தெய்வங்கள் ஊடுவரா?!

            நாம் வழிபடும் தெய்வங்களுக்கு மனித வடிவுகளைக் கொடுத்து அழகு பார்த்தும், அவர்கள் குடும்பங்களில் நம்மைப்போலவே அவர்களுக்கும் உண்டாகும் சிக்கல்களையும், அதை அவர்கள் தீர்த்துக்கொள்ளும் விதத்தையும் நாமே கல்பிதம் செய்து கொள்கிறோம். நமது வாழ்க்கை முறையைச் செப்பனிட்டுச் சீரமைத்துக் கொள்வதற்கும் இவை உதவுகின்றன என்றால் அது மிகையல்ல.

                                                            *****

            நாம் பார்க்கும் அடுத்த செய்தி தெய்வத் தம்பதிகளுக்குள் உண்டாகும் ஊடல் பற்றியது!

            ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலஹரி ஸ்லோகத் தொகுப்பிலிருந்து இது சம்பந்தமான ஒரு ஸ்லோகத்தைக் காணலாமே! ஆம்! ஆதிசங்கரர் அன்னையின் திருப்பாதங்களின் உயர்வைப் போற்றும் பல ஸ்லோகங்களுள் ஒன்றாக ஊடல் பற்றியும் ஒரு ஸ்லோகம் புனைந்துள்ளார்.

            86ம் ஸ்லோகம். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளதும் திரு ‘அண்ணா’ அவர்கள் உரையெழுதியதுமாகிய சௌந்தர்யலஹரியில் காண்பது:

            ஊடலில் சிவபிரான் உமையன்னையை வணங்குகிறார்; எதற்காக ஊடல்? ஆசார்யர் நிலையிலிருந்து ஒரு கவிஞராக ஆதிசங்கரர் மாறுவதைக்கண்டு உள்ளம் சிலிர்க்கிறோம். உலகநாயகியின் பாதகமலங்களின் பெருமை கூறப்புகுபவர் உலகாயதமாக மானிட தம்பதிகளிடையே நிகழும் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார். ஏன் எனச்சிறிது சிந்தித்தோமாயின், தமது ஸ்லோகத் தொகுப்பிற்குச் சுவைசேர்க்க என்று எண்ணுவோம். பலரும் பல காரணங்களை ஊகிக்கலாம். மாந்தர்களிடையே நிகழும் செயல்களை தெய்வத் தம்பதியர் மீதும் ஏற்றிக்கூறி வாழ்வியலின் சுவைகள், தத்துவங்கள், பெருமைகள், சிறுமைகள் இவற்றை எடுத்தியம்ப இதனை ஒரு களனாக்கிக் கொண்டனர் போலும் நம் ஆன்றோர்.

            சிவபிரான் உமையிடம் விளையாட்டாக அவளுடைய பிறந்த வீட்டைப்பற்றி ஏதொவொன்றை ஏளனமாகக் கூறிவிடுகிறார். உமை இதனால் மிகவும் கோபம்கொள்கிறாள். இருவருக்குள்ளும் பிணக்கு எழுகிறது. பேசவும் மறுத்து ஊடல் கொண்ட உமையைச் சமாதானப்படுத்த முயல்கிறார் ஈசன். இறுதியில் செய்வதறியாது, அவளுடைய மலர்ப்பாதங்களில் பணிந்து மன்னிப்பை வேண்டுகிறார். கதை இங்கு முடியவில்லை. இங்குதான் கவிஞராகிய பகவத்பாதரின் வாக்குவன்மையைக் கண்டு சிலிர்க்கிறோம். அப்போது சிவனுடைய நெற்றிக்கண் நெருப்பால் எரிக்கப்பட்டவனும் நீண்ட நாட்களாக அதனால் உண்டான பகையை அடியோடு தீர்த்துக் கொள்பவனும், சிவனுடைய பகைவனுமான மன்மதனால் அவளுடைய பாதச்சிலம்புகளின் ஒலி மூலம் ‘கிலிகிலி’ எனும் வெற்றிமுழக்கம் எழுப்பப்படுவதாயிற்று என்கிறார். சிவபிரானின் தலை உமையம்மையின் கால்களில் அணிந்துள்ள சிலம்புகளில் படுவதால் அவை ‘கிணிகிணி’ என ஒலிக்கின்றன.             சிவபிரான் மோனத்தவம் செய்ய, இமவான் மகளான உமையவள் அவருக்குப் பணிவிடை செய்யுங்காலை, மன்மதன் மலர்க்கணை தொடுத்து அவர்களைக் காதல்வயப்படச் செய்கிறான். நொடியில் தன் நிலையுணர்ந்த பரமன், நெற்றிக்கண்ணைத் திறந்து மதனனைக் கோபித்து எரித்துவிடுகிறார். அன்றிலிருந்து அவர்மீது தீராப்பகை கொண்டுள்ள மன்மதன் இப்போது தனது பகை தீர்ந்ததென்று செய்யும் வெற்றி முழக்கமாக உமையவளின் இச்சிலம்பொலி பகவத்பாதருக்குத் தோன்றுகிறது! என்னவொரு வளமான கற்பனை!

  ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்
  லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
  சிராதந்த: சல்யம் தஹனக்ருத முன்மூலிதவதா
  துலாகோடிக்வாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா (86)

இதுவே சௌந்தர்யலஹரி ஸ்லோகம்.

  'ஊடுதல் காமத்திற்கின்பம்,' என்பது தெய்வப்புலவர் வாக்கு. அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், எவ்வாறு அதனை நீட்டிக்காமல் முடிப்பது எனவெல்லாம் அழகானதொரு சின்னஞ்சிறு சிற்றிலக்கியம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் திரிகூட ராசப்பக் கவிராயர்- ஆம்- நமக்குக் கொஞ்சுதமிழில் குற்றாலக் குறவஞ்சியைத் தந்தவர்தான் இந்தத் திருக்குற்றால ஊடல் என்னும் 20 பாடல்களைக் கொண்ட இலக்கியத்தையும் தந்துள்ளார். 
             இதற்குள் புகுந்து இலக்கிய, ஆன்மீக, வாழ்வியல் கருத்துக்களைக் காணலாம். இந்நூல் அடுத்தடுத்த பாடல்களை நாயகி - நாயகன் கூற்றாகக் கொண்டு சிறந்து விளங்குகிறது. அனைத்தையுமே அவை கூறும் அரிய பொருத்தமான தொன்மங்களின் நயத்துக்காகப் பார்க்கலாம். இதுவும் ஒரு அந்தாதி போலவே அமைந்துள்ளது நூலுக்கு மேலும் சுவை கூட்டுகிறது.
             சாமானிய மானிடக் காதலர்கள் ஊடுவர்; ஏசிக் கொள்வர்; கடவுளர் ஊடலாகுமோ? இலக்கியத்திற்குச் சுவைசேர்க்க அவர்கள் ஊடுவது போலக் காட்டி, அதன் மூலம் வாக்குவாதங்களை அவர்களிடையே எழுப்பி, புராணக் கதைகளையும் அவர்களுடைய திருவிளையாடல்களையும் கூறுவதுண்டு. மனிதர்கள் செய்வது போலவே பழித்துரைத்தும், அங்கதம் போலவும் கூறுவது உண்டு. அதில் இது ஒரு அருமையான சிறு நூல்.  
             சூரியனும், தேவாதிதேவர்களும் வலம்வந்து வணங்கும் தலைவன் குற்றாலநாதன் (சிவபெருமான்). அவனுடைய உயிரான குழல்வாய் மொழியாள் எனும் காதல் நாயகி, ஏனோ அவனிடம் ஊடல் கொண்டு விட்டாள்! காரணம்?
             அவனுடைய பவள இதழ்கள் வெளுத்துள்ளனவாம். இதனால் அவனுடைய நாயகி தானே இதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, "இதுவும் உமக்கு அழகாகின்றதோ?" எனச் சினந்து கூறி, அவன் வேறொரு பெண்ணுடன் சரசமாடி விட்டு வந்ததாக எண்ணி ஊடல் கொண்டு விட்டாள்.  
தேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் 
         வலம்புரியின் செம்பொற் கோயில்
     தாரேறு மலர்தூவித் தாலத்தார் 
         பரவியகுற் றாலத் தாரே
     ஏரேறு கடல்பிறந்த கருணைநகை 
         முத்துவெளுத் திருப்ப தல்லால்
     ஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் 
         திருப்பதழ காகுந் தானே  (1).
 
 
 ஊடலைத் தணிக்கத் தன் நாயகியிடம் சில மொழிகளைக் கூறுகிறான் குற்றாலநாதன். "காகங்கள் கூட அணுக முடியாத திரிகூட மலையின் அணங்கே! வேதங்கள் எல்லாம் உயர்வாகக் கூறும் உனது கற்பின் திறம் வெளுப்பு; உனது அண்ணன் - நீலமேக வண்ணனான கண்ணன் - பள்ளி கொள்ளும் பாற்கடலும் வெளுப்பு; யாம் இருக்கும் இமயப் பனிமலையும் வெளுப்பு; விபூதிப் பூச்சினால் என் உடலும் வெளுப்பு; ஆகவே அதரம் மட்டும் வெளுப்பாகாது எனச்சொல்ல இயலுமா? அநியாயமாக நீ இதற்கெல்லாம் ஒரு காரணம் கற்பிக்கலாமோ?" எனஅன்போடு கேட்கிறான்.

             காகமணு காததிரி கூடமலை 
                    யணங்கேயுன் கற்பின் சீர்த்தி
           யோகமுறை பணிந்தேத்தி யுயர்மறையெ 
                    லாம்வெளுப்பா யுனக்கு மூத்த
           மேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் 
                    மலைமுழுதும் வெளுப்பா யென்றன்
           ஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் 
                    பேறாதென் றார்சொல் வாரே. (2)      

             தலைவன் இவ்வாறு சொன்ன பின்பும் குழல்வாய்மொழியாளின் ஐயம் தீரவில்லை. எளிதில் தீர்ந்து விடும் ஐயங்களா? நன்கு, தீர விசாரித்து அல்லவோ தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும்?!! ஐயனிடம் கூறுகிறாள்:

             "திரிகூடத்து அண்ணலே! ஒருகாலத்தில் நீர் உமது உடலில் எனது முலைக்குறியும்  வளைக்குறியும் பெற்றிருந்தவர் தானே! [பார்வதிதேவி, காமாட்சியாக அவதரித்த காலத்தில், மணலால் லிங்கப் பிரதிமை செய்து ஈசனைப் பூசித்து வரும்பொழுது இறைவனார் அவளைச் சோதிக்க எண்ணி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார். அப்போது அந்த லிங்கத்தை உமாதேவியார் நீர்ப்பெருக்கினின்று காப்பாற்ற வேண்டி இறுகக் கட்டி அணைத்துக் கொண்டதால், அவளுடைய முலைத்தழும்பும், கரங்களில் அணிந்த வளைகளின் தழும்பும் அந்த லிங்கத்தில் பதிந்தன- அதைத்தான் இங்கு கூறுகிறாள் குழல்வாய் மொழியாள்]. இப்போது உமது மார்பில் ஒரு மைக்குறியும் வாசனை மிகுந்த மஞ்சள் குறியும் எப்படி வந்தது? வேறு யாரோஒருத்தி உம்மை வந்து தழுவிக் கொண்டாளோ? அவள் பெயரை எனக்குக் கூறுவீர்! நெஞ்சம் முழுதும் வஞ்சம் தான் உடையவரோ நீர்?" எனச் சினத்துடன் ஆத்திரமாக உரைக்கிறாள் குழல்வாய்மொழியாள்.

             ஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் 
                    திரிகூடத் தண்ண லாரே
           சீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் 
                    பெற்றிருந்த தேவ ரீர்தாம்
           மார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் 
                    குறியுமன்று வரப்பெற் றீரே
           நேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா 
                    னோவுமது நெஞ்சந் தானே.  (3)

             தலைவன் குற்றாலநாதன் பாடு திண்டாட்டம் தான்! என்ன சொல்வான் அவன்?

             "என் நெஞ்சில் நீ இருக்கும்போது நான் எவ்வாறு இன்னொருத்தியை நினைக்க இயலும்? ஊஞ்சலாடும் குழைகளைக் காதிலணிந்த கயல்விழிப் பெண்ணே!  குழல்மொழியே! கேட்டுக்கொள்; இது மைத்தீற்றலல்ல; நான் தலையில் அணிந்துள்ள நறுமண நெய் வழிந்ததால் உண்டான கருமை நிறமாகும்; மஞ்சளாக நீ காண்பதும் என் தலையில் அணிந்துள்ள மலர்ந்த கொன்றை மலர்களிலிருந்து உதிர்ந்த பூந்தாதுகள் தான்," என விளக்குகிறான்.

             நெஞ்சகத்தி னீயிருக்க நின்னையல்லா 
                    லொருவரையு நினைய லாமோ
           உஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் 
                    குழல்மொழியே ஒன்று கேளாய்
           அஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து 
                    வழிந்துநிற மதுவே யன்றி
           மஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் 
                    தாதவிழ்ந்த மாற்றந் தானே (4).

             குழல்வாய்மொழியாளின் சந்தேகம் இதனாலெல்லாம் தீர்ந்து விடுவதாக இல்லை: மேலும் கூறுகிறாள்: "குற்றாலத்துப் பெரிய மனிதரே! வெண்மையான காளை மீதேறி நீர் காட்சி தருவது மாற்றுக் குறையாத வெள்ளி போன்ற பனி படர்ந்த இமயமலை மீது  பவளமலை பெருமையாக வீற்றிருப்பது போல இருக்கிறது. பெருகியோடும் வெண்மையான கங்கை ஆறு உமது சடையில் இருக்கிறது; பிறைச்சந்திரனும் வெள்ளையாகக் கீற்றாக அங்கு உள்ளது; இப்படி எல்லாம் வெள்ளையாக இருக்க, நீங்களும் நேற்று நேர்த்தியாக வெள்ளை உடுப்பு உடுத்துக் கொண்டு காட்சியளித்தீர்! இன்று உறக்கமின்மையால் உமது கண்கள் சிவப்பாகி விட்டதால் அதனை நிறுத்தி விட்டீரோ!" என்று கடிந்துரைக்கிறாள். 

             மாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை 
                    கொலுவிருக்கு மகிமை போல
           வேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் 
                    குற்றாலத் தெந்தை யாரே
           ஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை 
                    மதியிருக்க அதிக மாநீர்
           நேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் 
                    பானகண்ணால் நிறுத்தி னீரே (5).

             இப்போது அவன் உண்மையாகவே தடுமாற்றம் கொள்கிறான். அவனுடன் ஊடுவதையே ஒரு முனைப்பாய்க் கொண்டு நிற்கும் இவளிடம் என்னதான் சொல்லி சாந்தப் படுத்துவது என்று அவனுக்குச் சலிப்பாக இருக்கிறது. "தேவி! உன்னைத் தனியே விட்டுவிட்டு நான் என்றுமே பிரிந்து சென்றதில்லையே!  நீயேதான் ஒருமுறை என்னைப் பிரிந்து பனிமலையில் சென்று தவம்செய்து நின்றாய்! நாமும் அந்தத் தனிமையைப் பொறுத்துக் கொண்டு வடக்குத் திசையில் ஆலமரத்தினடியில் தனியாகத் தவத்தில் அமர்ந்திருந்தோம். அதனைக் கண்டு சிறுபிள்ளைத்தனமாகப் பண்பின்றி மலரம்புகளைக் குவித்து ஏந்தி வந்தவனான கரியமேனி நிறம் கொண்ட மன்மதனை நாம் சினத்துடன் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்ததனால் அல்லவோ எனது அந்த விழி சிவந்தது ? வேறு எதனாலும் அல்ல எனத் தெரிந்துகொள்வாய் குழல் மொழியே, பூங்கொடி போன்றவளே!"

             நிறுத்தி நாம் பிரிந்ததில்லை நீபிரிந்து 
                    பனிவரைக்கே நிற்கு நாளில்
           பொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோ 
                    மதுதனக்குப் பொறுப்பில் லாமல்
           சிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த 
                    சேவகனைச் சிவந்த போது
           குறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ 
                    குழல்மொழிப்பூங் கொடிஅன் னாளே (6).

             தட்சனின் மகள் தாட்சாயணி; தன் தந்தை தட்சன் கணவரான சிவபிரானை அவமதித்ததால் சினம் கொண்டு, சினத்தீயில் தன்னை எரித்துக் கொள்கிறாள். பின்பு பனிமலையின் மன்னனான இமவானின் மகளாகப் பிறந்து வளர்கிறாள்; துணைவியைப் பிரிந்த சிவபிரானும் தனிமையில்வாடித் தவம் செய்வாராயினார். இமவான் மகள் பார்வதி, தக்க பருவம் வந்ததும் தவம் செய்யும் சிவபிரானுக்குப் பணிவிடைகள் செய்யவேண்டி, அவருடைய ஆசிரமத்தை வந்தடைகிறாள். அதைத்தான் இங்கு குற்றாலநாதர் கூற்றாகக் காண்கிறோம். சூரபதுமன், தாரகன் எனும் அரக்கர்களின் தொல்லை பொறுக்காத தேவர்கள், உமையும் சிவனும் திருமணம் புரிந்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் ஒப்பற்ற வீரமகனே இவ்வரக்கர்களை அழிக்க வல்லவனென எண்ணுகிறார்கள்; சிவனாரின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்புகின்றனர். அவனும் அவரை உடனே உமையிடம் காதலில் விழச்செய்ய வேண்டும் என்னும் எல்லா மலர்களையும் ஒருசேர ஒரு அம்பாக்கி விடுக்கிறான். 

             இந்தப் பண்பற்ற செயலுக்காக (சிவனிடமே தன் கைவரிசையைக் காட்டியதற்காக) அவனைச் சினந்து சிவபிரான் தம் நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்பால் அவனை எரித்தார் என்பது புராணம். பின்பு காதல் வயப்பட்ட பார்வதி சிவனாரைக் கணவராக அடைய விரும்பி, பனிமலையில் தனித்திருந்து கடுமையாகத் தவம் செய்கிறாள். இறுதியில் ஈசன் அவளை மணந்து கொள்கிறார். அதைத்தான் குற்றாலநாதர் தன் நாயகி குழல்வாய்மொழிக்கு நினைவுபடுத்துகிறார்.

             இதனாலெல்லாம் சமாதானம் அடைந்து விடுவாளா அவள்? வேண்டுமென்றே பழைய கதைகளைக் கிளறி வீண்வாதம் புரிகிறாள்! இப்போது தற்பெருமை பெண்டிரிடம் தலைதூக்கும் இயற்கையை உமை கூற்றாகக் காட்டுகிறார் புலவர்.

             "முன்பொருகாலம் நீர் கோவணமும் புலித்தோல் மேலாடையும் மட்டுமே அணிந்துகொண்டு, ஆலமர நிழலிலேயே வாழ்ந்தும் தூங்கியும் பொழுதைக் கழித்துக்கொண்டு இருந்தீர் என்பது நினைவில்லையோ? என்னைத் திருமணம் செய்து கொண்ட பின்னரே நல்ல உடைகளும் இருப்பிடமும் பெற்றுள்ளீர் என்று தெரியாதோ? பிறகு இந்நாட்களில் நல்ல சலவை உடைகள் அணிந்து பூமாலைகள் எல்லாம் அணிந்து கொண்டு தினமும் மகிழ்ச்சியாக இருந்தால் இப்படியெல்லாமா உமக்கு எண்ணம் செல்லும்? சங்கம் வளர்த்த நீண்ட வீதிகளைக் கொண்ட மதுரை மாநகரத்தவரே!  பொலிவாகத் திகழும் இளம் மங்கையர்கள் இன்னும் சில பேரும் கூட உமக்கு வேண்டாமோ!" என்கிறாள்.

             அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் 
                    வேடமுமா யாலின் கீழே
           பன்னாளும் தூங்கினநீ ரென்னாலே 
                    மணக்கோலப் பதம்பெற் றீரே
           இந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் 
                    தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர்
           மின்னாரு மினிச்சிலபேர் வேண்டாவோ 
                    நீண்டசங்க வீதி யாரே. (7)

             'தூங்கின நீர்' என்பதற்கு அறிதுயில், யோகநித்திரை என்பது மற்றொரு பொருள். சங்கம்- வீணர்கள் கூட்டம் எனவும் ஒரு பொருள் கொள்ளலாம்! 

             அம்பிகையைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னே தூங்கித் தூங்கிக் காலத்தைக் கழித்தான். அம்பிகையைத் திருமணம் செய்து கொண்டபின் வந்த 'ஆக்கத்தால்' (செல்வச் செழிப்பால்) 'சோம்பர்'கள் கூட்டத்தில் கழிக்கின்றான். ஒருவனுக்கு முயற்சியின்றிச் செல்வம் வந்தால், ('அற்பனுக்குப் பவிஷு வந்தால்') அர்த்தராத்திரியிலும் குடைபிடிக்க கூடவே ஒரு வீணர் கூட்டம் வேண்டாமோ என ஏசுகின்றாள் மனையாளான உமை*.

             இதைக்கேட்டுக் குற்றாலநாதனுக்குக் கோபம் வரத்தான் செய்கிறது. அளவுக்கு மீறி அல்லவா அவரைக் குழல்மொழியாள் ஏளனம் செய்கிறாள்? 'ஏன்? உன் குடும்பக் கதை மறந்து போய் விட்டதோ?' என அவளிடம் திரும்பக் கேட்கிறார். "குழல் மொழியாளே! கயல்கண்ணாளே! உன் அண்ணன் இராமன் மரவுரியையும் மான்தோலையும் தரித்துக் கொண்டு அரிய தவவேடம் தாங்கி அந்த நாட்களில் காடுகளில் எல்லாம் அலைந்து திரிந்தான்; அதன் பிறகு அயோத்தி சென்று சீதையுடன் கூடியிருந்து உலகை ஆண்டான்; அவன்  இங்ஙனம் செய்ததை எல்லாம் கேள்விப்பட்டிருந்தும் இவ்வாறு நீ என்னிடம் கூறலாகுமோ?" என்கிறான் கணவன்.

             வீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண் 
                    டரியதவ வேடம் தாங்கி
           ஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் 
                    தானதுபோ யயோத்தி மேவி
           மாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட 
                    வுங்களண்ணன் மார்க்க மெல்லாம்
           காதுகேட் டிருந்துமிது சொன்னதென்ன 
                    குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. (8)

             பிறந்தவீட்டைப் பற்றி, அதுவும் அவளுடைய அன்பு அண்ணனைப் பற்றிக் குறைவாகக் கூறினால் கோபம் வருமா வராதா? கட்டாயமாகக் கோபம் கூடுகிறது குழல்மொழியாளுக்கு! 

             "தாருகாவனத்து ரிஷிபத்தினிப் பெண்களிடம் பிட்சாடனராகிச் சென்று பிச்சை கேட்டீர்! அவர்களும் உம்மழகில் மயங்கி, துகிலும் வளையும் நெகிழ வந்து பிச்சையிட்டார்கள்! நீர் பின்பு பரமசாது போலப் புலித்தோலை உடுத்திக் கொண்டீர்! (அபிசார வேள்வி செய்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலையும் உடையாக உடுத்துக் கொண்டீர்). பிறைச்சந்திரனான சோமனைத் தலையில் மேல் அணிந்து கொண்டீர் (சோமன் என்பது பஞ்சகச்சமாக ஆடவர் இடையில் அணியும் ஆடையையும் குறிக்கும்; இங்கு 'இடையில் அணிவதைத் தலையில் அணிந்தீரே' எனப் பரிகாசமாகக் கூறுவதாக அமைந்தது). பின்பு கிடைத்த பாம்பு ஒன்றைப் பிடித்துக் காதில் ஆபரணமாகப் பூண்டீர்! (அபிசார வேள்வியில் ரிஷிகள் உம்மீது ஏவிய பாம்பைப் பிடித்துக் காதில் அணிந்து கொண்டீர்!) போதாக்குறைக்குக் கழுத்தில் நஞ்சை (விஷத்தை) வைத்துக் கொண்டீர்! (பாற்கடல் கடைந்த போது பாம்பு கக்கிய ஆலகால நஞ்சை சிவபிரான் உண்ண முற்பட, அம்மை அவரது குரல்வளையைத் தடவி அதை அங்கேயே நிலைத்திருக்கச் செய்கிறாள்). பெருத்த பேய்களைத் துணையாகக் கொண்டீர்! இதனால் உம்மைப் போல ஒரு பித்தர் எந்த உலகிலும் உள்ளாரோ குற்றாலத்து உறையும் அண்ணலே!" என ஏளனமும் சினமுமாக மொழிகிறாள் குழல்வாய்மொழியாள். 

             இது மேலெழுந்த வாரியாகப் பார்க்கத்தான் ஏளனமாகக் கூறுவது போலக் காணப்படுகிறது. ஒவ்வொன்றும் சிவபிரானின் புகழை அல்லவோ பாடுகிறது? நிந்தாஸ்துதி பாடுவதில் குழல்வாய் மொழியாள் போலும் அன்பான காதலிகளும் வல்லமை பெற்றவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

             மாதர்பாற் பலியிரந்தீர் பலியிடப்பைந் 
                    தார்துகிலும் வளையும் கொண்டீர்
           சாதுவாய்த் தோலுடுப்பீ ரரையிலுள்ள 
                    சோமனையுந் தலைமேற் கொள்வீர்
           காதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே 
                    நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர்
           ஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ 
                    குற்றாலத் தண்ண லாரே (9)

             அன்புத் தம்பதிகளுக்குள் இன்னும் தொடர்ந்து வாக்குவாதங்கள் வலுக்கின்றன! உலகமே தன் காலடியில் பணிந்து கிடக்கும் நாயகனை அவனுடைய காதல் மனையாளே இகழ்ந்து பேசுகின்றாள்! அவனும் சளைக்காமல் ஏதேதோ சமாதானங்களைக் கூறியபடி இருக்கிறான்.

             வெளிப்படையாகக் காண்பது இச்செய்தி! ஆழமாக நோக்கினால், அவனை இகழ்வது போல, இரு பொருள் படப் புகழ்ந்து உயர்த்திப் பேசி, மகிழ்ந்து தன் மனத்தினுள் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள் இந்தக் குழல்வாய் மொழியாள் எனத்தான் தெரிகின்றது! அவளுடைய காதல் தலைவனும் சளைக்காமல் மறுமொழியாகத் தன் பங்கிற்குத் தானும் அவ்வண்ணமே உரைக்கின்றான்!

             ரசிக்கத் தகுந்த விதத்தில் புலவர் திரிகூட ராசப்பக் கவிராயர் புனைந்துள்ள கவிதை நயத்தைத் தொடர்ந்து பார்க்கலாமே!

             "பெருமை நிறைந்த இந்தத் திரிகூட மலையில் இருக்கும் பெண்ணமுதே! இதைக் கேட்டுக் கொள்!  உன் அண்ணனான கண்ணன் வரகினைத் தின்று பின்பு தன் வாயால் அதையெடுத்த கதை உனக்குத் தெரியாதோ? 'வரகு தின்று வாயால் எடுத்த கதை,' என்பது ஒரு சொல் வழக்கு. வீணான ஒரு செயலைச் செய்துவிட்டு பின்பு துன்பப்படுதலை விளக்குகிறது. உதாரணமாக, ராகி, சோளம், போன்ற பயிர் வகைகளை அவற்றின் கதிர்களிலிருந்து உதிர்த்துப் பச்சையாகவே உண்ணலாம். அவற்றில் பால் உள்ளதால் மென்று சுவைத்து விழுங்கலாம். வரகு மட்டும் வறண்ட தானியமாதலால், அவ்வாறு விழுங்கினால் தொண்டையை அடைத்துக் கொள்ளும். இந்தப் பழமொழியைக் கவிஞர் சமத்காரமாகக் கையாளுகின்றார் எனத் தெரிகின்றது*.

             'உந்தன் அண்ணனான கண்ணன், உனக்கு முன் பிறந்தவன், உலகை விழுங்கிப் பின் தன் வாயாலே அதை எடுத்து அன்னை யசோதைக்குக் காட்டிய பண்டைக் கதை,' எனப் பொருள் கொள்ள வேண்டும்! முதல்வர் +அ+ கு- (அந்த உலகு).

             'அவன் காலில் போடுகின்ற சிலம்பைக் கையில் போட்டான்; கையில் அணியும் வளையை வாய்மேல் இட்டான்'; இது பித்தன் செய்யும் செயலாகத் தெரிகிறது.  ஆனால் இதன் உட்பொருள் வேறு! 'பண்டொரு காலத்தில் அவன் மலையைக் கையில் ஏந்தினான் - கோவர்த்தனகிரியைக் கையில் குடையாக ஏந்தினான்! சிலம்பு எனில் மலை எனவும் ஒரு பொருள் உண்டு. வளை என்றால் கைவளை எனவும், சங்கு எனவும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். ஆகவே, கையிலணியும் வளையை - சங்கினை (பாஞ்சசன்னியம் என்னும் சங்கினை) வாய்மேல் வைத்து ஊதினான்*,' என்றார்.

             அடுத்து, "பெண்ணொருத்திக்காய் ஒருத்தி புடவை கிழித்தான் அவனே பித்தனாமே," என்கிறான் குற்றாலநாதன். இதுவும் ஒரு புராணக் கதையை உள்ளடக்கியது! இரணியாட்சன் எனும் அசுரன் பூமாதேவியைக் கவர்ந்து சென்று கடலின் அடியில் ஒளித்து வைத்திருந்தான். திருமால் வராக அவதாரம் எடுத்துக் அக்கடலினுள் சென்று அவளை (பூமாதேவியை- உலகை) மீட்டு வந்தான். கடலைப் புலவர் நிலமடந்தையின் ஆடையாகக் கூறினார். பூமாதேவிக்காக நிலமடந்தையின் புடவையைக் கிழித்தான் என்பது கவிதை சொல்லும் நயம். ஆனால் இங்கு அது 'புதுப்புடவை வாங்கித்தர வக்கில்லாதவன் வேறொருத்தியின் புடவையைக் கிழித்துத் தந்தான்' எனக் குற்றாலநாதன் கூறுவது பழிப்புரையாகும்*.

             அண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே 
                    கேட்டியுங்க ளண்ண னான
           கண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ 
                    டுத்தபண்டைக் கதைகே ளாயோ
           மண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் 
                    கைவளையை வாய்மே லிட்டான்
           பெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் 
                    தானவனே பித்த னாமே (10)

             இப்போது தான் வாக்குவாதம் இக்காலத்து மொழியில் 'சூடு' பிடிக்கின்றது! குழல்வாய்மொழியாள் தன் கணவரையே 'நீர் நன்றி மறந்தவர்' என ஏசுகின்றாள்!
                                                                                                                         (ஊடல் தொடரும்!!)
                                     ------------------------------
             *இக்கட்டுரையில் 'திருக்குற்றால ஊடல்' சிற்றிலக்கியத்தில் பொதிந்துள்ள பல தொன்மங்களை எனக்கு விளக்கியருளியவர் காலஞ்சென்ற முனைவர் உயர்திரு கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்களாவார் என நன்றியுடனும் பணிவுடனும் நினைவு கூர்கிறேன். 

2 Replies to “தெய்வங்கள் ஊடுவரா?!”

  1. தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63% அதிகரிதுள்ளதாம். தமிழகத்திலிருந்து செலுத்தப்படும் மொத்த வரியில் 59%வரி பணத்தை ஒன்றிய அரசு தன் செலவுகளுக்கு எடுத்து கொள்கிறதாம்.
    சரி இவர் வாதப்படியே சில விஷயங்களை பார்ப்போம்.

    மத்திய அரசு யார்? மாநில அரசு யார்? சுதந்திரம் பெற்றதும் நிர்வாக வசதியின் பொருட்டு பல மாநிலங்களாலாக பிரித்து மாநிலம் தோறும் முதல்வர்கள், கவர்னர்கள் மூலம் மத்திய அரசு நிர்வகித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு போன்ற அதி முக்கிய பணிகளை மட்டும் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்து கொண்டு நிர்வகித்து வருகிறது. மாநில அரசின் வசம் மக்கள் நிர்வாகம் குறித்த பொறுப்புகள் மட்டுமே. மாநில அரசுக்கு தனியாக மிக பெரிய பொறுப்புகள் எதுவுமே கிடையாது. அதாவது ஒரு வீட்டில் தகப்பனை தலைவனாக கொண்ட பிள்ளைகள் போன்றது.

    மத்திய அரசு இன்றி மாநில அரசு ஒரு போதும் தன்னிச்சையாக இயங்கிட முடியாது. நாட்டின் பாதுகாப்பு,விண்வெளி ஆராய்ச்சி, வெளியுறவு துறை, கனிம வளங்கள் என ஏராளம். இவைதான் ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பு. இவற்றில் கவனம் செலுத்தாவிடில் ஒரு நாடு எப்படி நாடாக உலக நாடுகள் மத்தியில் நிலைத்திட முடியும்?

    இவற்றை கவனித்திட தானே முதலில் நிதி ஒதுக்கீடு செய்ய பட வேண்டும்.அதற்கு தேவையான நிதி மக்களிடம் இருந்துதானே பெற்றிட முடியும். மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுத்து அதன் மூலம் மக்களிடம் இருந்து வரிகள் மூலம் திரும்ப பெற்று மீண்டும் மக்களுக்கே திரும்ப செய்யும் சுழற்சி தான் இது. இதில் மாநில அரசு நிர்வாக வசதிக்கான ஒரு இடைநிலை அமைப்பு அவ்வளவுதான்.

    இப்போது விஷயத்துக்கு வருவோம்.மத்திய அரசு அயல்நாடுகளில் இருந்து கொள்முதல் செய்தும் சில சொந்த கிணறுகள் மூலமும் பெட்ரோலியத்தை அரசு நிறுவனங்கள் மூலம் சுத்திகரித்து மாநில அரசுக்கு ஒரு விலையை நிர்ணயித்து வழங்குகின்றது. மாநில அரசு தனது நிறைவாக நிதி தேவையின் பொருட்டு கூடுதல் வரி விதித்து விற்பனை செய்து, விதிக்கப்பட்ட வரியில் 41% த்தை திரும்ப பெற்று கொள்கிறது.

    இதில் கவனிக்க வேண்டியது, பெட்ரோல் சுத்திகரிப்பு செலவு அத்தனையும் மத்திய அரசு செய்துவிட்டு தான் 59%வரியை பெறுகிறது. .மாநில அரசு இடைத்தரகர் வேலை மட்டும் தான் ஆனால் 41% வரி எந்த செலவும் இன்றி பெற்று கொள்கிறது.

    இப்போது மத்திய அரசு மாநில அரசு இரண்டின் பொறுப்புகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள், இருவரில் யாருக்கு அதிகம் நிதி தேவை,?

    இதுவரை மத்திய மாநில அரசுகள் செய்யும் நல திட்டங்களை யோசித்து பாருங்கள். மத்திய அரசு ஒருபோதும் இலவசம் என்ற பெயரில் ஊதாரித்தன செலவுகள் செய்வதில்லை. ஆனால் இங்கோ எல்லாவற்றிலும் இலவசம். நிதியில் பெரும் பகுதி இலவசங்களுக்கு தான் வாரியிறைக்க படுகிறது.

    ஊதாரித்தனம் அத்தனையும் செய்து விட்டு கையில் காசு இல்லை என்று தறுதலை பிள்ளை தகப்பனை தூற்றுவது எந்த விதத்தில் நியாயம்.இந்த லட்சணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட போகிறாராம்.

    இவர் வெள்ளையறிக்கை என்று கூறும் போது ஸ்டாலின் கூறிய தேர்தல் அறிவிப்புகளில் ஒன்றை கூட நிறைவேற்ற முடியாது.அதை மக்களிடம் ஒத்து கொள்ள தான் இந்த ஏற்பாடா?

    முதல்வர் இப்போதுதான் பிரதமரை சந்தித்து ஒரு சுமுக உறவுக்கு அடித்தளமிட்டு வந்திருக்கும் வேளையில் இது போன்று பேசி மத்திய அரசுடன் வீணாக மோதல் போக்கை கையாள்வதால் நல திட்டங்களில் முன்னுரிமை போன்றவற்றை இழக்கத்தான் நேரிடும். தமிழக நலனுக்கு தீங்கு விளைவிக்கும் அரசு என்று மக்கள் மத்தியிலே பேச்சு தானாகவே வரும்..

    இது போன்று பிரிவினைவாதம் பேசும் நிதி அமைச்சரை அருகில் வைத்து கொள்வது முதலமைச்சர் தனக்கு குழி பறிக்க கூடவே கூலி கொடுத்து ஆள் வைத்து கொள்வது போன்றது.

    இனியும் இவரின் வாயை அடக்காவிட்டால் முதல்வர் பெரும் சிக்கலில் சிக்க போவது உறுதி. ஏற்கனவே தடுப்பூசி விவகாரத்தில் நாமே கொள்முதல் செய்வோம்,உற்பத்தி செய்வோம் என்று முதல்வரை இழுத்து நாறடித்து விட்டார். இப்படியே போனால் பெட்ரோலையும் நேரடியாக அயல்நாட்டிலிருந்து கொள்முதல் செய்வோம்,அல்லது உற்பத்தி செய்வோம் என்று கிளம்பினாலும் ஆச்சர்யம் இல்லை

  2. அருமையான பதிவு. பல அரிய தகவல்களைத் தந்த மீனாட்சிக்கு எனது பாராட்டுக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *