சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி..

நீங்கள் என்னதான் சொல்லுங்கள். ஆக்ஸிஜன் விஷயத்தில் நடுவண் அரசு நடந்துகொண்ட விதம் மிக மிக மோசம். பிச்சை எடுத்தாவது ஆக்ஸிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றமே திட்டும் அளவுக்குக் கேவலமாக மக்களின் உயிருடன் விளையாடியிருக்கிறது.

இதை நீங்கள் முதலிலேயே சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். நல்லது. 2021 ஜனவரி பிப்ரவரி வாக்கிலேயே கேரளா, மஹாராஷ்டிரா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து மத்திய அரசின் மருத்துவ நிபுணர்கள், நிர்வாக அதிகாரிகள் குழு அந்த மாநிலங்களுக்குச் சென்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலைத் தயாரித்து அந்த இடங்களுக்கு ஊரடங்கு விதிக்கும்படிக் கேட்டுக் கொண்டது. ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் 200 கோடி கொடுத்து 162 இடங்களில் ஆக்ஸிஜன் பிளாண்ட் அமைக்கும்படிக் கேட்டுக்கொண்டது. ஆனால், 33 இடங்களில் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைத்திருக்கிறார்கள். மாநில அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் என்ன சொன்னார்கள் தெரியுமா. எங்கள் வளாகத்தில் ஆக்ஸிஜன் ஆலை அமைக்க இடம் இல்லை. நாங்கள் வெளியில் இருந்தே வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். ஏனென்றால் ஒரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிளாண்ட் அமைத்து தாங்களே உற்பத்தி செய்துகொள்வதைவிட தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து அதை வாங்கிக்கொள்வது செலவு குறைவானது என்று பல தனியார் மருத்துவமனைகள் நினைத்தன. அதாவது ஒரு ஆக்ஸிஜன் பிளாண்ட் அமைக்கும் இடத்தில் நான்கு படுக்கைகளைப் போட்டால் அதில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று கணக்குப் போட்டார்கள்.

உண்மையில் கொரானாவுக்கான சிகிச்சை என்ற பெயரில் டில்லியில் இருந்த தனியார் மருத்துவமனைகள் தொடங்கி நாடு முழுவதும் இருந்த மருத்துவமனைகள் செய்தது எல்லாம் பகல் கொள்ளைகள். பச்சைத் துரோகங்கள். நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமத்தினர் அடிபட்டு மயங்கிக் கிடப்பவர்களிடமிருந்து நகைகள், பணத்தைத் திருடுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். மருத்துவர்கள், மருத்துவமனைகள் எல்லாம் படித்த மேதைகள் அல்லவா. வெளியில் 300 ரூபாய்க்கு வாங்கும் பி.பி.இ. கிட் ஒன்றுக்கு இரண்டாயிரம் மூவாயிரம் என்று விலைவைத்துக் கொள்ளையடித்தார்கள். கொரானா சிகிச்சையில் நாளொன்றுக்கு லட்சங்கள் கட்டணமாக வாங்கிய மருத்துவமனைகள் உண்டு. இத்தனைக்கும் மூன்று நேரம் சத்தான உணவு, இரண்டு ஜூஸ்கள், தனி அறை என்றதைத் தாண்டி மருந்து என்று ஒன்றுமே தேவைப்பட்டிருக்காதவர்களிடமும் லட்சங்களைக் கறந்த கொடூரம் நடந்தது. நடக்கிறது. மூச்சுமுட்டல், ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் என்றெல்லாம் போனால் கேட்கவே வேண்டாம். இந்த சீன வைரஸினால் கொள்ளை லாபமடைந்த ஒரே துறை மருத்துவ மாஃபியா தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த மருத்துவ மாஃபியாவிடம் சென்றுதான் லாக்டவுன் போடலாமா நீக்கலாமா, இந்த மருந்து தரலாமா கூடாதா என்று கைகட்டி ஆலோசனை கேட்கவும் வேண்டியிருக்கிறது. எல்லா மருத்துவர்களும் அயோக்கியர்கள் அல்ல. ஆனால், மருத்துவ அயோக்கியர்கள் விரித்த வலையில்தான் எல்லா நல்ல மருத்துவர்களும் சிக்கியிருக்கிறார்கள். ஒரு அப்பாவி மருத்துவரும் செவிலியரும் செய்யும் சேவை மகத்தானது. ஆனால், அவர்கள் மருத்துவ உலகில் நடக்கும் அனைத்து அராஜகங்களுக்கும் தமது அப்பாவித்தனத்தினாலும் தியாகத்தினாலும் சேவையினாலும் ஒரு நியாயத்தை மரியாதையை உருவாக்கித் தந்துவிடுகிறார்கள். குடிநீர் கிணற்றில் விஷத்தைக் கலந்துவிட்டவர்களின் குலத்தினர், தமது ஆட்கள்தான் அந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரியாமல் மயங்கி விழுபவர்களுக்கு சேவை செய்வதைப் போன்றது இது.

அரசியல்வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆளுங்கட்சியைத் திட்டவேண்டும் என்ற ஒற்றை அஜெண்டா மட்டுமே உங்களிடம் உண்டு. மத்திய அரசு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்யவில்லை என்று சொன்ன மருத்துவமனைகளிடம் எப்போதாவது நீங்களே ஏன் அந்த உற்பத்தி மையத்தை உங்கள் ஆஸ்பத்திரியில் அமைத்துக்கொள்ளவில்லை என்று கேட்டீர்களா. தொலைதூரப் பகுதிகளில் இருந்து கொண்டுவருவதில் பல சிக்கல்கள் உண்டு. அந்த சிலிண்டர்கள் மிகவும் பாதுகாப்பாகக் கொண்டுவரப்படவேண்டும். கண்டெய்னர் லாரிகள் தேவைப்படும். அவை அதிக வேகத்தில் போகவும் முடியாது. மருத்துவமனையின் ஓர் அங்கமாகவே ஆக்ஸிஜன் உற்பத்தி மையமும் இருந்திருக்கவேண்டும். மத்திய அரசு இதை எடுத்துச் சொன்ன பிறகும் செய்யாமல் இருந்தது மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் குறை. மத்திய அரசு தடுப்பூசிக்கான ஆய்வு மற்றும் பகிர்ந்துகொடுப்பது என்ற ஒன்றை மட்டும் தான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆக்ஸிஜன் வாங்கிக் கொள்வது, உற்பத்தி செய்வது எல்லாம் மாநிலங்களின் பொறுப்பில்தான் இருக்கிறது.

இதில் கொடூரமான வேடிக்கை என்னவென்றால் ஆக்ஸிஜன் கான்சண்ட்ரேட்டர் என்ற சின்ஞ்ஞ்சிறிய போர்ட்டபிள் கருவியின் விலை வெறும் எட்டாயிரம் மட்டுமே. லட்சங்களைக் கறந்த தில்லி தனியார் மருத்துவமனைகள் யாரேனும் இதை தங்கள் மருத்துவமனையில் வாங்கி வைத்திருக்கலாமே. இவ்வளவு ஏன் மத்திய அரசு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் முறையிட்டும் பிணங்கள் எரிவதைக் காட்டு இந்தியாவே எரிகிறது என்று சர்வ தேச ஊடகங்களுக்கு லட்சங்களுக்கு விற்றும் தேசத்தை அவமானப்படுத்திய தில்லி அரசு, ஆக்ஸிஜன் ஆடிட் செய்வதாக மத்திய அரசு சொன்னதுமே என்ன சொன்னது… எங்களிடம் போதிய ஆக்ஸிஜன் இருக்கிறது என்று ஒரே நொடியில் பதுங்கிவிட்டது. தமது அரசு என்ன அராஜகம் செய்தாலும் ஊடகங்களின் துணையுடன் மத்திய அரசின் மீது போட்டுவிடலாம் என்ற அதே அலட்சியம். திமிர். அராஜகம். மக்கள் உயிரை வைத்து விளையாடியது மருத்துவ உலகமும் சில மாநில அரசுகளும் தான். இது கூடத் தவறுதான்.

மாநில அரசுகளுமே கூட ஒருவகையில் கையறு நிலையில்தான் இருந்தார்கள். இரண்டாம் அலை இவ்வளவு மோசமாக, தீவிரமாகத் தாக்கும் என்று மாநில அரசுகளும் நினைத்திருக்கவில்லை.

அது உண்மைதான். ஆனால், பிரச்னை என்று வந்ததும் பழியை மத்திய அரசின் மீது போடப் பார்க்கிறார்கள் அதனால்தான் மாநில அரசின் பொறுப்பையும் சொல்லிக் காட்டவேண்டியிருக்கிறது.

மத்திய அரசின் மீது எந்தத் தவறும் இல்லை என்று நீங்கள் சொல்வது சரியல்ல. தடுப்பூசி விஷயத்தில் செய்துவரும் குழறுபடிகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்கத்தான் செய்கின்றன. எப்படியும் நாடு முழுவதும் இருப்பவர்களுக்குத் தேவைப்படும் என்பது தெரியுமல்லவா? உற்பத்தியைப் பெருக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? இரண்டே நிறுவனங்களுக்கு மட்டுமே முதலில் அனுமதி கொடுத்தது என்பதே தவறு. இப்படியான பேரிடர் காலத்தில் பல நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருந்தால் இப்போது கிடைத்ததைவிட நாலைந்து மடங்கு ஊசிகள் கிடைத்திருக்கும் அல்லவா?

உண்மையில் மத்திய அரசு அதைச் செய்திருக்கலாம். ஆனால் சீன வைரஸ் என்பது புதிய நோய். பொதுவாக ஒரு நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதென்றால் எப்படியும் நான்கைந்து வருட பரிசோதனைகளாவது செய்யப்படவேண்டியிருக்கும். ஆனால், இப்போதைய நிலையில் உடனே கண்டுபிடித்தாக வேண்டியிருந்தது. எனவே பல நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து ஏதேனும் ஒரு நிறுவனம் தயாரித்த மருந்தின் பின் விளைவு மோசமாக இருந்தால் ஒட்டு மொத்த தடுப்பூசி முயற்சியும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பு இருந்தது. அதோடு இப்படியான நெருக்கடியான காலகட்டத்தில் தயாரிக்கப்படும் மருந்துக்கு மிக மிக குறைவான விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்று இந்திய அரசு தீர்மானித்திருந்தது. அதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் மூல காரணமாகிவிட்டது. பாரதம் மருத்துவத்தை சேவையாகக் கருதும் பாரம்பரியத்தைக் கொண்டது. கொள்ளையடிக்கும் வழிமுறையாக அல்ல.

குறைவான விலையில் தரவேண்டுமென்றால் இந்திய மக்களில் 50%க்கு மேல் அதாவது சுமார் ஐம்பது கோடி தடுப்பூசியையாவது எங்களிடம் வாங்கவேண்டும் என்று ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அதாவது ஒருவகையான ஏகபோக உற்பத்தி உரிமையைக் கோரும் அணுகுமுறைதான். இதன் காரணமாகவும் அதிக நிறுவனங்களுக்கு அனுமதி தராமல் இருந்திருக்கலாம். உலகம் முழுவதுமே ஒவ்வொரு நாட்டிலும் ஓரிரு நிறுவனங்களே இந்த தடுப்பூசிப் பணியில் ஈடுபட அனுமதி தரப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அப்படியே செய்யப்பட்டது. ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இருக்கும் மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கிலும் தாம் வைப்பதே விலை என்று தீர்மானிக்கும் நோக்கிலும் அதைச் செய்தன. நம் தேசத்திலோ குறைவான விலையில் வழங்கும் நோக்கில் அப்படிச் செய்யப்பட்டது.

எதன் அடிப்படையில் இதைச் சொல்கிறீர்கள்? இந்திய அரசு அப்படி ஏதேனும் ஏக போக உற்பத்தி உரிமைக்கான வாக்குறுதி தந்ததா?

இது ஒரு யூகம் தான். இதை நிருபிக்கும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால் முதலாவதாக, இந்திய தடுப்பூசியின் விலை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இரண்டாவதாக, உலகின் பல நாடுகளுக்கு இலவசமாகவே பெருமளவிலான தடுப்பூசி தரப்பட்டிருக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் எங்கள் தடுப்பூசியால் யாரேனும் இறந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று கை கழுவும் வகையில் மட்டுமல்ல, எந்த நாட்டுக்கு தடுப்பூசி தருகிறோமோ அந்த நாட்டின் சொத்துக்கள், அதிகாரம் என பலவற்றை அடகு வைக்கவும் சொல்கிறது. இந்தியா அப்படியெல்லாம் செய்யவில்லை. அதிக இடங்களுக்கு விற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதுதான் இந்திய நிறுவனத்தின் கோரிக்கையாக இருந்திருக்கும் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

பல நாடுகளுக்கு இலவசமாகத் தடுப்பூசியைத் தருவதால் அந்த நிறுவனத்துக்கு என்ன லாபம் கிடைக்கும்?

உடனடியான பணமாகக் கிடைக்காது என்பது உண்மைதான். ஆனால், காலத்தே செய்த உதவிக்கு வேறுவகையில் நல்ல பலன் கிடைக்கவே செய்யும். அந்தவகையில் இந்திய அரசு குறைவான விலையில் தடுப்பூசி தயாரிக்கச் சொன்னதும் இலவசமாக பல நாடுகளுக்கு அனுப்பியதும் மிகவும் சரியான செயல்களே. இதனால் நம் நாட்டில் தடுப்பூசி மெதுவாக உற்பத்தியாகிறது.

என்ன சொன்னாலும் உலக நாடுகளில் பலவற்றில் மொத்த மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி போட்டாகிவிட்டது. இந்தியாவில் 12% தான் போடப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய அலட்சியம் இல்லையா?

மீண்டும் புள்ளிவிவரத்தைத் தவறாகச் சொல்கிறீர்கள். அந்த நாடுகளில் ஐம்பது சதவிகிதம் என்பது 14 லட்சமாக இருக்கும். நம் நாட்டில் 12% என்பது 17 லட்சமாக இருக்கும். எண்ணிக்கையில் நாம் அதிக பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. தடுப்பூசி தொடர்பாக இருக்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால் நம் தேசம் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டது. சென்ற ஜனவரி வாக்கில் கிட்டத்தட்ட முதல் அலை ஓய்ந்து நாம் வெற்றிகரமாக மீண்டுவிட்டிருந்தோம்.

இந்த அரசு செய்த மிகப் பெரிய தவறு அதுவும் தான்.

நாம் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்று மருத்துவர்களும் நம்பத்தான் செய்திருந்தார்கள். அவர்களுடைய ஆலோசனைகளுக்கு ஏற்பவே படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டிருந்தோம். முதல் அலையில் நம் தேசத்தில் லட்சக்கணக்கில் இறப்பார்கள் என்று உலகமே எச்சரித்தது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. இத்தனைக்கும் ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் என்பதெல்லாம் அத்தனை கறாராகப் பின்பற்றப்பட்டிருக்கவும் இல்லை. இருந்தும் நம் தேசத்தில் மக்கள் தொகை அதிகமாகவும் இட வசதி குறைவாகவும் இருந்த நிலையிலும் நோய்த் தொற்று பரவலும் உயிரிழப்பும் மிக மிகக் குறைவாகவே இருந்தது. எனவே, 2021 ஜனவரி வாக்கில் நாம் மீண்டெழுந்துவிட்டதாக மருத்துவர்களும் உலக நாடுகளுமே கூட நம்பின. தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்தில் நாம் சற்று மிதமாக நடந்துகொண்டதன் காரணம் அதுதான். 2021 டிசம்பர் வாக்கில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்பதுதான் மருத்துவ உலகம் நமக்குச் சொன்ன வழிகாட்டுதல்.

மருத்துவத்துறை, சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாகவும் முன்களப்பணியாளர்களுக்கு அடுத்த கட்டமாகவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்தகட்டமாகவும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த கட்டம் எனவும் உலக நாடுகளில் என்ன வழிமுறை பின்பற்றப்பட்டதோ அதையேதான் நம் தேசமும் பின்பற்றியது. 30 லட்சம் தடுப்பூசிகள் என்பதுதான் முதல் இலக்காக இருந்த்து. அதுவும் 2021 டிசம்பருக்குள் என்பதுதான் நம் திட்டம். இது மருத்துத்துறையைக் கலந்தாலோசித்து எடுத்த முடிவுதான். ஆனால், மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் முதல்வாரத்தில் இந்தத் தொற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் 500 மடங்கு 600 மடங்கு என்று அதிகரித்துவிட்டது. சுனாமியின் முதல் அலை உள்வாங்கிச் சென்றபோது வேடிக்கை பார்க்கச் சென்ற பலர் இரண்டாம் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதுபோல் இங்கும் நடந்துவிட்டது. இந்த ஆண்டு முடிவுக்குள் 30 லட்சம் என்ற கணிப்பு முழுமையாகப் பொய்த்துவிட்டது. ஆனால், இதில் மத்திய அரசின் மீது எந்தத் தவறும் இல்லை. அரசு மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசித்துத்தான் அந்த முடிவை எடுத்தது.

இப்படியான தொற்றுப் பரவல் ஏற்பட்ட போது கும்பமேளா நடத்த அனுமதி தந்தது தவறு தானே.

அதற்கு முன்பாகவே தில்லியில் விவசாயிகளின் பெயரில் நடந்த போராட்டத்துக்கு அனுமதி தந்ததும் பெரிய தவறுதான். அரசு அந்தப் போராட்டத்தை தடுக்கப் பார்த்தது. இதே நீதி மன்றங்கள் ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்று சொன்னது. உண்மையில் இரண்டாவது அலையின் ஊற்றுக்கண் தில்லி போராட்டம் தான். கும்பமேளாவோ தேர்தல்களோ அல்ல. இன்றும் அங்கு கூட்டம் கூடிக்கொண்டுதான் நிற்கிறார்கள். பஞ்சாப், ஹரியானாவில் இருந்து வரும் ஆக்ஸிஜன் டேங்கர்களைத் தடுத்து அராஜகம் செய்கிறார்கள். எப்போது ஆக்ஸிஜன் ஆடிட் நடத்தப்படவேண்டும் என்று சொல்லப்பட்டதோ அடுத்த நொடியில் இருந்து தில்லி ஆக்ஸிஜ தேவையில் தன்னிறைவு அடைந்த மாநிலமாகிவிட்டது. எங்களுக்கு போதும். பிற மாநிலங்களுக்குக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டது.

முன்புமே கூட நம் தேசத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்திருக்கவே இல்லை. அவை உற்பத்தியான பகுதிகள் வேறு. தேவைப்பட்ட பகுதிகள் வேறு. அரசு அதன் வர்த்தகத்தை தனியார் வர்த்தக சந்தையிடம் ஒப்படைத்திருந்தது. யாருக்கு எவ்வளவு வேண்டுமோ எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தது. தேவை அதிகரிக்கும் என்று தில்லி தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென்று தேவை பல மடங்கு அதிகரித்ததும் ஆக்ஸிஜன் உற்பத்தியான மாநிலங்களில் இருந்து உடனே கொண்டுவர முடிந்திருக்கவில்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கொண்டுவர அதி பாதுகாப்பு மிகுந்த கனரக வாகனங்கள் தேவை. முன்பே சொன்னதுபோல் அவை மிதமான வேகத்துக்கு மேல் எல்லாம் பயணிக்கவும் முடியாது.

எந்த மருத்துவ நிபுணரும் மருத்துவ மனையும் எதிர்பார்த்திராத நோய் அதிகரிப்பினால் ஏற்பட்ட பின்னடைவு இது. இதை மத்திய அரசின் மீது பழிபோடக் கிடைத்த அரசியல் வாய்ப்பாகப் பார்க்கும் எதிர்கட்சிகள்தான் பிண அரசியல் செய்கின்றன. சர்வ தேச ஊடகங்கள் இந்தியா வீழ்கிறது என்று காட்டக் கிடைத்த வாய்ப்பு என்று இறங்கி அடிக்கிறார்கள். நம்மிடம் சில குறைகள் உண்டு. சில விடுபடல்கள் உண்டு. ஆனால், நாம் கொடுத்துவரும் அதிகப்படியான விலை என்பது அதற்கு எந்தவகையிலும் இசைவானது அல்ல. இதுவும் நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு போரே. இதில் நாம் அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டும். குறைந்தபட்சம் எதிரிக்கு அடியாளாக இல்லாமலாவது இருக்கவேண்டும். பொறுப்பற்ற மக்கள், எதிரிகளாகச் செயல்படும் எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியின் கையறு நிலை, பேரிடரின் அதி தீவிரம், ஊடகங்களின் கயமை, மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகளின் கொடூரங்கள் என அனைத்தையும் தாண்டி சீனா நமக்கு இழைத்திருக்கும் பெரும் அநீதி இது. மிக மலிவு விலையில் மிகவும் தரமான தடுப்பூசியைத் தயாரித்ததும் உலகம் முழுவதும் அதை இலவசமாக அனுப்பித் தந்ததும் பொறுக்காத சர்வ தேச மருந்து மாஃபியாவின் கரங்களும் இதன் பின்னால் உண்டா என்பதும் தெரியவில்லை. எது எப்படியானாலும் நாம் வெல்வோம். வென்றுகொண்டிருக்கிறோம்.

தலைக்கு வந்தது நிச்சயம்
தலைப்பாகையுடன் போய்விடும்.
ஏனென்றால்
பிற நாட்டினரைக் கொன்று குவித்த
ஏகாதிபத்திய வெறியின் ரத்தக் கறை
நம் கரங்களில் இல்லை.
பூர்வ குடிகளின் பிணக்குவியலின் மேல்
நம் சாம்ராஜ்ஜியம் எழுப்பப்பட்டிருக்கவில்லை
அடிமைகளின் ரத்தத்தை உறிஞ்சி
நம் வயல்கள் செழித்திருக்கவில்லை
அந்நிய கலாசாரத்தை அழித்து
நம் மதம் வளர்திருக்கவில்லை
வர்க்க எதிரிகளின் மரண ஓலங்களினால்
நிறைந்திருக்கவில்லை நம் வான் வெளிகள்
நிச்சயம்
நம் பூமியிலும்
நம்மால் கண்ணீர் துளிகள் சிந்தவைக்கப்பட்டிருக்கின்றன
ஆனால்,
நம்மைப் போல்
தன்னைத் தானே சீர்திருத்திக் கொண்ட நாடு தரணியில் வேறில்லை
நம் தேசத்தின் வழிகாட்டிகளின் ஆன்மாக்கள்
சர்வே பவந்து சுகினஹ என்று
அனைவரின் நலனுக்காகவுமே துடித்திருக்கின்றன
அது நம்மை வழிகாட்டும்வரை
அந்த முன்னோர்களின் ஆசிகள் நமக்கு இருக்கும்வரை
அவர்களிடமிருந்து நாம் விலகாமல் இருக்கும்வரை
எந்தப் பேரிடரையும் எதிர்த்து
இந்த நம் தேசம் எழுந்து நிற்கும்

ஜெய் ஹிந்த்.

(முற்றும்)

2 Replies to “சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3”

  1. மிகவும் நிராசையான காலத்தில் எழுதப்பட்ட இச்சப்பைக்கட்டுத் தொடர் மிகுந்த சலிப்பை அளிக்கிறது. அளவிலா நேர்மறை சொற்பொழுவில் ஆர் எஸ் எஸ் தலைவர் கூட மைய அரசு கவனக்குறைவாக இருந்ததை சுட்டி இருக்கிறார். தொற்று முதல் அலையை வெற்றிகரமாக கையாண்ட வெற்றி கொண்டாட்டத்தோடு வேறு வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டது. இதை வசதியாக ICMR மீது போட்டுவிட்டு மைய அரசு தப்பிக்க முடியாது. சில உண்மைகள் கீழே .
    பிறழ்வடைந்த தொடரிலிருந்து விடுபட தடுப்பூசி ஒன்றே வழி என்று UK, இஸ்ரேல் செயல்பட்டு விடுபட்டே விட்டன. ICMR அதிலிருந்து பாடம் படிக்கவில்லையானாலும் அரசு படித்திருக்கவேண்டும்.
    ஓய்வூ பெற்ற CCMB இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா அளித்த எச்சரிக்கை பிரதமரைச் சென்றடையவில்லை.
    முதல் இரண்டாம் தவணைகளுக்கிடையேயான இடைவெளியை அதிகரித்தல் ஒரு பெரும் உத்தி. போரிஸ் ஜான்சன் தலைமையில் UK செவ்வனே செய்து வெற்றி கண்டபின் இந்த அரசு எவ்வளவு தாமதமாக அதையே யோசிக்கிறது. தடுப்பூசி விநியோகத்தில் நிலைமை மீறும் வரை எந்த தெளிவும் இல்லை.
    முதல் அலையின் இறுதியில் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசிடம் அத்தகவல் இல்லை என பதில். என்னே மெத்தனம். ICMR எண்ணிக்கையை அளித்ததோடு தன் கண்டனத்தை பதிவிட்டது.
    plasma சிகிச்சையை ஆராய்ச்சிக்காக மட்டும் மற்ற செய்தன. அதை மருத்துவக் கையேட்டில் ஒரு சிகிச்சை முறையாக வெளியிட்டது இசம்ர். அமெரிக்க அறிஞர்கள் கடிதமெழுதி அதை நீக்க வேண்டியிருந்தது. அக்கையேட்டில் காலாவதியான மருத்துவக் குறிப்புகள் இன்றும். ICMR மைய அரசின் தாலாட்டோடு தூங்குகிறது.
    நாமும் அமெரிக்காவும் தான் நம் முற்றத்திலேயே இரண்டு தடுப்பூசியுடன் காலம் கண்டோம். அமெரிக்கா சுதந்திரமாக சுதந்திர தினம் கொண்டாடும். நாம்?
    மேலும் எழுத இப்போது மனமில்லை. மோடி துதிபாடிகள் கூட்டத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வாரா?

  2. End of the day, all said and done and in spite of lengthy explanations as posted here, the management by the Central government has been pathetic.Total failure of governance here. Yes, the media are anti government, the states are a bunch of imbeciles and the opposition are vile anti national desh drogis.. We all know that. We also know that courts are a joke in India. Yes China is the culprit. The government ALSO should know these facts. They should have cancelled all religious, political gatherings, rallies, farmers protests, anti CAA movements, etc. The management of the epidemic should have been taken away from the states and managed professionally. If this means a certain degree of dictatorship, so be it. We are talking about lives that have been lost to this Cheenan virus. The media should have been reined in, the opposition bast#### should have been thrown in the crap pit. International media should have been kicked all the way to London and Washington. Yes, individual rights would have been trampled but that is a small price to pay for the overall good of the nation. Modi should have ruled with an iron fist . Instead, he was addressing huge electron gatherings in Bengal and TN. Modi was elected to RULE and not to grow long beard and do yoga at a critical juncture. Bhgavn’s sake, take charge NaMo. You have been elected witha huge majority precisely for this reason. Now the Delhi Municipality fellow is showing his mid finger to you and you are watching helplessly!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *