இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்

புன்னைமரம் பூத்துப் புதுநிழல் வீசும் வெண்மணற்பரப்பில் நிலவொளி வீசும் இரவு. நாங்கள் மணலில் மாடம் கட்டி, சங்குச் சிப்பிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, குருக்கத்திப் பூவாலான சின்னப் பொன் சுளகில் தேனெடுத்து உலை வைத்தோம். உலை பொங்கி வர, முருங்கை இலையைக் கவிழ்த்து மூடிபோட்டு, ஆம்பல்பூத் தீயைக் கவிழ்ந்து படுத்து ஊதி ஊதி முகம் வேர்த்துக் கிடக்கிறோம். நீ குறும்பு செய்வது நியாயமா? காலைப் பிடித்துக் கும்பிடுகிறோம். வேலில் மட்டும் சினத்தை ஏந்தி இலஞ்சியில் நிற்கும் எம் தேவா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே”.

இது திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்ற 19ம் நூற்றாண்டுப் பிரபந்தத்தில் வரும் ஒரு அழகிய பாடலின் பொருள்.

இந்த நூலின் பாட்டுடைத்தலைவன் கோயில் கொண்டுள்ள இலஞ்சி செங்கோட்டை தென்காசி மார்க்கத்தில் குற்றாலத்திற்கு அருகிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சிற்றூர். இந்த மார்க்கத்தில் சில முறைகள் சென்றும் முருகனைக் காணும் பேறு இதுவரை கிட்டியதில்லை. அடுத்தமுறை தவறவிடக் கூடாது. இந்த நூலின் ஆசிரியர் கவிராச பண்டாரத்தையா அப்பகுதியில் மரியாதைக்குரிய பெரும் தமிழ்ப்புலவராகவும் சமய குருவாகவும் இருந்திருக்கிறார். நூலின் பல பாடல்களில் அவரது கவிமனம் வெளிப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பல தமிழ்க் கவிராயர்கள் பல சிற்றிலக்கியங்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள் என்பது உ.வே.சாவின் ‘என் சரித்திர’த்திலிருந்து தெரிய வருகிறது. அவற்றில் கணிசமானவை தட்டையான செய்யுட்களாலும் சொல்விளையாட்டுக்களாலும் ஆனவை என்றாலும் அங்கங்கு இத்தகைய மாணிக்கங்களும் தட்டுப் படவே செய்கின்றன.

மருக்காற் புன்னைப் புதுநிழல் வெண்-
மணற்கால் மருங்கு நிலவு எறிப்ப,
மாடம் சமைத்துக் குடி புகுந்து
மணிக்கால் இப்பி அடுப்பேற்றிக்
குருக்கால் செம்பொற் சிறுசுளகால்
கொழிக்குந் தளந்தேன் உலைப்பெய்து
குடவால் வளை வெண் குழிசி பொங்கக்
குழற்கால் ஆம்பல் நெருப்பமைத்து
முருக்கால் வெல்ல முடியாவாய்
முகிழ்த்துக் கவிழ்த்துக் கிடந்தூதி
முகம் வேர்த்தனம்; நீ குறும்பிழைத்தால்
முற்றும் தரமோ முக்காலும்
திருக்கால் பிடித்துக் கும்பிட்டோம்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலாய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.

(மருக்கு – மலர்; மணற்கால் – மணல்திட்டில்; மருங்கு – அருகே; எறிப்ப – ஒளிவீச; மணிக்கால் இப்பி – மணிபோன்று கால்களை உடைய சிப்பி; குருக்கால் – குருக்கத்திப் பூவாலான; சுளகால் – முறத்தால் : சுளகு என்பது முறத்திற்கான நெல்லை வட்டாரச் சொல்; தளந்தேன் – பரவிய தேன்; குடவால் வளை – வளைந்த சங்கு; குழிசி – குழிந்த பாத்திரம்; முருக்கால் – முருங்க இலையால்; குழற்கால் ஆம்பல் – துளைகொண்ட தண்டையுடைய ஆம்பல்: இது சிவப்புநிற மலர்; முகிழ்த்து – மூடி; வேர்த்தனம் – வேர்த்தோம்; தரமோ – தகுமோ; சிறியேம் – சிறியவர்கள்; சிற்றில் – சிறிய வீடு; சிதையேலே – சிதைக்காதே).

நாங்கள் கட்டிய வீட்டைப் பார்க்க அம்மா வருவாள். உயிர்த்தோழிகள் வருவார்கள், பெரியவர்கள் வருவார்கள். அம்மாவைக் கும்பிட்டு, தோழியரைத் தழுவி வரவேற்போம். அவர்கள் கொண்டுவரும் சீர்வரிசை அனைத்தையும் பெறுவோம். எங்கள் வீட்டின் செல்வத்தையெல்லாம் அவர்களுக்குக் காட்டுவோம். அவர்களுக்கு விருந்தளித்து நாங்களும் உண்டு இளைப்பாறுவது வரை, எங்கள் மணல்வீட்டைக் குலைத்து விடாதே. உன் செம்பொற்பாதங்களைத் தலைமேல் வைத்துக் கெஞ்சுகிறோம். வேலில் மட்டும் சினத்தை ஏந்தி இலஞ்சியில் நிற்கும் எம் தேவா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே.

அம்பொற் சிறுவீட்டணி காண
அன்னை வருவாள்; பின்னையும் என்
ஆவி அனைய தோழியருண்(டு);
அவரும் வருவார்; அன்னையரைக்
கும்பிட்டிறைஞ்சித் தோழியரைக்
கூடித்தழுவிக் கொண்டு, அன்னை
கொணர்ந்த வரிசை அத்தனையும்
கைக்கொண்டு, எமது குலமனையின்
சம்பத்து அவர்க்குக் காட்டி, உள்ளம்
தழைக்கும் படிக்கு விருந்தளித்துத்
தமியேங்களும் உண்டு இளைப்பாறும்
தனையும், சதியேல், சதியேல்; உன்
செம்பொன் திருத்தாள் சென்னி வைத்தேம்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேவே இலஞ்சிச் சினவேலாய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.

(சம்பத்து – செல்வம்; தமியேங்களும் – நாங்களும்; சதியேல் – குலைக்காதே; சென்னி – தலை).

இந்தப் பாடல்களின் தான் என்னவொரு நெஞ்சையள்ளும் தமிழ்மணம். அக்காலச் சிறுமிகளின் விளையாட்டு எப்படி இயற்கையோடு இயைந்திருந்தது, எப்படி வாழ்க்கையின் இன்பங்களையும் நற்பண்புகளையும் அறநெறிகளையும் இதன்மூலம் அச்சிறுமிகள் தங்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள் என்பதையெல்லாம் இதில் பார்க்கலாம். இத்தகைய வாழ்க்கையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்பதையும் எண்ணிப் பெருமூச்சு விடலாம்.

அதையும் தாண்டி, இப்பாடல்களில் வரும் மணல்வீடு, சிறுவீடு வெறும் குழந்தை விளையாட்டு மட்டும் தானா என்றும் தத்வார்த்தமாக, ஆன்மீகமாக யோசிக்க இடமிருக்கிறது. பல பிறவிகள் மாறிமாறிப் பிறந்து மானிப் பிறவியை அடைந்து அதில் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு மானுடர் வாழும் வாழ்க்கையும் அப்படிப்பட்டது தான். அது ஆசைகளும் கோபங்களும் விருப்பங்களும் கனவுகளும் கொண்டு நாம் சமைக்கும் மணல் வீடு அன்றி வேறு என்ன? இப்படி உயிர்கள் கட்டிக்கொண்டிருக்கும் இந்த மணல்வீடுகளை கலைத்துப் போட்டு, நிலையான வீட்டை நோக்கி அவற்றைச் செலுத்துவது தான் இறைவனின் திருவிளையாடல், அவனது அலகிலா விளையாட்டு. இந்த உட்கருத்தும் இப்பாடல்களின் சொல்லப் படாத பொருளாக எஞ்சி நிற்கிறது.

One Reply to “இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்”

  1. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *