ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14

முன்பு எதிர்மறையான சொற்றொடர்களை வைத்துக்கொண்டு ஆன்மாவைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இங்கு “ஆகாயம் போல” என்று நேர்மறையாகத் தொடங்கிவைத்து ஆன்மாவின் சொரூப லக்ஷணம் துல்லியமாக விளக்கப்படுகிறது. இங்கும் எதிர்மறைகள் தவிர்க்கப்படவில்லை என்பதையும் காணலாம். ஆகாயம் என்பதை sky என்று குறுகிய அளவில் கொள்ளாது, space என்று விரிந்த அளவில் பொருள் கொண்டால் நன்கு விளங்கும்.

முன்பே நாம் பார்த்ததுபோல ஒரு காலியாக உள்ள குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்வோம். ஆனால் அந்தக் குடத்திற்குள் ஆகாயம் இருப்பதை அக்குடத்தை உடைத்தாலோ, அல்லது அதை அங்கிருந்து நீக்கினாலோ தானே நமக்கு விளங்குகிறது. அது மட்டும் அல்லாது அந்தக் குடம் ஜடமாக ஓர் இடத்தை முன்பு அடைத்துக்கொண்டு இருந்தாலும், குடத்தை அகற்றியதும் அந்த இடம் கூட ஆகாயத்துடன் ஒன்றாகிவிடுகிறது அல்லவா? அதனால் ஆகாயத்தை எந்தப் பொருளின் உள்ளும் புறமும் வியாபித்துள்ளது என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும். அதாவது இருப்பது ஆகாயம் ஒன்றுதான், மற்றதெல்லாம் வந்து போவது என்றுதான் ஆகிறது. அந்த ஆகாயம் ஓரிடத்தில் தொடங்கி மற்றோர் இடத்தில் முடிகிறது என்று சொல்ல முடியாது என்பதால் அதற்குப் பிறப்பும் இல்லை, அதனால் அதற்கு மரணமும் இல்லை என்று ஆகிறது.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13

எப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணப்படி தன்னிலும் வேறு என்று ஒன்றைப் பார்ப்பதுதான் முதல் படி. அந்த நான்-நீ என்ற பாவனையால், எனது-உனது என்ற வேற்றுமைகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் ஒரு பொருளை “தனது” என்று அடைய விரும்புவதுதான் ஆசை. அது கிடைக்காதோ அல்லது தன்னிடம் தங்காதோ போய்விட்டால் வருவது துக்கம். அது தனக்குக் கிடைத்தும், அது ஒருவேளை தன்னைவிட்டுப் பிறரிடம் போய்விடுமோ என்று எண்ணுவது அச்சம். தன்னிடமிருந்து பிறர் அதை எடுத்துக் கொண்டுவிட்டால் வருவது கோபம். தன்னிடமே அது இருக்கவேண்டும் என்று எண்ணுவது பற்று. மற்றவர் அதைப் பெற்றுவிட்டால் அவரிடம் நமக்கு வருவது வெறுப்பு. இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான்.

அத்தகைய எண்ணங்களின் தொகுப்பே மனம், அந்த மனமே தன்னை ‘நான்’ என்று அபிமானிக்கிறது. அந்த மனம் போன்ற வர்க்கத்தைச் சேர்ந்ததே பிராணன் எனும் சூக்ஷ்ம சக்தியும். ஆக உடல் எனும் ஜடப்பொருள் அல்லாது, பிராணன், மனம் எனும் சூக்ஷ்ம தேக வர்க்கங்களும் அநித்தியமானவைகள். அதனால் அவைகளும் தள்ளப்பட வேண்டியவைகளே.

ஆனால் மற்ற விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாது எப்போது ஒருவன் “நான்” என்று தன்னிருப்பை மட்டும் உணர்ந்து தன்னிலே இன்புற்று இருப்பானோ, அப்போது அவனுக்கு மற்ற விஷயங்களில் நாட்டமும் இருப்பது இல்லை. அவை வந்தாலும் அதனால் இன்பமும் இல்லை, போய்விட்டால் அதனால் துன்பமும் இல்லை என்று ஆகிறது. மற்றவர்கள் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவர்களும் தன்னைப் போலவே இருப்பவர்கள் என்றுதான் அவனுக்கு இருக்கும். ஆத்ம ஞானம் என்பது எவருடைய தனி அனுபவம் என்றாலும் அது எந்தத் தனி மனிதருடைய சொந்தச் சொத்து அல்ல. சொத்து என்று வந்துவிட்டாலே அதற்கு சொந்தக்காரன் என்றும், அதில் பன்மையும் வந்துவிடும். ஞானம் தொன்றுதொட்டு இருக்கும் அதீத அனுபவம் என்பதாலேயே அதன் துவக்கத்தை வேதத்தினின்று காணலாம் என்பதை உணர்த்தவே இங்கு வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13