இந்துமதமே உலகிற்குத் தன்னை எடுத்துரைத்தது: சுவாமி விவேகானந்தர்

“ஐயய்ய….என்னிடம் அதெல்லாம் சொல்லாதீர்கள்…அதெல்லாம் நான் ஒருகாலும் செய்ய மாட்டேன்” என்றார் நரேன் என்ற இளைஞர்.

“காலம் வரும் பொழுது நீயே என்னதான் முடியாது என்று மறுத்தாலும் உன் எலும்புகள் தாமே போதிக்கத் தொடங்கிவிடும்.” என்று இளநகை தவழ பதிலளித்தார் குரு ஸ்ரீராமகிருஷ்ணர்.

காலமும் கனிந்தது. அதுவரை வாழ்வின் பண்பாடாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே பெரும்பாலும் உள்கலந்து விரவியிருந்த ஹிந்து மதம் என்ற திட்ட வட்டமான வடிவம் ஓர் இந்திய இளைஞனின் சுய அனுபவத்தில் கனிந்து ஆங்கில மொழியில் அகில உலகும் மாணாக்கர்களாக அமர்ந்து கேட்க, சிகாகோ சபையில் வெளிப்பட்டது.

ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.

ஹிந்து மதத்தின் உண்மையான பெரும் சிறப்புகள் எல்லாம் வெறுமனே புராணங்களாகவும், பொழுது போவதற்காக மாலை வேளையில் அமர்ந்து சொல்லப்படும் கதைகளாகவும் போய்விடாமல், அந்த அத்தனை சிறப்புகளையும், காலம் காலமாக வந்த ஹிந்து மதப் பெருமைகள் அனைத்தையும் ஒருங்கே தன் உன்னத வாழ்வால் மெய்ப்பித்துக் காட்டிய தக்ஷிணேஸ்வரத்து முனிபுங்கவன் பேசினான்.

“குழந்தாய்! நான் சொன்னேன் என்று எதையும் நம்பிவிடாதே! வியாபாரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போல், நான் கூறுவனவற்றை அறிவால் நன்கு ஆராய்ந்து சோதனையிட்டுப் பின் உடன்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்’ என்று கூறிய வினோதமான குருநாதன் பேசினான்.

ஹிந்து மதமே தன் சிறப்புகளை உள்ளபடி எடுத்துக்காட்ட ஒரு வாழ்வு பூண்டதைப் போன்று வந்த பரமஹம்ஸரிடம் தான் கண்ட ஹிந்து மதத்தைப் பற்றிய நேரடிக் காட்சிக்குப் பின், காலகதியில் என்னென்ன தீங்குகளும், நோய்களும், சமுதாயக் கொடுமைகளும் ஹிந்து மதத்தில் புகுந்து நிலவுகின்றன என்பதை நேரடியாகக் காணவேண்டியோ என்னவோ பாரத தேசம் அனைத்தும் பரிவ்ராஜகனாக அலைந்த பாரதத் துறவி பேசினான்.

ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் மூலம் பெற்ற கல்வி;
ஸ்ரீராமகிருஷ்ணரின் உதாரண வாழ்வால் பெற்ற உணர்வு ரீதியான கல்வி;
பாரத தேசத்தை இண்டு இடுக்கெல்லாம் நேரடியாகக் கண்டு தான் பெற்ற அனுபவக் கல்வி —
ஆகிய இந்த மூன்று கல்விகளும் சேர்ந்த வெளிப்பாடுதான் விவேகாநந்தர் என்கிறார் சகோதரி நிவேதிதா.

சிகாகோ சொற்பொழிவுகள் என்னும் சிறு நூலின் பெரும் விளக்க உரையாகத்தான் விரிந்து கிடக்கின்றன ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தின் மொத்த நூல் உலகமே. விவேகாநந்தர் தன்னியல்பாகப் பேசிச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நெடிய கல்வியும், ஆழ்ந்த அனுபவமும் இருப்பதை நாளுக்கு நாள் வளரும் அதிசய விளக்கமாய் வியந்து கொண்டிருக்கிறேன். நான் விவேகாநந்தரை வெறுமனே வழிபாடு செய்பவன் அல்லன். அவர் கூறுவனவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் எனக்கு இல்லை. ஆனால் ஹிந்து மத சம்பிரதாயங்களின் மூல நூல்கள், ஹிந்து மத வரலாறு இவற்றில் ஆழ்ந்து போகப்போக எத்தனை பெரிய வேலை! எப்படி அந்த மனிதனால் செய்ய முடிந்தது! — இந்தப் புதிருக்கு என்னிடம் விடையில்லை.

இப்படி ஒரு மனிதன் எழுவதற்கான முன் காரணங்கள் அன்றைய சமுதாயத்திலும் இருந்திருக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவ்வாறே. அவர் தோன்றுவதற்கான கருத்தியல் காரணங்கள் எதுவும் அன்று இல்லை. அப்படி இருந்தால் சொல்லிவிடலாம் — இந்தக் காரணங்களால் இவர்களது தோற்றம் பொருத்தம் என்று.

ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார்.

ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்.

ஜூலை 4, 1907ல் நான்கு தொகுதிகளாக விவேகாநந்தரின் நூல்கள் அன்று கிடைத்தவை வரையில் வந்த போது, அதற்கு முன்னுரை எழுதியவர் சகோதரி நிவேதிதா அவர்கள். அதில் அவர்கள் கூறுவது :

In the … volumes of the works of the Swami Vivekananda which are to compose the present edition, we have what is not only a gospel to the world at large, but also to its own children, the Charter of the Hindu Faith.

What Hinduism needed, amidst the general disintegration of the modern era, was a rock where she could lie at anchor, an authoritative utterance in which she might recognise her self. And this was given to her, in these words and writings of the Swami Vivekananda. For the first time in history, as has been said elsewhere, Hinduism itself forms here the subject of generalisation of a Hindu mind of the highest order. For ages to come the Hindu man who would verify, the Hindu mother who would teach her children, what was the faith of their ancestors will turn to the pages of these books for assurance and light. Long after the English language has disappeared from India, the gift that has here been made, through that language, to the world, will remain and bear its fruit in East and West alike.

What Hinduism had needed, was the organising and consolidating of its own idea. What the world had needed was a faith that had no fear of truth. Both these are found here”.

சுவாமி விவேகானந்தரின் முழுநூல் தொகுதியும் தமக்கு சௌகரியமான எந்த மொழியிலோ, ஒவ்வொரு ஹிந்துவின், ஆணோ, பெண்ணோ, இளம்வயதோ, முதியவரோ, ஒவ்வொருவரின் படிப்பிலும், ஆழ்ந்த சிந்தனையிலும் திகழும் காலத்தைக் காலமே அருள்வாயாக.

சுவாமி விவேகானந்தரின் முழு நூல் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளைக் கொண்டு விவேகானந்த கேந்திரம் “எழுமின் விழிமின்” என்ற நூலை வெளியிட்டுள்ளது. இதனை முழுமையாக இங்கு வாசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *