இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்

இந்த நிகழ்வின் காலம் 2017 ஆம் ஆண்டாகும். இருளர் இனத்தில் நடந்ததாகப் பொய்யான சித்தரிப்பில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம் ‘ கூறும் 1993ஆம் வருடத்திற்கு 24 ஆண்டுகள் சென்ற பிறகு நிகழ்ந்தது இது. இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தை நான் இறுதியில் கூறுகிறேன்.

சரி இனி செய்திக்குப் போவோம்.

புளோரிடா வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணம். உலகப் பிரசித்தி பெற்ற டிஸ்னி லாண்ட் தீம் பார்க் உள்ள பிரதேசம். மழைக்காலங்களில் கடும் புயலுக்கும், மழைக்கும் ஆளாகி அவதிக்குள்ளாகும் மாகாணம். அதே போல உலகின் பிரசித்தி பெற்ற மியாமி கடற்கரையும் இங்குதான் உள்ளது. அதிகமான இயற்கை வளங்களும் ஊர்வன பறப்பன நகர்வன என்று பல்லாயிரம் விலங்கினங்களின் புகலிடமாக புளோரிடா விளங்குகிறது. இங்குதான் அரியவகை பர்மிய மலைப்பாம்புகள் உள்ளன.

பர்மிய மலைப்பாம்புகள் தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்டவை. அழிந்து வரும் அரியவகை விலங்கினமாகும். பாம்பினங்களில் மிக நீளமானதாக இது விளங்குகிறது. இந்த பர்மியப் பாம்புகள் புளோரிடாவின் இயற்கைச் சூழல் மண்டலமான (eco system) எவர் கிலேட்ஸ் என்ற பகுதியைச் சுற்றிய ஈர நிலப்பகுதியில் மிகுதியாகக் காணப்படுகிறது. உலகின் மிக உன்னதமான இயற்கைச் சூழல் மண்டலமாக இந்த எவர் கிலேட்ஸ் பகுதி விளங்குவது குறிப்பிடத் தக்கது.

புளோரிடாவில் தெற்காசிய பாம்பு வகைகளின் அபரீமித்த இனப்பெருக்கம் குறித்து பல்வேறு கதைகள் உலாவுகின்றன. 1992 ஆம் ஆண்டு அடித்த புயல் அங்குள்ள செல்லப் பிராணிகள் வளர்க்கும் கடைகளைச் சூறையாட அந்தக் கடைகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட பர்மிய இனப்பாம்புகள் இந்தப் பகுதியில் பரவியதால் அவற்றின் இனப்பெருக்கம் அதிகமானதாக ஒரு கதை உள்ளது.

எவர் கிலேஸ் பகுதியில் இந்தப் பாம்புகள் 5000 முதல் 15000 எண்ணிக்கை வரையில் வளர்ந்துள்ளது. தலையைப் பார்த்தேன் என்று சிலரும், உடலைப் பார்த்தேன் என்று சிலரும் கூறினாலும் ஒருவருக்கும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தாத சாமர்த்தியசாலிகளாகவே அவை அங்கே வளைய வந்து கொண்டிருந்தன. லோக்கல் விலங்கு வேட்டைக்காரகள் துப்பாக்கியும் கையுமாக எவர் கிலேட்ஸ் பகுதியில் அலப்பறை செய்ததுதான் மிச்சம். அவர்கள் பிடித்த ஒரு பாம்பு கூட பர்மிய இணவகையைச் சேர்ந்த பாம்புகள் இல்லை.

2016 ஆம் வருடத்தில் இந்த எவர் கிலேட்ஸ் பகுதிகளில் மான்கள், சிறிய விலங்கினங்கள் பெருமளவில் அழிந்து வருவதைப் புள்ளி விவரங்கள் காட்டவே புளோரிடாவின் வன விலங்குத் துறை விழித்துக் கொள்கிறது.அங்கொன்றும் இங்கொன்றுமாக இரை விழுங்கிய பாம்புகளைப் பிடிக்கின்றனர். ஒரு மலைப்பாம்பு மூன்று மாதத்திற்குள் ஒரு பெரிய மான் மற்றும் இரண்டு குட்டி மான்களை விழுங்கியிருப்பதைக் கண்டறிகிறார்கள் வனத்துறையினர். காட்டு எலிகளை வேட்டையாடக் கிளம்பிய அவை மற்ற விளங்கினங்களை அழிப்பத்தோடு மெல்ல மெல்ல குடியிருப்புப் பகுதிகளுக்கு நுழைந்து விடுமோ என்ற அச்சம் அங்கு வசித்த மக்களிடம் பரவத் தொடங்கியது.

விலங்கியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பதினொரு வருடங்கள் 40000 மைல் பரப்பளவில் அலைந்து திரிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையின் படி 99 சதவீதம் ராக்கூன் என்ற விலங்கினமும், 98 சதவீத ஓப்புசம் என்ற காட்டெலிகளும்,88 சதவீத காட்டுப் பூனைகளும் காணாமல் போனது தெரிய வந்தது. இதோடு கூட பல்கிப் பெருகிய இந்த பர்மிய பாம்புகள் முயல், குள்ள நரி என்று எதையும் விட்டு வைக்காமல் டின்னர் லஞ்ச் என்று புகுந்து புறப்பட ஆரம்பித்தன.

புளோரிடா இயற்கை வன விலங்குத் துறைக்கு இது பெரிய தலைவலியாகப் போனது. வாக்குவம் கிளீனர்களைப் போல குட்டி விலங்குகளை சுவாகா பண்ணும் மலைப்பாம்புகளைப் பிடிக்க இயலாமல் மொத்த அரசாங்கமும் தடுமாறியது .

பாம்பு பிடிக்கலையோ மலைப்பாம்பு பிடிக்கலையோ என்று பல பரிசுத் திட்டங்களை புளோரிடா அரசு அறிவித்தும் பலனில்லை.

இனிமேல்தான் கதையில் நமக்கெல்லாம் பிடித்த ஒரு திருப்பம் நேர்கிறது.

புளோரிடா வனவிலங்கு மண்டல பாதுகாப்பு குழுவிற்குப் பலரும் ஒரு யோசனையை முன்வைக்கிறார்கள். அதாவது உலகில் பாம்பு பிடிப்பதில் வல்லவர்கள் தமிழ் நாட்டில் உள்ள இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை அழைத்து வந்தால் பர்மிய பாம்புகளைச் சுலபமாகப் பிடித்து விடலாம் என்ற யோசனையை முன்வைக்கிறார்கள்.

பல்வேறு முயற்சிகளும் பலனளிக்காமல் போகவே புளோரிடா அரசு ஒரு மிக சிறந்த நடவடிக்கையை முன்னெடுத்தது. மலைப்பாம்புகளைப் பிடிப்பதற்கு தமிழகத்தில் உள்ள இருளர் இனத்தைச் சேர்ந்த இருவரை பாம்பு பிடிக்க தனது நாட்டிற்கு அழைத்து வர எண்ணி செயலிலும் இறங்கியது.

ஊர்வனவியல் ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேக்கர் என்பவரின் உதவியுடன் தென் தமிழ் நாட்டிலிருந்து இருளர் இனத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் என்ற ரு இருளர்களையும் அவர்களுடன் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களையும் புளோரிடாவிற்குத் தருவிக்கிறது. இந்த மிஷனுக்கு அமெரிக்கா அந்தப் பாம்பு பிடிக்கும் குழுவிற்கு என்று 68800 டாலர்களைச் செலவிட்டது. கிட்டதட்ட அப்போதைய மதிப்பில் இந்திய பணமதிப்பில் ரூபாய் நாற்பத்தேழு இலட்சமாகும்.

இந்த இருவரும் புளோரிடாவில் உள்ள எவர் கிலேட்ஸ் பகுதிக்குக் காலையில் பாண்ட் டீ ஷர்ட் அணிந்து கொண்டு கையில் பாம்பு பிடிக்க ஒரு நெம்பு கோலும் சின்ன கத்தியும், பிடித்த பாம்பை அடைத்து வைக்க பெரிய பைகளுடனும் தினமும் ஈர நிலப் பகுதி நோக்கி செல்வார்கள்.

இருவரும் சேர்ந்து பாம்புகளைப் பிடிப்பதை வனவிலங்கு ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். ஈரப் புல்வெளிகளில் இவர்கள் பாம்புகளைத் தேடிக் கொண்டிருக்க மாசியும், வடிவேலும் அதோ பாம்பு என்று கூறுவார்கள். வனத்துறையினர் எங்கே எங்கே துழாவிக் கொண்டிருக்கும்போது மிக எளிதாக தமிழக இருளர் இருவரும் அந்தப் பாம்பைப் பிடித்து உயரத் தூக்கிக் காட்டுவார்களாம் .

புளோரிடாவிலிருந்து வெளிவரும் ‘தி மியாமி ஹெரால்ட்’ என்ற செய்தித்தாள் மாசி மற்றும் வடிவேல் என்கிற இருளர்களின் பாம்பு பிடிக்கும் திறனை இவ்வாறு வியந்து பாராட்டி எழுதியுள்ளது.

“இந்த இரண்டு இருளர்களிடம் ஒருவகை அமானுஷ்ய சக்தி இருக்க வேண்டும். இருவரும் நீர் நிலைகளின் தடுப்பணைகளின் அருகில் இருக்கும் சாலை மற்றும் புல்வெளியில் அடிமேல் அடி எடுத்து வைத்து மலைப்பாம்புகளைத் தேடிச் செல்கின்றனர்.தடுப்பணைக் கரைகளை ஒட்டிய புல்வெளியில்தான் சூரிய ஒளியினால் கிடைக்கும் வெப்பத்திற்காக மலைப்பாம்புகள் படுத்து கிடக்கும் என்று இருளர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

பாம்புகள் இருப்பதை உணர்ந்ததும் அந்த இடத்தில் மெதுவாக குத்துக்கால் போட்டு இருளர் இனத்திற்கு உரிய பாடல் ஒன்றைப் பாடத் தொடங்குவார்கள். ஒரு பீடியைப் பற்ற வைத்து அந்த மணத்தைப் பரவ விடுவார்கள். அப்போதுதான் பாம்புகள் வெளியில் வரும் என்று கூறுகிறார்கள். எவர் கண்களுக்கும் புலப்படாத மிக நீளமான பாம்புகளைப் பிடித்து பைக்குள் அடைத்து விடுவதில் கில்லாடிகளாக செயல் படுகிறார்கள் இந்த இரண்டு இருளர்களும்.”

இந்த இருளர்கள் குறித்து எழுத்தாளரும். திரைப்படங்கள் தயாரிப்பாளரும், இயற்கை பாதுகாவலருமான ஜானகி லெனின் என்பவர் கூறுவதைக் காணலாம்.இவர் ரோமுலஸ் விடடேகரின் இரண்டாவது மனைவி.

“1800 களிலிருந்து 1972 ஆம் ஆண்டு வரையில் இருளர்கள் பாம்புப் பிடிப்பவர்களாகவே அறியப் பட்டிருக்கின்றனர். இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் பாம்பு பிடிப்பதற்குத் தடை விதிக்கவே இவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் பறிக்கப் படுகிறது. மிகக் கடுமையான உஷ்ண பூமியில் வாழ்ந்து பழக்கப்பட்ட இருளர்கள், களிமண் நிலத்தில் கூட மிக எளிதாகப் பாம்புகளைப் பிடிக்க தெரிந்து வைத்திருப்பதால் உலகில் இவர்களைத் தவிர பாம்பு பிடிப்பதில் வல்லவர்கள் வேறு ஒருவரும் இல்லை எனக் கூறலாம்.

பாம்புகளின் நஞ்சிற்காக அவற்றைப் பிடித்துப் பழக்கபட்ட இவர்களுக்கு இந்த மலைப் பாம்புகளினால் அதிக அச்சம் கிடையாது. ஆனால் மலைப் பாம்புகளைப் பிடிக்கச் செல்லும்போது அவை பயத்தில் தங்கள் மலத்தை வாய் வழியே கிலோ கணக்கில் முகத்தில் உமிழ்ந்து விடும். கு டலைப் பிடுங்கும் அந்த நாற்றத்தை மட்டும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் மாசியிடம் கேட்டால் அவர் இப்படித்தான் கூறுவார். ‘பாம்புப் பிடிக்கப் போறவன் அது கக்கும் பீய்க்கு அஞ்சினா பாம்பு பிடிக்க முடியாது’.

பாம்புப் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலிருந்து வந்து பிற வன விலங்குகளின் பாதுகாவலுக்காக புளோரிடா அரசு எத்தனை பாம்புகளை வேண்டுமானாலும் பிடியுங்கள் என்று கூறியிருப்பது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது . வெளிநாடுகளுக்குச் சென்றிராத இவர்களுக்கு இந்தப் பயணம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது

மாசியும் வடிவேலுவும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள சென்னேரி என்ற பகுதியில் ரோமுலஸ் விட்டேக்கர் என்ற பாம்புகளின் ஆர்வலர் அரவணைப்பில் இருப்பவர்கள் .

சென்னை கிண்டி உயிரியல் பூங்காவில் உள்ள பாம்புப் பண்ணையை நிறுவியவர் இந்த ரோமுலஸ் விட்டேக்கர். இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.

ரோமுலஸ் விட்டேக்கர் , நிறுவிய கூட்டுறவுச் சங்கத்தில் மாசியும், பணி புரிபவர்கள். இவரும் இவர் மனைவி ஜானகி லெனின் இருவரின் தலைமையில்தான் இந்தக் குழு புளோரிடா சென்றுள்ளது.

ஒருநாளைக்கு எட்டு டாலர் ஒருமணி நேர வேலைக்கு என்ற கணக்கில் இருவரும் கணிசமான தொகையை சம்பாதித்து வந்துள்ளனர். அது தவிர பிடிக்கும் ஒவ்வொரு மாலைப் பாம்பிற்கும் போனஸ் வேறு உண்டு. இரண்டு மாதங்களில் நூற்றுக்கணக்கான பர்மிய மலைப்பாம்புகளைப் பிடித்திருக்கும் இருவரும் உலகின் மிக நீளமானதும் எடை கூடியாதுமான மலைப்பாம்பைப் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதுவரை நடைபெற்ற மலைப்பாம்பு வேட்டைகளில் புளோரிடாவில் நடந்த பாம்பு வேட்டைதான் பெரிய வேட்டை என்று ரோமுலஸ் பெருமிதம் கொண்டுள்ளார்.

இனி இப்போதைய இருளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ததில் கிடைத்த விவரங்கள்.

இருளர்களுக்கு என்று தனியாக ஒரு கூட்டுறவுச் சங்கம் உள்ளது. இந்தக் கூட்டுறவுச் சங்கம் நாற்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. அனைத்து இருளர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து கொண்டு விஷப் பாம்புகளைப் பிடித்து கொடிய நஞ்சினை உரிய தொழில் நுட்பங்களோடு சரியான பாதுகாப்பு வழிமுறைகளோடு எடுக்கிறார்கள். பத்து கிராம் நஞ்சை எடுப்பதற்கு அவர்கள் பல விஷப் பாம்புகளைப் பிடிக்க வேண்டியிருக்கும். இந்த நஞ்சிலிருந்து எடுக்கப்படும் மருந்து இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் இருபதைந்தகாயிரம் ரூபாய் வரையில் சந்தையில் விற்கப்படுவது, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாம்புக் கடியால் அவதியுறுபவர்கள் என்பதால் இந்த மருந்துக்கு எப்போது தேவை இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கூட்டுறவுச் சங்கம் மூலம் ஒவ்வொரு பாம்பு பிடிக்கும் இருளர்களுக்கும் பாம்பு பிடிக்கும் உரிமம் வழங்கப்படுகிறது. அந்த உரிமத்தின்படி ஒவ்வொரு இருளரும் ஒரு வருடத்திற்கு 2300 பாம்புகளை மட்டுமே பிடிக்கலாம்.

தங்களுக்கென்று இருப்பதற்கு நிலமோ, வீடோ இல்லை என்று வருத்தப்படும் இவர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் தொழிலைக் கற்றுக் கொடுக்காமல் அவர்களை கல்லூரி படிப்பைக் கொடுத்து பெருநகரங்களில் பெரிய பெரிய நிறுவனங்களில் உத்யோகம் பார்ப்பதை விரும்புகின்றனர்.

கிட்டதட்ட இரண்டு இலட்சம் எண்ணிக்கையுள்ள இருளர் சமுதாயத்தின் இறுதி பாம்புப் பிடிப்பவர்களாக இவர்கள் மட்டுமே இருக்கப் போகின்றனர்.

அதே போல இவர்கள் காடுகளிலும் மலைகளிலும் மறைந்து வாழ்வதற்கு உண்மையான காரணம் என்னவென்று தேடினால் நமது நாட்டை வியாபாரம் செய்வது போல உள்ளே நுழைந்து நம்மை அடிமைகளாக்கிய ஆங்கிலேயர்களே இருளர்களின் மறைவு வாழ்க்கைக்கு ஆதி காரணமாக இருந்துள்ளனர் என்பது புரியும். கறுப்பின மக்களை உலகமெங்கிலும் தாங்கள் நிறுவிய தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்குக் கிழக்கிந்திய கம்பனி கொத்தடிமைகளாய் மனித வேட்டை ஆடத் தொடங்கியதும் இந்த ஆங்கிலேயர்களுக்கு அஞ்சியே இருளர்கள் மலைப்பகுதிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் மறைந்து வாழத் தொடங்கினர் .

இனிமேல் கட்டுரையின் முதலில் குறிப்பிட்ட விஷயத்திற்கு வருகிறேன்.

ஜெய் பீம் படத்தின் இறுதி காட்சியில் இருளர்களைக் குறித்து உயர்வாகப் பேசி விட்டு நடிகர் ர் சூர்யா வசனகர்த்தா எழுதிக் கொடுத்த வசனத்தை இப்படி பேசுவார்.” வரலாறு தெரியாம போனதாலதான் தமிழ்நாடு தொல்குடி மீது அரசாங்கத்தோட அதிகாரமும் மிருகத்தனமா நடந்துக்குது “என்பார் வீராவேசமாக.

மேற்சொன்ன வசனத்தில் அரசாங்கத்தோட என்ற இடத்தில் மட்டும் ‘குஞ்சர ஹத’ என சத்தத்தை ஊமையாக்கியிருப்பார்கள். மேற்சொன்ன வாக்கியத்தை கட்டமைத்த அந்த நரித்தனத்தை என்னவென்று சொல்வது? தமிழ்நாடு தொல்குடியை நசுக்கியதுஅரசாங்கம் என்று பொதுவாகக் குறிப்பிடுவதன் மூலம் நான் இந்த அர சாங்கத்தைக் குறிப்பிடவில்லை என்று தப்பிக்க வசதியாக அப்படி ஒரு வார்த்தைக் கட்டமைப்பு. அந்த இடத்தை மௌனமாக்கிய இன்னும் உயிரோடு இருக்கும் தணிக்கைக் குழுவுக்குப் பாராட்டுகள். சரி அந்த அரசியலுக்கு நாம் போக வேண்டாம்.

நடிகர் சூரியாவிற்கும் படக் குழுவினருக்கும், அதன் தயாரிப்பாளருக்கும் கூறிக் கொள்ள விரும்புவது.” சரித்திரம் தெரிந்திருக்க வேண்டியதுதான். அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.”

படம் நெடுகிலும் ரோமுலஸ் விட்டேகர் குறித்து ஒரு குறிப்பு கூட இல்லையே ஏன்?

ராபர்ட் கிளைவ் என்ற குள்ளநரி மூலம் இந்தியாவைக் கொத்தடிமையாக்கிய ஆங்கிலேயர்கள் துரத்தியதால்தான் இருளர்கள் மலைப்பகுதிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் மறைந்து வாழத் தொடங்கினர் என்பதையும் ஏன் குறிப்பிடவில்லை?

இருளர் என்று சாதாரணமாகத் தேடினாலே கூகுளில் இத்தனை செய்திகளைத் திரட்ட முடிந்த இயக்குனரால் – இத்தனைக்கும் இவர் பிரபல பத்திரிகையின் மாணவர் பத்திரிகை திட்டத்தின் மூலம் அறியப்பட்டவர் – ஏன் நான் சொன்ன விஷயங்களைக் கவனிக்க முடியவில்லை?

உசாத்துணைகள்:

  1. பிபிசி பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு ஆறாம் தேதி வெளிவந்த கட்டுரை
  2. தி வாஷிங்டன் போஸ்ட்டில் 26, ஜனவரி 2017 இல் வெளிவந்த செய்தி
  3. யூத் கி ஆவாஸ் தளத்தில் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 இல் வெளிவந்த கட்டுரை
  4. இருளர்கள் குறித்து ஆய்வு செய்த திரு கே. குணசேகரனுடன் you tube இல் உள்ள நேர்காணல்.
  5. ஜானகி லெனின் அவர்களின் வலைப்பக்கம்.
  6. ரோமுலஸ் விட்டேகர் குறித்த விக்கிபீடியா கட்டுரை.

3 Replies to “இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்”

  1. அருமையான செய்திகள். தெளிவான கட்டுரை. பாராட்டுக்கள். பழங்குடிகளையும் பட்டியல் குடியினரையும் மிகபட்டியல் குடியினரையும் ஒடுக்கியது ஆங்கிலேய ஆட்சி என்பது வரலாறு. ஒவ்வொரு பழங்குடியினருக்கும் தனித்திறன்கள் உள்ளன. இந்தக்கட்டுரையிலே இருளர் பழங்குடியினரின் பாம்பு பிடிக்கும் திறன் சொல்லப்பட்டுள்ளது. கட்டுரையாளர் மேன்மேலும் இது போன்று எழுதவேண்டுகின்றேன்.

  2. அருமை!இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட யாரிடமும் இருந்து பதில்வராது.ஆனால் விடையோ ஏற்கனவே நமக்குத் தெரிந்ததுதான்!

  3. People are very emotional.Film stars know their weakness and they easily capture them by their real action.How many of our people are willing to know the real history.We are becoming the sensational addicts.Film stars abuse this society for their personal development.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *