இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?

ஒரு நண்பர் ஹரன் பிரசன்னாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டிருக்கிறார்: இந்துத்துவ அறிவியக்க செயல்பாடு என்றொன்று இருக்கிறதா என்று. காந்தியிடம் யாரோ கேட்டார்களாம் ‘காரல் மார்க்ஸ் போல சமுதாயத்தை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ளக் கூடிய சித்தாந்தமாக உங்கள் சிந்தனைகள் இல்லையே. அப்படி ஒன்றை உருவாக்கக் கூடாதா?’ காந்தி பதில் சொன்னார்: ‘செய்யலாம். ஆனால் பாருங்கள் காரல் மார்க்ஸ் போல எனக்கு ஏராளமான நேரம் வேண்டும்.’

அண்மையில் மருதன் கங்காதரன் என்கிற காம்ரேட் எழுதிய ஒரு கட்டுரையில் இந்துத்துவர்களுக்கு எவ்வித அறிவியக்க அமைப்பும் இல்லை. அறிவியக்க ஆளுமைகள் இல்லை என்றெல்லாம் எழுதியிருந்தார்.

ஒருவிதத்தில் என்னதான் இணையத்தின் நியோ ’இந்துத்துவ’வாதிகள் காந்தியை திட்டினாலும். அந்த fringe கூட்டத்தை வைத்து ஒட்டுமொத்த இந்துத்துவர்களை காந்தியை மதிக்கவே மதிக்காத வாழ்க்கையில் காந்தியின் எந்த மதிப்பீட்டையும் கடைபிடிக்காத அறிவுசீவிகள் வசை பாடினாலும், மார்க்சிய சித்தாந்த பிதாமகர்கள் ஒருவிஷயத்தை அறிவார்கள். நாகராஜ் (கீழைதேயம் மார்க்சியம்) என்று நினைக்கிறேன் எழுதினார்.என்ன இருந்தாலும் காந்தி இறுதியில் தீன்தயாள் ஆராய்ச்சி மையத்துக்குத்தான் (அதாவது ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டுக்கு) லாயக்கு என்பதாக எழுதினார். இயக்க இந்துத்துவர்கள் காந்தியை போலத்தான். அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக வந்திருக்கக் கூடியவர்கள், அப்படி வந்திருந்தால் ஏசி ரூம்களில் அமர்ந்து செமினார் செமினாராக ஜொலித்திருக்கக் கூடியவர்கள், ராம் குகா இத்யாதிகள் அவர்களின் காலணி கயிற்றை வாயால் தொடவும் அருகதையற்றவர்களாக இருந்திருக்கக் கூடிய அறிவு ஜாம்பவான்கள் சங்கத்தில் வனவாசி பள்ளிக் கூடங்களை உருவாக்குவதிலும் சேவாபஸ்தியில் இரவு பள்ளிக் கூடங்கள் முதல் கழிப்பறை வரைவு செய்து அமைப்பது வரையிலான வேலைகளில் தங்கள் முழு வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து பிறகு கடைசி காலத்தில் ஏதாவது ஆசிரமங்களில் வாழ்ந்து வெளி உலகம் அறியாமலே மறைந்து போயிருக்கிறார்கள். உலகிற்கு தெரிந்தது ஒரு நானாஜி தேஷ்முக்தான். அண்மையில் மறைந்த தேவேந்திர ஸ்வரூப் எப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர் அத்துடன் கூடவே எப்படிப்பட்ட மிக எளிமையான வாழ்க்கையுடன் எத்தனை சேவை பணிகளில் தன் வாழ்க்கையின் மிகக் கணிசமான பகுதியை கழித்தவர் என்பது அவரை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

விஷ்ணு வகங்கர், தேவேந்திர ஸ்வரூப், B.B.லால்

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவும் தத்தோபந்த் தெங்கடிஜியும் தாணுலிங்க நாடாரும் சுவாமி சித்பவானந்தரும் செமினார் சிந்தனையாளர்களல்ல. அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் சிந்தனைக்கும் கோடு கிழிக்க முடியாது. காந்தியின் சூழலியல் கோட்பாடுகள் குறித்து காம்ப்ரிட்ஜ் ஆங்கிலத்தில் பேசிவிட்டு ’பப்’பில் போய் நூறு இந்தியர்களின் ஒரு வார உணவுக்கான பணத்தில் ஒரு பெக் அடிக்கக் கூடிய அறிவியக்கம் இந்துத்துவத்தில் இல்லை என்பதுதான் இந்துத்துவத்தின் சிறப்பே. அப்படி ஒரு அறிவியக்கம் என்றாவது இந்துத்துவத்தில் ஏற்பட்டால் அது ஏதோ ஆதாரப்பிழை. வேரோடு கிள்ளி வீசப்பட வேண்டியது.

வரலாற்று ஆராய்ச்சியையே எடுத்துக் கொள்ளலாம். ‘ஒரு ரொமிலா தாப்பரை உருவாக்கியிருக்கிறீர்களா’ என கொக்கரிக்கிறார்கள் இடதுசாரிகள். இல்லை என்பதுதான் சந்தோசமான விசயம். அரசு அதிகார உதவியுடன் வெளிநாட்டு பல்கலைக்கு சென்று இந்திய வரலாற்றைப் படித்து அதை காலனிய-மார்க்சிய நோக்கில் மட்டுமே அணுகி தன்னை ஒரு அதிகார மையமாக மாற்றிய ஒரு ஆளுமையை இந்துத்துவம் உருவாக்கவில்லை. ஆனால் பீம்பெதகா குகைகளை கண்டுபிடித்து, மேற்கத்திய மானுடவியலாளர்கள் கால மதிப்பீட்டைக் தவறாக செய்து அதன் முக்கியத்துவத்தைக் குறைத்த போது அதனை சரியாக கணித்து, அக்குகைகளுக்கு உலக குகையோவியங்களின் தொல்வரலாற்றில் சரியான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு வகங்கர் ஆர்.எஸ்.எஸ். காரர்.

ஆசியாவின் மிகச் சிறந்த தொல்லியலாளர் என சர்வதேச தொல்லியலாளர்களால் அறியப்பட்ட B.B.லால் என்கிற பிரஜ்பாஸி லால் இந்துத்துவர் (2021ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றார்). கடலடி அகழ்வாராய்ச்சியின் மூலம் துவாரகையை மட்டுமல்ல பூம்புகார் பகுதிகளிலும் முதன்மை தேடல்களை நிகழ்த்திய எஸ்.ஆர்.ராவ் தேசியவாதி. மற்றொரு தலை சிறந்த அகழ்வாராய்ச்சியாளரும் சர்வதேச தரம் கொண்ட வரலாற்று அகழ்வாராய்ச்சி இதழான ’புரதத்துவ’ இதழை உருவாக்கிய ஸ்வராஜ்ய பிரகாஷ் குப்தா ஆர்.எஸ்.எஸ் காரர்தான்.

இவர்களுக்கு சோவியத் உதவி இருந்ததில்லை. அமெரிக்க உதவி இருந்ததில்லை (ஆம். இன்றைக்கும் செயல்படும் இந்தியாவின் முதன்மை இடதுசாரி அமைப்பு ஒன்று சிஐஏ பண உதவியுடன் உருவானது. சோவியத் சிதறிய போது 1991 க்கு பின்னர் இந்திய இடதுசாரி அறிவுசீவிகள் பலர் அமெரிக்க ’தெற்காசிய ஆராய்ச்சி’ அமைப்புகளில் மையம் கொண்டனர்.) இந்திய வரிப்பணத்தில் இயங்கும் கல்வி அமைப்புகளில் ஒட்டுண்ணி வர்க்கமாக உள்ளேறி ஒட்டுமொத்த அதிகாரங்களை கைப்பற்றவில்லை. ஆனால் சிந்தித்துப் பாருங்கள் – வரலாற்றை உண்மையில் தேடி புழுதிகளிலும் பாலைவனங்களிலும் கடலடியிலும் மலைக்குகைகளிலும் வனங்களிலும் அலைந்தவர்கள் சங்க சித்தாந்தத்திலிருந்து வந்தவர்கள். ஏசி ரூம்களையும் செமினார் ஹால்களையும் தாண்டாமல் ஊடக ஒளிகளில் ரொமிலா தாப்பர்களும் இர்ஃபான் ஹபீப்களும் செய்வது இந்திய வரலாற்றை அப்பழுக்கற்ற ஆங்கிலத்தில் மார்க்சிய சிமிழுக்குள் அடைப்பதும் அப்படி அடைபட முடியாதவற்றை மறைப்பதும்தான். இப்படிப்பட்ட அறிவுசீவிகள் இந்துத்துவத்துக்கு இல்லை என்பதை விட இந்துத்துவத்தின் அறத்தன்மைக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இந்துத்துவர்கள் உருவாக்கும் சிந்தனைகள் என்பது அவர்களின் வாழ்க்கைகளேதான். ‘களப்பணி’, ‘அறிவியக்கம்’ என்பது போன்ற பாகுபாடுகளை கேட்கும் போது துணுக்குற செய்கிறது. ‘வலம்’ ‘தமிழ்ஹிந்து.காம்’ என்பது தாண்டி அறிவியக்கம் இருக்கிறதா என்று கேட்கிறார் ஹரன் பிரசன்னாவின் நண்பர். வலமும் தமிழ்ஹிந்து.காம் போன்றவையும் ‘அறிவியக்கம்’ அல்ல. ஹிந்துதுவத்துக்கு இடதுசாரிகள் போன்ற ஒரு ‘அறிவியக்கம்’ தேவையில்லை. என்றென்றும் களத்தில் விராட ஹிந்து சமுதாயம் எனும் தெய்வத்துக்கு செய்யப்படும் பூஜையான சேவையிலிருந்து வரும் நறுமணமாக மட்டுமே ‘வலம்’ ‘தமிழ்ஹிந்து.காம்’ இன்னும் என்னென்ன வருகிறதோ அவையெல்லாம் இருக்கும். இவையெல்லாம் வறண்டு போன அறிவியக்கம் அல்ல.

இந்துத்துவம் என்றென்றைக்கும் முழுமையான உயிரியக்கம். இந்த தேசத்தின் உயிரியக்கம். தேச சேவையிலிருந்தும் தேசத்தின் அப்படி சேவை செய்ய உத்வேகமளிக்கும் ஆன்ம சக்தியான இந்துத்துவத்திலிருந்தும் வெளிப்படும் எழுத்துகள் களப்பணி என்றும் அறிவியக்கம் என்றெல்லாம் பிரிக்க முடியாதவை. பிரம்மமே அறிவென்பதும் உயிரே அறிதல் என்பதும் நம் மரபு.

One Reply to “இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?”

  1. ***Mr. மோடி***

    பாம்புக்கு வைத்தியம் பார்ப்பது கொஞ்சம் சிக்கலான சமாச்சாரம். எப்போதும் விஷம் வைத்திருக்கும். அதைக் காப்பாற்றும் நல்ல எண்ணத்தோடு அதற்கு எப்படி வைத்தியம் பார்ப்பது சிரமமோ அதே அளவு சிரமம் தான் திராவிட மாயை மூடிய தமிழகத்தை Mr . Modi கையாளுவது.

    Ofcourse, “கோ பேக் மோடி” ட்வீட்கள் வரும் இடம் தமிழகம் இல்லை. அவை “முன்னாள் இந்தியாவில்” இருந்தும், சில “தேர்தல் ஆலோசகர்” சொல் படி தமிழகத்துக்கு வெளியே இருந்து ட்வீட்டப்படுகின்றன என்பதும் முற்றிலும் துகிலுரித்துக் காண்பிக்கப்பட்டு விட்டது.

    இருந்தாலும், புதிதாக களத்தில் குதித்திருக்கும், ஓவியா ஹெலன் போன்ற சில “ஆந்தோலன் ஜீவிகள்” இன்னமும் இந்த “கோ பேக்” மோடி என்ற இத்துப்போன hashtagஐ ட்வீட் செய்வது, 1. சங்கிகளை வெறுப்பேற்ற, 2. யாரையோ திருப்திப்படுத்த மட்டுமே.

    இவர்களுக்கெல்லாம் பாரதி அன்றே கேட்ட கேள்விதான் பதில்.
    “பாரதத்திடை அன்பு செலுத்துதல்
    பாபமோ? – மனஸ் தாபமோ?
    கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
    குற்றமோ? – இதில் செற்றமோ?”

    1.5 லக்ஷம் தமிழ் உயிர்களை பறித்த இறுதிப்போரில் துணை புரிந்ததாக ராஜபக்ஷே சொன்ன காங்கிரஸ் இளவரசர், தமிழ்நாடு வந்திறங்கி, தயிர் வெங்காயம் செய்தபோது, “so cute yaar” என்று ஜொள்ளுவிடும் மொன்னைப் பாம்புகள் நிறைந்திருக்கும் தமிழ் நாடு.

    மாநிலத்தை முன்னேற்ற வழி தெரியாமல் தினமும் ஒரு நாடகம் போட்டு, Drama சபை கூட்டி, காமெடி செய்யும் இன்னொரு நச்சுப்பாம்பும், “இன்னும் 6 மாசம் தான். அப்புறம் எங்க ஆட்சி தான். உங்க பேர் ஞாபகம் இருக்கு” என்று ஒரு டிஜிபியையோ மிரட்டும் பேரப்பாம்பும் நிறைந்த தமிழ்நாடு.

    தினமும் முதல்வரையும், பிரதமரையும் வசை பாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஜிஹாதி-மிஷனரிகள் கூட்டம் எனும் மலைப் பாம்புகள் நிறைந்த தமிழ்நாடு.

    காவேரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழருக்கு வீடு, ஸ்வச் பாரத் மூலம் கழிப்பிடம் கட்ட வசதி, விவசாயிகளுக்கு நேரடி நிவாரணப் பணம், என்று எத்தனையோ நலன்கள் செய்திருந்தாலும் இன்றும், அவர் சொல்லாத, “அந்த 15 லட்சம்…” என்று காமெடி பண்ணும் காமெடி விரியன்கள் நிறைந்த தமிழ்நாடு.

    வெறி பிடித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து, திமிர் பிடித்த சீனாவின் தாவாடையைப் பேர்த்து “வண்மையிலே உளத்திண்மையிலே” உயர்ந்த நாடு என்ற பெயரும், உயிர்காக்கும் மருந்து கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு vaccine கொடுத்து “நெஞ்சில் ஈரத்திலே, உபகாரத்திலே” உயர்ந்த நாடு என்று உயரச்செய்த உத்தமனைப் புகழ முடியாமல், அருணன்களையும் ஜெயரஞ்சன்களையும் ஏவி விட்டு அவதூறு செய்யும் மீடியா எனும் கொம்பேறி மூக்கன் பாம்புகள் நிறைந்த தமிழ்நாடு.

    இந்த பாம்புகளுக்கு வைத்தியம் பார்ப்பது எவ்வளவு சிரமம்! அதை, சிறிதும் கவலை இன்றி செய்து வரும் Mr.மோடி, ஒரு கர்மயோகி போல, தன் கடமையை செய்து வருவது மலைக்க வைக்கிறது.

    உலகத்துக்கே மருந்து கொடுத்து காப்பாற்றுபவர், உள்ளூருக்கு மருந்து கொடுக்காமல் போய் விடுவாரா? கொடுப்பார் கண்டிப்பாக. அதுவும் மெல்ல வேலை செய்யும்.

    Mr.மோடி எனும், பாரதத்தின் ஈடில்லா புகழுடைய, தலைமகனால் , தழைக்கட்டும் தமிழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *