ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்

ஸ்மார்த்தர் என்பதைக் குறித்து தமிழ்ச் சூழலில், குறிப்பாக சைவ சமயம் சார்ந்தவர்களிடையில் ஒருவிதமான குழப்பம் நிலவுகிறது. அதனைத் தெளிவுபடுத்த இப்பதிவு.

சுருதி (ஶ்ரு’தி) என்பது வேதம். ‘கேட்கப்பட்டது’ என்பது இதன் பொருள். ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்மறைகளில் ஒவ்வொன்றிலும் உள்ள ஸம்ஹிதா, பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் ஆகிய நான்கு பகுதிகளும் சேர்ந்த முழுத்தொகுதி வேதம் என்று அழைக்கப் படுகிறது. இந்த வேதமானது “மனிதரால் ஆக்கப்படாமல்” (அபௌருஷேயம்) பரம்பொருளின் நாதவடிவாக தொடக்கமும் முடிவும் அற்று எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பது இந்துமதப் பாரம்பரியத்தின் ஆதார நம்பிக்கைகளுள் ஒன்று. மாறாக, வரலாற்று ஆய்வாளர்களும், பல நவீனகாலத்திய இந்துக்களும் தொல்பழங்காலத்தில் ரிஷிகளால் பாடப்பட்ட தெய்வீகக் கவிதைகள் வேதங்கள் என்று கருதுகின்றனர். எப்படியானாலும், வேதமே இந்துமதத்தின் ஆதாரமான புனித நூல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஸ்மிருதி என்பதற்கு ‘நினைவு’ என்பது பொருள். வேதஞானத்தையும் வேதநெறியையும் நினைவில் நிறுத்துவதற்காக முனிவர்களாலும், ஞானிகளாலும், ஆசாரியர்களாலும், கூறப்பட்ட உபதேசங்களும், அருளப்பட்ட நூல்களும் அனைத்தும் இதன்கீழ் வரும். இவை மாமனிதர்களாலும் அவதார புருஷர்களாலும் பற்பல காலகட்டங்களில் இயற்றப் பட்டவை. இதன்படி, ஆறு வேத அங்கங்கள் (நிருக்தம், ஜோதிடம்… ) தொடர்பான நூல்கள், உபவேதங்கள் (ஆயுர்வேதம், கந்தர்வ வேதம்.. ), இதிகாசங்கள் (ராமாயணம், மகாபாரதம்), பதினெட்டு புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள் (மனுஸ்ம்ருதி, பராசர ஸம்ருதி முதலான நெறிநூல்கள்), சடங்கு நூல்கள் (போதாயன, ஆபஸ்தம்ப ஸூத்ரங்கள்..) என்று இவையனைத்தும் ஸ்மிருதி என்பதற்குள் அடங்குவதாகக் கொள்ளலாம். ஸ்ரீமத்பகவத்கீதை பகவானால் உபதேசிக்கப் பட்டதாயினும், வியாச முனிவரின் வாக்காக மகாபாரதத்திற்குள் அமைந்துள்ளதால், ஸ்மிருதியாகிறது. இதன்பொருட்டே, வேதாந்த தரிசனத்தின் மூன்று அடிப்படை நூல்களான ‘பிரஸ்தான த்ரயம்’ என்பதில் கீதை ‘ஸ்மிருதி ப்ரஸ்தானம்’ என்று அழைக்கப் படுகிறது.

ஆக, பரந்த பொருளில் சுருதி எனப்படும் வேதங்களைத் தவிர மற்றுமுள்ள அனைத்து இந்துமத புனிதநூல்களுமே ஸ்மிருதி என்பதில் அடங்கும் என்று கூறலாம். இதன்படி சைவத்திருமுறைகள், திவ்யப் பிரபந்தங்கள், மற்றும் பல இந்திய மொழிகளில் அருளாளர்கள் இயற்றிய பக்தி நூல்களும் கூட ஸ்மிருதி என்பதற்குள் வந்துவிடும் – வேத ஞானத்தை, வேத நெறியை நினைவில் நிறுத்துவதற்காகவே இவையனைத்தும் எழுந்தன என்பதால்.

இனி, மேற்கூறியவற்றில் தர்மசாஸ்திரங்கள் என்ற வகை நூல்களை மட்டுமே ஸ்ம்ருதி என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கமும் உள்ளது. பொயு 9-10ம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உருவான பிற்காலத்திய நூல்களிலேயே ஸ்ம்ருதி என்பதற்கு இத்தகைய குறிப்பிட்டதான பொருள் கொள்ளப் படுகிறது.

“சுமார்த்தர்கள் என்போர் வேதத்தின் உபாங்க நூல்களான மிருதிகள் (ஸ்மிருதிகள்) எனும் நூல்களைப் பின்பற்றுகின்றவர்கள்” என்று சைவசமய நூல்கள் பலவற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இது முழுமையான, சரியான கருத்தல்ல.

ஸ்மார்த்தர்கள் என்று அழைக்கப் படும் வைதிக அந்தணர்களைக் குறிக்கும் முழுப்பெயர் “ஶ்ரௌத-ஸ்மார்த்த” என்பதே. அதாவது, சுருதியையும் ஸ்மிருதியையும் அறிந்தவர், கடைப்பிடிப்பவர் என்பது இதன் பொருள். அது நீளமாக இருப்பதனாலோ என்னவோ சுருக்கப்பட்டு ஸ்மார்த்த என்று ஆகிவிட்டது. இன்றும் கூட பல வைதிக கர்மங்களில் சங்கல்பம் செய்யும்போது “ஶ்ரௌத ஸ்மார்த்த கர்மானுஷ்டான..” போன்ற தொடர்களை சாஸ்திரிகள் கூறுவதைக் கேட்டிருக்கலாம். சிறந்த வேத பண்டிதர்களை சிரௌதிகள் (ஶ்ரௌதி) என்று அழைப்பதும் உண்டு.

எப்படியானாலும், ஆதாரமாக உள்ள வேதத்தையும், இதிகாச புராணங்களையும் எல்லாம் விட்டுவிட்டு வெறும் தர்மசாஸ்திரங்களை மட்டுமே கடைப்பிடிப்போர் என்று எத்தகைய சாதியும், சமயப்பிரிவும் இந்துமதத்திற்குள் கிடையாது. அதேபோல, தர்மசாஸ்திரங்கள் எனப்படும் நூல்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்ட எந்த சமயப் பிரிவும் கிடையாது. சைவசித்தாந்தம் பற்றி எழுதப் பட்ட பல நூல்களிலும் கூட, மனுஸ்மிருதி போன்ற நூல்களிலுள்ள அறநெறிகளும் ஆசார கட்டுப்பாடுகளும் கூறப்பட்டுள்ளன என்பதே உண்மை.

எனவே, ஶ்ரௌத-ஸ்மார்த்த என்ற சொல் அதன் நேரடியான பொருளில் வேதநெறியைக் கடைப்பிடிக்கும் அனைவரையுமே குறிக்கும். ஆனால் நடைமுறையில், தத்துவரீதியாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை ஏற்றவர்களாகவும், தங்கள் வேத சாகைக்குரிய வைதிக சடங்குகளையும் நெறிகளையும் கடைப்பிடிப்பவர்களாகவும், வழிபாட்டு ரீதியாக சிவன், விஷ்ணு, சக்தி, விநாயகர், முருகன், சூரியன் முதலான அனைத்து வைதிகமான தெய்வ வடிவங்களையும் இணைத்தும், தனியாகவும், இஷ்டதெய்வமாகவும் வழிபடுபவர்களாகவும் உள்ள பிராமணர்களைக் குறிப்பதாக ஸ்மார்த்த என்ற இச்சொல் புழக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக ஐயர் என்ற பின்னொட்டுடன் இவர்கள் அழைக்கப் படுகின்றனர். பாரம்பரியமாக, தத்தம் பிரதேசத்தில் உள்ள சங்கராசாரிய மடங்களையும் அவற்றின் கிளைகளையும் குருபீடங்களாக இவர்கள் ஏற்றுள்ளனர்.

ஆதி சங்கரரது தத்துவ மரபில் சைவ, வைணவ ஆகமங்கள், சாக்த தந்திரங்கள் ஆகிய நூல்களை ஸ்மிருதி என்பதில் சேர்ப்பதில்லை, அவற்றை பிரமாணங்களாகக் கொள்வதும் இல்லை. ஆறு தரிசனங்களில் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை, வேதாந்தம்) வேதாந்தம் தவிர்த்த மற்ற ஐந்தையும் தத்துவ ரீதியாக சங்கரர் நிராகரித்திருக்கிறார் என்றபோதும், வேதாந்த உண்மையைத் தெளிவுற அறிவதற்காக உதவக்கூடிய படிநிலைகளாக (ஸோபானம்) அந்த தத்துவப் பிரிவுகள் “வித்யா ஸ்தானம்” என்ற அளவில் ஸ்மார்த்த மரபில் பயிலப்படுகின்றன.

ஸ்மார்த்தர் அனுசரிக்க வேண்டிய நித்ய பாராயணம் குறித்த ஒரு பிரபலமான சுலோகம் இவ்வாறு கூறுகிறது:

ஸ்வஶாகோ²பநிஷத்³கீ³தா
விஷ்ணோர்நாமஸஹஸ்ரகம் ।
ஶ்ரீருத்³ரம்ʼ பௌருஷம்ʼ ஸூக்தம்ʼ
நித்யமாவர்தயேத்³க்³ருʼஹீ’ ॥

“தனது வேதசாகையிலிருந்து ஒரு பகுதி, அதிலுள்ள உபநிஷத்திலிருந்து ஒரு பகுதி, பகவத்கீதையிலிருந்து ஒரு பகுதி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீருத்ரம், புருஷசூக்தம் – இவற்றை இல்லறத்தான் தினந்தோறும் பாராயணம் செய்ய வேண்டும்”.

(இதில் “ஸ்ரீருத்ரம்” என்பது வேத பாராயணத்தில் பிரபலமாக உள்ள நமகம், சமகம் இரண்டையும் சேர்த்தே குறிக்கும்).

அந்த: ஶாக்தோ ப³ஹி:ஶைவோ வ்யவஹாரேஷு வைஷ்ணவ:

என்பது ஸ்மார்த்தர்களின் தெய்வ வழிப்பாட்டுக் கொள்கையைக் கூறும் மற்றொரு பிரபலமான வாக்கியம். “உள்ளே சாக்தன், வெளியே சைவன், வியவகாரத்தில் அதாவது நடத்தையில் வைஷ்ணவன்” என்பது இதன் பொருள்.

இதை முன்னிட்டே தீவிர சிவபக்தரும் ஸ்மார்த்தருமான அப்பைய தீட்சிதர் “ரத்ன த்ரய பரீக்ஷா” (மூன்று ரத்தினங்களைச் சோதித்தல்) என்ற அழகிய நூலில் சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களின் மகிமைகளையும் பட்டியலிட்டு, அவை ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல, எனவே இந்த மூன்று ரத்திரனங்களையும் நான் போற்றுவேன் என்று அறிவிக்கிறார். மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்தரிக்கும் படங்களில் சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களும் சமநிலையில் அருட்காட்சி தருவதை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

“ஒரே ஸாதகனுங்கூட முரண்பாடின்றி வெவ்வேறு மார்க்கங்களைச் சமரஸப்படுத்திக் கொள்ளலாம். சக்திவடிவான காயத்ரி உபாசனையில் இந்த சமரஸம் அடங்கியிருப்பதை காயத்ரியை வழிபடுவோர் அறிவர்” என்று உரையாசிரியர் அண்ணா (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்) தனது லலிதா சகஸ்ரநாம உரையின் முன்னுரையில் கூறுகிறார்.

பஞ்சாயதன பூஜை, ஷண்மதம் ஆகியவற்றின் அடிப்படையும் இது தான்.

பஞ்சாயதனம் என்பது சூரியன், அம்பிகை, விநாயகர், விஷ்ணு, சிவன் ஆகிய ஐந்து தெய்வ மூர்த்தங்களில் ஒரு தெய்வத்தை பிரதானமாக நடுவிலும் மற்ற நான்கு தெய்வங்களை குறிப்பிட்ட வரிசையில் அதன் நாற்புறங்களிலும் வைத்து வழிபடும் முறையாகும். நடுவில் உள்ள பிரதான தெய்வத்தைப் பொறுத்து சிவ பஞ்சாயதனம் அல்லது விஷ்ணு பஞ்சாயதனம் முதலான பெயர்களில் அது அழைக்கப் படும். இத்தகைய வழிபாட்டு முறை மிகத் தொன்மையானது, பஞ்சாயதன அமைப்பு என்பது வேத வேள்விக் குண்டத்தின் அமைப்பிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டது, ஆகமங்களின் அடிப்படையில் அமைந்த சைவம், வைணம் முதலான சமயப்பிரிவுகள் தனிப்பட்டு உருவாவதற்கும் முந்தைய காலத்தியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பஞ்சாயதன அமைப்பிலான ஆலயங்கள் பல இடங்களில் உள்ளன. சங்கராசாரிய மடங்கள் மற்றும் ஸ்மார்த்தர் இல்லங்களில் உள்ள பூஜா மூர்த்திகள் பெரும்பாலும் இந்த அமைப்பிலேயே இருக்கும்.

ஷண்மதம் என்பது அறுசமய நெறி என்று தமிழில் வழங்கப் படுகிறது. ஆறு தெய்வங்களில் ஒரு தெய்வத்தை முழுமுதல் பரம்பொருளாகக் கருதி வழிபடும் ஆறு உபாசனா மார்க்கங்களின் தொகுப்பு இது. அவை காணாபத்யம் (கணபதி), கௌமாரம் (குமரன்), சைவம் (சிவன்), வைஷ்ணவம் (விஷ்ணு), சாக்தம் (சக்தி), ஸௌரம் (சூரியன்) என்பனவாம். ஏற்கனவே புழக்கத்தில் இருந்த இந்த வழிபாட்டு நெறிகளை சீராக முறைப்படுத்தி, அத்வைத வேதாந்தத்தின் அடிப்படையில் தத்துவ ரீதியாக அவற்றை ஒருங்கிணைத்தவர் என்பதால் ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபகர் எனப்படுகிறார்.

எங்கு சென்றாலும் இந்துக்களின் வீடுகள், சிறிய, பெரிய கடைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பூஜையறைகளிலும் பூஜை மாடங்களிலும் பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி என்று தொடங்கி குறைந்தது 5-6 தெய்வங்களின் திருவுருவப் படங்களோ அல்லது விக்ரஹங்களோ இருக்கும். எனவே நடைமுறையில் மேற்கூறிய அத்வைத – ஸ்மார்த்த தெய்வ வழிபாட்டுக் கொள்கையையே நடைமுறையில் பெரும்பான்மையான இந்துக்கள் பின்பற்றுகின்றனர் என்பதைக் கவனிக்கலாம். தீவிர சைவ, வைணவ வழிபாட்டுக் கொள்கையுடையவர்கள் என்போர் சிறுபான்மையினரே.

தத்துவரீதியாக எந்த தெய்வ ஸ்வரூபம் மீதும் ஒவ்வாமை இல்லாத காரணத்தால், சிவபூஜை, ஹரி நாம சங்கீர்த்தனம், ராமாயண பாகவத பாராயணங்கள், திருப்புகழ் பஜனை, தேவி உபாசனை, ஐயப்ப பக்தி போன்ற பலவிதமான ஆன்மீக, பக்தி விஷயங்களில் தங்கள் விருப்பத்திற்கும் மன இசைவுக்கும் ஏற்றபடி ஸ்மார்த்தர்கள் ஈடுபடுகின்றனர். இஷ்ட தெய்வம் என்ற கோட்பாடும் அத்வைத – ஸ்மார்த்த மரபு சார்ந்தது தான், ஏனெனில் சிவன் அல்லது விஷ்ணு என்ற ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை மட்டுமே முழுமுதற் கடவுளாக வணங்கும் மரபுகளில் இஷ்டதெய்வம் என்ற கோட்பாடு சாத்தியமே அல்ல. புற அடையாளங்களை வைத்துப் பார்த்தால் விபூதி, கோபி சந்தனம், குங்குமம் எனப் பலவிதமான சின்னங்களையும் அவரவர் குடும்ப சம்பிரதாயப் படி அணிகின்றனர். கீற்றுநாமம் இடும் வழக்கமும் கூட தமிழ்நாட்டு ஸ்மார்த்த அந்தணர்களில் ஒருசாராரிடம் உண்டு.

பாரதத்தில் பல பிரதேசங்களிலும் உள்ள அனைத்து பிராமணர்களையும் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், அதில் ஸ்மார்த்த என்ற வகையினரில் வருவோரே மிகப் பெரும்பான்மையினர்.

ஐயங்கார்கள், மாத்வர்கள் போன்ற மற்ற பிராமண சமூகத்தினரும் ஆதியில் ஸ்மார்த்தர்களாக இருந்து பின்பு ராமானுஜர், மத்வர் முதலான ஆசாரியர்களின் காலத்திற்குப் பிறகு தனி சம்பிரதாயமாகப் பிரிந்து சென்றவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் அந்தந்த சம்பிரதாயங்கள் மற்றும் ஆசாரியர்களின் வரலாறுகளிலேயே உள்ளன. அந்த சம்பிரதாயம் சார்ந்த அறிஞர்களும் இக்கருத்தை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஸ்மார்த்த அந்தணர்களும் விபூதியும்:

“அப்பய்ய தீக்ஷிதர் காலத்திற்கு பிறகு (தான்) பெரும்பாலான ஸ்மார்த்தர்கள் விபூதி தரிக்க தொடங்கினர்” என்று சில அரைவேக்காட்டு “அறிஞர்கள்” கூறுகின்றனர். இது போக, சைவம் என்ற போர்வையில் பிராமண வெறுப்பைத் தொடர்ந்து கக்கி வரும் “மிஷனரி சைவ” தரப்பினரும், “விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் தரித்து ஸ்மார்த்தர்கள் சைவர்களை ஏமாற்றி வருவதாக” பிரசாரம் செய்து வருகின்றனர்.

இவர்களது கருத்துக்கள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை. உண்மையில் பஸ்ம தாரணம், அதாவது சாம்பலை அணிதல் என்பதே வேத காலத்திலிருந்து அனைத்து வைதிகர்களும் அணியும் சின்னமாக இருந்து வந்துள்ளது. அக்னிஹோத்ரம் செய்து அதன் பிரசாதமாக எஞ்சிய சாம்பலை நெற்றியிலும் உடலின் மற்ற பாகங்களிலும் அணிவது குறித்து ஸ்மிருதிகளும், கிருஹ்ய சூத்ரங்களும், கூறுகின்றன. “அக்னி”யை துறந்தவர்களான வானப்ரஸ்தர்களுக்கும் சன்னியாசிகளுக்கும் கூட சுடுகாட்டுச் சாம்பல் அல்லது வேறு வழிகளில் சாம்பலைப் பெற்று அணியுமாறு விதிகள் கூறப்பட்டுள்ளன. வைதிகர்கள் பஸ்மத்தையே தான் பட்டையாகவோ (த்ரிபுண்ட்ரம்) அல்லது கீற்றாகவோ (ஊர்த்வ புண்ட்ரம்) இரண்டு விதமாகவும் தரித்து வந்தனர் – மிகப் பல நூல்களில் இதற்கான சான்றுகள் உள்ளன.

மகாபாரதம் (அனுசாஸன பர்வம்) மற்றும் பல புராணங்களில் (பத்ம புராணம், சிவமஹா புராணம், தேவி பாகவதம், கூர்ம புராணம்) வைதிகர்கள் வேள்விச்சாம்பலை புனிதச் சின்னமாக அணிவது பற்றி பல குறிப்புகள் உள்ளன. நாஸ்திகர்களான லோகாயதர்கள் வேதநெறியையும் வைதிகர்களையும் இகழும் விதமாகக் கூறும் வாசகங்களில் “அக்னிஹோத்ரம், மூன்று வேதம், த்ரிதண்டம், பஸ்மகுண்டனம் (சாம்பல் தரித்தல்) ஆகியவை அறிவும் சக்தியுமற்றவர்களின் பிழைப்புக்காக பிரம்மனால் உண்டாக்கப் பட்டவை” என்பது பிரபலமான ஒன்று.

அக்³னிஹோத்ரம்ʼ த்ரயோ வேதா³ஸ்-
த்ரித³ண்ட³ம்ʼ ப⁴ஸ்மகு³ண்ட²னம்।
பு³த்³தி⁴பௌருஷஹீனானாம்ʼ
ஜீவிகா தா⁴த்ருʼநிர்மிதா॥

இந்த சுலோகம் கிருஷ்ண மிஸ்ரரின் பிரபோத சந்திரோதயத்திலும் (12ம் நூற்.) மாதவ வித்யாரண்யரின் சர்வதர்சன சங்க்ரஹத்திலும் (14ம் நூற்.) எடுத்தாளப் பட்டுள்ளது. இதுபற்றியே “நீறு செவ்வேயிடக் காணில் நெடுமால் அடியார் என்றோடும்” “கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதேயிடும், பெரிய கோலத் தடங்கண்ணன்” ஆகிய நம்மாழ்வார் பாசுரங்களில் திருமாலும், திருமால் அடியார்களும் நீறு பூசியுள்ளதாகக் குறிப்புகள் உள்ளன.

பிந்தைய காலகட்டத்தில் சைவ, வைணவ சமய ஆசாரங்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுவதற்கான தேவையும் சூழலும் உருவானபோது, திருநீறு சிவசின்னமாகவும், கோபி சந்தனம், நாமம் போன்றவை விஷ்ணு அடையாளமாகவும் கருதப்பட்டு பரவலாயின. அது பற்றியே, சைவாகமங்களிலும், பிற சைவநூல்களிலும் பஸ்மதாரணம் சிவபெருமானுக்கு உகந்த ஒன்றாகப் பெரிதும் பேசப் படுகிறது. ஜாபால உபநிஷத், காலாக்னி ருத்ரோபனிஷத் ஆகிய பிற்கால உபநிஷதங்களிலும் பஸ்ம தாரண விதி சிவ வழிபாட்டுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த உபநிஷதங்களுக்கு நாராயணாஸ்ரமர் என்ற அத்வைத யதி (13ம் நூற்.) எழுதிய பாஷ்யமும் உள்ளது. மாதவ வித்யாரண்யர் (14ம் நூற்) இயற்றிய மாதவீய சங்கர விஜயத்தில் பால சங்கரர் விபூதி அணிந்திருந்ததாக வர்ணனை உள்ளது. இவையெல்லாம் அப்பைய தீட்சிதருக்கு பல நூற்றாண்டு முற்பட்டவை.

எனவே, ஸ்மார்த்தர்கள் விபூதி அணிதல் என்பது ஆதியிலிருந்தே வரும் வைதிக ஆசாரம் என்பது தெளிவு. அறுபத்து மூன்று நாயன்மார்களில் திருமறையோர் என்று கோத்திரங்களுடன் அடையாளப் படுத்தப் படும் வைதிக அந்தணர்கள் (சம்பந்தர், சண்டேசுவரர், முருக நாயனார், உருத்திர பசுபதி..) விபூதி பூசியிருந்தது இதன் அடிப்படையிலேயே. இவர்கள் “ஆதிசைவர் / சிவவேதியர்” எனப்படும் அந்தணர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுவதையும் காண்க.

விபூதி தவிர்த்த மற்ற சின்னங்களையும் ஸ்மார்த்தர்களில் சிலர் அணிவதற்கு அதற்கே உரிய வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு பாகவதர்கள் ஆனவர்கள் ஒரு கட்டத்தில் பஸ்மத்திற்குப் பதிலாக கோபி சந்தனத்தை தரிக்கத் தொடங்கியிருக்கலாம். பின்பு முதல் பத்தியில் கூறியது போல, அதுவே குடும்ப சம்பிரதாயமாக ஆகியிருக்கலாம்.

மற்றபடி, சிவனும் விஷ்ணும் சக்தியும் முருகனும் எல்லாம் வேத தெய்வங்கள், குறிப்பிட்ட சமயப் பிரிவுகளுக்கு மட்டுமே உரிய “குட்டி தெய்வங்கள்” அல்லர். வேதநெறியைப் பின்பற்றும் அனைத்து இந்துக்களுக்கும் அந்த தெய்வங்களை வழிபடவும், வழிபாட்டிற்கு உரிய தெய்வீகச் சின்னங்களைத் தரிக்கவும் உரிமை உள்ளது. வீணே இந்தச் சின்னங்களை வைத்து துவேஷத்தையும் பகைமையையும் திட்டமிட்டு வளர்ப்பவர்களின் உள்நோக்கம் அரசியல் சார்ந்தது, ஆன்மீகம் சார்ந்ததல்ல.

விபூதி குறித்த மேற்கண்ட சான்றுகள் சுப்பிரமணியன் வைத்யநாதன் அவர்களின் அத்புதம் வலைப்பதிவிலிருந்து எடுக்கப் பட்டவை. அங்குபோய் Bhasma என்று தேடினால் இந்த சான்றுகளுக்கான மூலங்கள் அனைத்தும் கிடைக்கும்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவுகளின் தொகுப்பு).

One Reply to “ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *