappan.உங்கள் கேள்விக்கு நேரடிவிடை சொல்வது கடினம். பொதுவாக, ஊழலுக்கும் தேச வளர்ச்சிக்கும் நேரடியான சம்பந்தமில்லை.ஆனால் மறைமுகமான தொடர்பு இல்லாமலும் இல்லை.
    ஊழலின் நிகர விளைவு சிலரிடம் குவியும் அதிகப் பணம் தான். இது கணக்கில் வராமல், வங்கிக்கும் போகாமல் சுற்றிவரும். நகைகள், விலையுயர்ந்த வீண் கவுரவம் பெருக்கும் பொருட்கள், ரியல் எஸ்டேட், சினிமா, அரசியல் போன்ற துறைகளில் இந்தப் பணம் வளையவரும். கருப்போ, வெளுப்போ பணம் புழக்கத்திற்கு வந்துவிட்டால் அது GDP கணக்கில் வந்துவிடும். ஆக, ஊழல் அதிகப் பணப்புழக்கத்திற்கு வழிவகுக்கிறது.
    தவிர, ஒரு முக்கிய விஷயம் கவனிக்கப்படவேண்டும். இந்தியாவில் ஸ்டாக் மார்கெட், சென்ஸெக்ஸ் என்றெல்லாம் சொன்னாலும், பெரிய தொழில்கள் என்று சொன்னாலும், இந்தியப் பொருளாதார்த்தின் அடிப்படையாக இருப்பது சிறு-நடுரகத் தொழில்கள்தான். [ SEE: “India Uninc” by Prof. R.Vaidyanathan, WEstland, Chennai, 2014.] இவர்களுக்கு நிதிவசதி எங்கிருந்து வருகிறது? தேசிய வங்கிகளோ, தனியார் வங்கிகளோ கொடுப்பதில்லை. வங்கிக்குப் போனால் Balance sheet, margin money,
    collateral security, guarantor, co-obligant போன்றவை தேவைப்படும். அதைத்தவிர , அந்த வங்கி அதிகாரிகளையும் ‘கவனிக்க’ வேண்டும். ஒரு பழக்கடை, பல சரக்குகடை, காய்கறிக்கடை வைத்திருப்பவர், சிறு தொழிலில் ஈடுபட்டவர் இதெல்லாம் தரமுடியுமா? ஆக அரசினரின் நிதி நிறுவனங்களினால் சிறு-நடு ரகத் தொழில்கள் நன்மை பெறுவதில்லை. இவர்கள் பெரும்பாலும் வேறிடத்தில் தான் நிதியுதவி பெறுகிறார்கள். இங்கு வட்டி கொள்ளையாக இருந்தாலும், அவர்கள் தேவைக்கு வேண்டிய பொழுது நிதி கிடைக்கும். இந்த நிதிவசதி ஓரளவுக்கு ஊழலினால் வரும் பணப்புழக்கத்தையே சார்ந்திருக்கிறது! ஆக சிறு தொழில்களின் வளர்ச்சி ஓரளவுக்கு ஊழல் பணம் புழக்கத்தில் இருப்பதையே சார்ந்து இருக்கிறது.
    உலகில் ஊழல் இல்லாத நாடு அனேகமாக எதுவுமே இல்லை என்று சொல்லிவிடலாம். அமெரிக்காவில் இது வெளிப்படையாகப் பேசப்படும் விஷயம். ஆனால் பார்லிமென்டரி அரசுக்கு வழிவகுத்த இங்கிலாந்திலும் இது சகஜமாகிவிட்டது. அவர்கள் 1995லும் சமீபத்தில் 2010லும் புதிய சட்டமே இயற்றினார்கள். ஆனாலும் Fraud கேஸ்கள் வந்தவண்ணம்தான் இருக்கின்றன. ஆங்கில விக்கிபீடியாவில் விவரம் தெரிந்துகொள்ளலாம்.
    World Economic Forum என்ற அமைப்பு ஊழலினால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.ஆனால் அரசியல் ஆதிக்கம் மிகுந்துள்ள நாடுகளில் இந்த விளக்கமெல்லாம் செல்லாது. இந்தியாவில் ஊழல் வேறூன்ற ஆங்கில காலனி அரசே காரணமாகியது. [ விளக்கத்தை Romesh Chunder Dutt ICS எழுதிய The Economic History of India என்ற புத்தகத்தில் விரிவாகக் காணலாம்.] காங்கிரஸ் ஆட்சியிலோ, கேட்கவே தேவையில்லை. இருநூறு ஆண்டுகள் பற்றிப் படர்ந்துவிட்ட ஒரு முறையை முறியடிப்பது சுலபமல்ல.பக்க விளைவுகள் இருந்தே தீரும்.

  8. +Anburaj. You have made comments about growth almost casually.
    You say, if we do not make roads, we would go back to the stone age; land has to be taken for industrial growth, or do we set up industry in the sky! Have you really reflected on the import of these observations?
    1. What do you mean by “growth”? How do you measure it?
    It is usual to rely on GDP or GNP as measures of growth.But this measure has been subjected to such strong criticism in the last 50 years that today no sensible economist relies on them. In fact, Simon Kuznets, the father of National Income Accounting said even in the beginning:
    The welfare of a nation can scarcely be inferred from a measurement of national income. (1934)
    Distinctions must be kept in mind between quantity and quality of growth, between its costs and return, and between the short and the long term. Goals for more growth should specify more growth of what and for what. (1962 )
    For more detailed study of defects of GDP as measure of growth , please see:
    https://www.economicsdiscussion.net/gross-national-product/limitations/8-major-limitations-of-gross-national-product-
    2.All industrial growth is based on exploitation of natural resources. In a finite world, infinite production or consumption based on endless exploitation of natural resources is an absurdity and dangerous proposition.
    3. While land is necessary for industry, why should they grab agricultural land? Do you know that agricultural productivity depends on the top six inches of the top soil and that it takes 50 to 250 years to make one inch of top soil? Do you realise the kind , extent and degree of damage that is being done. Do you think food will grow in or fall from the sky?
    4. The ideas that more industry means more growth, more roads and airports represent more growth are simplistic notions based on 19th century economic ideas, which have been exploded. To understand the current dilemmas and problems, please read a book like “Doughnut Economics’ by Kate Raworth, Random House, 2017.
    5. Modi is an honest politician, but he is an economic idiot. His measures will jeopardise our agriculture and food security. We may have manipulated GDP growth, but we cannot eat paper or statistics. Then what Modi does will be like setting fire to our house to celebrate Deepavali! As they say in North India, “Ghar jhalake diwali manayenge kya?”

  9. Bjp has not done anything for the Hindus.It must give scholarships to poor Hindus like the one given to Muslims and other religions.

  10. Mr.Nanjappa 1) In a finite world, infinite production or consumption based on endless exploitation of natural resources is an absurdity and dangerous proposition.
    2) While land is necessary for industry, why should they grab agricultural land? Do you know that agricultural productivity depends on the top six inches of the top soil and that it takes 50 to 250 years to make one inch of top soil? Do you realise the kind , extent and degree of damage that is being done. D

    Do you think food will grow in or fall from the sky?
    ————————————————————————-
    Highly sound and logical questions.I have so answer.
    Is it possible to set up all Industries on barren land only ? We should ponder over it and prepare a feasibility report.
    I withdraw my comments.Please excuse if it has offended you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *