கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்

காலத்தால் அழியாத வெகு சில கலைஞர்கள் தெய்வத்தால் அனுப்பபடுவார்கள், முதலில் தாங்கள் யாரென தெரியாமல் தடுமாறுவார்கள், உலகின் நகைப்புக்கும் பழிப்புக்கும் ஆளாவார்கள், தடுமாறுவார்கள்

எப்பொழுது தெய்வத்திடம் சரணடைவார்களோ அப்பொழுது அவர்களின் அறிவுகண் திறக்கபடும், காலத்தால் அழியா கலைகளை கொடுப்பார்கள்

வடக்கே அப்படி காளிதேவியால் உருவானான் காளிதாசன்

தெற்கே சரஸ்வதியினை வணங்கி உருவானான் கம்பன். அபிராமி அன்னையினை வணங்கி பெரும் உயரம் பெற்றான் அபிராமிபட்டன், அவன் வழியே அழியா புகழ்பெற்றன் ஒட்ட கூத்தன்

காளி என வணங்கி உயரம் பெற்றான் பாரதி

அவ்வரிசையில் செட்டிநாட்டின் சிறுகூடற்பட்டியில் மலையரசி அம்மன் ஆலயத்தில் ஒருகாலத்தில் அழுது கொண்டிருந்த முத்தையா பின்னாளில் கண்ணதாசனாக தமிழ் இலக்கிய உலகை பாடல் உலகை ஆண்டுகொண்டிருந்தான்

தெய்வாம்சம் பெற்ற கவிஞர்களுக்கு தனி தன்மை வாய்க்கும்

அவர்களிடம் தமிழ் பொங்கும், அருவியாய் கொட்டும், வர்ணணைகளும் உவமையும் வார்த்தைகளும் காவேரி வெள்ளமாய் கொட்டும், அதில் தத்துவமும் ஆன்மீகமும் வாழ்வியல் விஷயமும் இன்னும் ஏகபட்ட உணர்ச்சிகளும் அழகு தமிழில் குற்றால அருவியாய் வழிந்தோடும்

எதையுமே அழகாகவும் உருக்கமாகவும் பொருத்தமாகவும் அவர்களால் பாட முடியும்

அப்படி வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்.

முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் பொருந்தும். மூன்று தமிழும் அவரிட‌ம் கொஞ்சியது. ஆம் அவன் வாழ்ந்த காலத்தில் அவனே முத்தமிழின் மொத்த அறிஞன்.

பாடல், எழுத்து, பேச்சு என எல்லாவற்றிலும் அவரின் தமிழ் அப்படி இருந்தது, அதிலும் உண்மை மட்டும் பேசிய உத்தம கவிஞன் அவன்.

கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, நட்பு, தாய்மை , நன்றி, சோகம், பிரிவு, நேசம், மோசம், நம்பிக்கை என எல்லாவகை உணர்வுகளுக்கும் அற்புதமாக வரிகள் கொடுத்த அபூர்வ கவிஞன்.

அவ்வளவு எளிமையாக சந்தத்தோடு ஒட்டி, ராகத்தோடு இணைந்து உணர்ச்சிகளை மொழியாக கொட்டும் கலை அவருக்கு மிக மிக எளிதாக வந்தது. 

எல்லா வகையிலும், எல்லா நிலையிலும், எச்சூழலுக்கும் அவரால் மிக மிக பொருத்தமான வரிகளை எழுத முடியும்.

குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர்.

இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும்.

அரசியலநிலையினை  பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.

ஒட்டுமொத்த இந்தியபிரச்சினைகளையும் ஒரே பாடலில் விளக்கிய பெருமை அவருக்கு உண்டு.

கோகுலாஷ்டமி என்றால் அவரின் கிருஷ்ணகானம் பாடல்கள் நினைவில் வராமல் போகாது

இந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.

பத்திரிகை,மோசடி அரசியல், அவமானம்,துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும் அவரே தேடிகொண்ட போதை பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்த திறமை எவ்வளவு இருந்திருக்கும்.

எல்லாம் வெறுத்து, ஆன்மீகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது பாவம் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை, அந்த சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்கு தெரிந்தது.

மதுப்பழக்கமும்,போதை பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.

அவரே சொன்னது போல “ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழகூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்”

வனவாசமும் மன்வாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டும் வரலாற்று கல்வெட்டுக்கள்

தனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை,அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே.

பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.

தமிழ்சாதியில் “நல்ல தமிழ்” கவிஞர்களுக்கு மட்டும் ஆயுள் குறைவு,

பாரதி,பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில் கண்ணதாசனும் இடம்பிடித்ததுதான் கொடுமை.

கவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமையவேண்டும், விஷயத்தை மறைமுகமாக புரியவைக்கவேண்டும், மொழியை கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம், அதாவது கேட்பவர்கள் புரிந்துகொண்டு மனதால் ஒன்றி, கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்லவேண்டும்.

வெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம், கண்ணதாசனும் அவர்களில் ஒருவர்.

இன்று தமிழக கவிதை உலகம் உலகிற்கே தெரியும் முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு என என்னவெல்லாமோ சொல்லிகொண்டு, நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இடையநவீனம் இன்னும் என்ன இம்சைகள் எல்லாமோ கவிதை என சொல்லபடுகின்றது.

ஆக சிறந்த காளமேகமே இருபொருள்தான் சொலமுடிந்த கவிதைகளை சொன்னான், இவர்கள் செய்யும் இம்சை தாளமுடியவில்லை

எப்படியும் விரைவில் மானமிக்க தமிழன், தமிழை நேசிக்கும் தமிழன், முதல்வராகும் பொழுது முதல் காரியம் இந்த கவிஞர்கள் இனி கவிதை எழுதமாட்டார்கள் என உறுதிமொழிவாங்குவார் என்ற ஆசை இருக்கின்றது,

டாஸ்மாக் கூட இரண்டாம் பட்சம்தான். தமிழின் அழகை அழிப்பதில் முதல்காரணம் இந்தவகை கவிஞர்கள்.

தமிழக சாதிசங்கங்களின் எண்ணிக்கையை விட இவர்கள் தமிழகத்தில் அதிகம்.

இப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார், இந்த கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் உலகில் பிறந்திருந்தால் இன்று உலக கவிஞனாக அவனை கொண்டாடியிருப்பார்கள், பாவம் தமிழனாய் பிறந்துவிட்டான்.

“இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌

இங்குவந்து ஏன்பிறந்தாய் செல்வமகனே”

என்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.

தமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லா பிரச்சினை சூழலுக்கு மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.

தமிழகத்தின் மிக சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடமுண்டு, ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதை கல்வெட்டு அவர்.

அவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள், அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை

“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்” எந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ்தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனை கொண்டாடுவான்.

எப்படிபட்ட கவிஞன் அவர்? இனி அப்படி ஒரு கவிதை மேகம் இனி தமிழில் சாத்தியமில்லை

“ஆனந்தமானது அற்புதமானது” என்பதெல்லாம் மானிடன் பாடகூடிய பாடல் அல்ல, சித்தர்களால் மட்டுமே சாத்தியம்.

சாகாவரம் பெற்ற கவிஞன் அவர். எல்லாவற்றிற்கும் மேல் அவரின் நாட்டுபற்று வாழ்த்துகுரியது.

திராவிடத்தின் சில பொய் முகங்களை அவர் உரித்துகாட்டிய அளவு இன்னொரு நாட்டுபற்றாளன் செய்யமுடியாது

திராவிட அழிச்சாட்டியம் அரசியல் உள்நோக்கம் கொண்டது, மாயமானை பிடிக்க ஓடுவது என முதலில் எச்சரித்தது அவனே..

கிட்டதட்ட 30 ஆண்டுகள் அற்புத பாடல்களை கொடுத்து செங்கோல் ஆட்சி செலுத்திய கவிஞர் அவர். திரையில் கவிஞர் பெயரினை கண்டவுடன் தமிழகம் கைதட்டிய காலமும் இருந்தது

எமனுக்கும் தமிழ் தெரிந்திருக்கும், ஆனால் விதிக்கு தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் இவ்வளவு விரைவில் அழகிய தமிழ்கவிதையை கொண்டுசென்றிருக்காது.

அவரின் பிறந்த‌ நாளில் அவரை நினைவுகூர்வதில் தமிழ் அறிந்தவர்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சிகொள்வதில் வியப்பு ஏதுமில்லை.

எம்மை பொறுத்தவரை ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், அந்த சிறுகூடல்பட்டி செட்டி ஒரு தெய்வீக கவிஞன், அந்த கிராமத்தில் இருந்து சிகாகோ வரை ஒரு தேவதை அவரை நடத்தியது

வாழ்வின் ஒவ்வொரு நிலைபாட்டையும் அவரை அனுபவிக்க வைத்தது. சூது, வஞ்சகம்,மோசடி, ஏமாற்றம் , அவமானம் என எல்லாவற்றையும் அவர் தெரிந்து புரிந்து கொள்ள வாய்ப்புகளை வழங்கியது

அதில்தான் அவர் திமுகவில் இருக்க வேண்டிய காலமும் வந்தது. அம்மனிதன் அனுபவம் பெற்றபின் அவனை அந்த தெய்வம் ஆன்மீக பாதைக்கு இழுத்து வந்தது

அவன் கவிஞனானதும், அரசியல்வாதியாக அனுபவம் பெற்றதும், எல்லா வகை நன்மை தீமை ரோகம் போகம் என எல்லாவற்றிலும் விழுந்து எழுந்ததும் அனுபவம் பெறவே

அந்த அனுபவத்தை கொட்டித்தான் அவன் “அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினான்”, இந்துமதத்தின் பொக்கிஷம் அது. தெய்வம் அவன்மூலம் கொடுத்த வரம் அது.

எம்மை பொறுத்தவரை பாரதிக்கும் அவனுக்கும் பல ஒற்றுமைகளை காட்டமுடியும். ஆனால் பாரதி பெரும் வட்டம் ஞான தீ. 

கண்ணதாசன் ஆடி களைத்து ஆன்மீகத்தில் இளைப்பாறிய பத்ருஹரி சித்தர் சாயல்

இருவருமே கண்ணன் பக்தர்கள்

இருவருமே தேசியவாதிகள், பாரதிக்கு பிரிட்டானியர் எதிரி. கண்ணதாசனுக்கு திமுகவினர் எதிரி

கடைசி காலங்கள் இருவருக்கும் ஒன்றாய் இருந்தன, இருவரும் தங்கள் கடைசி காலத்தில் உடல் நலத்துக்காய் ஏங்கினர், பாரதி நலம்பெற்று இன்னும் எழுதமுடியும் என நம்பினான், கண்ணதாசனும் ஆழ்வார்கள் அடியார்கள் வரலாறை எல்லாம் எழுதுவேன் என சொல்லிகொண்டிருந்தார்

இன்னும் ஒரு ஒற்றுமை உண்டு, பொதுவாக கவிஞர்கள் என்பவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள், சிரிப்பவனுடன் சிரிப்பார்கள், அழுபவனோடு அழுவார்கள். 

கொண்டாடும் இடத்தில் இருக்கும் குழந்தை மனம் அவர்களுடையது, ஆனால் எங்கிருந்தாலும் அங்கீகாரத்துக்கும் அரவணைப்புக்கும் ஏங்குவார்கள்.

உண்மையே பேசும் அவர்கள் மனம் அப்படி ஏங்கும், அழும், ஒரு அரவணைப்பை தேடி ஓடும்

இதை பக்குவமாக கையாளும் வஞ்சக கூட்டம் உண்டு, அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி வளைக்கபார்ப்பார்கள்,  அப்படித்தான் பாரதிக்கும் கடைசி காலத்தில் சோகங்கள் வந்தன, அவன் அகப்படவில்லை, இதனால் அவன் அஞ்சலிக்கு கூட யாரும் வரவில்லை

பாரதி தன் தேசத்து விடுதலையினை பார்க்கமாலே மறைந்தான், கண்ணதாசன் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்து எழுச்சியினை காணாமலே மறைந்தான், இருவருமே அவ்வகையில் பரிதாபத்துகுரியவர்கள்

ஆனால் தேசபற்றுக்கும் இந்துமத சிறப்பான வரிகளுக்கும் இவர்கள் ஆதார சக்திகள், எக்காலமும் நினைவில் நிற்கும் தூண்கள்

ஆனால் கண்ணதாசனை கடைசியில் கிறிஸ்தவ மிஷனரிகள் வளைத்தன. தன்னை யாரும் கண்டுகொள்ளா நிலையில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கா நிலையில்  மன வேதனையில் இருந்த அவரை அந்த சக்திகள் வளைத்தன‌

(இது திமுக, காங்கிரஸ் , தமிழக அரசின் புலவர் என பல இடங்களில் இருந்தபொழுதும் அவருக்கு கிடைக்கவில்லை

இந்துக்கள் அவரை கொண்டாடினார்கள், ஆனால் இன்றுள்ள இந்து எழுச்சி அன்று இல்லை. அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை)

“இயேசு காவியம்” தயாரானது, அடுத்து 100 கிறிஸ்தவ பாடல்கள் வர இருந்தன, அவருக்குள் கிறிஸ்துவ மிஷநரி ஊசி செலுத்தபட்டு கொண்டே இருந்தது, கண்ணதாசனின் போக்கு மாறிற்று….

இத்தோடு அவரின் விதி சிகாகோவில் முடிந்தது, இல்லாவிடில் அவரின் கடைசி வாழ்க்கை மாறியிருக்க கூடும்.

ஆம் எத்தனையோ விபத்து, ஏமாற்றம், கடன், குடி, பெத்தடின் என அவரை மீட்டு வந்த அந்த வழிகாட்டும் தெய்வம், அவர் “அர்த்தமுள்ள இந்துமதம்” எழுதும் பொழுதும் கிருஷ்ணகானம் எழுதும் பொழுதும் துணையிருந்த தெய்வம், அவரின் போக்கு மாறிய பின் கைவிட்டது

பிறந்த கடனை அத்தோடு முடிக்க அவருக்கு விதி வழிசெய்தது, இயேசு காவியம் புத்தகத்தை பிரமாண்டமாக வெளியிடுவேன் என சொல்லி அமெரிக்கா சென்ற கண்ணதாசனின் உடல் மட்டும் திரும்பியது

ஆம் சித்தர்கோலத்துக்கு வந்துவிட்ட அவர், மறுபடி தடுமாறி சில வலையில் வீழ்ந்தார். கண்ணனை தவிர வேறு தெய்வத்தை பாடுவது எந்த பெரும் சக்திக்கோ பிடிக்கவில்லை என்பது அவர் வாழ்வில் உண்மையாயிற்று

ராமானுஜரை தொடாவிட்டால் கருணாநிதி சிலகாலம் இருந்திருப்பார், அப்பக்கம் செல்லாவிட்டால் கண்ணதாசனும் 53 வயதில் தவறியிருக்கமாட்டார்.

ஒருவனுக்கு விதி எவ்வழி பாதை போடுகின்றதோ அவ்வழியில் மட்டும் செல்லல் வேண்டும், தெய்வத்து பணியினை ஒழுங்காக செய்ய தேர்ந்தெடுக்கபட்டவன் அதை விடுத்து தன் சுயவிருப்பில் சென்றால் என்னாகும் என்பதை கண்ணதாசன் வாழ்வு காட்டிற்று

கண்ணதாசனின் பாடல்கள் ஒரு சுகம், அவரின் எழுத்து இன்னொரு சுகம். பின்னாளைய பாலகுமாரனின் எழுத்து வடிவில் அந்த சாயலை நீங்கள் காணலாம், கட்டிபோடும் எழுத்து அது.

அந்த மகா கவிஞன் தமிழரின் முத்து, தமிழின் அழியா சொத்து.

தன் அழியா வரிகள் மூலம் தமிழுக்கும் இந்துமதத்துக்கும் பெரும் தொண்டு செய்த அந்த தமிழ் ஞானிக்கு, காலம் கொடுத்த அற்புத கவிஞனுக்கு, சரஸ்வதியோ கண்ணனோ காளியோ ஞானம் ஊட்டி வளர்த்து கைபிடித்து வந்த ஞான கவிஞனுக்கு அஞ்சலிகள்

அஞ்சலி செலுத்தும் நேரம் பாரதியும் நினைவுக்கு வருகின்றார், தன் கடைசி காலங்களில் இருவரின் வரிகளையும் கவனியுங்கள்

“நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னை படைத்துவிட்டாய்” என அழுகின்றான் பாரதி

“விதியும் மதியும் வேறம்மா, 

 விளக்கம் நான் தான் பாரம்மா. 

 மயக்கம் எனது தாயகம்

 மவுனம் எனது தாய்மொழி

 கலக்கம் எனது காவியம்

 நான் கண்ணீர் வரைந்த ஓவியம்” என தனிமையில் அழுது கொண்டான் கண்ணதாசன்.

எழுத்தும், பாடலும் தெய்வத்தின் வரம், அதை கொடுக்கும் தெய்வம் பலத்த சோதனையும் கொடுக்கும், அவர்களால் உலகோடு ஒட்டமுடியாது, வாழமுடியாது, தெய்வம் கோவிலில் தனித்திருப்பது போல தனித்திருந்தே அழுது புலம்பி முடியும் அவர்கள் வாழ்வு

அதுவும் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டால் அதைபோன்றதொரு துன்பம் வேறேதுமில்லை, அதை பாரதி, ஜெயகாந்தன் என பலர் அனுபவித்தனர், கண்ணதாசன் எனும் மாபெரும் ஞான தமிழ் அவதாரத்துக்கும் அது நடந்தது.

இன்றிருக்கும் தேச எழுச்சியும் இந்து எழுச்சியும் கண்ணதாசன் காலத்தில் இருந்திருந்தால் அவன் மிகபெரும் பலமாக நாட்டுக்கு இருந்திருப்பான், காங்கிரஸ் அவனை கடலில் கரைத்த பெருங்காயமாக ஆக்கிற்று

ஆனாலும் அவன் பாடலும் எழுத்தும் எக்காலமும் தேசத்துக்கும் இந்துமதத்துக்கும் தமிழுக்கும் சேவை ஆற்றிகொண்டே இருக்கும்.

உண்மையில் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது அவர் தன் இயல்பினை மறைக்க சொன்ன பாடல், திசை திருப்ப சொன்ன பாடல்

கவிஞரின் மகா சிறந்த பாடல்கள் எல்லா படங்களிலும் உண்டென்றாலும் ஞானத்தில் ஓங்கி, தன் இயல்பில் பொருந்தி தன் நிலையில் , அதாவது தனக்கான பாத்திரமாக உணர்ந்து அவர் எழுதிய பாடல்கள் அவருக்கானவை

“மகாகவி காளிதாஸ்” படம் அதில் முக்கியமானது, மகாகவி காளிதாசன் தமிழில் தன்னை பற்றி பாடினால் அப்படித்தான் பாடியிருப்பானோ, அதை அந்த கம்பீர தொணியோடும், அடக்கத்தோடும் பாடினார் கண்ணதாசன், ஆம் தென்னகத்து காளிதாசனாக தன்னை பொருத்தி பாடினார்

“குழந்தையின் கோடுகள் ஓவியமாம்

 இந்த குருடன் வரைவது காவியமாம்

 நினைந்தை உரைத்தேன் புலவர்களே

 குற்றம் நினைந்திருந்தாலும் அருளுங்களேன்

 கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்

 சில காவிய பொருட்களை பாட வைத்தாள்

 அலை எனும் எண்ணங்கள் ஓடவிட்டாள் 

 அதை ஆயிரம் உவமையில் பாடவிட்டாள்”

அவனின் உண்மையான வாக்குமூலம், அடிமனதில் இருந்து வந்த வாக்குமூலம் அவன் மனதை மீறி மகாகவி காளிதாஸ் பட பாடல்களிலேதான் வந்தது.

அவன் தென்னக காளிதாசன் என்பதில் மாற்றுகருத்தே இல்லை , ஒரு தேவதையின் வரம் அவன்.

பட்டணத்து செட்டி வழியில் வந்த கெட்டிக்கார சித்தனவன், செந்தமிழ் பித்தனவன். 

அந்த மகா கவிஞனுக்கு தென்னாட்டு காளிதாசனுக்கு நாம் கண்ட கம்பனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…

2 Replies to “கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்”

  1. இந்தியா ஒரே நாடு

    இந்தியா
    ஒரே நாடு அல்ல
    பல நாடுகளின்
    கூட்டமைப்பு ..என்று

    ஒரு சில பிரிவினைவாதிகளின்
    குரல்
    யாரும்
    கண்டு கொள்ளாத போதும்
    ஒலித்துக் கொண்டே இருக்கிறது !

    ஒற்றை நாய்
    குரைக்கும் போதே
    விரட்டா விட்டால்
    ஊரு நாய்களெல்லாம்
    ஒன்று சேர்ந்து
    ஊளையிடும்
    அபாயம் நேரலாம் !

    எனவே
    தெளிவு படுத்தும் கடமை
    தேச பக்தனின்
    தோள்களில் !

    மலையையும்
    கடலையும்
    காரணமாக்கிக்
    காலம் படைத்த
    தீப கற்பம் இது !

    இந்த கற்பத்தில்தான்
    உலகின் ஆன்மீகக் குழந்தை
    அவதரித்தது !

    ஆதியில்
    இதனை
    நாவலந் தீவென்றே
    நானிலம் அறியும் !

    துணைக் கண்டம்
    என்று
    புவியியலார்
    புகழ்வதுண்டு !

    தென்னாடுடைய சிவன்
    இமயத்திலும்
    இமவான் மகள்
    குமரியிலும்
    இடம் மாறி இருந்து
    எல்லை வகுத்தனர் !

    கயிலைப் பெருமான்
    கல்யாணம் செய்தது
    மதுரைப் பாண்டியன்
    மகளை அல்லவா?

    இதிகாசங்கள் இரண்டும்
    பேசாத
    இடங்களே இல்லை
    இந்தியாவில் !

    வடபுலத்து இராமன்
    தென்கோடியில்
    கட்டிய கோயில்
    இராமேஸ்வரம் !

    காந்தாரச் சகுனி முதல்
    கடலோரப் பாண்டியன் வரை
    பங்கெடுக்காதவர் யார்?
    பாரதப் போரில் !

    கங்கை நீரையும்
    கயிலைக் கல்லையும்
    கொண்டு வந்து தான்
    பத்தினிக் கோட்டத்தைக்
    கட்டி முடித்தான்
    செங்குட்டுவன் !

    ஆதி முதல்
    தீர்த்த யாத்திரை
    காசி – இராமேஸ்வரம்
    என்பதாய்த் தானே
    காணப்படுகிறது !

    கயிலையில் புறப்பட்ட
    அகத்தியருக்குத் தெரியும்
    பாரத எல்லை
    நெல்லைக்கு அப்பால்
    இல்லை என்று !

    அதனால்தான் பொதிகையைத் தாண்டி
    போகவில்லை அவர் !

    வடக்கே அவதரித்த
    பரசுராமர்
    அந்திமத்தில்
    அமைதி கொண்டது
    தென்னகத்துக் கேரளம் !

    பாரதம் முழுவதையும்
    பாதத்தால் அளந்த
    கேரளத்துச் சங்கரர்
    பீடம் ஏறியது
    காஞ்சி நகர் !

    கயிலை முனிவரே
    மூலனாய் மாறி
    மூவாயிரம் பாடலில்
    திருமந்திரத்தைத்
    திரட்டிக் கொடுத்தார் !

    வடகயிலை
    சுந்தரர்தான்
    தென்னகத்தில்
    தமிழ் வளர்த்தார் !

    காரைக்கால் அம்மையும்
    கரசேவை அப்பரும்
    வடகயிலை சென்று
    தென்தமிழில் பாடினர் !

    கேரளத்துச் சேரலன்
    கவிதைத் தொகுதியை
    வெளியிட்ட இடம்
    வடகயிலை என்பது
    வருணன் தரும் செய்தி !

    மெய்கண்டாருக்குச்
    சித்தாந்தம் சொன்னவர்
    வடகயிலை பரஞ்சோதி
    என்பதே வரலாறு !

    காசி மடத்தைக்
    கட்டி ஆண்டவர்
    கன்னித் தமிழ் நாட்டுக்
    குமரகுருபரர் !

    ஆண்டாள் மாலை
    அழகு செய்யாமல்
    திருப்பதியில்
    திருவிழா ஏது ?

    விவேகானந்தரின்
    வேதாந்த அறிவு
    அமெரிக்காவை
    ஆட்டிப் படைத்தது
    சேதுபதியின்
    செலவில்தானே !

    வடக்கே பிறந்து
    தெற்கே புகுந்து
    புதுவை மண்ணை
    புனிமாக்கினார்
    அரவிந்தர் !

    ஆந்திராவின்
    அற்புதமானார்
    தமிழகம் தந்த
    இராகவேந்தர் !

    ஒருங்குடன் ஆண்ட
    பரதன் பெயரால்
    பாரதம் என்பதே
    பழம் பெயராகும் !

    இந்திய எல்லையை
    எடுத்துக் காட்டும்
    சங்க இலக்கியச்
    சான்றுகள் பற்பல !

    இட்டப் பொட்டும்
    கட்டிய புடவையும்
    இந்தியப் பெண் என
    எடுத்துக் காட்டும் !

    இந்தியா முழுவதும்
    எல்லா வீட்டிலும்
    யாராவது ஒருவருக்கு
    வடமொழிப் பெயராய் !

    பாரத தேசம்
    பழம் பெரும் தேசமாம்
    பாரதி புலவனும்
    பாடி மகிழ்ந்தான் !

    வடக்கே இருக்கும்
    திரிவேணி சங்கமம்
    தெற்கே வந்தால்
    முக்கூடலாகும் !

    எடுத்துக் காட்டுகளை
    அடுக்கத் தொடங்கினால்
    முடிவாய்ச் சொல்ல
    முந்நூறு நாட்கள்
    முழுமையாய்த் தேவை !

    பெரிய தேசத்தில்
    வேறுபாடுகள்
    இருப்பதே இயற்கை !
    வேறுபாடுகளைக்
    கூறுபடுத்தி
    பிரிவினைப் பேசும்
    பித்தர்கள் எத்தர்களாய்!
    விரல்களின் அளவு
    வெவ்வேறாயினும்
    உள்ளங்கை
    ஒன்றுதான் என்பதை
    உணர மறுக்கும்
    குருடர்களுக்கு
    விளக்கினாலும் விளங்காது !

    சோழநாடு
    சேரநாடு
    பாண்டியநாடு
    கொங்குநாடு
    நடுநாடு
    ஆப்ப நாடு
    என்றெல்லாம்
    பிரிந்து கிடந்த
    தமிழ்நாடு
    ஒரே மாநிலமாய்
    உருப்பெற்றதற்குத்
    தமிழ் மொழியே
    அடிப்படை !

    பல மாநிலங்களையும்
    சேர்த்து
    பாரத நாடென
    பறை சாற்றுவதற்கு
    ஆன்மீகப் பண்பாடே
    அடிப்படை !

    அழகான மாலையில்
    பல பூக்கள் இருப்பதால்
    அது
    மாலையே இல்லை
    தனித்தனிப் பூக்கள் தான்
    என்று
    அடம்பிடிப்போரிடம்
    அகப்பட்டு விடாதீர் !

    பிரிவினை நோய்
    பிடித்துக் கொள்ளும் !!!

    நாம் இந்தியர் என்பதில்
    பெருமிதம் கொள்வோம்!
    இணைந்தே இன்னும் பல
    சாதனைகள் புரிவோம்!

    வாழ்க பாரதம்!
    வந்தே மாதரம்!‍‍
    ஜெய்ஹிந்த்!

  2. நாத்திகம் பேசிய M.R ராதா இறக்கும் முன் காஞ்சி சங்கராச்சாரியாரை பார்த்து தஞ்சம் அடைந்தார்.

    நாத்திகம் பேசிய கண்ணதாசன் இறக்கும் முன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதி விட்டு உயிரை விட்டார்.

    நாத்திகம் பேசிய கருணாநிதி இப்போது இராமானுஜர் காவியத்தை எழுதி, தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்.

    எவ்வளவு தூற்றினாலும் போற்றினாலும் கடைசியில் வர வேண்டிய இடம் இறைவனிடமே……….

    சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்,
    அதை காலில் தான் அணிய முடியும்.
    குங்குமத்தின் விலை மிகக்குறைவு.
    அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
    இங்கு விலை முக்கியமில்லை,
    அதன் பெருமை தான் முக்கியம்.

    உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன்….

    சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.

    புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.

    இங்கு
    கோயில்கள்,
    மசூதிகள்,
    திருத்தலங்கள் வேடிக்கையானவை..

    பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான்,
    ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்….

    ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

    காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,
    கண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள்.

    மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,

    ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை,
    சாகும்போதும் அழுகை,

    இடையில் எல்லாம் நாடகம்…..

    தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
    அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார்.

    பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,….

    தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.

    மனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,
    வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.

    இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.

    இதற்குள் எதற்கு உறவுகளுக்குள்
    கோபம்,
    விரோதம்,
    வீண்பழி,
    கௌரவம்,
    அஹங்காரம்,
    அதிகாரம்,
    ஆணவம்,
    கொலை,
    கொள்ளை,
    காழ்ப்புணர்ச்சி?

    எது நமதோ அது வந்தே தீரும்.
    யாராலும் தடுக்கமுடியாது.
    நமதில்லாதது…
    நமக்கில்லாதது…
    எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது.

    வாழும் வரை வாழ்க்கை…

    வாழ்ந்து காட்டுவோம்..
    பழக்கத்திற்கு இனியவராக, மற்றவர்களின் இதயத்தில்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *